16/09/2014
ஏன் பிள்ளைகள் தவறுகிறார்கள் என்பதற்கு அநேக காரணங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றை காண்போம்.
1. பெற்றோர்களின் தேவபயமற்ற வாழ்க்கை பெற்றோருக்கு பயப்படாத ஒரு சந்ததியை உருவாக்கும். கர்த்தருடைய வழியில் நடந்து அவரை கனப்படுத்த கவனமில்லாத பெற்றோர்களின் பிள்ளைகள் சீர்கெட்டுப் போக பெற்றோரே வழிவகுக்கின்றனர்.
2. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை ஆடம்பரமான சூழ்நிலைகளில் வளர்க்கும் பெற்றோர்களால் பிள்ளகைள் சீர்கெட்டுப் போகிறார்கள்.
3. பிள்ளைகளின் தேவைகளுக்கு அதிகமாக பாக்கெட் மணி வாரி வழங்கும் பெற்றோர்களால் பிள்ளைகள் ஒழுங்கு தவறிய வாழ்க்கை முறையில் பழகி விடுவார்கள்.
4. பள்ளிக்கூடங்களிலிருந்தும் கல்லூரிகளிலுமிருந்தும் இருந்து வீடு திரும்ப காலதாமதம் ஆகும்போது, அதனுடைய காரணங்களை விசாரிக்காமல் போவதும், பிள்ளைகள் சொல்லும் காரணங்கள் சரிதானா என்று சோதிக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வதும் பிள்ளைகள் வழி தவறிப் போவதற்கான ஊக்குவிப்புகளாக மாறிவிடும்.
5. பிள்ளைகளுக்கு முன்னிலையில் சண்டையிடும் பெற்றோர்களினாலும், பிள்ளைகளுக்கு முன்னால் உண்மையும் நேர்மையுமான வாழ்க்கையை வாழத் தவறும் பெற்றோர்களாலும், தேவ பயமின்றி வாழும் பெற்றோர்களாலும் பிள்ளைகள் தவறான குணங்களுடையவர்களாக மாறி போகவும் நேரிடும்.
6. பிள்ளைகளின் கல்விக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை கர்த்தருடைய வழியில் வளர்க்க பிரயாசப்படாத பெற்றோர்களால் பிள்ளைகள் சீர்கெட்டு போக வாய்ப்புகள் அதிகம்.
7. டிவி, இன்டர்நெட், மொபைல் போன்கள், நண்பர்கள் விஷயத்தில் கட்டுப்பாடுகளையும் கண்காணிப்புகளையும் வரைமுறைகளையும் விதிக்காமல் விட்டு விடுகிற பெற்றோர்களால் பிள்ளைகள் கட்டுபாடில்லாத வாழ்க்கையால் கறைபடுவார்கள்.
8. பிள்ளைகளை அன்பாக நடத்தாமலும், அன்பாக பேசாமலும், பிள்ளைகளோடு சகஜமாக பழகாமலும் அதிகாரத் தோரணையோடு ஹிட்லர்தனமாக பிள்ளைகளை நடத்தும் பெற்றோர்களால் பிள்ளைகள் வித்தியாசமான முறையில் வழிதவறிப் போக வாய்ப்புகள் உண்டு.
பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி தேவன் நமக்கு சுதந்தரமாக கொடுத்த பிள்ளைகளை கர்த்தருக்கு பயந்து பெற்றோருக்கு கீழ்ப்படியும் பிள்ளைகளாக வளர்ப்போமாக. கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக!
நன்மையான ஈவுகளை
தேவாதி தேவன் தந்தார்
கர்த்தர் தந்த ஆசீர் யாவும் கண்டு
நன்றியால் சேவிப்பாயா?