04/07/2024
*கல்கி 2898 AD*
*மகாபாரதப் போரை* முழுமையாக அறிந்திருந்தால் ஒழிய, இத்திரைப் படத்தை உருவாக்குவது எளிதல்ல! முறையுமல்ல!
இயக்குனர் *நாக் அஷ்வின்* நன்கு அறிந்து உள்ளார்!
*திரை விமர்சனம்* :
திரைப் படத்தின் தொடக்கத்திலேயே மகாபாரதப் போர் நடந்து முடியும் தருணம்.
துரியோதனின் இராஜகுரு, அவதாரப் புருஷர், துரோணாச்சாரியார் மகன் *அஸ்வத்தாமனாக* (அமிதாப் பச்சன்), எதிரிகள் அனைவரையும் கொன்று குவிக்கிறான். இறுதியில் தன்னைக் கொல்ல ஒரு சிசு உருவாகிறது என்பதை அறிந்து, பாண்டவர் குடும்பத்தில் "உத்திரையின்" கருவில் இருந்த "அபிமன்யுவின்" குழந்தை மீது பிரம்மாஸ்திரத்தை எய்து அதையும் கொல்கிறான்.
இந்த மன்னிக்க முடியாத குற்றத்திற்காகக் கடும் கோபம் அடைந்த பகவான் கிருஷ்ணன் அவனைக் கொல்ல முற்படுகிறார்.
ஆனால், அஸ்வத்தாமன் நெற்றியில் உள்ள இரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) அவனிடம் உள்ளவரை அவனைக் கொல்வதென்பது நடவாது என அறிகிறார்.
எனவே, அவருடைய ரத்தினக்கல்லைப் (ஸ்யமந்தக மணியை) சூழ்ச்சியால் பறிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"உன் இரத்தினக்கல் (ஸ்யமந்தக மணி) உன்னிடம் இல்லாததால் இனி உன்னை எந்த நோயும் தீண்டும். உன் நெற்றியில் இருந்து உதிரம் எப்போதும் நிற்காமல் வடியும். உனக்குப் பசியோ, தாகமோ, தூக்கமோ எதுவும் வராது. மனித நடமாட்டம் உள்ள பகுதிக்குள் நீ நுழையக் கூடாது" என்று சாபம் இடுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"அஸ்வத்தாமனிடம்" இருந்த மரணத்தைப் பறித்துக் கொண்டார். வாழும் காலம் முழுவதும் நீங்கா வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் சிரஞ்சீவியாக வாழ வேண்டுமென்று சாபம் கொடுத்தார்.
"உனக்கு இனி மரணமே இல்லை! நான் *கலியுகத்தில்* ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் போது, அத்தருணம் என்னை நீதான் காப்பாற்ற வேண்டும்! அப்போதுதான் உன் சாபம் தீரும்" என்கிற பரிகாரமும், பிராயச்சித்தமும் தருகிறார்.
பின்னர், 6000 வருடங்கள் ஓடி 898 வருடமாக உயிரோடு இருக்கும் *யாஷ்கின் கலி (கமல்)* உலகின் கடைசி நகரமான காசியில் மக்களை அடிமைப் படுத்தி ஓர் ஊரை (காம்பிளக்ஸ்) உருவாக்கி வைத்து ஆண்டு வருகிறார்.
அந்த ஊரில் ஒரு "பவுண்டி ஹண்டராக" (Bounty Hunter) *பிரபாஸ்* வலம் வர, "ஒரு மில்லியன் யூனிட்" இருந்தால் கமல் இருக்கும் "காம்பிளஸ்குள்" வரலாம் என்று ஒரு விதி!
இதற்காகப் பிரபாஸும் போராட, அதே நேரத்தில் கமல், தன்னை பராக்கிரமவாதியாக உருவாக்க தன் பிடிக்குள் இருக்கும் பல பெண்களின் கருவில் இருந்து 150 நாட்களைத் தாண்டிய ஒரு "சீரோம்"மை (serum) எடுக்க முயற்சிக்கிறார்.
அப்போது அங்கிருக்கும் *தீபிகா படுகோன்* வயிற்றில் ஒரு குழந்தை உருவாக, அதில் "சீரோம்" எடுக்கும் போது, அது *கடவுள் கிருஷ்ணன்தான்* என்பது தெரிய வர, அமிதாப்பின் (அஸ்வத்தாமன்) பல வருட தவிப்பிற்குப் பலனாக தீபிகாவைத் தேடி வர, இதற்குப் பிரபாஸ் எந்த விதத்தில் பயணிக்கிறார்?, அதோடு, கமல் நினைத்ததை அடைந்தாரா? என்ற பிரமாண்டமே இந்த கல்கி 2898 AD.
இந்தத் திரைப் படத்தைப் பற்றிய அலசல் *மஹாபாரதம்* புராணக் களத்தை கையில் எடுத்துக் கொண்டு அதற்கு எதிர்காலத்தில் ஒரு தொடர்ச்சி இருந்தால் எப்படியிருக்கும் என்ற அற்புதான அசுரக் கண்ணோட்டத்துடன் *இயக்குனர் நாக் அஷ்வின்* இன்றையக் காலக் கட்டத்தின் தொழில் நுட்பத்தைப் பொருத்தி, இதைக் கையாண்டதற்காகவே இவருக்குப் பெரும் பாராட்டுகளைக் கொடுக்கலாம்.
இருப்பினும், இத்திரைப் படத்தில், *பிரபாஸை* விட அஸ்வத்தாமனாக வந்த *அமிதாப்* தான் ரியல் ஹீரோ!
6000 வருடத்திற்கு மேல், மரணமில்லா சாபத்தால் உயிரோடு இருந்து ஓர் உயிரைப் பாதுக்காக்க அவர் எடுக்கும் தவம், அந்தக் குழந்தை உருவானதும் ஒரே ஆளாக *அமிதாப்* ஆடும் ஆட்டம் ருத்ரதாண்டவம்.
அதோடு, அந்தக் கருவைச் சுமக்கும் பெண்ணாக *தீபிகா படுகோன்*, அவரைக் காப்பாற்றப் போராடும் *அண்ணாபென்*, *ஷோபனா*, *பசுபதி* என அனைவரும் அற்புதமான நிறைவான நடிப்பு.
ஆங்கிலப் படங்களுக்கு இணையான "கிராபிக்ஸ்" காட்சிகள், அதிலும் கமல் வாழ்ந்து வரும் காம்பிளெக்ஸ் உலகம் அத்தனை பிரமாண்டம். அதிலும் லிப்ட் போல் பயன்படுத்தும் பிரமாண்ட உருவம், கிளைமேக்ஸில் *புஜு* ஒரு ரோபோட் போல் மாறி துரத்தல் சண்டை செய்வது என அனைத்து பிரமாண்டமும் அட்டகாசம்.
படத்தின் முதல் பாதி கொஞ்சம் பொறுமையைச் சோதிப்பதைத் தவிர்க்க முடியவில்லை. பிரபாஸின் கேரக்டர் போகப் போக வலுவாக மாறினாலும், ஆரம்பத்தில் அவரை எதோ காமெடியன் போல் காட்டியது தனி ரகம் தான்.
*கமலுக்கு* இரண்டாம் பாகத்தில்தான் ( கல்கி 2898 AD - 2 ) அதிக வேலை இருக்கும் போல திரைப் படம் நிறைவை நாடியது. இதில் அவர் நடிக்காமல் கணினி வரைகலை ( Computer Graphic ) வைத்து *டப்பிங்* மட்டும் கொடுத்து விட்டாரோ? என்று நம்பத் தோன்றுகின்றது. ஒளிப்பதிவு மிகவும் அற்புதம். *சந்தோஷ் நாரயணன்* இசையில் பாடல்கள் பெரிதாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை சூப்பர். படத்தின் VFX காட்சிகள், இரண்டாம் பாதி துரத்தல் (chasing) காட்சிகள் மிகச் சிறப்பு. கிளைமேக்ஸில் பிரபாஸ் யார் என்று தெரியும் இடம் சற்று தொய்வுதான்!
மொத்தத்தில் இந்தக் *கல்கி*யின் அடுத்த அவதாரத்தை் காண இப்போதே எதிர்ப்பார்ப்பை அமைத்துக் கொடுத்து விட்டனர்.
மாபெரும் வெற்றி பெறும் *கல்கி 2898 AD* & *கல்கி 2898 AD-2* என்பதில் ஐயமில்லை!
அன்புடன்...
முனைவர் இலட்சப்பிரபு.
திரை விமர்சகர்.