15/01/2021
மீண்டும் ஒருமுறை ❤
பொங்கல் என்றாலே கொண்டாட்டம் தான். எப்படி பால் பொங்கி வழிகிறதோ, அதேபோல் மறுபக்கம் சந்தோஷமும் பொங்கி வழிந்தோடும் தமிழர் திருநாளே தைப்பொங்கல்.
ஒருவகையில், பிரபஞ்சத்திற்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி நவிழ்கிறோம் என்றுதான் கூறவேண்டும். உலகமே கொண்டாடும் இத்தெய்வத் திருநாளை, நாம் என்றுமே மனதில் வைத்து செயல்பட வேண்டும்.
தினமும் நாவில் வைக்கும் அந்த முதல் சோற்று பருக்கைக்காக, முதற்கண் நன்றி. உழவன் உலகின் உயிர், உழவனையும், உதவிய அக்ரிணைகளையும், உழவு தொழிலையும் மதிக்க பழக வேண்டும். நாம் என்ன செய்யலாம்? சாப்பிடும் முன் மனதார நன்றி சொல்லி வாழ்த்தலாம்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை, இதற்கும் பொருந்தும் !
தன்னை வறுத்தி, பின்பு அந்த மண்பானைக்கு உஷ்ணம் கொடுத்து, அரிசியை பதமாய் வேக வைக்க, தோள் கொடுகின்றன, சூடம், தீக்குச்சி மற்றும் செங்கற்களும் விறகுகளும். அதே போல் நம் வாழ்க்கையிலும் நம்மால் முடிந்தவரை அனைவருக்கும் உதவுதல் அத்தியாவசியமான ஒன்று. தேவைப்பட்டால் ஒருவரை வாழ்க்கையில் உயர்த்தி விடவும் தயங்க கூடாது.
நீ எதை விதைக்கிறாயோ, அதையே நீ அறுவடை செய்வாய்!
பொங்கல் பொங்கி வரும் வேளையில், சூரிய பகவானின் வருகைக்காக காத்திருந்து, அவரின் ஒளி கதிர்கள் நம் மேல் பாயும் நிமிடங்கள் ஒவ்வொன்றும் அற்புதமானவை. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கண் பார்வை திறன் அதிகரித்து, இரத்த அழுத்தங்கள் மற்றும் உடல் கொழுப்புகள் குறைந்து, மன அமைதி நிலைத்து நாம் ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் வழி வகுக்குகின்றது. அடுத்த சந்ததியினரான குழந்தைகளுக்கு இதனை சொல்லிக் கொடுங்கள், நம்மை பார்த்து வளரும் நெற்மணிகள், நாளை அவர்களின் வாழ்க்கை பொங்கல் போல இனிக்க வேண்டுமல்லவா? அதற்காக!
அதிகாலையில் எழுந்து, ஒற்றுமையாக வேலை பார்த்து, பொங்கல் பொங்கி வரும் வேலையில் சந்தோஷமாக ஆடி பாடி, கூடி பேசி களிக்கும் அந்த நிமிடங்கள் பசுமையானவை. மனம் விட்டு பேசுங்கள், வாய்விட்டு சிரியுங்கள், எல்லாம் சரியாகும்.
நம்மை எந்நேரமும் முடக்கி வைத்திருக்கும் தொ(ல்)லைபேசிகளை தூர போடுங்கள், வாழ்க்கை
அழகாகும்!
புதுப்பானை, புதுப்பால், புது அரிசி, புது துணிமணிகள், அப்பப்பா, பொங்கலன்று எல்லாமே புதுசுதான். பழசுகளைதான் போகியன்று எரித்து விட்டாச்சே, உண்மைதான்.
முடிந்தால் உங்களுக்குள் இருக்கும் எல்லா 'பழசுகளையும்' எடுத்தெறிந்து விடவேண்டும். தீய எண்ணங்கள், நிலையில்லா வாழ்க்கை கொள்கைகள், அளவுக்கதிகமான சிந்தனைகள் என எதுவெல்லாம் உங்களை புதிப்பிக்க வில்லையோ, அவற்றை எல்லாம் தீயிலிட்டு விடுங்கள். அப்போதுதான் நாம் வாழும் வாழ்க்கையும் தித்திப்பாக இருக்கும், கரும்பைப் போல
"தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும் - திருக்குறள்"
எப்படி நாம் பொங்களில் இனிப்பு, பாதாம் பருப்பு, உலர் திராட்சை என நல்ல உணவு வகைகளை சேர்த்து கொள்கிறோமோ, அதே போல நல்ல ந(ண்)பர்கள், நல்ல எண்ணங்கள், நல்ல பழக்க வழக்கங்கள் என எல்லா நல்ல விஷயங்களையும் நம்முள் சேர்த்துக் கொள்வதால் வாழ்க்கையே அமிர்தமாகும்.
உன் ஆனந்தம், உலகின் பேரானந்தம்!
பொங்கலன்று சானம் நீர் தெளித்து அரிசி கோலம் போடுவது வழக்கம். சானம் நம்மை கிருமி நாசினிகளிடமிருந்து காக்க வல்லது. அரிசி கோலம், எறும்பு வகை பூச்சிகளுக்கு நாம் இடும் அன்னதானம்.
"ஐயமிட்டு உண்" - பசியோடிப்பவர்க்கு ஈந்து அதன் பின் நாம் உண்ண வேண்டும் ❤ அவ்வை பாட்டி சொன்னது!
'யோகிகள் நாங்கள்', என்று வாய் வார்த்தையோடு நின்று விடாமல், ஒவ்வொரு நாளும் 'சூர்ய நமஷ்காரம்' செய்து உடலையும் உள்ளத்தையும் பேணி காத்தல் அவசியமாகும். ஒரே ஒரு நாள் சூரிய பகவான் உதிக்காமல் போனால் என்னவாகும் உலகம்? இருள் சூழ அமர்ந்திருப்போம். இன்று பொங்கல் என நன்றி கூறி, நாளை மறவாமல் இருக்க, தினம் தினம் மனதார நன்றி கூறுவோம், யோகாசனம் பயில்வோம். வாழ்க்கை பிரகாசிக்கும் கதிரவனை போல!
பொங்கல் பொங்கி விட்டதா? இனிப்பு சேர்த்தீர்களா? எல்லாருக்கும் பகிருங்கள், நல்ல விஷயங்கள் பகிரபட வேண்டும்!
கதிரவனுக்காக வானத்தை அன்னார்ந்து பார்த்தீர்களா? வாய்ப்புக் கிடைத்தால் அடிகடி பாருங்கள், இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சிறு புள்ளிதான் என்பது தெரியவரும்!
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்கள் வாழ்க்கையும் தித்திப்பாக அமைய கடவுளைப் பிராத்திக்கிறேன். ஓம் அகத்திசாய நம!
#அகத்தியன்தோழி
#மீண்டும்ஒருமுறை
#பேனாவைகையிலேந்துகிறேன்
#தித்தித்திக்கும்பொங்கல்2021