24/10/2015
கேதாரகௌரி விரதம்
சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்நாரியாகவும், அர்த்த நாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும்.இவ்விரதத்தை மேற்கொண்டு கௌதம முனிவரின் வழிகாட்டலில் சிவபெருமானது இடது பாகத்தை உமாதேவியார் பெற்றார்.
திரக்கேதாரத்தில் கேதாரேஸ்வரை கௌரியம்மை பூஜத்துப் பேறுபெற்றமையால் இவ்விரதம் "கேதாரகௌரி விரதம்" எனப் பெயர் பெற்றது. இவ்விரதம் சிவ விரதங்களுள் முக்கியமான் ஒன்றாகும்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை :
ஆண்டுதோறும் (புரட்டாதி) மாதம் சுக்ல பட்ட தசமியில் இவ்விரத்த்தை ஆரம்பிக்க வேண்டும். இருபத்தோரிழைகள் கொண்டதும் இருபத்தொரு முடிச்சுக்கள் கொண்டதுமான நூலினால் உருவாக்கப்பட்ட மந்திரக் கயிற்றை செய்து அன்று முதல் சிவபெருமானை மண்ணால் ஆக்கப்பட்ட விம்பத்திலும், கும்பத்திலும் பூஜித்து இவ்விரத்த்தை அனுஷ்டிக்க வேண்டும்.
தூய்மையான அழகான இடத்திலே மண்ணால் செய்யப்பட்ட (சிவலிங்கத்தை) அமைத்து கும்பம் வைத்து பூக்கள்,வில்வம் முதலியனவற்றால் அர்ச்சனை செய்யவேண்டும்.
ஒவ்வொரு நாளும் கேதாரேஸ்வரனுக்கு இருபத்தொரு எண்ணிக்கை கொண்ட அப்பம், வடை, பழம்,பாக்கு, வெற்றிலை, பாயாசம், சர்க்கரை அன்னம், புளிஅன்னம் முதலிய நைவேத்தியங்களை வைத்து தீபம் காட்டியும் பூஜை செய்தும் கேதேஸ்வரனை வழிபட வேண்டும். இவ்விரதம் இருக்க சில முறைகள் உள்ளன.
ஐந்து மாதங்களிற்கு மேல் கர்ப்பிணியாக இல்லாத பெண்களும் மாதவிலக்கு நீக்கப்பெற்ற பெண்களும் 21 நாட்கள்
விரதமிருக்கலாம்.ஆண்களும் இவ்விரத்தை கடைபிடிக்கலாம்..
விரதபலன் :
தம்பதிகள் சந்தோஷமாக இருத்தலும்,பிணிநீங்கலும்,வறுமை நீங்கி செல்வம் பெறுவதற்கும்,கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதற்கும் சிவனருளைப் பரிபூரணாகப் பெறுவதற்கும் இவ்விரதம் உகந்தது. கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே இவ்விரத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.