30/11/2025
*டிசம்பர் 1 திங்கள் | 2025,*
------------------------------------
✝️ அனுதினமும் தேவனுடன் | இலங்கை சத்தியவசனம் - 🇱🇰
🔔 தியான வாசிப்புக்கான வேதாகம பகுதி : : 2கொரி 12:1-10
*தேவகிருபை போதுமானது!*
*என் கிருபை உனக்குப் போதும். பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். 2கொரிந்தியர் 12:9*
வருட இறுதி மாதத்திற்குள் வந்துவிட்டோம். கடந்துபோன நாட்கள் காலங்கள் நமக்குப் பலவிதமான அனுபவங்களைத் தந்திருக்கலாம். அவற்றால் சிலர் களித்திருக்க, சிலர் தவித்திருக்க, பலர் நம்பிக்கையிழந்து நிற்கிறார்களோ நாமறியோம்!நமது உணர்வுகளுடன் நாம் போராடினாலும், காலம் நமக்காகக் காத்திருக்காது! என்னதான் போராட்டங்கள் துன்பங்கள் இருந்தாலும், மார்கழி மாதம் என்றாலே கிறிஸ்மஸ் நினைவுகள்தான் மேலோங்கி நிற்கும்; அதற்கான ஆயத்தங்கள் வெளிப் புறமாக நம்மை ஆக்கிரமித்தாலும்கூட, பலருடைய உள்மனப் போராட்டங்கள் அவர்களைக் குத்தும் முள்ளாக இருந்து அவர்களுடைய உள்ளான மனிதனில் வேதனை தரவே செய்கிறது.
இயேசுவின் மகத்துவமான நாமத்துக்கு எதிராக நின்றபோதிலும், கர்த்தரால் அழைப்பு பெற்று, மீட்பின் சுவிசேஷத்தை விசேஷமாக புறவினத்தாரிடம் எடுத்துச்சென்றவரும் மகத்தான பணியைச் செய்தவரும், பலத்த சோதனைகள் உபத்திரவங்களைச் சந்தித்தும் பின்வாங்கிடாமல், “நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1கொரி.11: 1) என்று தைரியமாய் அழைப்புவிடுத்தவருமான பவுலுக்கும் பிரச்சனையா? அவரின்மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருந்தது. அது என்ன என்று நாம் அறியோம்.
ஆனால், “நான் என்னை உயர்த்தாதபடிக்கு" என்று அவரே அந்த முள்ளுக்கான காரணத்தையும் (2கொரி.12:7) வெளிப்படையாகவே எழுதியுள்ளார். இது அவருக்கு வேதனையைக் கொடுத்ததால், அது நீங்கவேண்டுமென்று மூன்று முறை ஜெபித்தார். ஆனால் கர்த்தரோ அதை நீக்கவில்லை. பதிலுக்கு, பவுல் தம்மையே சார்ந்திருக்க வும், தம்மில் நிலைத்திருக்கவும் தக்கதாக, அந்த முள்ளை அகற்றுவதற்குப் பதிலாக,தம்முடைய கிருபையைப் போதுமான அளவுக்கு அள்ளிக் கொடுத்தார்.
பவுலின் ஜெபம் தவறா? வேதனை நீங்கிப்போகவேண்டும் என்று ஜெபிப்பது தவறா? இல்லை! தோளில் தூக்கும்படி அடம்பிடிக்கும் குழந்தையைத் தகப்பன், முடியாது என்று சொல்லுவாரா? ஆனால், அக்குழந்தை நடக்கப் பழகவேண்டும் என்றால்,அழுகின்ற நேரமெல்லாம் தூக்கிச் சுமந்தால் பிள்ளை எப்போது நடை பழகுவது? இதைத்தான் கர்த்தர் நமது வாழ்விலும் செய்கிறார். நாம் எப்பொழுதும் குழந்தைகளாக இருக்கமுடியாது, வளரவேண்டும்! ஆகையால் கேட்டதற்கு மாறாக பதில் வருமானால் நாம் தடுமாறவேகூடாது. தேவனுடைய மாறாத அளவற்ற தூய கிருபையை அங்கே காண நமது கண்களைத் திறப்போமாக. அவருடைய கிருபை நமக்கு என்றென்றைக்கும் போதுமானது.
*‼️*இன்றைய சிந்தனைக்கு:* ‼️
----------------------------------------------------
ஒரு காரியத்துக்காக ஜெபிக்க வேறொன்று நடந்தால் என் பிரதிக் கிரியை தான் என்னவாயிருக்கும்?