26/05/2026
புத்தளம் இந்து மகா சபையினால் தொடர்ச்சியாக நடாத்தப்பட்ட அறநெறிப் பாடசாலை வகுப்புகள் கோவிட் தொற்று காரணமாக இடையில் தடைப்பட்டிருந்தன. 22.07.2022 இல் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதனைத் தொடர்ந்து 21.08.2022 முதல் வகுப்புகள் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க முயற்சித்த நிர்வாகத்திற்கு மனப்பூர்வமான பூரண ஆதரவினை அறநெறிப் பாடசாலை பொறுப்பாசிரியரும் ஏனைய ஆசிரியர்களும் பெற்றோரும் வழங்கியிருந்தனர். அன்றைய மீளாரம்ப நிகழ்வில் பொறுப்பாசிரியரும் புத்தளம் இந்து மத்திய கல்லூரி பிரதியதிபருமான திருமதி தர்ஷினி சிவதர்ஷன், புத்தளம் செய்னப் ஆரம்ப பாடசாலை பிரதி அதிபர் திருமதி லோகேஸ்வரி, செல்வி. விதுஷிகா சந்திரசேகரம், செல்வி தர்ஷனா யோகராஜா ஆகியோர் மாணவர்களை நல்வழிப்படுத்தும் மாண்புமிகு பணியில் பங்கெடுத்திருந்தனர்.
சிறந்த தலைமைத்துவ நெறிப்படுத்தலுடனும் அர்ப்பணிப்பான ஆசிரியர்களின் சேவையுடனும் மாணவர்களின் அக்கறையான கற்றல் ஆர்வத்துடனும் பெற்றோரின் முழுமையான ஒத்துழைப்புடனும் அறநெறிப் பாடசாலை மிகச் சிறப்பாகவும் ஒழுக்கமாகவும் நடைபெற்று வருகிறது. திருமதி. லோகேஸ்வரி, செல்வி தர்ஷனா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக இடைப்பட்ட காலத்தில்விலகியிருந்தார்கள். திருமதி மைதிலி அவர்கள் ஆசிரியராக இணைந்து சிறந்த சேவையாற்றி தனிப்பட்ட காரணங்களுக்காக நம்மிடமிருந்து விடைபெற்றுச் சென்றார். அதேவேளை திருமதி சாந்தினி, திருமதி சிறீபவானி ஆகியோர் ஆசிரியர்களாகவும் செல்வி துஷிதா அவர்கள் உதவி ஆசிரியராகவும் இணைந்து திருமதி. தர்ஷினி சிவதர்ஷனின் வழிகாட்டலுடன் அரும்பணி ஆற்றிவருகிறார்கள். செல்வி.விதுஷிகா ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக இப்பணியில் இணைந்திருப்பதுடன் எமது முன்பள்ளியினையும் பொறுப்பேற்று திருமதி சாந்தினியையும் இணைத்து சிறப்புற நடாத்திவருகிறார். வழமையான வகுப்புகளுக்கு மேலதிகமாக அறநெறி ஆலோசகர் திரு சு மோகன் அவரகளால் கருத்துக்கதை போதனை வகுப்புகளும் பல்துறை விற்பனரான திரு S T.சீலன் அவர்களால் இசைப்பயிற்சி மற்றும்உளநல ஊக்குவிப்பு ( motivation) வகுப்புகளும் அவ்வப்போது நடாத்தப்பட்டு வருகின்றன.
எமது மாணவர்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ஆக்கத்திறன் போட்டிகளில் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டியிருந்தார்கள்.
மாணவர்களின் திறமைகளை வளர்க்கின்ற அதேசமயம் அவர்களை ஒழுக்க சீலர்களாகவும் உண்மையான சமுக அக்கறை உள்ளவர்களாகவும் உருவாக்கவேண்டும் என்பதில் புத்தளம் இந்து மகா சபை மிகக் கவனமாக செயற்படுகிறது.
இதுவரை காலமும் தனது குடும்ப சுமை, பதவிச்சுமை ஆகியவற்றுக்கு மத்தியில் அறநெறிப் பாடசாலையினை பொறுப்பேற்று மிக நேர்த்தியாக நெறிப்படுத்தி நடாத்திய பொறுப்பாசிரியர் திருமதி தர்ஷினி சிவதர்ஷன் அவர்கள் ஏற்றுக் கொண்ட தனது பொறுப்புகளில் இருந்து சற்று விலகிக் கொள்ள விரும்பினார். அவரது கோரிக்கையை நன்றியுடன் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் அதற்கான மாற்றுவழிகளை புத்தளம் இந்து மத்திய கல்லூரி அதிபரும் எமது சபையின் உப தலைவருமாகிய திரு. P. R. தம்பித்துரையுடன் இணைந்து ஒழுங்கு செய்து தருமாறு அவரையே வேண்டிக்கொண்டது. எமது கோரிக்கையை ஏற்ற அவர்கள் இருவரதும் ஏற்பாட்டில் புத்தளம் இந்து மகா சபை அறநெறிப்பாடசாலை பொறுப்பாசிரியராக எமது அறநெறிப் பாடசாலை பழைய மாணவியாகிய ஆசிரியர் செல்வி பிரணவி வரதராஜன் அவர்களும் அவர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசிரியர்களான திருமதிக.நகுலா, திருமதி ஜ. நந்தினி, செல்வி ச.டிசானி ஆகியோரும் முன்வந்துள்ளனர். இளைய சமுகம் சரி பிழை பற்றிய சரியான புரிதல் சம்பந்தமாக குழப்ப நிலையில் இருக்கும் இக் காலகட்டத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே அறம், பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றைப் போதித்து எதிர்கால சந்ததியை காக்கும் நற்பணியில் நம்மோடு கை கோர்க்கும் ஆசிரியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்த அதிபர் திரு.தம்பித்துரை, பிரதி அதிபர் திருமதி. சிவதர்ஷன் ஆகயோருக்கும் சபையின் நெஞ்சார்ந்த நன்றி.
தொடர்ந்தும் எமது அறநெறிப் பாடசாலை சீராகவும் சிறப்பாகவும் இயங்க அனைவரது ஒத்துழைப்பினையும் நாடுகிறோம்