11/04/2025
சித்தர்கள் சீடர்கள் பல கோடி
அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி !
அபிஷேக ஸ்கந்தனுக்கு மஹா கும்பாபிஷேகம்
--
இராஜ மூர்த்தமாக முருகன் எழுந்தருளியிருக்கும் யாழ்ப்பாணம்- மாவிட்டபுரம் பெரிய கோயிலில் மஹா கும்பாபிஷேகம்(11.04.2025) வெள்ளிக்கிழமை.
--
ஆயிரத்து முன்னூறு ஆண்டு பழைமை வாய்ந்த மாவை ஆதீனத்தின் நிர்வாகத்திலிருக்கும் இத்திருக்கோயிலில் ஐம்பதாண்டுகளுக்குப் பிறகு மஹா கும்பாபிஷேகம்.
--
நல்லூர்க்கந்தனை அலங்காரக்கந்தன் என்றும் செல்வச் சந்நிதி முருகனை அன்னதானக்கந்தன் என்றும் மாவைக் கந்தனை அபிஷேகக் கந்தன் என்றும் சிறப்பிப்பது ஈழத்து வழக்கு.
--
அபிஷேகமான பிறகு தானே, அலங்காரம், நெய்வேத்யம் நடைபெறும். எனவே காலத்தால் முந்தைய தலம் மாவிட்டபுரம். அதை உணர்த்துவது போல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. ஆயிரத்து ஐநூறு ஆண்டு பழைய வேலும் லிங்கமும் இன்றும் இருக்கிறது.
--
அபி என்றால் அழகு. அழகுக் கடவுளான முருகன் இங்கு அபிஷேகப் ப்ரியன். அத்தகு அபிஷேகப் ப்ரியன் அபிஷேகங்களில் மிகப் பெரியதான மஹா கும்ப அபிஷேகம்.
--
இந்த நிகழ்ச்சியை ஒட்டி பல்வேறு ஆதீன குருமஹா சந்நிதானங்கள், வேத பண்டிதர்கள்,
ஶிவாச்சார்யர்கள், வித்வான்கள் என்று பலரும் மாவிட்டபுரத்தில் கூடியிருக்கிறார்கள்.
--
குறிப்பாக சம்ஸ்க்ருத கல்லூரி, தருமை ஆதீன பாடசாலை போன்றவற்றில் வியாகரண சிரோமணி முதலிய பட்டங்களை பெற்றவர்கள் பலர் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலண்டன் நாகநாத ஶிவாச்சார்யர் போன்ற பலரும் வந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் பலர் வருகை தர இருக்கிறார்கள்.
--
இந்த வித்வத் ஶதஸை தரிசிக்கவென்றே மாவிட்டபுரம் போகலாம். தவிர கிரியா காலம் தோறும் நிருத்தாஞ்ஜலி நடைபெற்று வருகிறது.
--
05.04.2025 திருப்பதி வேத பல்கலைக்கழக துணைவேந்தர் வருகை தந்து ஸம்க்ருதத்திலேயே உரையாற்றியிருந்தார்கள். குறித்த பல்கலைக்கழக பேராசிரியர் கார்த்திகேய ஶிவாச்சார்யர் யாகபூஜைகளிலும் இணைய இருக்கிறார்.
--
மாவை ஆதீனம் ஆயிரம் ஆண்டு பழைமை மிக்க வரலாற்றுப்புகழ் பெற்ற
ஶிவாச்சார்ய ஆதீனம். அந்த ஆதீனத்தின் தற்போதைய ஆதீனகர்த்தர் மஹாராஜஸ்ரீ து.ஷ. இரத்னசபாபதிக்குருக்கள் தலைமையில் இவ்விழா கோலாகலமாக வைதிக சைவ விதிப்படி நடைபெற்று வருகிறது.
--
மாவை ஆதீன இளவரசு. மஹாராஜஸ்ரீ .இ. ஞானஸ்கந்த ஶிவாச்சார்யார் பிரதிஷ்டாசார்யராகப் பக்தி பூர்வமாக கிரியைகளை ஆற்றி வருகிறார்.
--
தமிழக வேத ஆகம சாஸ்த்ர வித்வான்களும் அவர்களுக்கு இணையாக ஈழத்து சாதகாச்சார்யர்களும் ஶாதகப் பணிகளை மேற்கொள்கிறார்கள். ஒவ்வொரு காலமும் நிகழும் ப.சனாதனஶர்மா அவர்களின் கிரியை விளக்க உரைகள் அற்புதமாக உள்ளன.
--
கலாநிதி. ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி பிரபாகர சர்மா அவர்கள் நடன வேள்வியை நெறிப்படுத்துகிறார். சிதம்பரத்து தீட்சிதர்கள் நடேச யாகத்தைச் நிகழ்த்த இருக்கிறார்கள்.
--
திருமுறை, திருப்புகழுக்கும் அதிக முதன்மை வழங்கப்படுகிறது. சிவ. மாதவன் வருகை தந்திருந்தார். இன்னும் ஓதுவார் மூர்த்திகள் எழுந்தருள இருக்கிறார்கள்.
--
ஶிவஸ்ரீ. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் ஆதீனங்களை வரவேற்று உபசரித்தல் முதலிய பணிகளை முன்னெடுக்கிறார்.
--
எமது மண்ணின் பெருமை மிக்க கலாநிதி ஆறு. திருமுருகன், கலாநிதி. அனுஷாந்தன், கம்பவாரிதி போன்ற சைவச்சான்றோர்களும் அவ்வப்போது கலந்து பணியாற்றுகிறார்கள்..
--
அடியேனுக்கும் இத்தகு பெரிய வைபவத்தில் இணையும் பேறு கிடைத்திருக்கிறது. ஏதோ நாமும் ஆச்சார்யம் முதலியவற்றினை அவ்வப்போது செய்ய முருகனின் அருள் கிடைக்கிறது.
--
இன்று 06.04.2025 இரவு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு மாவை ஸுப்ரஹ்மண்யக் கடவுள் மூலாலயத்திலிருந்து கும்பத்தில் எழுந்தருளி யாக சாலையில் மந்த்ர சிம்மாசனத்தில் எழுந்தருள இருக்கிறார்.
--
தொடர்ந்து பத்துக் காலம் யாக மண்டப -வேதிகா- குண்ட ஆராதனைகள் நிகழ்ந்து உத்தர நக்ஷத்திரத்தில் மஹா கும்பாபிஷேகம் நிகழ இருக்கிறது.
--
சோழர் கால ஸ்தலமாக -மாருதப்புரவீக வல்லிக்கு வாழ்வு கொடுத்த தலமாக- காயாத்துறையை காங்கேசன் துறையாக்கிய அற்புத தலமாக இத்தலம் மிளிர்கிறது.
--
வா என்றழைத்து அருளும் வான் கருணை வெள்ளமான மாவை ஷண்முகநாத வள்ளல் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் எங்கள் வாழ்விலும் எம்மோடு வந்தருளிக் காத்திட வேண்டுவோம்.
மாவைக் கந்த சுவாமியாருக்கு அரோஹர🙏
--
அன்புடன்,
தி.மயூரகிரிக்குருக்கள்
நீர்வேலி