04/05/2026
“வஹ்ததுல் வுஜூத்”
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தின் அரசர் அண்ணல் இப்னு அறபீ அவர்களே!
தொகுப்பு: மௌலவீ அல்ஹாஜ் A அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ ஸூபீ காதிரீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலீ)
“எல்லாம் அவனே” என்ற தத்துவத்தை உலகறியச் செய்த மா பெரும் தத்துவ ஞானி முஹ்யித்தீன் இப்னு அறபீ றஹிமஹுல்லாஹ் அவர்கள்தான்.
سُئل الإمام الفقيه محي الدين النّووي عن الشّيخ محي الدين ابن عربي رحمه الله، قال: تلك أمّة قد خلت، ولكنّ الّذي عندنا أنّه يحرم على كلّ عاقل أن يسيئَ الظّنّ بأحدٍ من أولياء الله تعالى عزّ وجلّ، ويجب عليه أن يؤوِّلَ أقوالهم ما دام لمْ يَلْحَقْ بدرجتهم، ولا يعجز عن ذلك إلّا قليلُ التوفيق، قال فى شرح المُهذّب، ثمّ إذا أَوَّلَ فليُؤوِّلْ كلامَهم إلى سبعين وجها، ولا نقبلُ عنه تأويلا واحدا، ما ذاك إلّا تَعَنُّتٌ،
(اليواقيت، ج 1، ص 8. للشيخ عبد الوهّاب الشعراني)
இமாம் முஹ்யித்தீன் அந் நவவீ - நவவீ இமாம் அவர்களிடம் இப்னு அறபீ அவர்கள் பற்றி வினவப்பட்ட போது, “அது ஒரு சமூகம். வாழ்ந்து மறைந்து போயிற்று. ஆயினும் எங்களின் கடமை என்னவெனில் புத்தியுள்ள ஒருவன் அந்த மகான்கள் மீது - அல்லாஹ்வின் நேசர்களான வலீமார் மீது கெட்டம் எண்ணம் கொள்வது “ஹறாம்” பாவமாகும். ஆகையால் ஒருவன் புத்தியுள்ளவனாயின் அவன் அவர்களின் பேச்சுக்களுக்கும், அவர்களின் செயல்களுக்கும் வலிந்துரை கொள்வது அவசியமாகும். இவ்வாறு அவர்களின் தரத்தை அடையாதவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் “தவ்பீக்” நல்லனுகூலம் இல்லாதவன் இவ்வாறு செய்யமாட்டான்”
இமாம் நவவீ “ஷர்ஹுல் முஹத்தப்” எனும் நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்கள். அந்த மகான்களின் சொற்களுக்கும், செயல்களுக்கும் வலிந்துரை வைப்பதாயினும் எழுபது (70) வலிந்துரைகளாவது வைக்க வேண்டும். ஒரு வலிந்துரை மட்டும் போதாது. நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளமாட்டோம். அவ்வாறு வலிந்துரை தேவையில்லை என்று நினைப்பது மன முரண்டாகும். (ஆதாரம்: அல்யவாகீத், பாகம் - 01, பக்கம் 08)
இமாம் நவவீ அவர்கள் இப்னு அறபீ அவர்களின் பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் எழுபது வலிந்துரையேனும் கொடுக்க வேண்டுமென்று சொன்னதற்கான காரணம் எவ்வாறேனும் அவர்கள் மீது நல்லெண்ணம் கொள்ள வேண்டும் என்பதற்கேயாகும்.
ஓர் ஆன்மிக மகானை எவ்வாறேனும் குற்றமின்றிக் காப்பாற்ற வேண்டுமே தவிர அவர்கள் மீது தவறான எண்ணம் கொள்ளக் கூடாது என்பது பிரதான அம்சமாகும். இது பேணப்பட வேண்டும்.
இமாம் நவவீ “ஷரீஅத்” புலியாக இருந்தாலும் கூட மகான் இப்னு அறபீ அவர்களை மிகவும் நேசிக்கின்றார்கள்.
“ஷரீஆ” கலையில் அதிக கவனமுள்ளவர்கள் ஸூபீ மகான்களை இந்த அளவு நேசிப்பது அவர்களின் கண்ணியத்தை வெளிப்படுத்துகின்றது. அல்ஹம்து லில்லாஹ்!
ஒரு மார்க்க மேதையோ, ஒரு மகானோ ஒரு விஷயம் சொன்னாராயின் அல்லது ஒரு விஷயம் செய்தாராயின் அவர் சொன்ன விஷயம் அல்லது அவர் செய்த விடயம் வெளிப்பார்வையில் “ஷரீஆ”வுக்கு முரணானது போல் யாருக்காவது விளங்கினால் அவர் தனக்கு விளங்கியது போல் முடிவு செய்து விடாமல் அவரிடமே நேரில் அவரின் சந்தேகத்திற்கு விளக்கம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவரை சந்திக்க வாய்ப்பில்லாது போனால் மார்க்க விளக்கம் தெரிந்தவர்களிடம் அது பற்றிக் கேட்டறிந்து கொள்ள வேண்டும். எவரிடம் கேட்டாலும் அவர் குறித்த நபர் சொன்னது அல்லது செய்தது பிழையென்றே சொன்னார்களாயின் அது பிழையென்றே முடிவு செய்தல் வேண்டும்.
1979ம் ஆண்டு நான் காத்தான்குடியில் நடந்த மீலாத் விழாவில் பேசிய கருத்துக்கள் தொடர்பாக காத்தான்குடி உலமா சபை சார்பில் ஐந்து மௌலவீமார் கொழும்பு வந்து கொழும்பு உலமா சபையுடன் தொடர்பு கொண்டு எனக்கும், எனது கருத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுத்தார்கள்.
கூட்டம் எங்கே நடந்தது? கூட்டத்தில் எத்தனை உலமாஉகள் கலந்து கொண்டார்கள்? “பத்வா” எழுதியவர் யார்? தனி ஒரு நபர் எழுதினாரா? அல்லது ஒரு குழு எழுதினார்களா? என்ற எந்த ஒரு விபரமும் எனக்கோ, என்னுடன் சேர்ந்தவர்களுக்கோ தெரியாது.
சில நாட்களுக்குப் பின் “முர்தத் பத்வா” வெளியாக்கப்பட்டது.
“பத்வா” எழுதியவர் யார் என்பது கூட எனக்கும் தெரியாது, என்னுடனிருந்த உலமாஉகளில் எவருக்கும் தெரியாது. ஒரு நாட்டின் உலமா சபை இவ்வாறுதானா “பத்வா” வழங்குவது? “முப்தீ”க்கு பெயர் இல்லையா? அல்லது அவருக்கு தனக்குரிய முதலெழுத்து தெரியாதா?
உலமா சபையினர் எவ்வாறு “பத்வா” வழங்கினார்கள்? என்று ஊர் மக்கள் சொன்ன செய்தி மட்டும்தான் எங்களுக்குத் தெரியுமே தவிர வேறு ஒன்றுமே எங்களுக்குத் தெரியாது.
ஊர் மக்கள் சொன்ன செய்தி:
ஒரு நாள் உலமா சபையைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டும் மருதானை சாஹிறாக் கல்லூரி மண்டபத்தில் ஒன்று கூடினார்களாம். காத்தான்குடியிலிருந்து கொழும்பு சென்ற உலமாஉகள் ஐவரும் நான் பேசிய கருத்துக்கள் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களை மட்டும் எடுத்துச் சென்றுள்ளார்கள். ஒலி நாடாவை இயக்குவதற்குக் கூட அதற்கான உபகரணங்கள் எடுத்துச் செல்லவுமில்லை. வந்த உலமாஉகள் செய்வதறியாது ஒருவர் மற்றவருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்களே தவிர எவரும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சுமார் 10 மணியாகியும் ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. வந்த உலமாஉகளில் சிலர் ஸ்கூல் கதிரைகளிலும், பங்குகளிலும் உறங்கத் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்பாராமல் அங்கு வந்த ஒருவர் (இவர் எனது நண்பர்) என்னிடம் அதை இயக்கும் கருவி உண்டு. அதை நான் எடுத்து வருகிறேன் என்று கூறி ஒரு மணி நேரத்தின் பின் கொண்டு வந்தார். வந்த உலமாஉகளில் ஒரு சிலர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் ஹோட்டலுக்கு தேனீர் குடிக்கப் போய் விட்டார்கள். இறுதியில் ஒரு சிலர் மட்டும் ஒலி நாடாவை இயக்கிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களிற் சிலர் இவருடைய பேச்சை முழுமையாகக் கேட்கத் தேவையில்லை. கட் பண்ணி பண்ணி போட்டு முடித்து விடுங்கள். இவனும், இவனைச் சரி கண்டவர்களும் “முர்தத்” மதம் மாறியவர்கள் என்று “பத்வா” கொடுப்போம் என்று சொன்னதுடன் கூட்டம் கலைந்து விட்டது.
இதையடுத்து சில நாட்களின் பின் “பத்வா” புத்தகம் வெளியானது.
அன்பிற்குரிய படித்தவர்களே! சிந்தனையாளர்களே! நடுநிலை வாதிகளே! நியாயத்தை நிலை நாட்டும் எண்ணமுள்ளவர்களே!
நீங்கள் உங்களின் “கல்பு” மனதிடம் “பத்வா” கேளுங்கள். உலமாஉகள் செய்தது சரியா? நியாயம்தானா? பல்துறைப் பட்டதாரிகளும், குறிப்பாக ஸூபிஸ தத்துவத்தில் திறமை உள்ளவர்களும், தரீகாவின் ஞானம் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து பல மாதங்கள் அல்லது பல நாட்கள் ஆய்வு செய்து முடிவு செய்ய வேண்டிய ஒரு விடயத்தை ஒரு சில மணித்தியாலங்கள் மட்டும், குறட்டைச் சத்தத்தோடும் செவியேற்று விட்டு “பத்வா” வழங்கியிருப்பது நியாயமா? உலமா சபை செய்தது சரியா? உங்கள் மனச் சாட்சியிடம் கேளுங்கள்!
சரி, பிழை ஒரு பக்கம் இருக்கட்டும். கருத்தைப் பேசிய என்னை வினவாமல், கருத்துக்கான விளக்கத்தை என்னிடம் கேட்காமல் உலமாஉகள் தமது விருப்பத்தின் படி “பத்வா” வழங்கியது எந்த வகையில் நியாயமாகும்? உலமாஉகள் அவசரப்பட்டு “பத்வா” வழங்காமல் சில நாட்கள் பிற்போட்டு உலமா சபை உறுப்பினர்களில் ஸூபிஸ கொள்கையும், “வஹ்ததுல் வுஜூத்” கொள்கையும் நன்றாகத் தெரிந்தவர்களையும், “தரீகா”வின் ஷெய்குமாரையும் அழைத்து இது தொடர்பாக அலசி ஆய்வு செய்து முடிவு செய்திருக்கலாம் அல்லவா? ஏன் இவ்வாறு செய்யவில்லை? இதிலுள்ள இரகசியம் என்ன?
இவ்வாறு செய்யாமல் “சுடுகுது மடியைப் பிடி” என்பது போல் அவசரமாக “பத்வா” வழங்கியது மன முரண்டும், சதியுமேயன்றி தவறல்ல. இது எதிரிகளின் திட்டமிட்ட செய்லாகும். இதில் கூடிய பங்கு வஹ்ஹாபீகளுக்கேயாகும். ஏனெனில் அவர்களுக்கெதிராக நான் மட்டுமே உலமாஉகளில் பேசிக் கொண்டிருந்தேன். என் வாயை மூடுவதற்கு அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போனதால் அல்லாஹ்வை மறந்து, தமது மனோ இச்சைக்கு வழிப்பட்டு பெருங்குற்றமொன்றைச் செய்து விட்டார்கள்.
ஒருவனைக் காபிராக்குவதே அவனை உயிரோடு கொலை செய்வதற்குச் சமமானதென்றால் பல்லாயிரம் முஸ்லிம்களை காபிராக்கினால் அவர்கள் அனைவரையும் உயிருடன் கொலை செய்வது போன்றாகும். இது அல்லாஹ்வின் சாபத்தை இழுத்து வருமென்ற அறிவை பொறாமை மிகைத்து விட்டது. அப்சோஸ்! அப்சோஸ்!
தொடர்ந்தால் தொடர்வேன்.