20/01/2026
விட்டிடுவாயோ? வீரபத்திரா வீழ்ந்துநாம்போகக் - கை
#மகா_கும்பாபிஷேகம்_இன்னுமிருப்பது_11_நாட்கள்_மட்டுமே!
உணர்வறு ஜடங்களாகி ஊனமாய் உழன்று வாழ்வில்
திணறியே செய்வதறியாச் சிறுமையாய்க் குறுகி
அன்பு,அறம்,பக்தி,பணிவு,பயம் என்றிவைகள்
இன்றியே இயமனிலும் கொடிய நெஞ்சாய்
இயந்திரம் என்றேயாகி இரும்பினை நிகர்த்து வாழும்
கயவராய் வாழ்ந்து மடிவதோ இவ்வாழ்க்கை?
காசு ஒன்றே கருத்தாயாகி கருணையறு மனத்தாராகி
பேசுவதும் குறைவாயாகி வேசமது பலவுமாகி
தேசமது நினையாராகி மோசடிகள் பலவுமாகி
நாசமெலாம் நன்குசெய்யும் நயவஞ்சகக் கள்வராக
மானிடர்கள் மாறுதர்க்கோ மனிதகுலம் வாழும் பூமி?
"இந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்றவாறு என்று நோக்கித்
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம் அவன் விருப்பெய்தவும்" என்றே
மாணிக்க வாசகரும் மொழிந்ததும் பொய்யா யாமோ?
மானிடந் தழைக்கவும் அருளவும் மாட்டாயோ?
பேணிடும் மரபு, பழைமை எல்லாம் காலம்
ஏறிடும் நவீனந்தன்னில் இழந்துநாம் போனாற் பின்னால்,
கருவிகள் உண்டாம் காசும் உண்டாம்
பெருகிடும் வசதி உண்டாம். என்ன?
பேண்தகு வாழ்வு இல்லை உயிரோட்டமில்லை
மானுடமில்லை மலர்வுகள் இல்லை
பிறப்பு இறப்பே தொழிலாயன்றிப் பிறிதேதுமில்லை
உழலுமிவ் நிலைமையாற் பயனும் என்?
என்னே எதிர்காலம்?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று
வாழுதல் நன்றாம்! அன்றி
ஆலயம் புகாமல் ஆடம்பரங்களால்
மேலைத் தேசத்து மோகத்து மூழ்கியே வாழ்
நாட்களைத் தொலைக்கிறார்!
இப்புவி மாந்தர்.
வீரபத்திரா!
ஈரமது நெஞ்சுடையாய்!
இரங்கிடாய்! இறங்கிடாய்!
சீரெனவே நிமிர்த்திடாய்!
காணிகளோ கபளீகரம்; கர்மபயம் சிறிதுமில்லை!
பேணிட்ட மரபையெல்லாம் மீறிட்ட ஆணவம்!
மாசுக்கள் நின்றன் மண்மேல்;
தானிட்ட சட்டமென ஆடுகின்ற நவீன தக்கர்!
ஏனிந்த நிலைமை ஐய, எழுந்திடாயோ எமக்காய்? "நவீன வீர" வீரபத்திரராய்!
எப்பிழை நேர்ந்தது எம்மில்? ஏன் இந்நிலை?
கற்றவர் சூழக், காசுளார் சூழக்
காத்திரமான கருத்துளாரும் சூழ
நாற்றிசை பரந்து நல் வியாபாரப்
பேருறு மூலைமண் பெரும்பிழை இழைத்ததோ?
மாழுறு நிலைக்குத் தாழுறப் பாராப்
பேருருவாளா பேசு!
விட்டிடுவாயோ வீரபத்திரா வீழ்ந்துநாம் போகக் - கை!
மிக்க மகிழ்ச்சி 🙏🏼
வியாபாரிமூலை இந்து வாலிபர் சங்கம்
வியாபாரிமூலை கலைமணி விளையாட்டுக்கழகம்.
வியாபாரிமூலை ஸ்ரீ பத்திரகாளிசமேத ஆதிசிவ வீரபத்திரர் தேவஸ்தானம்
Kumaresan Kumares