30/05/2024
*பொய்!*
1 சாமுவேல் 31ஆம் அதிகாரத்தில் சவுல் தற்கொலை பண்ணிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, தன் பட்டயத்தை நாட்டி அதன் மேல் விழுந்ததாகவும், அவன் செத்ததை கண்டதும், அவனுடைய ஆயுததாரியும் தற்கொலை பண்ணிக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால்,
2 சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் ஒரு அமலேக்கியன் வந்து சவுலை கொன்றாக கூறுகிறான்.
*கேள்வி என்னவெனில்,*
சவுல் தற்கொலை பண்ணினார் என்றால், அமலேக்கியன் வந்து தாவீதின் இடத்தில் சொன்னது பொய்யா.?
அமலேக்கியன் உண்மையை உரைத்தான் என்றால் ,சவுல் விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையில் தான் சாக விரும்பாமல் தன் ஆயுததாரியிடம் தன்னை கொல்லும்படியாக கூறினார். அப்படியிருக்க, விருத்தசேதனம் இல்லாத ஒரு அமலேக்கியன் இடம் தன்னை கொன்றுவிடும்படியாக எப்படி சவுல் கூறியிருக்க முடியும்?
பதில்:
பரிசுத்த வேதாகமம் எந்த ஒரு சம்பவத்தைச் சொன்னாலும், இரண்டு தரம் சொல்லி, உறுதிப்படுத்துகிறது. சின்னசின்ன வித்தியாசங்கள் இருக்குமே தவிர, சம்பவங்களின் உறுதித்தன்மை சரியாக இருக்கும்!
1சாமு 31:3-5 ல் இந்த சம்பவத்தை சொல்லி இருக்கிற வேதம், மீண்டும்,1நாளா 10:3-5 ல்,
சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.
அப்படியே சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள்.
(1 நாளாகமம் 10:3-6).
*இந்த இரண்டுமே சவுல் தற்கொலை செய்து கொண்டதாகத்தான் கூறுகிறது...*
அமலேக்கியன் கதைக்கும்,
உண்மையான சம்பவத்திற்கும் அதிக வித்தியாசம் உள்ளது.
அமலேக்கியன், தானே சவுலைக் கொன்று போட்டதாகக் கூறினான். அப்படி சொன்னால், தாவீது, நிறைய வெகுமானம் கொடுப்பார் என எதிர்பார்த்த, இவனுடைய ஆசை இவனுடைய
உயிருக்கே ஆபத்தாக முடிந்து விட்டது. (2சாமு 4:10).
காரணம், கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட சவுல் மேல், தாவீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார். ஆகவே, தாவீது சவுலின் மரணத்தைக் கேட்டபோது கோபம் கொண்டார். கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட, சவுல் மேல் கை போட்ட அந்த மனிதனை தாவீது உயிரோடு விடவில்லை... அமலேக்கியன் பொய் அவனைக் கொன்றது. சவுலின் பொய் வாழ்க்கை, சவுலைக் கொன்றது. தேவனுக்குக் கீழ்ப்படியாமல் வாழ்ந்த சவுல், மொத்தத்தில் தன்னை தானே கொன்று விட்டார்...
______