21/07/2026
#சைவசித்தாந்த_மகோற்சவம்
பதிவு 01
சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளை அவர்களின் #சிவக்ஷேத்திராலய_உண்மைவிளக்கம்மற்றும் சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்களின் #மஹோற்சவ_விளக்கம் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாய்வு, மகோற்சவக் கிரியைகளின் ஆகம அடிப்படை, தத்துவப் பொருள் மற்றும் நடைமுறை அம்சங்களை விரிவாக வெளிப்படுத்துகின்றது. இரு நூல்களும் மகோற்சவக் கிரியைகளை ஆழமாக எடுத்துரைப்பதோடு, அவற்றின் உள்ளார்ந்த தத்துவங்களையும் தெளிவுபடுத்துகின்றன. இந்நூல்களை முழுமையாகப் புரிந்துகொள்வதன் மூலம், தற்கால ஆலயங்களில் காணப்படும் பல முரண்பாடுகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்பு இருப்பது இவ்வாய்வின் முக்கிய முடிவாகும்.
இன்றைய காலகட்டத்தில் மகோற்சவ நாட்கள், ஆலய நிர்வாகத்தினர், உபயகாரர்கள் மற்றும் குருமார்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றப்பட்டு வருவது பல இடங்களில் காணப்படுகின்றது. ஆனால், ஆகம நியதிப்படி மகோற்சவமும் கும்பாபிஷேகமும் ஒற்றைப்படை நாட்களில் நடைபெற வேண்டும்; அவற்றின் யாக கால அளவுகள் இரட்டைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்ற விதிமுறை இந்நூல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலச் சந்ததியினரும் ஆலய நிர்வாகத்தினரும் இவ்வாகம நியதிகளைப் பின்பற்றி மகோற்சவங்களை நடத்துவது இன்றியமையாததாகும்.
மகோற்சவக் கிரியைகள் பஞ்சகிருத்தியத் தத்துவங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டு இரு நூல்களிலும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. எந்தெந்த உற்சவங்கள் எந்தெந்த திருத்தொழில்களை உணர்த்துகின்றன என்பதும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இன்றைய சில ஆலயங்களில் மௌன உற்சவத்தை மறைத்தல் (திரோபாவம்) தொழிலின் அடையாளமாகக் கருதும் மரபு காணப்படுகின்றது. ஆனால் தத்துவ மற்றும் ஆகம அடிப்படையில் இவ்விடயம் மீளாய்வுக்குரியதாகும்.
அதேபோன்று, தீர்த்தவாரி உற்சவத்தின் தத்துவப் பொருளிலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பல நூல்கள் தீர்த்தவாரியை அனுக்கிரகத் தொழிலுடன் தொடர்புபடுத்தினாலும், சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் எழுதிய «மஹோற்சவ விளக்கம்» நூல், தீர்த்தவாரியை திரோபாவத் தொழிலின் வெளிப்பாடாகவும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் சண்டேசர் உற்சவம், ஆச்சாரிய உற்சவம் போன்றவற்றை அனுக்கிரகத் தொழிலின் வெளிப்பாடாகவும் விளக்குகின்றது. எனவே, மறைத்தல் மற்றும் அருளல் ஆகிய இரு திருத்தொழில்களின் வரிசை, சதாசிவமூர்த்தியின் பஞ்சமுகத் தத்துவம் மற்றும் ஆகம ஆதாரங்களின் வழியில் மேலும் ஆழமாக ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.
அஷ்டபலி தொடர்பிலும் தற்கால ஆலய நடைமுறைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராமசாந்தியில் இடம்பெறும் வைரவருக்குரிய அஷ்டபலி, பல ஆலயங்களில் மகோற்சவத்தின் பிரவேசபலியாகப் பயன்படுத்தப்படுகின்றது. இவ்விரு கிரியைகளின் நோக்கமும் ஆகம அடிப்படையும் வேறுபட்டவை என்பதனை உணர்ந்து, உரிய சூழலில் உரிய கிரியைகளையே மேற்கொள்வது அவசியமாகும். இவ்விடயத்தில் ஆலய நிர்வாகத்தினரும் சிவாசாரியார்களும் சிறப்பான கவனம் செலுத்த வேண்டும்.
கட்டியம் தொடர்பாகவும் இவ்வாய்வில் குறிப்பிடத்தக்க அவதானிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நா.கதிரைவேற்பிள்ளை அவர்களுடைய நூலிலும், சிவஶ்ரீ குமாரசுவாமிக் குருக்கள் அவர்களுடைய நூலிலும் கட்டியம் குறித்த விரிவான விளக்கம் காணப்படவில்லை. இருப்பினும், தற்காலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணப் பிராந்திய ஆலயங்களில் கட்டியத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகின்றது. களஆய்வின் போது பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், வெளிவீதியில் உலா வரும் உற்சவமூர்த்தியை, ஏனைய தெய்வங்களை அழைப்பது போன்று கட்டியத்தில் அழைப்பது ஆகம மற்றும் இலக்கண நோக்கில் பொருத்தமற்றதாகும் என்பது ஆய்வாளரால் உணரப்பட்ட முக்கியமான முடிவாகும். அந்தந்த ஆலய மரபிற்கேற்ப கட்டியம் அமைய வேண்டும் என்பதே இவ்வாய்வின் நிலைப்பாடாகும்.
மேலும், கொடியேற்றத்தின் போது பிரதான சிவாசாரியார் மஞ்சக் கயிற்றைப் பிடிக்க வேண்டுமா, அல்லது கொடிச்சீலையைப் பிடித்திருக்க வேண்டுமா என்ற கேள்வியும் களஆய்வின் போது எழுந்தது. பல ஆலயங்களில் இருவகையான நடைமுறைகளும் காணப்பட்டபோதிலும், பெரும்பாலான ஆலயங்களில் மகோற்சவ குருவாகிய பிரதான சிவாசாரியார் கொடிச்சீலையைத் தாங்கியபடியே நிற்க, மற்றொரு குரு மஞ்சக் கயிற்றை இழுக்கும் நடைமுறையே அதிகமாகக் காணப்பட்டது. இருப்பினும், இவ்விடயத்திற்கு உறுதியான ஆகம ஆதாரங்களை வெளிக்கொணரும் மேலதிக ஆய்வுகள் அவசியமாகின்றன.
மொத்தத்தில், மகோற்சவக் கிரியைகளில் இடம்பெறும் கிராமசாந்தி, வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீர்த்தவாரி, கொடியேற்றம் உள்ளிட்ட அனைத்து கிரியைகளும் மனித வாழ்க்கையின் ஆன்மிக உயர்வை நோக்கமாகக் கொண்டவையாகவும், சைவசித்தாந்தத் தத்துவங்களோடு நெருங்கிய தொடர்புடையவையாகவும் அமைகின்றன. எனவே, இவ்வாய்வு மகோற்சவ மரபுகளை ஆகம அடிப்படையில் புரிந்துகொள்ள விரும்பும் ஆய்வாளர்கள், சிவாசாரியார்கள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கு பயனுள்ள வழிகாட்டி ஆய்வாக அமையும் என்று நம்பப்படுகின்றது.
அடுத்த பதிவில் மிகுதி
ஆய்வாளர்
சிவஶ்ரீ கிருஷ்ண ஜனேந்திரக்குருக்கள்
சிவாகம பீடம்