08/08/2026
இறுதி முடிவு இனிதே அமைய...
நீங்கள் எப்போது மரணிப்பீர்கள் ? எங்கு மரணிப்பீர்கள் ? என்பது உங்களது கவலையாக இருக்க வேண்டியதில்லை.
ஏன் தெரியுமா? அது உங்கள் கையில் இல்லை! அது பற்றியெல்லாம் அறிந்தவன் அல்லாஹ் மட்டுமே.
மாறாக, நான் எந்த நிலையில் மரணிப்பேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கும் போது எனக்கு மரணம் வரும் என்பதே நம் ஒவ்வொருவரினதும் மிகப் பெரிய கவலையாக இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَىٰ مَا مَاتَ عَلَيْهِ.
"ஒவ்வோர் அடியானும் அவன் எந்த நிலையில் மரணித்தானோ அந்த நிலையிலேயே எழுப்பப் படுவான்."
(முஸ்லிம், அஹ்மத்)
அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த நிலையில், ஒரு வணக்கத்தில், நற்காரியத்தில் ஈடுப்பட்டிருந்த நிலையில் மரணித்தவர் அதே நிலையில் மீளெழுப்பப்படுவார்; அல்லாஹ்வுக்கு மாறு செய்து, ஒரு பாவத்தில் ஈடுபட்ட நிலையில் மரணித்தவர் அந்த நிலையிலேயே எழுப்பப்படுவார்.
ஆரம்ப கால ஸலபுகள் சொன்ன ஒரு விடயம் இங்கு குறிப்பிடத்தக்கது.
كَمَا تَعِيشُونَ تَمُوتُونَ، وَكَمَا تَمُوتُونَ تُبْعَثُونَ، وَكَمَا تُبْعَثُونَ تُحْشَرُونَ.
"நீங்கள் எவ்வாறு வாழ்கிறீர்களோ, அவ்வாறே மரணிப்பீர்கள்.
நீங்கள் எவ்வாறு மரணிக்கிறீர்களோ, அவ்வாறே எழுப்பப்படுவீர்கள்.
நீங்கள் எவ்வாறு எழுப்பப்படுகிறீர்களோ, அவ்வாறே (விசாரணைக்காக) ஒன்று திரட்டப்படுவீர்கள்."
இதுவொரு பெரிய உண்மையாகும். இவ்வுலக வாழ்க்கை எவ்வாறு இருக்கிறதோ அதுவே மறுமை நிலையைத் தீர்மானிக்கும் என்பதை இந்தக் கூற்று ஆழமாக விளக்குகின்றது.
எனவே, எந்நிலையிலும் நல்லது செய்து, நன்மை செய்து வாழும் போதே நாம் நல்ல முடிவைப் (ஹுஸ்னுல் காதிமா) பெற முடியுமாக இருக்கும்.
யா அல்லாஹ்! நமக்கு நல்ல முடிவை தந்தருள்வாயாக. நீ நம் மீது திருப்தியடைந்த நிலையில் நமது ஆத்மாக்களைக் கைப்பற்றுவாயாக! ஆமீன்!