29/04/2026
ஹஜ் பெருநாள் தினத்தில் குர்பான் கடமைகளைத் தடையின்றி நிறைவேற்ற உறுதிப்படுத்தக் கோரி ஜனாதிபதி அவர்களுக்கு SLTJ அனுப்பிய கடிதம்!
============================
29.04.2026
அனுப்புனர்:
M.F.M FASEEH
பொதுச் செயலாளர்,
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ),
தலைமையகம்,
241A Sri Saddarma mawatha Maligawatta Colombo -10
பெறுநர்:
கௌரவ அநுர குமார திஸாநாயக்க,
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01.
கௌரவ ஜனாதிபதி அவர்களே,
பொருள்:
புனித வெசாக் வாரத்தில் அமையவுள்ள ஹஜ் பெருநாள் குர்பான் கடமைகளைத் தடையின்றி நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த கோரல்
இலங்கையின் பன்மைத்துவத்தை மதித்து, அனைத்து இன மக்களும் தமது உரிமைகளை அனுபவிக்க தாங்கள் வழங்கி வரும் தலைமைத்துவத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எதிர்வரும் மே மாதம் 28 அல்லது 29 ஆம் திகதிகளில் முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது. இக்காலப்பகுதியானது மே 27 முதல் ஜூன் 2 வரை அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள புனித வெசாக் வாரத்துடன் இணைந்து வருகின்றது. இந்நிலையில், ஹஜ் பெருநாளின் முக்கிய மதக் கடமையான குர்பான் (உழ்ஹிய்யா) கொடுப்பது தொடர்பாக முஸ்லிம் சமூக மத்தியில் நிலவும் சில கவலைகள் குறித்து தங்களது கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
இலங்கை அரசியலமைப்பின் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தின் அடிப்படையில், இக்கடமையை நிறைவேற்றுவதில் பின்வரும் விடயங்களை உறுதிப்படுத்துமாறு மேலான கோரிக்கையை முன்வைக்கின்றோம்:
1. சுற்றறிக்கை வெளியிடுதல்: குர்பான் கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பில் முஸ்லிம் சமூகத்திற்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாத வண்ணம், உரிய பாதுகாப்பு மற்றும் வசதிகளை வழங்க பொலிஸார் மற்றும் உள்ளூராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் வகையில் உத்தியோகபூர்வ சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுதல்.
2. அச்சுறுத்தல்களைத் தடுத்தல்: சில தரப்பினர் இக்காலப்பகுதியைச் சாதகமாகப் பயன்படுத்தி மதவாத உணர்வுகளைத் தூண்டி, சட்டபூர்வமான இக்கடமையைத் தடுக்க முயற்சிப்பதைத் தவிர்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தல்.
வெசாக் வாரத்தின் புனிதத் தன்மையை நாமும் மதிக்கின்றோம். அதேவேளை, முஸ்லிம்களின் மத உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். கடந்த காலங்களில் நிலவிய தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்து, இம்முறை அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட தங்களது நேரடித் தலையீடு அவசியமாகின்றது.
இந்த விடயத்தில் தாங்கள் காட்டும் அக்கறை, நாட்டின் தேசிய நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என நாம் நம்புகிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
M.F.M FASEEH
பொதுச் செயலாளர்,
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்.