30/05/2026
வெசாக் போன்ற பிற மத நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் தன்சல் உணவை சாப்பிடலாமா?
பதிலளிப்பவர்: சகோதரர் அப்துர் ராஸிக்
எழுத்து வடிவம்: சகோதரர். அப்துர் ரஹீம்
இலங்கை பௌத்த மக்கள் அதிகமாக வாழக்கூடிய, அரசியல் சாசனப்படி பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடாகும். இங்கு வாழும் பௌத்த மக்களின் மிக முக்கிய வழிபாட்டுத் திருநாளான “வெசாக்” தினத்தன்று, புத்த பெருமானின் பிறப்பு, ஞானோதயம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூர்ந்து பல்வேறு சடங்குகளையும் கலாச்சார நிகழ்வுகளையும் நடத்துவார்கள்.
அன்றைய தினம் தோரணங்கள் மற்றும் அலங்காரங்களைக் காண்பதற்கு வரும் மக்களின் பசியையும் தாகத்தையும் தீர்ப்பதற்காக பௌத்த மக்களால் “தன்சல்”என்ற பெயரில் அன்னதானம் (உணவு, கஞ்சி, ஐஸ்கிரீம், சர்பத் மற்றும் குடிபானங்கள்) விநியோகம் செய்யப்படுகிறது.
“தன் சல” என்ற சிங்கள வார்த்தையின் நேரடி அர்த்தமே தர்மமாக அல்லது தானமாக வழங்கக்கூடிய இடம் என்பதாகும். இந்தத் தன்சல் உணவை முஸ்லிம்கள் சாப்பிடலாமா என்ற சர்ச்சை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது.
ஆரம்ப காலங்களில் நாங்களும் இந்தத் தன்சல் உணவுகள் ஹராம் (விலக்கப்பட்டது) என்று பிரச்சாரம் செய்து வந்தோம். ஆனால், மார்க்க ரீதியாக கடுமையான நுணுக்கத்துடன் ஆய்வு செய்தபோது, இது மார்க்கத்தில் தடுக்கப்பட்ட உணவு அல்ல என்ற தெளிவான முடிவே நமக்குக் கிடைத்துள்ளது. இதற்கான விரிவான மார்க்க விளக்கங்களை இனி காண்போம்.
1. தன்சல் உணவு பூஜை செய்யப்பட்டதா?
தன்சல் உணவு ஹராம் என்று கூறுபவர்கள், இது 'பூஜை செய்யப்பட்ட உணவு' என்ற வாதத்தையே முன்வைக்கிறார்கள். ஆனால், நடைமுறையில் தன்சல் உணவு இரு வகைகளில் விநியோகிக்கப்படுகிறது:
•பொழுதுபோக்கு மற்றும் தர்ம நோக்கம்: பெரும்பாலான இடங்களில் மக்கள் சாதாரணமாகப் பட்டாசு கொளுத்தி, ஒரு பொழுதுபோக்காகவும், தர்ம சிந்தனையோடும், பசியோடு வருபவர்களின் பசியைத் தீர்த்து புண்ணியம் தேடும் நோக்கோடுமே உணவுகளை வழங்குகிறார்கள். இதில் எந்தவிதமான மந்திரங்களோ, பூஜைகளோ செய்யப்படுவதில்லை.
• மதகுருமார்களின் 'பிரித்' ஓதுதல்: ஒரு சில இடங்களில் தன்சல் நிகழ்வை ஆரம்பிக்கும் போது பௌத்த பிக்குமார்களை அழைத்து “பிரித்” என்ற பெயரில் சில மந்திர சொற்களை ஓதுகிறார்கள். இது உணவிற்காக ஓதப்படும் பூஜை அல்ல. முஸ்லிம்களில் சிலர் தங்களின் புதிய மஜ்லிஸ்களை (நிகழ்வுகளை) ஆரம்பிக்கும் போது 'ஃபாத்திஹா' ஓதுவதைப் போன்ற ஒரு வழக்கமே பௌத்தர்களிடம் உள்ள இந்த 'பிரித்' ஓதுதலாகும். இது புத்த பெருமானுக்குப் படையல் செய்யும் காரியம் அல்ல.
2. படையல் செய்யப்பட்டதாக இருந்தாலும் ஹராம் ஆகுமா?
அல்குர்ஆனின் அடிப்படையில் 'இஹ்லால்' என்பதன் விளக்கம்?
ஒரு வாதத்திற்கு, இந்தத் தன்சல் உணவு பிற மதக் கடவுள்களின் பெயரால் படையல் செய்யப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும் அது மார்க்கப்படி ஹராமாகுமா என்றால், அப்போதும் அது ஹராமாகாது.
அல்குர்ஆனின் 2-வது அத்தியாயத்தின் 173-வது வசனத்தில் அல்லாஹ் எவற்றையெல்லாம் ஹராமாக்கியுள்ளான் என்பதைத் தெளிவுபடுத்துகிறான்:
"தாமாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி மற்றும் அல்லாஹ் அல்லாதவர்களின் பெயர் கூறப்பட்டவை (உஹில்ல பிஹி லிகைரில்லாஹ்) ஆகியவற்றைத்தான் உங்களுக்கு அவன் ஹராமாக்கியிருக்கிறான்."
இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள "உஹில்ல" (இஹ்லால்) என்ற அரபு வார்த்தையின் ஆரம்பக்கருத்து 'சப்தமிடுதல்' என்றிருந்தாலும், அரபு மக்கள் மத்தியிலும் சமூக மன்றத்திலும் அதன் நேரடிப் பொருள் 'அறுத்துப் பலியிடுதல்' என்பதாகும்.
அதாவது, அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களின் பெயரால் 'அறுத்துப் பலியிடப்படும் மாமிச உணவுகளைத்தான்' இஸ்லாம் தடுத்துள்ளது. தன்சல் என்பது தானியங்கள், பருப்பு, அரிசி மற்றும் குடிபானங்கள் போன்ற அறுத்துப் பலியிடப்படாத உணவுகளாகும். எனவே, இதனை ஹராமாக்குவதற்கு குர்ஆனில் எவ்வித ஆதாரமும் (நஸ்ஸும்) கிடையாது.
இது சம்பந்தமாக அறிஞர் பி.ஜே அவர்களால் விரிவான விளக்கங்கள் முன்வைக்கப்பட்டு, இறுதியாக நடத்தப்பட்ட பகிரங்க விவாதத்திலும் "இஹ்லால் என்பது அறுத்துப் பலியிடுதல் தான்" என்பதை தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துள்ளோம்.
எனவே, அல்லாஹ்வினால் ஹலாலாக்கப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் தூய்மையான குடிபானங்களை ஹராம் செய்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. தன்சல் உணவு மார்க்க அடிப்படையில் ஹராம் கிடையாது.
3. நடைமுறை வழிகாட்டுதலும் தவிர்ந்து கொள்ள வேண்டிய நிலையும்!
உணவு ஹலாலாக இருந்தாலும், நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய ஒழுங்குமுறை உள்ளது:
இந்தத் தன்சல் உணவுகள் வெசாக் திருவிழாவைக் கொண்டாட வரும் மக்களுக்காகவே விநியோகிக்கப்படுகின்றன. எனவே, முஸ்லிம்களாகிய நாம் வேண்டுமென்றே அந்த வெசாக் தோரணங்களைப் பார்க்கச் சென்று, வரிசையில் நின்று அந்த உணவை வாங்கிச் சாப்பிட்டால், நாமும் அவர்களின் மதக் கொண்டாட்டத்தில்/சடங்கில் பங்குபெறுபவர்களாகக் காட்சி அளிக்க நேரிடும். இதனால், மார்க்கத்தில் பிற மதக் கலாச்சாரங்களுக்கு ஒப்பாக நடப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில், நாமாகத் தேடிச் சென்று அங்கு உண்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
4. நெருக்கடியான சூழ்நிலைகளில் அனுமதி!
நாம் ஒரு பயணத்திலோ அல்லது நமது சொந்த வேலை நிமித்தமாகவோ வீதியில் செல்லும் போது, அவர்கள் நம்மை வழிமறித்து வற்புறுத்தி இந்தத் தன்சல் உணவுகளையோ அல்லது குடிபானங்களையோ தரும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு.
அந்நேரத்தில் நாம் வாங்க மறுத்தால், அவர்கள் நம் மீது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தவும் நல்லிணக்கம் பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், நாம் தாகத்திற்கோ பசிக்கோ அதனைப் பருகினாலோ அல்லது உட்கொண்டாலோ, நாம் அந்த மத வழிபாட்டு நிகழ்வில் கலந்து கொண்டதாக ஆகாது. ஏனெனில், நாம் வேண்டுமென்று தேடிச் சென்று அதை உட்கொள்ளவில்லை.
சுருக்கமாகக் கூறின், தன்சல் என்ற பெயரில் வழங்கப்படும் அரிசி, பருப்பு, தானியங்கள் மற்றும் தூய்மையான பானங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் "ஹராமான உணவு அல்ல; அது ஹலாலானதுதான்."
எனினும், பிற மதக் கொண்டாட்டங்களுக்கு ஒத்துப் போவது போன்ற தோற்றத்தைத் தவிர்ப்பதற்காக, நாமாகத் தேடிச் சென்று அந்தத் திருவிழாச் சூழலில் நின்று அதை உண்பதைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால், பயணங்களின் போதோ அல்லது தவிர்க்க முடியாத வற்புறுத்தலின் போதோ அதனை உட்கொள்வதில் மார்க்க ரீதியாக எந்தத் தவறும் இல்லை என்பதே தெளிவான முடிவாகும்.
#முஸ்லிம்கள்_வெசாக்_நிகழ்ச்சிகளில்_கலந்து_கொள்ளலாமா #தன்சல்_உணவை_சாப்பிடலாமா #அப்துர்_ராசிக் #இஸ்லாம் #பௌத்தம் #இலங்கை