29/05/2025
#வஹியின்_ஒளியில்_குர்பானியின்_சட்டங்கள் 03
• குர்பானிப் பிராணிகள்
ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
ஆடு என்பதில் வெள்ளாடு, செம்மறி ஆடு இன்னும் பலவகைகள் அடங்கும்.
மாடு என்பதில் நாட்டு மாடு, எருமை மாடு உள்ளிட்ட அதன் அனைத்து வகைகளும் அடங்கும்.
ஒட்டகம் என்பதில் ஒட்டகத்தின் அனைத்து வகைகளும் அடங்கும்.
இம்மூன்று இனத்தில் அடங்கும் அனைத்தையும் குர்பானி கொடுக்கலாம்.
அகீகா, குர்பானி ஆகிய வணக்கங்களுக்குத் தான் ஆடு மாடு ஒட்டக்கங்களை மட்டும் கொடுக்க வேண்டும்.
இது அல்லாமல் நன்மையை நாடி நாமாக அறுத்துப் பலியிட நினைத்தால் கோழி சேவல் உள்ளிட்ட எதனையும் குர்பானியாக கொடுக்கலாம்.
ஒரு காரியம் நிறைவேறினால் ஒரு முயலை அறுத்து அல்லது கோழியை அறுத்து தர்மம் செய்வேன் என்று நேர்ச்சை செய்தால் அதை குர்பானி கொடுக்கலாம்.
صحيح البخاري
881 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَيٍّ، مَوْلَى أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ اغْتَسَلَ يَوْمَ الجُمُعَةِ غُسْلَ الجَنَابَةِ ثُمَّ رَاحَ، فَكَأَنَّمَا قَرَّبَ بَدَنَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّانِيَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَقَرَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الثَّالِثَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ كَبْشًا أَقْرَنَ، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الرَّابِعَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ دَجَاجَةً، وَمَنْ رَاحَ فِي السَّاعَةِ الخَامِسَةِ، فَكَأَنَّمَا قَرَّبَ بَيْضَةً، فَإِذَا خَرَجَ الإِمَامُ حَضَرَتِ المَلاَئِكَةُ يَسْتَمِعُونَ الذِّكْرَ»
ஜும்ஆவுக்கு முதல் நேரத்தில் வருபவர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வருபவர் மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வருபவர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வருபவர் கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வருபவர் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 881
• பிராணிகளின் தன்மைகள்
குர்பானிப் பிராணிகள் பெரிய குறைகள் இல்லாததாக இருக்க வேண்டும்.
سنن الترمذي ت شاكر (4/ 85)
1497 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: أَخْبَرَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ [ص:86] عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، عَنْ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: «لَا يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلَا بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلَا بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلَا بِالعَجْفَاءِ الَّتِي لَا تُنْقِي»
தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா பின் ஆசிப் (ரலி)
நூற்கள் : திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)
பளிச்சென்று தெரியும் குறைகளைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். சிறிய அளவிலான குறைபாடுகள் இருந்தால் குற்றமில்லை என்பதை இது உள்ளடக்கி இருக்கிறது.
கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)
நூற்கள் : முஸ்லிம் (3637)
உட்பகுதியில் பாதி கொம்பு உடைந்த ஆடு குர்பானி கொடுக்கப்படுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
நூல் : நஸயீ (4301)
அறிவிப்பாளர் : அலீ (ரலி)
கொம்புகளில் மேல் ஓடும், உள் பகுதியும் உடைந்து இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கக் கூடாது. கொம்பின் மேல் ஓடு மட்டும் உடைந்து உட்புறம் உடையாமல் இருந்தால் அதைக் குர்பானி கொடுக்கலாம்.
இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆடு வாங்குபவர்கள் பெரிய கொம்புள்ள, முகம், மூட்டுக்கால், கண் பகுதி கருப்பு நிறமுடையதாக வாங்குவது சிறப்புக்குரியதாகும். ஆனால் கட்டாயமில்லை.
பெண் பிராணியை பெரும்பாலும் யாரும் குர்பானி கொடுப்பதில்லை. இது கூடாது என்று கருதுகிறார்கள். பெண் பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம் என்பதற்கு பின்வரும் வசனம் ஆதாரமாக உள்ளது.
(பலிப் பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்! என (முஹம்மதே!) கேட்பீராக! ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா? என்று (முஹம்மதே!) கேட்பீராக!
அல்குர்ஆன் (6 : 143)
பெண் பிராணிகளை அறுத்து உண்பதை அல்லாஹ் ஹராமாக ஆக்கவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது. உணவாக உண்பதில் ஆண் பிராணியும் பெண் பிராணியும் சமமானவை என்பதால் பெண் பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.
பெண் பிராணிகள் கருவுற்று இருந்தால் அவற்றின் குட்டிகளை உண்பதை அல்லாஹ் ஹராமாக ஆக்கவில்லை என்று இவ்வசனம் கூறுகிறது.எனவே கருவுற்ற பிராணிகளை அறுத்து உண்ணலாம். குர்பானியும் கொடுக்கலாம் என்பதும் இவ்வசனத்தின் மூலம் தெரிகிறது.
குர்பானிப் பிராணிகளுக்குப் போதுமான உணவளித்து பராமரிக்க வேண்டும்.
மதீனாவில் குர்பானிப் பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா(ரலி)
நூற்கள் : அபூஅவானா
• ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட பிராணி
காயடிக்கப்பட்ட பிராணியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்ததாக அஹ்மதில் ஒரு ஹதீஸ் இடம் பெறுகிறது.
இந்த ஹதீஸில் ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்ற பலவீனமானவர் இடம் பெறுகிறார். இந்த ஹதீஸ் பலவீனமானதாக இருந்தாலும் காயடிக்கப்பட்ட ஆட்டைக் கொடுப்பதற்கு நம்பத் தகுந்த ஹதீஸ்களில் எந்தத் தடையும் வரவில்லை. ஆட்டிற்குக் காயடிப்பதினால் அதன் வளர்ச்சி நன்றாக இருக்குமே தவிர தரம் எந்த விதத்திலும் குறைந்து விடாது. ஆகையால் காயடிக்கப்பட்ட பிராணிகளையும் குர்பானி கொடுக்கலாம்.
• பிராணியின் வயது
குர்பானிக்காக வாங்கப்படும் பிராணிக்கு பல் விழுந்திருக்க வேண்டும். பால்குடிக்கும் குட்டிகளை அறுத்துப் பலியிடக் கூடாது. குர்பானிப் பிராணிகள் எத்தனை வயதுடையதாக இருக்க வேண்டும் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களில் இருந்து நாம் அறியலாம்.
இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார்கள். அவர் (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா(ரலி)
நூற்கள் : புகாரி(5560)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அதில் எனக்கு ஜத்வு கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல் : முஸ்லிம் (3634)
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானிக் கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்
நூல் : நஸயீ (4306)
பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆடு, மாடு, ஒட்டகத்தில் பல் விழுந்தவை முஸின்னா என்று சொல்லப்படும்.
இரண்டு வருடம் பூர்த்தியான ஆடு, மாடுகள் முஸின்னா எனப்படும். ஆனால் ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்தால் தான் முஸின்னா என்பர். பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இது இடம் பெற்றுள்ளது.
அடுத்து ஜத்வு என்பதையும் கொடுக்கலாம் என்று சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்வு என்பது முஸின்னாவுக்கு முந்தைய நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஜத்வு என்பது ஆறு மாதம் பூர்த்தியடைந்தவை என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்தவை என்றும் கூறப்படுகிறது.
முஸின்னா கிடைக்கவில்லையானால் அல்லது முஸின்னா ஆட்டை, மாட்டை வாங்குவதற்குரிய வசதியில்லையானால் முஸின்னாவிற்கு முந்தைய நிலையில் உள்ள ஜத்வு வகையைக் கொடுக்கலாம்.
• பாலூட்டும் பிராணி
குட்டியை ஈன்று பால் கொடுத்துக் கொண்டிருக்கும் பிராணியை அறுக்க வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஒரு அன்சாரித் தோழர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காக ஆடு அறுப்பதற்காக) கத்தியை எடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பால்தரும் ஆட்டை அறுக்க வேண்டாம் என நான் உம்மை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
முஸ்லிம் : (3799)
இன்ஷா அல்லாஹ், தொடரும்...
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள, எமது உத்தியோகபூர்வ வாட்ஸ்அப் (வாட்ஸாப்ப் Community) குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள்!
https://chat.whatsapp.com/GPp7nVvCI7P8qfIrLp1A3k
எமது உத்தியோகபூர்வ WhatsApp Channel ஐ Follow செய்துக் கொள்ளுங்கள்!
https://whatsapp.com/channel/0029VaAOYLbGE56tXjYFFh07