24/08/2026
📖 சத்தியவசனம் – இலங்கை [ஆகஸ்ட் 25 செவ்வாய்]
📙 இன்றைய தியானத்துக்குரிய வேதபகுதி வேத வாசிப்பு :
2இராஜா 4:1-7
தேவ ஆசீர்வாதம்
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது என்றான். 2இராஜாக்கள் 4:2
“இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்" என்று எழுதப்பட்டுள்ளது (சங்.128:4). இங்கே உலகப்பிரகாரமான ஆசீர்வாதமாகிய ஐசுவரியம், சொத்துக்கள், காணிகள், அணியும் உடைகள், ஆபரணங்கள் இப்படியாக குறிப்பிடப்படவில்லை. அவனுடைய மனைவி எப்படி ஆசீர்வாதமாய் இருப்பாள், பிள்ளைகள் எப்படி இருப்பார்கள். அவனுடைய கையின் பிரயாசம் எப்படி ஆசீர்வதிக்கப்படும் இவற்றைத்தான் குறிப்பிடுகிறார். “கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்" என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த இடத்திலே ஒரு தீர்க்கதரிசியின் புத்திரரின் மனைவி, எலிசாவிடத்தில் வந்து, உமது அடியானாகிய எனது புருஷன் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை நீர் அறிவீர். இப்போது கடன் கொடுத்தவன் வந்து எனது இரண்டு குமாரரையும் கேட்கிறான் என்கிறாள். அப்பொழுது எலிசா நான் உனக்கு என்ன செய்யவேண்டும்; உன்னிடத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டான். அதற்கு அவள், ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் என்னிடம் வேறு எதுவும் இல்லை என்கிறாள். அப்பொழுது எலிசா, “நீ போய் அயல்வீட்டில் எல்லாம் வெறும் பாத்திரத்தைக் கேட்டு வாங்கி,அதில் உன்னிடம் உள்ள எண்ணெயை ஊற்று" என்றான். அப்படியே அவள் செய்தாள். பாத்திரங்கள் தீர்ந்துபோகும் அளவிற்கு அவள் அவற்றில் எண்ணெயை ஊற்றினாள். இனி பாத்திரங்கள் இல்லையென்றபோது, எண்ணெய் ஊற்று நின்றுபோயிற்று. அதை எலிசாவிற்கு அறிவித்தபோது, அவன் “அந்த எண்ணெயை விற்று உனது கடனை அடைத்து, மீந்ததைக் கொண்டு நீயும் உனது குமாரரும் ஜீவனம்பண்ணுங்கள்" என்றான்.
அருமையான தேவபிள்ளையே, கர்த்தர் அந்த விதவையின் குறைவை எப்படித் தீர்த்தார் என்பதைப் பார்த்தீர்களா. அவளிடம் உள்ளதைக்கொண்டே அற்புதம் செய்தார். உள்ளதையே பன்மடங்காகப் பெருக்கினார். எப்படிப் பெருக்கினார்? அவளிடமிருந்து உள்ளதை எடுத்துவிடாமல், அவளாகவே தன்னிடம் இருப்பதை ஒப்புக்கொடுக்க வைத்தார். அதைக் கர்த்தர் பெருகச் செய்தார்.
ஆண்டவர் ஒருநாளும் அவரை நம்பினவர்களைக் கைவிடமாட்டார். அவர்களுக்கு ஒன்றுமே இல்லாமல் விடமாட்டார். நாமோ எம்மிடம் இருப்பதை உணராமல், இல்லாததற்காக அங்கலாய்க்கிறோம். இருப்பதைத் தேவனிடம் கொடுத்துவிட்டால், அவர் அதைப் பன்மடங்காகப் பெருக்கி, நமக்குத் திரும்பவும் தருவதற்கு வல்ல மையுள்ளவராய் இருக்கிறார். நமது குறைவுகளைப் போக்கவும், நம்மை ஆசீர்வதிக்கவும் கர்த்தர் போதுமானவர்.
💫 இன்றைய சிந்தனைக்கு: நம்மிடம் ஒன்றுமில்லை என்று சொல்லாமல், இருப்பதைக் கர்த்தரிடத்தில் கொடுக்கும்போது, அவர் அற்புதம் செய்வார்.
📘 அனுதினமும் தேவனுடன்.