11/03/2025
கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் இன்றைக்கு 2000ம் வருடங்களுக்கு முன் நாகர் காலத்தில் அமைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை கொண்ட பழைமையான ஆலயம், சிவாலயமாக தற்பொழுது முதன் முறையாக திருக்குடமுழுக்கு காண திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இவ்வாலயத்தின் சிறப்பை மெருகூட்ட தனியான சனீஸ்வரர் சந்நிதி, கொடிமரத்துடன் கூடிய அம்மன் (மனோன்மணி) சந்நிதி மற்றும் கருவறையினை சுற்றி காசி நர்மதா நதியில் எடுக்கப்பட்ட 108 பாணலிங்கங்களை பிரதிஷ்டை செய்து எமது ஆலயம் மிகச்சிறப்பானதும், கிழக்கில் 108 பாணலிங்கம் அமையப்பெறும் முதல் சிவாலயமாகவும் நிர்மாணிப்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அமைப்பெறும் 108 பாணலிங்கங்களையும் தனித்தனி உபயமாக செய்து அதனை தங்கள் கைகளால் பிரதிஷ்டை செய்யும் பாக்கியம் அடியவர்களுக்கு கிடைக்கவிருக்கின்றது. எனவே பாணலிங்கத்தினை பெற்றுத்தரவிரும்பும் சிவனடியார்கள் சிவன் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு முன் பதிவுகளை செய்து கொள்ளவும்.
(+94 77 361 9230 / +94 77 387 6361)
மேலும் புராதன கோயிலை புனரமைத்து பூசைகள் நடைபெறச் செய்யும் மகத்தான பணியில் தாங்களும் இணைந்து பேறுபெறுங்கள். ஆலயத்தில் மீதமுள்ள திருப்பணி வேலைகளை விரைவில் முடிக்க அடியார்களின் உதவிகளை ஆலய திருப்பணிக் குழுவினர் நாடிநிற்கின்றனர். தங்களின் உதவிகளை நேரடியாக வழங்கவோ அல்லது வங்கி கணக்கில் வைப்பிலிடவோ முடியும்.
(சிவன் ஆலயம், இலங்கை வங்கி, மட்டக்களப்பு கிளை கணக்கிலக்கம் - 2887243)
https://maps.app.goo.gl/Cwwp9Rbze5oi1nMNA?g_st=iw
#பாக்கியம் அருளும் பாணலிங்கம் #
இயற்கையிலேயே இறையம்சம் பொருந்தியதாக உள்ள பல பொருட்களில் பாணலிங்கம் ஒன்று. இது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். பாணலிங்கம் என்பது, பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது.
கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள். தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில் பெருமளவுக்கு கிடைக்கின்றன.
பாணாசுரன் என்ற அசுரன், சாஸ்திரங்களின் உள்ளர்த்தங்களை, அதற்குத் தகுந்த பெரியவர்களிடம் கேட்கும் பழக்கம் கொண்டவன். அவ்வாறு கேட்டதன் வாயிலாக, சிவலிங்க வழிபாட்டின் மகிமையையும், சிவபூஜை செய்வதன் பலன்களையும் மானசீகமாக உணர்ந்து, அதைச் செய்ய விரும்பினான். அதற்காக சிவபெருமானை நோக்கி கடுமையான தவத்தில் ஈடுபட்டான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், அவன் முன்பாக தோன்றி, ‘என்ன வேண்டும்?’ என்று கேட்டார்.
பாணாசுரன், சிவபெருமானிடம் ‘ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்கு 14 கோடி சிவலிங்கங்கள் வேண்டும்’ என்று கேட்டான்.
அவனது வேண்டுதலின்படியே சிவபெருமான் வரத்தை அளித்தார். தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்கு 14 கோடி சிவலிங்கங் களைத் தந்தருளினார். அதைக் கொண்டு பாணா சுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்க திருமேனிகள் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகிறது.
பாணாசுரன், தான் வழிபட்ட சிவலிங்கங்களை புண்ணிய தலங்களான ஸ்ரீசைலம், கங்கை, நீலகண்டம், நேபாளம், யமுனை, நர்மதை, கன்னியாகுமரி முதலான புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட வழிபாட்டு தலங்களில் ஸ்தாபித்து வழிபட்டான். அத்தகைய சிவலிங்கங்கள் தற்போதும் பரவலாக காணப்படுகின்றன. சிறிய அளவில் இருக்கும் லிங்க வடிவம் முதல், ஒரு அடி நீளத்துக்கும் மேல் அளவு கொண்ட லிங்கங்கள் வரையில் அவனால் வழிபடப்பட்டன. அவன் மந்திரங்கள் கொண்டு சிவ பூஜை செய்திருந்த காரணத்தால், அந்த லிங்கங்களில் எல்லா காலத்திலும் சிவசான்னித்தியம் இருப்பதாக ஐதீகம்.
நர்மதேஸ்வர சிவலிங்கம் எனப்படும் பாணலிங்கத்தில், வெடிப்பு அல்லது பிளவுகள் இருந்தால் அவற்றை வைத்து பூஜைகள் செய்வது கூடாது. பாணலிங்கம் அல்லாத வேறு வகை லிங்க வடிவங்களும் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றன. தற்காலத்தில் புனிதமான நர்மதை நதியின் படுகையில் கிடைக்கும் பாணலிங்கங்கள் விலை மதிப்பற்றவையாக கருதப்படுகின்றன. அவை கீறல் போன்ற ரேகையுடனும், பிந்து வட்டம், பளபளப்பு, கருமையான நாவல்பழம் போன்ற நிறத்தோடு நீள் உருண்டை வடிவம் கொண்டதாகவும் இருக்கின்றன. அத்தகைய பாணலிங்கங்களே வழிபாட்டிற்கு உகந்ததாக உள்ளன.
(நன்றி - மாலை மலர்)