09/05/2025
புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (ஏறக்குறைய 70) 69 வயதுடைய கர்தினால் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரவோஸ்ட் அவர்கள் திருஅவையின் 267 ஆவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
14ம் லியோ [14ம் சிங்கராயர்]
அகுஸ்தீன் சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை என்னும் புகழ் பெற்ற திருத்தந்தை அவர்கள் பதினான்காம் லியோ என்னும் பெயரினை தனது பெயராக ஏற்றுள்ளார். மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பின் திருஅவை பொறுப்பேற்கும் அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த இரண்டாவது திருத்தந்தையாவார். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வடக்குப் பகுதியில் பிறந்து தெற்கில் பணியாற்றிய பெருமைக்குரியவர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் கல்லோ மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், திருப்பீட ஆயர்பேரவைக்கான தலைவராகவும், இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டவர்.
1955 -ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது தந்தை Louis Marius Prevost பிரெஞ்சு மற்றும் இத்தாலிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். தாயார் Mildred Martínez இஸ்பானிய மொழி பேசும் வம்சாவளியைச் சார்ந்தவர். இவருக்கு Louis Martín மற்றும் John Joseph என்னும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர்.
தனது குழந்தைப் பருவத்தையும், இளமைப் பருவத்தையும் அமெரிக்காவில் கழித்த திருத்தந்தை அவர்கள், முதலில் புனித அகுஸ்தீன் சபையின் இளங்குருமடத்தில் கல்வி கற்றார். அதன்பின்னர், பென்சில்வேனியாவில் உள்ள வில்லானோவா பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். 1977 -ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தில் கணிதத்திலும் தத்துவ இயலிலும் பட்டம் பெற்றார். அதே ஆண்டு செப்டம்பர் 1 ஆம் நாள் சிகாகோவில் உள்ள செயிண்ட் லூயிஸில் உள்ள அகுஸ்தீன் (OSA) துறவற இல்லத்தில் இணைந்து துறவறப் பயிற்சி பெற்றார். 1978-ஆம் ஆண்டு செப்டம்பர் 2, அன்று தனது முதல் வார்த்தைப்பாட்டினையும், 1981- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, அன்று அவர் தனது நிரந்தர வார்த்தைப்பாட்டினையும் அளித்தார்.
சிகாகோவில் உள்ள கத்தோலிக்க இறையியல் ஒன்றியத்தில் இறையியலில் பட்டம் பெற்ற திருத்தந்தை 14ஆம் லியோ அவர்கள், தனது 27 ஆவது வயதில் உரோமில் உள்ள ஆஞ்சலிக்கம் திருப்பீடப் பல்கலைக்கழக்த்தில் திருஅவைச் சட்டம் பயில்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். பின் 1982 -ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் நாள், சாந்தா மோனிகாவின் அகுஸ்தினியானோ கல்லூரியில் பேராயர் Jean Jadot அவர்களால் குருத்துவ அருள்பொழிவு செய்யப்பட்டார்.
1984 - ஆம் ஆண்டு முதுகலைக் கல்வியைப் பெற்ற திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், அடுத்த ஆண்டு (1985) தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையைத் தயாரிக்கும்போது, பெருவின் பியூராவில் உள்ள சுலுகானாஸிற்கு அகுஸ்தீன் சபை மறைப்பணிக்காக (1985-1986) அனுப்பப்பட்டார். 1987 -ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்த திருத்தந்தை அவர்கள், இல்லினோய்ஸின் ஒலிம்பியா ஃபீல்ட்ஸில் உள்ள "நல் ஆலோசனை அன்னை" என்ற அகஸ்டினியன் மறைமாநிலத்தின் இறைஅழைத்தல் இயக்குநராகவும், மறைப்பணி இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.
1999 -ஆம் ஆண்டில் அவர் சிகாகோவின் அகுஸ்தீன் சபை மறை மாநிலத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் அகுஸ்தீன் சபைத்தலைவராக முதன்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் 2007- ஆம் ஆண்டு இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2013-ஆம் ஆண்டு தனது சிகாகோ மறைமாநிலத்திற்குத் திரும்பிய திருத்தந்தை அவர்கள், சபையின் முதல் ஆலோசகர், இறைஅழைத்தல் இயக்குநர் என பல பொறுப்புக்களை ஏற்றார். 2014 -ஆம் ஆண்டு நவம்பர் 3 -ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் பெருவின் சிக்லாயோ மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், அதே நேரத்தில் சுஃபார் மறைமாவட்டத்தின் பட்டம்சார் ஆயராகவும் நியமிக்கப்பட்டார்.
அதே ஆண்டு டிசம்பர் 12 ஆம் நாள் குவாதலூப்பே அன்னை மரியா விழாவனறு அன்னை மரியா பேராலயத்தில் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.
2015 செப்டம்பர் 26, அன்று, சிக்லாயோ மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டு, 2018 மார்ச் மாதம் பெரு மறைமாவட்ட ஆயர் மாநாட்டின் இரண்டாவது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதில் அவர் பொருளாதார கவுன்சிலின் உறுப்பினராகவும் கலாச்சாரம் மற்றும் கல்வி ஆணையத்தின் தலைவராகவும் பொறுப்பேற்றார்.
திருஅவையின் புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்