09/03/2023
1. மரியியல் அன்றும் இன்றும்
இயேசுவின் தாயாகிய மரியா பற்றிய இறையியல் சிந்தனைத் தொகுப்பு மரியியல் என அழைக்கப்படுகிறது. கடந்த இருபது நூற்றாண்டு வரலாற்றுப் பின்னணியில் மரியியலை இருபெரும் பகுதிகளாகக் காணலாம்.
1. மரபு மரியியல்,
2. மறுமலர்ச்சி மரியியல்.
மரியியல் வளர்ச்சியின் ஆரம்ப நிலைகள் இரண்டாம் நூற்றாண்டியிலேயே காணப்படுகின்றன. இயேசுவின் சீடர்கள் அவரது அன்னைக்குக் காட்டிய அன்பும், பாசமும், தொடக்கத் திருச்சபை அவருக்குக் கொடுத்திருந்த உயர்ந்த இடமும் மரியன்னை வணக்கத்தின் அடிப்படையாகிறது. திருச்சபைத் தந்தையர்கள், மறை வல்லுநர்கள் மரியன்னை பற்றி வகுத்தளித்த சிந்தனைகள் மரியியலின் ஆரம்ப வித்துக்கள் ஆயின. இடைக்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய அரசியல் சமூக, பொருளாதார சூழல்களும் மரியன்னை வணக்கத்திற்கு பெரிதும் உதவிய காரணிகளாக அமைந்தன.
அதனைத் தொடர்ந்து பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை நிகழ்ந்த மரியன்னைக் காட்சிகளும், அவையொட்டி எழுந்த மரியன்னை வணக்க முறைகளும் மரியன்னை பக்தியைத் திருச்சபையில் மேலும் வளர்த்தன. தொடர்ந்து மரியன்னை பற்றிய நம்பிக்கைகள் விசுவாசக் கோட்பாடுகளாகவும் வரையறுத்து அறிவிக்கப்பட்டன. இவ்வாறு இரண்டாம் நூற்றாண்டு தொடங்கி இருபதாம் நூற்றாண்டில் கூட்டப்பட்ட இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் வரை மரியன்னை பற்றி எழுந்த சிந்தனைகள், நம்பிக்கைகள் மரபு மரியியல் என்றழைக்கப்படுகிறது. இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் எழுந்த அல்லது வித்திடப்பட்ட புதிய கண்ணோக்கு, அதனையொட்டி எழுந்துள்ள புதிய மரியன்னை சிந்தனைகள் மறுமலர்ச்சி மரியியல் என்றழைக்கப்படுகிறது.
(1) மரபு மரியியல் - நிறை குறைகள்
அ. கத்தோலிக்க திருச்சபையில் எழுப்பப்பட்டுள்ள பெரும்பாலான ஆலயங்கள் மரியா பெயரால் எழுப்பப்பட்டுள்ளன. அதேபோல் திருச்சபையில் எழுந்துள்ள பக்தி முயற்சிகள், பழக்க முறைகள் அதிகமாக மரியாவை மையமாக வைத்து எழுந்துள்ளன. இதன்மூலம் இயேசுவின் அன்னை மரியா கத்தோலிக்கத் திருச்சபையில் கொண்டிருக்கக் கூடிய சிறப்பிடம் தெளிவாக புலப்படும். வரலாற்றில் எழுந்த மரியியல் சிந்தனைகளும், அதனையொட்டித் தோன்றிய வணக்க முறைகளும் இயேசுவின் அன்னை மரியா பற்றிய புரிதலுக்கும் அவரின் வணக்கத்திற்கும் இட்டுச் சென்றுள்ளன. இந்த பழைய புனிதமான மரபை திருச்சபை மிகவும் போற்றிப் பின்பற்ற விரும்புகிறது. திருச்சபையின் பிள்ளைகள் அனைவரும் இத்தூய கன்னியின் வணக்கத்தைப் பெருமனத்துடன் போற்றிப் பேணி வளர்க்க வேண்டும்; பல நூற்றாண்டுகளாய்த் திருச்சபையின் ஆசிரியம் போற்றி வரும் மரியன்னை பக்தி முயற்சிகளையும், பழக்க வழக்கங்களையும் மிகவாய் மதிக்க வேண்டும்: முன்காலங்களில் கிறிஸ்து தூய கன்னி, புனிதர்கள் ஆகியவர்களின் உருவ வணக்கம் பற்றி தீர்மானிக்கப்பட்டவைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென மக்களுக்கு திருச்சங்கம் அறிவுரை கூறுகிறது" (திருச்சபை 67).
ஆ. மரபு மரியியலில் மூன்று முக்கிய மரியியல் தத்துவங்கள் காணப்படுகின்றன. தகுதியுடமை, தனித்தன்மை, இயேசுவுடன் இணை ஒப்புமை.
மரியா இறைமகன் இயேசுவின் அன்னை . எனவே அவர் இறைவனின் அன்னை. இறைவன் தம் மகனை இவ்வுலகில் ஈன்றெடுப்பதற்கு தகுதி வாய்ந்த ஓர் இல்லிடத்தைத் தேர்ந்தெடுத்தார். அவரை அனைத்து நலன்களாலும் நிறைத்தார். ஒரு மனிதப் பிறவிக்கு இறைவன் என்னென்ன சிறப்புகளைத் தரமுடியுமோ அத்தனையும் பெறுவதற்கு மரியா தகுதி வாய்ந்தவர். அத்தகுதியுடைமைக்கு ஏற்ப இறைவனும் அவரை அனைத்து நலன்களாலும், சிறப்புகளாலும் அணி செய்துள்ளார். இத்தகுதியுடைமைத் தத்துவத்தின் பின்னணியில் மரியன்னையின் பக்தர்கள் பல்வேறு அடைமொழிகள், சிறப்புப் பெயர்கள், புகழ் மொழிகள் ஆகியவற்றை மரியன்னைக்கு வழங்கி மகிழ்ந்தனர்.
சிறப்பான தகுதியைப் பெற்றுள்ள மரியா தனித்துவம் அல்லது தனித்தன்மை பெற்றவராக மாறுகிறார். ஏனைய மனித படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட, தனித்து, உயர்ந்து நிற்பவராக மரியா புரிந்து கொள்ளப்பட்டார். எவருடம் எட்டமுடியாத உயரத்தில் ஜொலிக்கும் அல்லது பளிச்சிடும் தெய்வப்பிறவியாக அவர் காணப்பட்டார். இம்மண்ணின் பிரச்சனைகள், இவ்வுலக வாழ்வின் போராட்டங்கள் ஆகியவற்றின் மத்தியில் இறைவனை முழுமையாக நம்பி வாழ்ந்து, மானிட வாழ்வுக்கு ஓர் எடுத்துக்காட்டாகத் துலங்கிய மரியா உயரத்தில் வைத்தப் போற்றப்படும் அரசியாக, சமூகப் பிரச்சனைகளுக்கு அப்பாற்பட்ட தேவலோகப் பின்னணியில் போற்றப்படுபவராக மாற்றப்பட்டார். தகுதியுடைமை, தனித்தன்மை ஆகிய இரு தத்துவங்கள் மூன்றாம் தத்துவமாகிய இயேசுவுடன் இணை ஒப்புமைக்கு இட்டுச் சென்றன. இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடை நிலையாளர் இயேசு என்றால் இயேசுவுக்கும், மனிதர்களுக்குமிடையே மரியா இடைநிலையாளரானார். இயேசு 'மீட்பர்' என்றால் மரியர் துணை மீட்பராகக்' காணப்பட்டார். இயேசு பாவமற்றவர் என்றால் மரியாவும் அமல உற்பவி' என்று அழைக்கப்பட்டார். இயேசு விண்ணகம் ஏறிச் சென்றார் என்றால் மரியா விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பெற்று தந்தை, மகன் இருவராலும் விண்ணக, மண்ணக அரசியாக முடிசூட்டப் பெற்றார். கிறிஸ்துவை அரசர்' என்று போற்றும்போது மரியா அரசி யாக போற்றப்பட்டார். இத்தத்துவங்கள் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியிலும் மறையுரையாளர்கள், மரியியல் சிந்தனையாளர்களால் பயன்படுத்தப்பட்டு கத்தோலிக்க சமூகங்களின் வாழ்விலும், வழிபாட்டிலும் ஒருவகை மரியா மயம் நிலவியது.
இ. இன்றுகூட பிறமறை சகோதர சகோதரிகளால் கத்தோலிக்க ஆலயம் மாதா கோவில் என்றழைக்கப்படுகிறதென்றால் கடந்த நூற்றாண்டுகளில் மரியியல் வளர்ச்சியின் தாக்கம் கொண்டிருந்த உச்ச நிலையை நாம் தெளிவாக அறியலாம். மரபு மரியியலின் வளர்ச்சியின் காரணமாக திருச்சபையில் மரியா பற்றிய சரியான புரிதல், மரியன்னை வணக்கம், பக்தி முயற்சிகள் ஆகியவை வளர்ந்து வேரூன்றியுள்ளன. அதேசமயம் மரபு மரியியல் ஒருசில மிகைப்படுத்தலுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் வழிவகுத்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத வரலாற்று உண்மை . இதனை திருத்தந்தையர் 12ஆம் பத்திநாதர், 23ஆம் அருளப்பர் ஆகியோர் தம் உரைகளிலும், திருத்தந்தை ஆறாம் சின்னப்பர் 'மரியா வணக்கம்' (எண் 38) என்ற தனது திருத்தூது அறிவுரையிலும் சுட்டிக்காட்டியுள்ளனர். இறையியலாரும், இறைவாக்கைப் போதிப்பவரும் இறைவனுடைய தாயின் தனிச்சிறப்பான மாண்பைப் பற்றிப் பேசும்போது தவறான மிகைக் கூற்றுக்களையும் மிகக் குறுகிய நோக்கையும் கவனத்துடன் தவிர்க்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்” (திருச்சபை, 67) என்ற வத்திக்கான் திருச்சங்கத்தின் எச்சரிப்பு வார்த்தைகள் மரபு மரியியல் ஏற்படுத்தியிருந்த மிகைப்படுத்துதலைச் சுட்டிக்காட்டுவனவாக அமைந்துள்ளன. இத்தகைய மிகை வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவை ஒரு சில.
பொதுவாக இரண்டாம் நூற்றாண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தோன்றிய திருமுறைப் புறநூல்கள் விவிலியம் தராத மாறுபட்ட கொள்கைகளை, தப்பறைகளை புராணப் பாணியில் தொகுத்து வழங்கின. மரியா பற்றிய வாழ்க்கை வரலாற்றை விவிலிய நூல்கள் அதிகமாகத் தராத சூழ்நிலையில், இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாவின் பிறப்பு, வளர்ப்பு, வாழ்வு, பணிகள், இறப்பு, சிறப்பு பற்றி இந்த விவிலிய புறநூல்கள் பல செய்திகளைத் தருகின்றன. இவ்வாறு, மரியா வணக்கத்தையும் சிந்தனையையும் அதிகமாகப் பாதித்த திருமுறைப் புறநூல்கள் புனித யாக்கோபு துவக்க நற்செய்தி, இலத்தின் போலி மத்தேயு, தோமையாரின் குழந்தைப் பருவ நற்செய்தி, பிலாத்துவின் பணிகள், பிலிப்புவின் நற்செய்தி என்பனவும் மரியாவின் இறப்பு எனும் தலைப்பில் எழுதப்பெற்ற பல நூல்களுள் ஆகும்.
கிறிஸ்தவம் பரவி வளர்ந்த காலச் சூழ்நிலையில் பெண் தெய்வங்களின் வழிபாடு பெருகியிருந்தது. கிரேக்க நாட்டு டெமேற்றர், உரோமை சிபில், எபேசு நகர டயானா, எகிப்திய ஜசிஸ் போன்ற தேவதைகள் அன்னை தெய்வங்களாக வணங்கப் பெற்று வந்தன. உரோமைப் பேரரசில் அன்னை தெய்வ வழிபாட்டில் பங்கேற்ற மக்கள் கிறிஸ்தவர்களாக மாறிய பிறகு மரியாவை அன்னை தெய்வமாகக் காண முயன்றனர். கிறிஸ்தவம் உரோமைப் பேரரசின் ஆட்சி மாதமாக மாறிய பிறகு அன்னை தெய்வங்களின் ஆலயங்கள் மரியாவின் ஆலயங்களாகவும், அவர்களது விழாக்கள் மரியாவின் விழாக்களாகவும் மாறிய சூழல் அன்னை தெய்வ பாதிப்பை, தாக்கத்தை கிறிஸ்தவ மக்களின் சிந்தனையிலும் ஏற்படுத்தியது. மறியா இறைவனின் அன்னை என்ற எபேசு நகர பொதுச் சங்கத்தின் போதனையும் ஒருவகையில் சாதாரண மக்களில் மரியா 'தாய்' 'தெய்வம்' என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது!
இடைக்காலத்தில் வறுமை, பிணி, போர் . ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட அரசியல், சமூக, பொருளாதார சூழலில் வாழ்ந்த மக்களின் மரியன்னை வணக்கம் உண்மையான வணக்கத்திலிருந்து திசை திரும்பி உணர்ச்சிகளின் வடிகாலாக மாறியது. குழந்தையாக இருக்கின்ற பொழுது மனிதன் தாயிடமிருந்து பெற்ற பாசம், பாதுகாப்பு, அரவணைப்பு ஆகியன அவன் வளர்ச்சியடைந்து வாழ்வைச் சந்திக்கின்ற சூழ்நிலையில் அவனுக்குக் அவன் கிடைக்காமல் போகின்றன. அந்த நேரத்தில் அவன் மனம் தாயின் அன்புக்காக ஏங்குகிறது. இது தனிமனிதனுக்கு மட்டுமல்ல, சமூகங்கள், பண்பாடுகளுக்கும் பொருந்தும். இடைக்கால மரியன்னை பக்தி முயற்சிகள் ஒருவகையில் அம்மக்கள் அன்னை மீது கொண்டிருந்த அன்பு-சார்பு உணர்ச்சியின் வெளிப்பாடாக அமைந்திருந்தன. பக்தி, உணர்ச்சியின் வெளிப்பாடாக மாறுகிறபொழுது ஜெபமாலை, நவ நாட்கள் ஆகியவை மாந்தரீகத் தன்மையுடையனவாக கருதப்பட்டு விடுகின்றன. கிறிஸ்தவ நம்பிக்கை சமூகத்தில் காணப்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி உலகை மாற்றுவதற்கான அழைப்பு என்பது மாறி திருயாத்திரையும், திருநாள் கொண்டாட்டங்களும் வாழ்வுக்கான போராட்டத்தை இடப்பெயர்ச்சி செய்துவிட்டு விண்வீட்டை விரைவில் தரும் குறுக்கு வழிகளாகக் கருதப்பட்டு விடலாம். இதுவே இடைக்காலத்தில் நடந்தது.
சீர்திருத்தக் காலத்தில் லூத்தர், கால்வின், சுவிங்லி போன்ற சமயச் சீர்திருத்தவாதிகள் மரியா வணக்கத்தை வன்மையாக எதிர்த்தனர். அவர்களது எதிர்ப்புக்குக் காரணம் மரியா வணக்கத்தால் இடைக்காலத்தில் மலிந்திருந்த மூடப்பழக்கங்கள். விவிலியக் கோட்பாடுகளுக்கு முரணானது மரியா வணக்கம் என்ற எண்ணமும் அவர்களின் எதிர்ப்புக்குக் காரணமாக அமைந்தது. இத்தகைய எதிர்ப்பின் மத்தியிலும் கூட மரியியல் சிந்தனையும், வணக்கமும் அதிகமாகப் பரவின. மரியா பக்தி திருச்சபையைக் காக்கும் கவசம் போலவும் மாறியது. பல துறவற சபைகள் மரியா பக்தியைப் பரப்ப தங்களையே அர்ப்பணித்துக் கொண்டன. புனித லூயிஸ் மாண்ட்போர்ட் (1673-1761) மரியா பக்தியை பரப்புவதற்கு தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர்களுள் முக்கியமானவர். இவர் எழுதிய 'தூய கன்னி மீது உண்மையான பக்தி' என்ற நூல் 1842இல் கண்டுபிடிக்கப்பட்டு 19ஆம் நூற்றாண்டில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இக்காலத்தில் மரியாவை 'ஆண்டவள்' என அழைக்கும் பழக்கமும் வெகுவாகப் பரவியது.
18ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகுத்தறிவு இயக்கம், மரியா வணக்க எதிர்ப்புப் போக்குகள் ஆகியவற்றிற்கெதிராக எழுந்தவையே மரியா இயக்கங்கள். இவை பல்வேறு பகுதிகளில் தனித்தனியாக மரியாவின் புகழை வளர்த்து அவரின் பக்தியைப் பரப்பி வந்தன. இத்தகைய குழுமக்கள் ஓரளவு 18ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இணைந்து மரியா இயக்கம் பேரியக்கமாக வளர ஆரம்பித்தது. சொல்லி முடிவதில்லை மரியா புகழ்' என்ற கொள்கையோடு மரியா பக்தியினைப் புதுப்பித்து பழைய விழாக்களுக்கும் புது மெருகூட்டி, புதிய சிறப்புப் பெயர்களை மரியாவுக்குச் சூட்டி, மரியா பக்தியைப் பெரிதும் பரப்பியது. மரியா இயக்கம் மரியாவின் அருள்மிகு அமல உற்பவம், விண்ணேற்பு, மரியா துணை மீட்பர், இடைநிலையாளர் என்ற மரியாவின் சிறப்புக்களை விசுவாச உண்மைகளாக திருத்தந்தை அறிக்கையிட பரிந்துரை செய்தது. இப்பின்னணியில் திருத்தந்தை 9ஆம் பத்திநாதர் 'மரியாவின் அருள்மிகு அமல உற்பவம்' என்ற விசுவாசக் கோட்பாட்டினை 1854ஆம் ஆண்டும், திருத்தந்தை 12ஆம் பத்திநாதர் 'மரியாவின் விண்ணேற்பு' என்ற கோட்பாட்டினை 1950ஆம் ஆண்டும் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 19,20ஆம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மரியன்னையின் காட்சிகள் மரியன்னை பக்தியைப் பரப்பிட்ட ஏனைய பலமுள்ள காரணிகள். பாரிசு நகர் திருவுருவம், லா சலேத், லூர்து, பாத்திமா, குவாதலூப்பே, வேளாங்கண்ணி போன்ற காட்சியனுபவங்கள் இன்றும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அன்னை வேளாங்கண்ணி காட்சியைத் தவிர மற்ற எல்லா காட்சிகளிலும் மரியா தம் மகன் இயேசு இன்றி தனியாகவே காட்சி தந்தது, இயேசுவை விட்டு மரியாவைப் பிரித்துப் பார்க்கின்ற ஒரு. மனநிலைக்கு இட்டுச் சென்றது.
(2) மறுமலர்ச்சியில் மரியியலின் புதிய பயணம்
2ஆம் வத்திக்கான் சங்கம் திருச்சபையின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. இது திருச்சபையின் வாழையடி வாழையாக வந்த மரபுச் சிந்தனைகள். செயல்முறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்து நற்செய்தியின் மதிப்பீடுகளுக்கு ஏற்ற வாழ்வு வாழ புதிய அழைப்பு விடுத்தது. 2ஆம் வத்திக்கான் சங்கம் மரியன்னை பற்றிய புதிய விசுவாசக் கோட்பாடுகளை வெளியிடும் என்று சிலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவ்வாறு நிகழவில்லை . அதுமட்டுமல்லாது மரியா பற்றிய மறுமலர்ச்சிச் சிந்தனை, அணுகுமுறைகளையும் சங்கம் வரையறுத்துக் கொடுத்துள்ளது. மரியா பற்றிய சிந்தனைகளைத் தனி ஏடாக வெளியிடாமல் திருச்சபை என்னும் ஏட்டின் இறுதிப் பகுதியாக (அதிகாரம் 8) சங்கம் இணைத்து வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மரபு மரியியலில் காணப்பட்ட மிகைப்படுத்துதல்களும், குறைபாடுகளும் அகற்றப்பட்டு புதிய அணுகுமுறைகளைத் தாங்கிய பகுதியாக வத்திக்கான சங்கத்தில் (திருச்சபை, 52-68) மரியியல் சிந்தனைகள் தரப்பட்டுள்ளன.
அ) மரபு மரியியல் சித்தாந்தங்களுக்கு மாறான விவிலிய அடிப்படை கிறிஸ்து மையம், திருச்சபையின் மாதிரி என்ற சரியான தத்துவங்களின் அடிப்படையில் வத்திக்கான் திருச்சங்கத்தின் மரியா பற்றிய சிந்தனைகள் அமைந்தன.
விவிலிய வழியில் மரியா இனம் காணப்பட்டு சரியான வணக்கத்தை திருச்சபையில் பெற வேண்டுமென திருச்சங்கம் வலியுறுத்துகிறது. மரியா வணக்கம் உண்மையான விசுவாச வழியில் வளர வேண்டுமென்பதே திருச்சங்கத்தின் ஆதங்கம். சங்கம் கூறுவதுபோல ஆசிரியத்தின் மேற்பார்வையில் அவர்கள் திருமறைநூல், திருத்தந்தையர், மறைவல்லுநர், திருச்சபையின் வழிபாட்டு முறைகள் பற்றிய ஆராய்ச்சியை வளர்த்து தூய கன்னியின் அலுவல்களையும் சிறப்பு உரிமைகளையும் சரிவர விளக்க வேண்டும். தூய கன்னியின் இவ்வலுவல்களும், உரிமைகளும் உண்மை , புனிதத் தன்மை இறைப்பற்று' என்பவையனைத்தின் ஊற்றான கிறிஸ்துவையே நாடி நிற்பனவாகும்” (திருச்சபை, 67)
மறுமலர்ச்சி மரியியல் கிறிஸ்து மையத்தை வலியுறுத்துகிறது. மேலே மேற்கோள் காட்டப்பட்ட திருச்சபை என்ற சங்க ஏடு (எண் 60, 67) இவ்வுண்மையைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றது. மக்கள்பால் மரியா கொண்டுள்ள தாய்க்குரிய பணியால் கிறிஸ்துவின் இந்த இணையற்ற இணைப்பாளர் பணி சற்றேனும் மறைவதுமில்லை, குறைவதுமில்லை; மாறாக அதன் ஆற்றல் இதன் வழியாக வெளிப்படுகிறது. ஏனெனில், மக்கள்பால் தூய கன்னி கொண்டுள்ள மீட்பளிக்கும் செல்வாக்கு அனைத்தும் கட்டாயத் தேவையால் அன்றி இறைவனின் விருப்பத்தினாலேயே உருவாகின்றது. கிறிஸ்துவினுடைய பேறுபலன்களில் நிறைவுப் பெருக்கத்தினின்று வழிகின்றது; அவரது இணைப்பாளர் பணியை அடித்தளமாகக் கொண்டுள்ளது; முற்றிலும் அப்பணியைச் சார்ந்தே இருக்கின்றது; அதிலிருந்தே தன் ஆற்றல் அனைத்தையும் பெறுகின்றது” (திருச்சபை, ல). எனவே மரியாவின் பண்பு இயேசுவின் பண்புகளின் பிரதிபலிப்பு. அவரது பணிகள் இயேசுவின் பணிகளிலே பங்கேற்பவையாகும். இயேசு மனிதரான நிகழ்வில் எவ்வாறு இயேசுவை மையமாக வைத்து மரியா. வாழ்ந்தாரோ, அதேபோல இன்றும் அவரது இடம் இயேசுவின் பின்னணியில்தான் புரிந்து கொள்ளப்பட முடியும். இயேசுவிற்கு அப்பாற்பட்டு மரியாவுக்குக் காட்டப்படும் அன் வணக்கமும், விவிலிய மரபுக்குப் புறம்பானவை
நற்செய்தியாளர் லூக்கா. இறைவனை முழுமையாக நம்பி அவருடைய திருவுளம் நிறைவேறுவதற்காக எல்லாச் சூழ்நிலைகளிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்த இயேசுவின் சீடராகவே மரியாவை இனம் காட்டுகிறார். யோவான் தமது நற்செய்தியின் தொடக்கத்திலும், இறுதியிலும் மரியாவைக் கொண்டு வந்து திருச்சபைக்கு அடையாளமாக அவரைச் சித்தரிக்கிறார். திருத்தூதர் பணியிலும் (1:14) மரியா இயேசுவின் வாக்கு நிறைவேறும் என்று நம்பி எல்லாச் சீடர்களையும் செபத்தில் இணைத்து வைப்பவராக காட்டப்படுகிறார். இவ்வாறு திருச்சபையின் தொடர்பில் மட்டுமே மரியா சரியான விளக்கம் பெற முடியும். திருச்சபைத் தொடர்பற்ற மரியியல் சிந்தனைகளும், மரியாவிற்கு வழங்கப்படும் இடமும் தவறான அணுகுமுறைகளின் விளைவுகளாகும்.
கி.பி. முதலாம் நூற்றாண்டு, பாலஸ்தீன வரலாற்றில் பலவகை அரசியல் - ஆன்மீக இயக்கங்களைக் கண்ட காலக்கட்டம். பாலஸ்தீனம் அரசியல் ரீதியாக உரோமையர்களின் ஆட்சியில் இருந்து வந்தது. விவிலியப் பின்னணியில் யூதர்கள் இறைவனின் ஆட்சிக்குத் தவிர மற்ற மனிதர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருப்பது ஏற்க இயலாத ஒன்று. ஆகையால் அவர்கள் உரோமையரின் ஆட்சியிலிருந்து தங்களை விடுவிக்கக் கூடிய ஓர் அரசியல் மெசியாவை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதே சமயத்தில் அரசியல் மெசியா பற்றிய எதிர்பார்ப்பு இன்றி ஆன்மீக ரீதியில் தங்களை இறைவனுக்குரிய மக்களாக ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ஏடேனியர் போன்ற குழுமங்களும் இருந்து வந்தன. மேலே குறிப்பிட்ட அரசியல், ஆன்மீக இயக்கங்கள் எதிலும் தங்களை இணைத்துக் கொள்ளாமல் பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து இறைவனுடைய தலையீட்டுக்காக காத்திருந்தவர்கள் யாவேயின் எளியோர். அவர்களில் ஒருவராக, நாசரேத்தூரில் வாழ்ந்த, சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த மரியா என்னும் நங்கை நமக்கு அறிமுகமாகிறார். மரியாவைப் பொறுத்த வரையில் முதல் நிலையில் இறைமை ஏற்படுத்தும் நிறைவை எதிர்பார்த்தும் அந்த இறைத்திட்டத்தோடு ஒத்துழைத்தும் வாழ்ந்தவர்.
இப்பின்னணியில் பார்க்கும்போது மரியா இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் முன்வைப்பது போன்று இறைவனை விசுவாசிக்கும் விசுவாச சமூகத்தின், நிறைவை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டுள்ள மனித குலத்திற்கு எடுத்துக்காட்டகவும், முன் மாதிரியாகவும் திகழ்கின்றார் (திருச்சபை, 65). மனிதரான இறைமகன் திருச்சபை என்னும் மறையுடலின் தலையாவார். எனவே இந்த கிறிஸ்து மைய வாழ்வுக்கும் மரியா ஒரு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும், இலக்கணமாகவும் அமைகிறார்.
ஆ) மரியியல் ஆரம்பமாகும் இடம் கிறிஸ்து இயல். இறைவன் இம்மானிட உலகோடு உறவு கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட காலச்கட்டத்தில், இறை மனித உறவு ஒரு திட்டவட்டமான வடிவம் எடுக்கிறது. அதுவே கிறிஸ்து மனிதராகப் பிறந்த நிகழ்ச்சி. இவ்வடிப்படைகிறிஸ்தவ உண்மையினை கடந்த இருபது நூற்றாண்டுகளாக புரிந்து கொள்ள எழுந்த முயற்சிகளே இன்று நாம் காணும் பல்வேறு கிறிஸ்தியல் சிந்தனைகள். கிறிஸ்துவைப் பற்றிய புரிதலின் தொடர்ச்சியாக மரியியல் உருவாயிற்று. இம்மரியியல் கால ஓட்டத்தில் ஒரு சில மிகைப்படுத்துதல்களுக்கு உள்ளாகி கிறிஸ்து மையத்திலிருந்து விலகிவிட்ட சூழ்நிலை ஏற்பட்டது. இதனை இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் சுட்டிக்காட்டி கிறிஸ்துவின் பின்னணியில்தான் மரியாளைச் சரியாக புரிந்து கொள்ளப்படமுடியும்; கிறிஸ்தியல் பின்னணியில்தான் மரியியல் சரியான விளக்கம் பெற இயலும் என்று திட்டவட்டமாக எடுத்தியம்பியது.
கிறிஸ்து தலை என்றால், திருச்சபை அவரது உடல், கிறிஸ்துவையும், திருச்சபையையும் பிரிக்க இயலாது. மரியா இயேசுவை விசுவசித்த இயேசுவின் சீடர்களுள் தலைமகள். இயேசுவினுடைய பணி வாழ்வில் நிகழ்ந்த இயேசு - மரியா சந்திப்புகள் இதனை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றன. எனவே மரியாவைத் திருச்சபையிலிருந்து பிரித்து திருச்சபைக்கு அப்பாற்பட்ட புனிதையாகவும், திருச்சபையை அவரை நோக்கி ஏங்கியிருக்கும் மக்கள் கூட்டமாகவும் கருதுவது தவறாகும். கிறிஸ்து மைய, திருச்சபையோடு இணைந்த மரியியலே சரியானதாகும். இப்பின்னணியில் புதிய மரியியல் சிந்தனைகள் கிறிஸ்து, திருச்சபை தொடர்புடையதாக அமைய வேண்டும்.
இ) இரண்டாம் வத்திக்கான் சங்கம் முடிவுற்ற காலகட்டத்தில் கிறிஸ்தவு, ஒற்றுமை கத்தோலிக்க திருச்சபையின் குறிக்கோள், செயல்பாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வந்தது. எல்லா மட்டங்களிலும் கிறிஸ்தவ ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டது. ஆனால் சமீப காலத்தில் கிறிஸ்தவ ஒற்றுமை முயற்சிகளில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டு உள்ளது. புதிய மரியியல் பிற கிறிஸ்தவ சபைகளோடு கத்தோலிக்கத் திருச்சபை மேற்கொள்ளும் உரையாடலுக்கும், ஒற்றுமை முயற்சிகளுக்கும் உதவும் கருவியாக அமைதல் வேண்டும்.
ஈ) மரியியல் பின்னணிகளில் மிக முக்கியமானதாக அமைய வேண்டியது இன்றைய வாழ்வுச் சூழல். மரியியல் சிந்தனைகளும், மரியா வணக்கங்களும் மக்களை இவ்வுலகிலிருந்து பிரித்தெடுத்து இவ்வுலக பிரச்சனைகள், சவால்கள், ஏக்கங்கள் ஆகியவற்றுக்கு ஒரு மாந்திரீக மருந்தைத் தருவதாகவோ அல்லது இவ்வுலக ஈடுபாட்டைத் தவிர்த்து ஒருவித மாய உலகில் மக்களைச் சஞ்சரிக்க விடுவதாகவோ அமைதல் கூடாது. பெண் விடுதலை, சமத்துவம், ஏழை-எளியவரின் சமூக மேம்பாடு, உலக நேர்மறை நோக்கு, சமூக ஈடுபாடு ஆகியவை புதிய மரியியல் பாடும் பூபாளங்களாக அமைய வேண்டும்.