St.Rajakanni matha church, kadakulam

St.Rajakanni matha church, kadakulam புனித இராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் அக்டோபர் முதல் வெள்ளி ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும்

கடகுளம், புனித ராஜகன்னி மாதா ஆலயமானது தூத்துக்குடி மறை மாவட்டத்தில் உள்ள பங்கு ஆலயங்களில் ஒன்றாகும். கடகுளம் தூத்துக்குடிக்கு மேற்கே 70 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலிக்கு தெற்கே 70 கி.மீ தொலைவிலும் கன்னியாகுமரிக்கு கிழக்கே 59 கி.மீ தொலைவிலும் மேலும் திசையன்விளையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

புனித ராஜகன்னி மாதாவின் ஆலயம் சுமார் 1650-ல் ஒரு சிறிய ஆலயமாகக் கட்டப்பட்டது.
தற்போதுள்ள பெரி

ய ஆலயம் 1880-ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட்டது.
1928-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு. ரோச் அவர்கள் ஆலயத்தை அர்ச்சித்து திறந்துவைத்தார்.
ஆரம்ப காலங்களில் இவ்வாலயமானது அருகிலுள்ள பங்குகளான கூடுதாழை, கூட்டப்பனை, சொக்கன்குடியிருப்பு மற்றும் திசையன்விளை ஆகிய பங்குகளில் கிளைப் பங்காக இணைந்திருந்தது.
1984-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ம் நாள் அன்றைய தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு. அமலநாதர் அவர்களால் தனிப் பங்காக அறிவிக்கப்பட்டது.
அருட்தந்தை. பர்னபாஸ் அவர்கள் பங்கின் முதல் பங்குத்தந்தையாக பணியாற்றினார்.

தற்போதைய பங்குத்தந்தை: அருட்தந்தை. ப்ராக்ரஸ் (Fr. Progress).
மறை மாவட்ட ஆயர் : மேதகு ஆயர். இவான் அம்புரோஸ் .

சிற்றாலயங்கள்:
புனித அந்தோணியார் சிற்றாலயம்
புனித சவேரியார் சிற்றாலயம்
புனித ராஜகன்னி மாதா சிற்றாலயம்

மண்ணின் மைந்தர் குருக்கள்:
அருட்தந்தை J. எட்வர்ட் .
அருட்தந்தை R. அமல்ராஜ் .
அருட்தந்தை A. நெல்சன்ராஜ் .
அருட்தந்தை ஞான பெப்பின் .
அருட்தந்தை G. செல்வராயர் .
அருட்தந்தை R. இருதயராஜ் .
அருட்தந்தை ஸ்டீபன் ஜாண்சன் .

மண்ணின் அருட்சகோதரிகள்:
அருட்சகோதரி ஹெலன்
அருட்சகோதரி ஜெயராணி
அருட்சகோதரி ஞான்ஸி ஸ்வர்னா

திருப்பலி நேரங்கள்:

வார வழிபாட்டு நிகழ்வுகள்:

தினமும் காலை 6 மணி முதல் 7 மணி வரை புனித ராஜகன்னி மாதா ஆலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை புனித சவேரியார் சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.
மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் 8.30 மணி வரை புனித ராஜகன்னி மாதா சிற்றாலயத்தில் வைத்து திருப்பலி நடைபெறும்.

ஞாயிறு வழிபாட்டு நிகழ்வுகள்:

ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 6.45 மணி முதல் 8.30 மணி வரை திருப்பலி நடைபெறும்.

கிளைப் பங்கு:

புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், அதிசயபுரம்.

புனித ராஜகன்னி மாதா ஆலயத் திருவிழா:

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வெள்ளிக் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.
ஒவ்வொரு நாளும் காலை திருப்பலியும், மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது.
நவ நாட்களில் ஒவ்வொரு நாளையும் ஊரின் பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள், திரு இருதய சபையினர், மரியாயின் சேனை சபையினர், திருக்குடும்ப சபையினர், புனித அந்தோணியார் இளைஞர் சபையினர், புனித அமலோற்பவ அன்னை சபையினர், பாலர் சபையினர் மற்றும் வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் ஆகியோர் சிறப்பிக்கின்றனர்.
ஒன்பது மற்றும் பத்தாம் திருவிழா நாட்களில் புனித ராஜகன்னி அன்னையின் திருத்தேர் ஊரைச் சுற்றிலும் பவனி வரும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
திருவிழா நிறைவுற்ற மறுநாள் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறும்.

திருவிழா நிகழ்வுகள்:

1-ம் திருவிழா :

காலை கொடியேற்றத்துடன் தொடங்கி திருப்பலி மற்றும் மாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

2-ம் திருவிழா முதல் 7-ம் திருவிழா வரை தினமும் காலையில் திருப்பலியும் மாலையில் மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது. ஒவ்வொரு நாளையும் ஊரின் ஒவ்வொரு சபையினர் சிறப்பிக்கின்றனர்.


8-ம் திருவிழா:

காலை திருப்பலி மற்றும் மாலை நற்கருணைப் பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.


9-ம்திருவிழா:

காலை திருப்பலி மற்றும் மாலை அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.


10-ம் திருவிழா:

காலை திருவிழா சிறப்புத் திருப்பலி நடைபெறும். திருப்பலியில் ஊர் சிறுவர்களுக்கு புது நன்மை கொடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கு திருமுழுக்கு கொடுத்தல் நடைபெறும். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மாலையில் அன்னையின் திருத்தேர்ப்பவனியும் அதனைத் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெறுகின்றது.

11-ம் நாள்:

ஊர் நிர்வாகிகள் சார்பில் மதியம் ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

12-ம் நாள்:

புனித அந்தோணியார் சிற்றாலயத்தில் வைத்து வெளியூர்வாழ் கடகுளம் மக்கள் சார்பாக ஊர் பொது அசனம் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு:

அருட்தந்தை. அன்பு செல்வன் (Fr. Anbu selvan) ,
பங்குத் தந்தை,
புனித ராஜகன்னி மாதா ஆலயம்,
கடகுளம் -628656,
தூத்துக்குடி மாவட்டம்.

தொலை பேசி எண்: 04639 255335

நமது கடகுளம்  மண்ணின் மைந்தர் அருட்தந்தை நெல்சன்ராஜ் அடிகளார் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது உடல் நல்லடக்கம் இன்று ...
12/07/2025

நமது கடகுளம் மண்ணின் மைந்தர் அருட்தந்தை நெல்சன்ராஜ் அடிகளார் இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். அவரது உடல் நல்லடக்கம் இன்று 12.07.2025 சனிக்கிழமை மாலை 3மணிக்கு நமது தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் தலைமையில் நமது ஊரில் (கடகுளம்) நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்😢
அவரது ஆன்மா இறைவனில் இளைப்பாற வேண்டுவோம்🙏

*அக்டோபர் 10, 2024* *நாள் – 10 பாதுகாப்பின் அன்னை* (ஓவர்லூன் - ஹாலந்து)இரண்டாம் உலகப் போரின் போது,  ஹாலந்தின் அர்ன்ஹெமுக...
10/10/2024

*அக்டோபர் 10, 2024*
*நாள் – 10 பாதுகாப்பின் அன்னை*
(ஓவர்லூன் - ஹாலந்து)

இரண்டாம் உலகப் போரின் போது, ஹாலந்தின் அர்ன்ஹெமுக்கு தெற்கே 30 மைல் தொலைவில் நிஜ்மெகனுக்கும் வென்லோவிற்கும் இடையில் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஓவர்லூன் என்ற ஒரு சிறிய நகரத்தில் பாதுகாப்பின் அன்னை மரியா என்கிற தலைப்பு உருவானது.

ஜெர்மானியப் படைகள் ஹாலந்தைக் கைப்பற்றிய பின்னர், ஏராளமான இளம் டச்சுக்காரர்கள் ஜெர்மனியர்களால் கைது செய்யப்படுவதிலிருந்தும், கொல்லப்படுவதிலிருந்தும் தப்பிக்க ஓடி ஒளிந்தனர். அந்த இளைஞர்களில் பலர் ஓவர்லூனில் ஒரு மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர். ஓவர்லூனில் ஒரு மறைந்திருந்த அந்த அகதிகளில் பலர், மரியன்னை அவர்களை அங்கு பாதுகாப்பாய் இருப்பதற்கு உதவினால் அவர்கள் அன்னைக்கு ஓர் ஆலயத்தை அங்கு எழுப்புவதாக மரியன்னைக்கு வாக்குறுதியளித்தனர்.

ஓவர்லூனை விடுவிப்பதற்கான போரானது நேச நாட்டுப் படைகளுக்கும் ஜெர்மன் இராணுவத்திற்கும் இடையில் 1944 செப்டம்பர் 30 முதல் 18 அக்டோபர் வரை நடந்தது. பெரும் இழப்புகளைச் சந்தித்த பின்னர், போரின் விளைவாக ஓவர்லூன் நகரத்தை ஜெர்மன் தன் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்தது.

போர் முடிந்ததும், நாட்டில் அமைதி திரும்பி வந்ததும், ஓவர்லூனில் பதுங்கி இருந்த டச்சுக்கார இளைஞர்கள் நன்றியுணர்வோடு ஒன்று கூடி வாக்குறுதியளிக்கப்பட்டபடியே ஓர் ஆலயத்தை ஓவர்லூனில் கட்டி, அதை பாதுகாப்பின் அன்னை மரியாவுக்கு அர்ப்பணித்தனர்.

1945 ஆம் ஆண்டில், பிரபல சிற்பி பீட் வான் டோங்கன் மரியாவை சித்தரிக்கும் ஒரு சிறந்த படத்தை உருவாக்கினார். அதில் இரண்டு இளைஞர்கள் மரியன்னையின் அங்கியின் உள்ளே பாதுகாப்பாய் மறைந்திருக்கும்படி அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

*திருவிழா நாள்: ஜூலை 22*

*செபம்:* பாதுகாப்பின் அன்னையே! எங்களுடைய வாழ்வில் அச்சுறுத்தல்களும், ஆபத்துக்களும் எங்களைச் சூழும் வேளைகளில் எல்லாம் நீரே எங்களுக்கு பாதுகாப்பாய் இருந்தருளும். ஆமென்.

*அக்டோபர் 9, 2024* *நாள் – 9 வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை*(டவுல் - பிரான்ஸ்)பிரான்ஸ் நாட்டின் லோரெய்னில் உள்ள டவுல் என்னும...
09/10/2024

*அக்டோபர் 9, 2024*
*நாள் – 9 வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை*
(டவுல் - பிரான்ஸ்)

பிரான்ஸ் நாட்டின் லோரெய்னில் உள்ள டவுல் என்னுமிடத்தில் இருக்கும் ஆலயத்திலுள்ள அன்னை மரியாவின் திருவுருவம் முன்பாக, ஹெல்வைட் என்ற ஒரு பெண்மணி சமீபத்தில் இறந்த அவரது கணவர் மற்றும் மகளின் ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காவும், தனது ஆறுதலுக்காகவும் செபம் செய்து கொண்டிருந்தார். நள்ளிரவில், மரியன்னை அற்புதவிதமாய் அப்பெண்மணிக்குத் தோன்றினார். அப்போது மரியன்னை அப்பெண்மணியிடம், அந்நகரின் நுழைவாயிலின் பாதுகாப்புப் பணிக்கு பொறுப்பாளராக இருக்கும் ரிம்பெர்ட் என்பவரைச் சென்று பார்க்கும்படியாகவும், நகரின் நுழைவாயில் வழியாக நுழைந்து மக்களின் வீடுகளுக்கு தீவைத்துவிட்டு, தப்பிக்க நினைத்து வருகிற எதிரிகளைக் குறித்து எச்சரிக்கும்படியாகவும் கட்டளையிட்டார்.

இக்காட்சிக்குப் பிறகு ஹெல்வைட் மிகவும் குழப்பமாக உணர்ந்தார். அவளுடைய வீட்டிற்கு செல்லும் வழியில் ரிம்பெர்ட்டின் வீடும் இருந்ததால், அவள் அங்கு செல்வது என முடிவு செய்தாள். ஹெல்வைட் ஆலயத்தைவிட்டு வெளியே வந்தவுடன் இரவு ரோந்து பணியில் இருந்தவர்களை அங்கு கண்டாள். அவளுடைய காட்சியைக் குறித்து அவள் அவர்களிடம் சொன்னாள். ஆனால் அவர்களோ அவளைக் கேலி செய்தனர். இருந்தபோதிலும், அவர்களில் இருவர் ஹெல்வைட் தேடிய ரிம்பெர்ட் வீட்டை நோக்கி அவளுடன் சென்றனர்.

ரிம்பர்ட்டிடம் ஹெல்வைட் தனது வருகையின் நோக்கத்தைக் கூறினார். அதற்கு ரிம்பர்ட், ‘எனக்கும் அதே காட்சி மற்றும் அதே எச்சரிக்கை கிடைத்தது. ஆனால் அன்னையின் திருவுருவச்சிலை இதன் வெளிப்பாடாக தனது கால்களை நகர்த்தும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

உடனே அனைவருமே ஆலயத்திற்குச் சென்றனர். ஆனால் கன்னி மரியாவின் கால்கள் முன்பு போலவே திருவுருவத்தில் ஆடைகளின் மடிப்புகளுக்கு அடியில் மறைந்திருப்பதையே கண்டார்கள். எனவே புதிதாக வந்தவர்கள் கேலியும் கிணடலும் செய்யத் தொடங்கினர்.

சற்று நேரத்தில், கன்னி மரியாவின் முழு பாதமும் அவளது ஆடையின் மடிப்புகளுக்கு அடியில் இருந்து வெளியே தோன்றியது. உடனே அன்னைக்கு நன்றி செலுத்திய அவர்கள் எதிரிகளின் தாக்குதலை முறியடித்து நகரைக் காப்பாற்றினர்.

மரியன்னை அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்புக்கு நன்றியாக, அன்னையின் திருவுருவச் சிலையில் வெளியே தெரியும் கால்களை மறைக்க வெள்ளி காலணி செய்து வைத்தனர். அன்றிலிருந்து அத்திருவுருவச்சிலை வெள்ளிப் பாதம் கொண்ட அன்னை என்று அழைக்கப்படுகிறது.

*திருவிழா நாள்: செப்டம்பர் 20*

*செபம்:* வெள்ளிப் பாதம் கொண்ட எங்கள் அன்னையே! துன்பங்கள் எங்கள் வாழ்வை நெருங்கும் போதுஇ உம் பிள்ளைகளாகிய எங்களுக்கு நீர் ஓடோடி வந்து உதவிசெய்யும். ஆமென்.

*அக்டோபர் 8, 2024* *நாள் – 8  கண்ணீரின் அன்னை*(காம்பினா - பிரேசில்)1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவி...
09/10/2024

*அக்டோபர் 8, 2024*
*நாள் – 8 கண்ணீரின் அன்னை*
(காம்பினா - பிரேசில்)

1929 ஆம் ஆண்டு நவம்பர் 8 அன்று, பிரேசிலின் காம்பினாவில் இருந்த இயேசுவின் திருக்காய வரம் பெற்றிருந்த அருட்சகோதரி அமலியா, தனது உறவினர் ஒருவருடைய மனைவி உடல்நிலை சரியில்லாமல், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைக் கேள்விப்பட்டு அவருக்காக வருத்தத்தோடு இயேசுவிடம் செபிக்க எண்ணினார்.

1929 ஆம் ஆண்டு, நவம்பர் 8 அன்று அருட்சகோதரி அமலியாவுக்கு நம் ஆண்டவர் அருளிய வார்த்தைகள்: ‘என் மகளே, என் தாயின் கண்ணீர் வழியாக எதைக் கேட்டாலும், நான் அன்பாகக் கொடுப்பேன்.’

1930 ஆம் ஆண்டு, மார்ச் 8 அன்று நான்கு மாதங்களுக்குப் பின், ஊதா நிற மேலாடையும், வெண்ணிற முக்காடும் அணிந்தவாறு கன்னிமரியாள் அமலியாவுக்குத் தோன்றி, "கண்ணீரின் செபமாலை" என்ற ஒளிரும் செபமாலையும், மூன்று செபங்களையும் வழங்கினார்.

மீண்டும் அவருக்கு 1934ம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று அன்னை சிலுவையோடு தரிசனம் தந்தார். இந்த சிலுவை பிரேசில் மற்றும் ஐரோப்பாவில் பல அற்புதங்களை செய்துள்ளதை குறிப்பிட்டு, கேம்பினஸ் நகர ஆயர் பிரான்சிஸ்கோ டி காம்போஸ் பரேட்டோ அதிகாரபூர்வ அனுமதி வழங்கினார்.

இவ்வாறு அருட்சகோதரி அமலியாவுக்கு இறைவன் மற்றும் அவரது மிகவும் பரிசுத்தமான தாயாரால் இந்த கண்ணீரின் செபமாலை வெளிப்படுத்தப்பட்டது. மேலும் இது ஆயர் காம்போஸ் பாரெட்டோவால் இயற்கைக்கு அப்பாற்பட்டது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.

*திருவிழா நாள்: சனவரி 24*

*செபம்:* கண்ணீரின் அன்னையே! உம் திருமகன் இயேசுவின் சிலுவைப் பலியோடு, உமது ஈடு இணையற்ற கண்ணீரையும் இறைத் தந்தைக்கு காணிக்கையாக்கினீரே! உம்மைப்போல நாங்களும் எங்கள் கண்ணீரை மீட்புக்கானதாய் மாற்றிடவும், துன்பங்கள் மத்தியில் இயேசுவின் பாதையில் துணிவுடன் நடக்கவும் எங்களுக்கு அருள் பெற்றுத்தாரும். ஆமென்.

அக்டோபர் 7, 2024*நாள் – 7 வெட்டுக்கிளிகளின் அன்னை*(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா, அமெரிக்கா)மினசோட்டா என்ற பகுதியில் வெட்ட...
09/10/2024

அக்டோபர் 7, 2024
*நாள் – 7 வெட்டுக்கிளிகளின் அன்னை*
(கோல்ட் ஸ்பிரிங் - மினசோட்டா, அமெரிக்கா)

மினசோட்டா என்ற பகுதியில் வெட்டுக்கிளிகளால் ஏற்பட்ட பயங்கரமான பிளேக் ஜூன் 1873 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொடங்கியது. தென்மேற்கு மினசோட்டாவில் உள்ள விவசாயிகள் மேற்கிலிருந்து ஓர் இருண்ட புயல் மேகம் போல் நகர்வதைப் பார்த்தார்கள். ஆனால் அது மழை தாங்கும் மேகம் அல்ல. இது மில்லியன் கணக்கான வெறித்தனமான மலை வெட்டுக்கிளிகளின் மேகமாக இருந்தது. வெட்டுக்கிளிகள் எல்லா பயிர்களையும் அழித்தன.

இது உள்ளூர் விவசாயிகளுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக நீடித்தது. இறுதியில் மினசோட்டாவின் ஆளுநர் ஜான் எஸ். பில்ஸ்பரி, 1877 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதியை வெட்டுக்கிளிகளிடமிருந்து கடவுளின் விடுதலையைக் கேட்கும் பிரார்த்தனை நாளாக அறிவித்தார்.

அச்சமயத்தில் லியோ வின்டர் என்ற குருவானவர் கோல்ட் ஸ்பிரிங் என்ற இடத்திலுள்ள தம் பங்கு மக்களிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்தார். அதன்படி அவர்கள் கன்னி மரியாவுக்கு ஒரு நேர்ச்சை சிற்றாலயம் எழுப்புவதாகவும், அங்கு மரியாவின் வணக்க நாளான சனிக்கிழமைகளில் திருப்பலியை நிறைவேற்றி, வெட்டுக்கிளிகளின் தொல்லை நீங்க அன்னையின் பரிந்துரையை நாடி, அவளிடம் அடைக்கலம் புகவும் அவர் தன் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

ஜூலை 16, 1877 அன்று மக்கள் இதற்கு ஒப்புக் கொண்டனர். ஆகஸ்ட் 15, 1877 அன்று இச்சிற்றாலயம் புனிதப்படுத்தப்பட்டது. செப்டம்பர் 8 ஆம் தேதி, வெட்டுக்கிளிகளின் தொந்தரவு அப்பகுதியி முழுவதும் இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு எந்த ஒரு தீவிர வெட்டுக்கிளி படையெடுப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.

*முதன்முதலில் இவ்வாலயம் கட்டப்பட்டபோது, அது மரியாவின் சகாயம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்போது, இது அதிகாரப்பூர்வமாக விண்ணேற்பு அன்னைக்கு நேர்ந்தளிக்கப்பட்ட ஆலயமாக இருக்கிறது. ஆனாலும் இன்னும் அது தனது பழைய புனைப்பெயரான வெட்டுக்கிளிகளின் அன்னை ஆலயம் என்பதனைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. மரியா இங்கு வெட்டுக்கிளிகளின் அன்னை என்று வணங்கப்படுகிறார்*

*திருவிழா நாள்: ஆகஸ்ட் 15*

*செபம்:* வெட்டுக்கிளிகளின் அன்னையே! வாழ்வில் எங்களை வருத்தத்திலும், வேதனையிலும் ஆழ்த்துகின்ற, எல்லா விதமான நெருக்கடியான நேரங்களிலும் நீரே எங்களுக்கு ஆறுதலும் ஆதரவுமாக இருந்தருளும். ஆமென்.

அக்டோபர் 6, 2024*நாள் – 6 எதிர்நோக்கின் அன்னை*(போன்ட்மைன் - பிரான்ஸ்)1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான...
09/10/2024

அக்டோபர் 6, 2024
*நாள் – 6 எதிர்நோக்கின் அன்னை*
(போன்ட்மைன் - பிரான்ஸ்)

1871 இல் பிரான்ஸ் மற்றும் பிரஷ்ய நாடுகளுக்கிடையிலான போரினால் பிரான்ஸ் பேரழிவிற்கு உட்பட்டது. பிரான்சின் பெரும்பகுதி பிரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தது. இப்பின்னணியில் சுமார் 500 மக்களைக் கொண்ட ஒரு குக்கிராமமான போன்ட்மைன் என்னும் இடத்தில் அன்னையின் காட்சி நடந்தது. பார்பெடெட் என்ற குடும்பத்தில் தந்தை சீசர், அவரது மனைவி விக்டோயர், அவர்களது இரண்டு மகன்களான ஜோசப் (10 வயது) மற்றும் யூஜின் (12 வயது) மற்றும் இராணுவத்தில் இருந்த மற்றொருவன் ஆகியோர் இருந்தனர். 1871 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மாலை, இரண்டு சிறுவர்களும் கொட்டகையில் தங்கள் தந்தைக்கு உதவி செய்துகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வானத்தைப் பார்த்தபோது, திடீரென்று ஓர் அழகான பெண்மணி அவர்களைப் பார்த்து சிரிப்பதைக் கண்டார்கள். அவர் தங்க நட்சத்திரங்களால் மூடப்பட்ட நீல நிற அங்கியையும், தலையில் தங்க கிரீடத்தின் கீழ் ஒரு கருப்பு முக்காடும் அணிந்திருந்தார். அங்கிருந்த பெரியவர்களால் எதையும் காண இயலவில்லை. ஆனால் மேலும் இரு சிறுமிகளான பிராங்கோயிஸ் ரிச்சர் (11 வயது) மற்றும் ஜீன் மேரி லெபோஸ் (9 வயது) ஆகியோரும் அவளை வானத்தில் பார்த்தார்கள்.

இருப்பினும், பெரியவர்கள் மூன்று நட்சத்திரங்களாலான ஒரு முக்கோணத்தை மட்டுமே பார்த்தார்கள். அவர்கள் செபமாலையை செபிக்கையில், அன்னையின் ஆடையிலிருந்த தங்க நட்சத்திரங்கள் பெருகுவதைக் குழந்தைகள் கண்டார்கள். அடுத்து, அன்னையின் காலடியில் ஒரு பதாகையில் இருந்த, ‘என் பிள்ளைகளே, செபியுங்கள். கடவுள் இன்னும் சிறிது காலத்திலேயே உங்கள் குரலுக்கு செவிமடுப்பார். கனிவிரக்கத்தால் என் மகனின் மனம் நெகிழ்ந்துள்ளது.’ என்ற செய்தியை வாசித்தார்கள். சத்தமாக வாசிக்கப்பட்ட இச்செய்தியைக் கேட்டதும், கூட்டம் தன்னிச்சையாக ‘எதிர்நோக்கின் தாய்’ என்ற பாடலைத் தொடங்கியது. மேலும் ஒரு சிவப்பு சிலுவை அவரது கைகளில் தோன்றியது. அதன் மேலே ‘இயேசு கிறிஸ்து’ என்ற வார்த்தைகள் இருந்தன. இத்தோற்றம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் நீடித்தது.

பதினொரு நாட்களுக்குள், பிரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெற்றது. ஒரு போர் ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் போர் முடிந்தது. போன்ட்மெயினும் பிரான்சும் காப்பாற்றப்பட்டன. ஒரு வருடத்திற்குள், லாவல் மறைமாவட்டத்தின் ஆயர் வைகார்ட் இந்த காட்சிக்கு அங்கீகாரம் அளித்தார்.

*திருவிழா நாள்: சனவரி 17*

*செபம்:* எதிர்நோக்கின் அன்னையே! எங்கள் எதிரிகள் பெருகும் போதும், அச்சம் ஆக்கிரமிக்கும்போதும், நீரே எங்களுக்கு உதவிட விரைந்து வாரும். ஆமென்.

அக்டோபர் 5, 2024*நாள் – 5 வானதூதர்களின் அன்னை*(ஆர்கோலா - இத்தாலி)ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நட...
06/10/2024

அக்டோபர் 5, 2024
*நாள் – 5 வானதூதர்களின் அன்னை*
(ஆர்கோலா - இத்தாலி)

ஆர்கோலா கிராமத்தில் கன்னி மரியாவின் அதிசயமான தோற்றம் நடந்த இடத்தில் வானதூதர்களின் அன்னை ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 21 மே 1556 ஆண்டு - அது பெந்தெகொஸ்தே நாளின் இரண்டாவது நாள். திருப்பலிக்குப் பிறகு, கார்பனாராவில் இருந்த தங்கள் பண்ணையில் பார்பரா, கமிலா, எலிசபெட்டா, கேடரினெட்டா மற்றும் ஏஞ்சலா, ஆகிய ஐந்து சகோதரிகளும் அவர்கள் பெற்றோர் மற்றும் சகோதரர்களும் செபமாலை செபிக்கையில், ஒரு உன்னதமான பெண்மணி ஒருவர் ரோஸ்மேரி புதருக்கு மேலே தோன்றினார். சூரியனை விட பிரகாசமாக அவர் இருந்தார். வெள்ளை உடை அணிந்திருந்தார். இரண்டு வானதூதர்களால் சூழப்பட்டிருந்தார். அப்பெண்மணி தனது கையை உயர்த்தி, இனிமையான குரலில் அவர்களிடம், ‘அன்பர்களே, போய், அனைவரையும் செபிக்கவும், தவம் செய்யவும் சொல்லுங்கள். நல்ல கிராமவாசிகளிடம் எனக்கு இந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டும்படி சொல்லுங்கள்’ என்றார்.

அப்பெண் மேல்நோக்கி ஆகாயம் வரை உயர்ந்து, அவளுடைய வானதூதர்களால் அழைத்துச் செல்லப்பட்டு, அவர்களின் பார்வையில் இருந்து மெதுவாக மறைந்தார். அவர்கள் விண்ணக ஆறுதலாலும் நம்பிக்கையாலும் நிறைந்திருந்தனர். அவர்கள் அக்காட்சியில் இருந்து மீண்டவர்களாய், ஆச்சரியத்தில் திகைத்து நின்றார்கள். அவசரமாக தங்கள் வீட்டை அடைந்து தாங்கள் கண்ட காட்சியைப் பற்றி தங்கள் அன்புக்குரியவர்களிடமும் பங்குத்தந்தையிடமும் பரவசமாய் எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட கிராமவாசிகளுக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சி பிறந்தது. அனைவரின் ஆன்மாவிலும் ஓர் உறுதியான நம்பிக்கை எழுந்தது. விரைவில் இச்செய்தி அண்டை மற்றும் தொலைதூர நகரங்கள் மற்றும் அதற்கு அப்பாலும் சென்று சேருகிறது. மரியன்னையின் மீது பக்தியும் அன்பும் கொண்டிருந்த பலர் கார்போனாராவுக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு அவர்கள் ஆறுதலையும், உண்மையான அமைதியையும், ஒரு வகையான உள் புதுப்பிப்பையும் உணர்ந்தனர்.

1558 ஆம் ஆண்டில், இப்போது இருக்கும் தரையின் கீழ்த்தள ஆலயம் அன்னை தோன்றிய புனித இடத்தில் கட்டப்பட்டது. பலிபீடத்தின் இரு பக்கங்களில் உள்ள சுவர்களில் ஓவியர் லூய்கி அக்ரெட்டி வரைந்த இரண்டு பெரிய ஓவியங்கள் உள்ளன. ஒன்று வானதூதர்களின் அன்னையின் அதிசயமான காட்சியைப் பற்றியது. மற்றொன்று மே 16, 1910 இல் நடந்த வானதூதர்களின் அன்னைக்கான புனிதமான மணிமுடி சூட்டலைப் பற்றியது.

*திருவிழா நாள்: மே 21*

*செபம்:* வானதூதர்களின் அன்னையே! மங்கும் மண்ணக மனிமையை நாடாமல் விண்ணுக்குரிய மகிமையையும், மாட்சியையும் நாங்கள் நாடித் தேட எங்களுக்கு உதவி செய்யும். ஆமென்.

அக்டோபர் 4, 2024*நாள் – 4 நம்பிக்கையின் அன்னை*(லீஜ் - பெல்ஜியம்)பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்த...
04/10/2024

அக்டோபர் 4, 2024
*நாள் – 4 நம்பிக்கையின் அன்னை*
(லீஜ் - பெல்ஜியம்)

பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள டினாட் என்னும் நகரிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் செல்லஸ் என்பவரின் வீட்டிற்கு அருகில் இரண்டு அற்புதமான ஓக் மரங்கள் வளர்ந்திருந்தன. 1609 ஆம் ஆண்டில் இந்த இரண்டு பழைய மரங்களில் ஒன்று கில்லஸ் என்னும் மரம் வெட்டுபவரால் வெட்டிச் சாய்க்கப்பட்டது. மரத்தின் உட்புறத்தை பரிசோதித்த அம்மரம் வெட்டும் மனிதர், மூன்று இரும்புக் கம்பிகளுடன், ஒரு குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தட்டியின் மீது அமர்ந்த வண்ணம் இருக்கும் மண்ணால் செய்யப்பட்ட புனித மரியன்னையின் ஒரு சிறிய திருவுருவச் சிலையைக் கண்டார்.

முன்பு அந்த ஓக் மரம் இளமையாக இருந்திருந்த காலத்தில் அவ்வழியே பயணம் செய்திருந்த நல்ல கிறிஸ்தவர்களுள் எவராவது ஒருவர், அந்த மரத்தில் காணப்பட்ட ஒரு துவாரத்தில் இந்த மரியன்னையின் திருவுருவச் சிலையை வைத்திருக்க வேண்டும். பின்பு காலப்போக்கில் திறந்திருந்த அந்த துவாரம் படிப்படியாக மூடப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு வளர வளர, அம்மரம் தன்னுடைய வயிற்றில் அச்சிறப்புக்குரிய மரியன்னையின் திருவுருவச் சிலையை சிதைவுறாமல் தாங்கியபடியே இருந்திருக்க வேண்டும் என்பதாக நம்பப்படுகிறது.

இந்நிகழ்வுக்குப் பின்னர், செல்லஸ் என்னும் அந்த உரிமையாளர் விரும்பியபடியே புனித கன்னி மரியாவுக்கு மரியாதை செலுத்துவதற்காக, அத்திருவுருவச் சிலையை மீண்டும் அங்கிருந்த மற்றொரு ஓக் மரத்தின்மீது நிறுவப்பட்டது. இந்த இரண்டாவது மரத்தில் நிறுவப்பட்ட கடவுளின் தாய் மரியாவின் திருவுருவத்தை ‘*எங்கள் நம்பிக்கையின் தாய்*’ என்ற தலைப்பில் மக்கள் வணங்கத் தொடங்கினர். பல அதிசயிக்கத்தக்க குணப்படுத்துதல்கள் அவ்விடத்தில் நடைபெற்றன. இவ்வாறு ஆச்சரியமூட்டும் அற்புதங்களால் விரைவில் திருப்பயணிகள் அந்த பகுதிக்கு பெருமளவில் வரத் தொடங்கினர்.

இப்பக்தி முயற்சியை ஒழுங்குபடுத்தும் நோக்கில், முதல் ஓக் மரத்திலிருந்து உண்மையான அன்னையின் திருவுருவத்தைப் போலவே ஒரு திருவுருவச் சிலையைச் செய்யச் சொன்னார். வியப்பூட்டும் வகையில் இரண்டாவதாக செய்யப்பட்ட அத்திருவுருவம் அப்படியே முதலாவதை ஒத்து இருந்தது. இந்த இரண்டாவது திருவுருவச் சிலையானது மறைமாவட்ட ஆயர் அவர்களால் பங்கு ஆலயத்தில் ஆடம்பரமாய் நிறுவப்பட்டது. 1622 ஆம் ஆண்டிலிருந்து இந்த நம்பிக்கை அன்னையின் பக்தி முயற்சி நாட்டின் பிற இடங்களுக்கும் பரவியது.

*திருவிழா நாள்: ஜீலை 27*

*செபம்:* அற்புதமாய் ஓக் மரத்தில் வீற்றிருந்த புனித அன்னையே! உம் கருணையும் கரிசனையும் எங்களுக்கு நிறைவாய் கிடைக்கட்டும். அன்றாட வாழ்வில் எங்களுக்கு அருளின் வாய்க்காலாய் நீரே இருந்தருளும். எங்கள் நம்பிக்கையில் நாளும் எங்களை புதுப்பித்தருளும். ஆமென்.

Address

Kadakulam, Satankulam Taluk
Tuticorin
628656

Opening Hours

Monday 5:30am - 8:30pm
Tuesday 5:30am - 8:30pm
Wednesday 5:30am - 8:30pm
Thursday 5:30am - 8:30pm
Friday 5:30am - 8:30pm
Saturday 5:30am - 8:30pm
Sunday 5:30am - 8:30pm

Telephone

+914639255335

Alerts

Be the first to know and let us send you an email when St.Rajakanni matha church, kadakulam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to St.Rajakanni matha church, kadakulam:

Share

Category