31/05/2026
1836 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் ஜெயமாதா கோவில் விசாரணைக் குருவானவர் தம் அதிகாரத்துக்குட்பட்ட ஜனங்கள் தேவபக்தியில்லாமல் இருக்கிறதைக் கண்டு, பாவிகளுக்கு அடைக்கலமாகிய தேவமாதாவின் மாசற்ற இருதயத்துக்குத் தம்மையும் தமது விசாரணைக்குள் அடங்கிய ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து இந்தப் பரமநாயகியின் மாசில்லாத திரு இருதயத்தின் பெயரால் ஓர் சபையை ஏற்படுத்த விரும்பினார். இந்தச் சபையின் ஒழுங்குகளையும், பிரமாணங்களையும், கட்டளைகளையும், பாரீஸ் நகர அதிமேற்றிராணியாரின் அங்கீகாரத்திற்குப்பின் இந்தச் சபை தொடங்கியது.
சிறிது காலத்துக்குப் பிறகு தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட சபையானது சர்வேசுரனுக்கும் தேவமாதாவுக்கும் பிரியப்பட்டிருக்கிறதென்று குருவானவர் அற்புதமாக அறிந்து மரியாயின் மாசற்ற இருதய சபையை உறுதிப்படுத்தவும் அனைத்துலகிலும் பரப்பவும் பிரயாசைப்பட்டார். அவர் நினைத்தபடி இச்சபையில் திரளான ஜனங்கள் சேர்ந்து பெயர் எழுதிக் கொடுத்துத் தேவதாயாருடைய திருஇருதயத்துக்குரிய வணக்கம் செலுத்தி பாவிகள் மனந்திரும்புவதற்காக வேண்டிக்கொண்டு வருகிறார்கள். இந்த வேண்டுதலுக்கு இரங்கின சர்வ ஜீவ தயாபர சர்வேசுரனுடைய அனுக்கிரகத்தினாலும் தேவமாதாவினுடைய உதவியினாலும் கணக்கற்ற பாவிகள் மனந்திரும்பி நல்லவர்களானார்கள். ஆகையால் இந்தச் சபைக்கு பெரும் கீர்த்தியும் மகிமையும் கிடைத்ததுமன்றி, நாடெங்கும் இச்சபையைச் சேர்ந்த மற்ற அநேகம் கிளைச் சபைகள் நிறுவப்பட்டன. இச்சபையில் சேர்ந்த அநேக இலட்சம் ஜனங்கள் தேவமாதாவின் மாசில்லாத திரு இருதயத்தை வணங்கி வருவதுமன்றி, பாவிகள் எல்லோரும் மனந்திரும்பும்படியாக மிகுந்த பக்தியுடன் வேண்டிக்கொள்ளுகிறார்கள். திருச்சபைக்கு அஸ்திவாரமும் தலைவருமாகிய பாப்பானவர் இந்தப் பரிசுத்த இருதய சபை வழியாகச் சர்வேசுரன் அளித்த ஞான நன்மைகளை அறிந்து இந்தச் சபையின் சட்ட திட்டங்களையெல்லாம் சரியென்று அங்கீகரித்து இந்தச் சபையில் சகல கிறிஸ்தவர்களும் சேரும்படியாக புத்தி சொல்லி இந்தச் சபையாருக்கு அநேக பலன்களை வழங்கினார்.
இந்த சபையின் மூலமாக பரம நாயகி செய்த அதிசயமான அற்புதங்களையும், பெரிய பாவிகளை மனந்திருப்பின வரலாறுகளையும், நோயாளிகளுக்கு அற்புதமாய் அளித்த ஆரோக்கியங்களையும், கஸ்தி துன்பப்படுகிறவர்களுக்கு வருவித்த ஆறுதலையும், தேவதாய் செய்த மற்றும் அநேக உதவிகளையும் இங்கு எடுத்துக் கூறுவது சுலபமல்ல.
ஆகையால் கிறிஸ்தவர்களே, நீங்கள் எல்லோரும் இந்த உத்தம சபையில் சேர்ந்து மீட்புப்பெற உங்களால் இயன்ற அளவு பாவிகளை மனந்திருப்ப பிரயாசைப்படக்கடவீர்கள்.