08/06/2026
லொரேத் என்னும் பரம ஆண்டவளுடைய கோயில் அனைத்துலகிலும் உள்ள கீர்த்தி பெற்ற கோவில்களுள் ஒன்று. பாலஸ்தீன் நாட்டில் நசரேத் என்னும் ஊரில் தேவமாதா வாழ்ந்த ஒரு சிறு வீடு இருந்தது. அதில் ஆண்டவருடைய சம்மனசானவர் இறங்கிவந்து பரமநாயகிக்கு மங்கள வார்த்தை சொன்னார். அதில் மனிதரை இரட்சிக்க வருகிற சுதனாகிய சர்வேசுரன் மனித அவதாரம் எடுத்தார். அதில் இயேசு கிறிஸ்துநாதரும் தேவமாதாவும், புனித சூசையப்பரும் அநேக வருஷங்களாக வாழ்ந்து வந்தார்கள். அதனால் விசுவாசிகள் பூர்வீக நாள் தொடங்கி அந்த வீட்டை மகா வணக்கத்துடன் சங்கித்துக்கொண்டு வந்தார்கள். அதைப் பார்க்கும்படியாக அயல் நாடுகளிலிருந்து அநேகம் பேர்கள் வருவார்கள். புனித ஞானப்பிரகாச இராஜா 1252-ஆம் ஆண்டில் அத்திருத்தலத்தைச் சந்தித்து வணங்கினார்.
ஆனால் அந்த நாட்களில் முகமதியர் அதிகபலம் அடைந்து அநேகப் பட்டணங்களையும் பிடித்து அத்திருத்தலத்தையும் நிர்மூலமாக்க எண்ணி இருந்தார்கள். அத்தகைய இன்னல்களுக்கு எல்லாரும் பயப்படும் பொழுது வருத்தமுமின்றி தடையுமின்றி எவ்வித அற்புதங்களையும் செய்கிற சர்வேசுரனுடைய அளவறுக்கப்படாத வல்லபத்தினால் இந்த திருவீடு தானிருந்த இடத்தினின்று தூக்கப்பட்டு, முதல் ஸ்கிளாவொனியா நாட்டிலும், பின்பு இத்தாலிய நாட்டில் லோரேத்தும் பட்டணத்திலும் வைக்கப்பட்டது. இந்த அற்புதமான நிகழ்ச்சி 5 - ஆம் செலஸ்தீனுஸ் பாப்பானவருடைய ஆளுகையில் சம்பவித்ததாம். அவ்விடத்தில் வைக்கப்பட்ட திருக்கோவில் முன்னே நசரேத்தூரில் பக்தியோடு வணங்கப்பட்ட சிறுவீடுதான் என் நிச்சயமாக அறிந்து ஜனங்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்து அதை மிகவும் பக்தியோடு கொண்டாடத் தொடங்கினார்கள். அந்த வீடு அதிக சிறியதாயும், வருகிற ஜனங்கள் இருக்கப் போதாததுமாய் இருந்ததால் அதைச் சுற்றிலும் விரிவான கோவிலைக் கட்டினார்கள்.
இந்தத் திருத்தலத்தை வணங்க புனித பாப்புகளும் அரசர்களும் எண்ணிக்கையில் அடங்காத ஜனங்களும் போகிறார்கள். இன்றும் இந்தக் கோவில் பெயர் பெற்று விளங்குகிறதுமல்லாமல், இதில் அநேக அற்புதங்களும் நடந்து வருகின்றன. இந்தக் கோவிலில் பிரவேசித்துத் தேவமாதாவை வணங்க வருகிறவர்கள் தாங்கள் தேவ பக்தியினால் பிரமிப்பு அடைகிறது போல காணப்படுவார்கள். இத்திருத்தலத்தில் விசுவாசிகள் அடைந்த ஞான உபகாரங்களுக்கு அத்தாட்சியாக அநேக அடையாளங்களைப் பார்க்கலாம்.
இங்கே நாம் சொன்னவைகளைக் கேட்ட கிறிஸ்தவர்களே, அந்த வீட்டைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் அல்லவா? ஆனால் அவ்விடத்துக்குப் போக கூடாமையால் தேவமாதாவுக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட சில கோவில்களைச் சந்திக்கக்கடவீர்கள்.