11/04/2022
இன்றைய தியானம்(Tamil) 11-04-2022
தேவன் எங்கே?
‘’ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.” – மத்தேயு 27:46
இயேசு சிலுவையில் மொழிந்த நான்காம் வார்த்தை:
“கிறிஸ்டியன் & மிஷெனெரி அலைன்ஸ்’’ என்கிற உலகளாவிய மிஷனெரி இயக்கத்தை ஸ்தாபித்தவர் திரு. A.B சிம்சன். இவரது வாழ்க்கை சரிதையை A.W. டோசர் எழுதிய Wingspread என்கிற அருமையான புத்தகத்தில் வாசிக்கலாம். இரட்சிக்கப்பட்டு ஊழியம் செய்ய ஆரம்பித்த சிம்சனின் வாழ்வில், வளர்ச்சி மிக துரிதமாய் இருந்தது. ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சரீர பெலவீனத்தோடு கூட, ஆவிக்குரிய இருள் போன்ற ஒன்று அவர் வாழ்வில் வந்தது. என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்ற கதறல் அவர் உள்ளத்தில் இருந்தது. ஜெபம், வேதவாசிப்பு போன்ற எதுவும் அச்சூழலில் உதவவில்லை. இச்சோர்வின் சேற்றில் சிக்கிய அவர் திரும்ப எழ அநேக நாட்கள் ஆனது.
இப்படி தேவ பிரசன்னம் இல்லாமல், ஒருவேளை தேவன் இல்லையோ என்று தோன்றக்கூடிய இந்த நேரங்கள் கிறிஸ்தவ வாழ்வின் ஒரு பகுதியே என்று A.W.டோசர் எழுதுகிறார். குறிப்பாக தேவனை அளவுக்கதிகமாக நேசித்து அவருக்காய் ஏதாவது செய்கிறவர்கள் வாழ்வில் இது சகஜம் என்கிறார். நாம் நம் உணர்வுகளையும் சூழ்நிலைகளையும் சாராமல் தேவனையே விசுவாசத்தில் சரர்ந்திருக்க படிக்க உதவும் தருணங்கள் இவை!
மனிதனுக்கும் தேவனுக்கும் உள்ள உறவையும் அதின் தன்மையையும் கொண்டாடும் புத்தகம், சங்கீத புத்தகம். சங்கீதம் 16:11ல், ’’உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும்…பேரின்பமும் உண்டு’’ என்று பூரித்துக் கூறின தாவீது ராஜா, சங்கீதம் 22:1ல், “என் தேவனே, என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கதறுகிறார். சபை சரித்திரத்தை திரும்பிப் பார்த்தால் கிறிஸ்தவ மாமனிதர்களில் அனேகர், இவ்வனுபவங்கள் தங்கள் வழ்விலும் இருந்ததை சாட்சியாக கூறுவர். தேவனுடைய முகம் மறைக்கப்படும் இக்கொடிய அனுபவத்தை நம் ஆண்டவராகிய, இயேசுகிறிஸ்துவும் சிலுவையில் அனுபவித்தார். சங்கீதம் 22:1ல் உள்ள வார்த்தைகளை சொல்லி அவரும் கதறினார். ஆகவே அவருக்கும் நம் அனுபவங்கள் புரியும்.
அன்பர்களே ! இதுபோன்ற ஆவிக்குரிய இருள் நம் வாழ்விலும் வரும் போது தேவனை விசுவாசித்து அமர்ந்திருப்போம். மற்ற விசுவாசிகளோடுள்ள ஐக்கியத்தில் தேவனுடைய முகத்தின் வெளிச்சம் சீக்கிரம் நம்மேல் பிரகாசிக்கும்.