20/05/2026
முழங்கால்படியிட்டுத் தான் ஜெபிக்க வேண்டுமா? முழங்கால்படியிட்டு ஜெபிப்பதால் என்ன விஷேசம்? என்ற கேள்விகள் நம் எல்லார் உள்ளத்திலும் எழலாம்.
எலியா தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் மூலம் இந்த கேள்விகளுக்கான பதிலை நாம் பெற்றுக் கொள்ளலாம். ஆம், ஆவியானவர் என் உள்ளத்தில் போட்ட காரியம் இது.
அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜா தீர்க்கதரிசியாகிய எலியாவை அழைத்து வர ஒரு தலைவனையும், கூட ஒரு ஐம்பது பேரையும் அனுப்புகிறார். அங்கு என்ன நடக்கிறது?!
"அப்பொழுது எலியா, அந்த ஐம்பது பேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பது பேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பது பேரையும் பட்சித்தது" (2 இராஜா 1:10).
அதோடு விட்டாரா அகசியா இராஜா?! மீண்டும் ஒரு தலைவனையும், கூட ஒரு ஐம்பது பேரையும் அனுப்புகிறார். அந்த தலைவன், தான் இராஜாவின் ஆள் என்ற அதிகாரத் திமிரில், இன்னொரு வார்த்தையையும் சேர்த்து கூறுகிறார். அதாவது, இராஜா உன்னை "சீக்கிரமாய்" வரச் சொல்லுகிறார் என்று அவசரப்படுத்திக் கூறுகிறார்.
முன்பைப் போல இந்த ஐம்பது பேர் மற்றும் தலைவனையும் எலியா தீர்க்கதரிசி வானத்திலிருந்து அக்கினியை இறக்கிக் கொன்று விடுகிறார்.
இப்பொழுது அகசியா இராஜா மூன்றாவது முறையாக ஒரு தலைவனையும், ஐம்பது பேரையும் அனுப்புகிறார்.
ஆனால், இந்த மூன்றாவது தலைவன் அக்கினியை இறக்கிக் கொல்லப்படவில்லை. மேலும், இவர் வேண்டுதலைக் கேட்டு எலியாவும் அவரோடு கூட செல்லுகிறார். இது எப்படி நடந்தது?!
இந்த மூன்றாவது தலைவன் எலியாவை எப்படி அணுகினார் என்பது தான் அந்த மாற்றத்திற்கு, தயவிற்குக் காரணம். ஆம், இந்த மூன்றாவது தலைவன் எலியாவின் முன்பு வந்த போது, "முழங்காற்படியிட்டு" அவனை வேண்டிக் கொண்டான் என்று வேதம் கூறுகின்றது.
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகின்றது?! அவன் தேவனுடைய மனுஷனாகிய எலியாவிற்கு முன்பதாகத் தன்னை எவ்வளவு தாழ்த்த முடியுமோ, அவ்வளவாய் தாழ்த்தினார். முதல் இரண்டு தலைவர்களும் எலியா தீர்க்கதரிசியை மரியாதை இல்லாமல் "உன்னை" வரச் சொல்லுகிறார் என்கிறார்கள் அதிகாரத்துடன்.
ஆனால், இந்த மூன்றாம் தலைவனோ, "உமது" என்று மரியாதையோடு பேசுகிறார். ஆகவே பாருங்கள், முதல் இரண்டு தலைவர்களுக்கும் செய்தது போல எலியா வானத்திலிருந்து அக்கினியை இறக்கி இவர்களைக் கொல்லவில்லை.
அடுத்ததாக, தேவனிடம் இருந்தே அவருடைய தூதன் மூலமாக, அவர் வேண்டுதலுக்குப் பதில் வருகிறது. "அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப் போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப் போய்," (2 இராஜா 1:15) என்பதாகப் பார்க்கிறோம்.
ஆம் பிரியமானவர்களே, தேவனுக்கு முன்பதாக நாம் முழங்கால்படியிட்டு ஜெபம் செய்வது, நமது பணிந்த ஆவியை தேவனுக்குக் காட்டுகின்றது. தேவனுக்கு முன்பதாக நாம் நம்மை தாழ்த்துவதைக் குறிக்கின்றது. தேவன் மீதுள்ள நமது பயபக்தியை வெளிப்படுத்துகின்றது.
அந்த பயபக்தி தான் தேவனிடம் இருந்து, நமது வேண்டுதலுக்குப் பதிலை கொண்டு வருகிறது. ஆம் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் ஜெபத்திற்கே அப்படித் தான் தேவனிடம் இருந்து பதில் வந்ததாக வேதம் கூறுகிறது.
"அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல் செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு," (எபி 5:7) என்று பார்க்கிறோம்.
தேவனிடம் பயபக்தியாக இயேசு கிறிஸ்து இருந்த காரணத்தினால் தான் எப்பொழுது தனியாக ஜெபம் செய்தாலும், இயேசு கிறிஸ்து முழங்கால்படியிட்டு ஜெபித்திருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகின்றது.
ஆம் பிரியமானவர்களே, முழங்கால் ஜெபத்தின் அவசியத்தை, பலனை அறிந்து கொண்டீர்களா? உங்கள் பயபக்தியை இன்று நீங்கள் எப்படி வெளிப்படுத்தப் போகிறீர்கள்?
ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.
முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்:
This channel is dedicated to spread Gospel and to tell about Jesus, Christianity, the life within Jesus Christ, the way of life that leads to God and Heaven. This channel is created and maintained by J.Chandra Singh, Founder: Unnatharin Anbu (Love of God). The title, "Unnatharin Anbu (Love of God)"....