Unnatharin Anbu உன்னதரின் அன்பு

Unnatharin Anbu உன்னதரின் அன்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Unnatharin Anbu உன்னதரின் அன்பு, Religious organisation, Polepettai, Tuticorin.

Unnatharin Anbu - The Love of God is started by Mr.J.Chandra Singh from Tuticorin, Tamilnadu according to the calling of Jesus Christ to tell and show the Love of eternal God to the people.

12/09/2026

நீதியின் முக்கியத்துவம்!

நாம் நீதிக்கு அடிமையாகும்படிக்கே நம் பாவத்திலிருந்து நமக்கு மன்னிப்பு, விடுதலையைக் கொடுக்கிறார் தேவன் என்று நாம் பார்த்தோம்.

அப்படியானால், நீதி தேவனுக்கு எந்த அளவு முக்கியம் என்பதைக் குறித்து தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

முதலாவது பார்த்தோம் என்றால், நீதியினால் தான் தேவனுடைய சிங்காசனமே நிலை பெற்றிருக்கிறது என்று பார்க்கிறோம். "நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்" (சங் 97:2) என்று வேதம் கூறுகிறது. ஒருவேளை, தேவன் நீதி தவறினால், அவருடைய சிங்காசனமே உடைந்து விழுந்து விடும்; தேவனே சிங்காசனத்தில் வீற்றிருக்க முடியாதது போல ஆகிவிடும்.

அடுத்ததாகப் பார்த்தோம் என்றால், பரலோகத்திலே பரிசுத்தவான்களுக்கு (நமக்கு) என்னத்தினால் செய்த ஆடை கொடுக்கப்படுகிறது? கதர் ஆடையா? இல்லை, பட்டு ஆடையா? இல்லை வேறு எதினாலாவது செய்யப்பட்ட ஆடையா?!

வேதம் கூறுகிறது நீதியினால் செய்யப்பட்ட ஆடை என்று. ஆம், "அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே" (வெளி 19:8) என்று வாசிக்கிறோம்.

அந்த வேத பகுதியை முழுமையாக வாசித்தால் இப்படியாகக் கூறுகிறது, "7.நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதி செலுத்தக் கடவோம். ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 8.சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக் கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே" (வெளி 19) என்று.

ஆகவே தான் பரலோகத்தைக் குறித்து இயேசு கிறிஸ்து கூறின ஒரு உவமையிலே நீதியாகிய இந்த "கல்யாண வஸ்திரத்தைக்" குறித்து இப்படியாகக் குறிப்பிடுகிறார். "2.பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 11.விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு:

12.சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13.அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்" (மத் 12) என்று வாசிக்கிறோம்.

ஏனெனில், இயேசு கிறிஸ்துவுக்கு அடையாளமான மெல்கிசேதேக்கைக் குறித்து "நீதியின் ராஜா" என்று வேதம் கூறுகிறது, "2. ..இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அர்த்தமாம். 3.இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்" (எபி 7) என்று.

ஆம், இயேசு கிறிஸ்துவுக்கு பெயரே "நீதியின் ராஜா" தான். ஆகவே தான் (இயேசு கிறிஸ்துவைப் போல போராட்டங்களை சகிக்கிற) நமக்கும் "நீதியின் கிரீடத்தை" நாம் பரலோகம் போகும் போது சூட்டுகிறார்.

அப்போஸ்தலனாகிய பவுல் அதைக் குறித்து இப்படியாகக் கூறுகிறார், "7.நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். 8.இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார்" (2 தீமோ 4) என்று.

அது மாத்திரமல்ல, பரலோகத்தில் நாம் வாழப் போகும் புதிய பூமியை வேதம் அடையாளப்படுத்தும் போது கூட "நீதி வாசம் செய்யும் புதிய பூமி" என்று வேதம் குறிப்பிடுகின்றது. "அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்" (2 பேது 3:13) என்பதாக.

ஆம் பிரியமானவர்களே, நாம் வாழுகின்ற இந்த பூமி அநீதி வாசம் செய்யும் பூமியாக மாறி விட்டது. இந்த பூமியில் நீதி நியாயம் கிடைப்பது அரிதாக இருக்கிறது என்று நாமே அனுபவப்பூர்வமாக அறிந்திருப்போம். ஆங்கிலத்திலே அதனை ஒரு பழமொழி போலவே இப்படியாகக் கூறுவார்கள், "The world is not fair" என்று.

ஆகவே இந்த பூமியில் நாம் நியாயத்தை அதிகம் எதிர்பார்ப்பது நம்முடைய முட்டாள்தனம் என்றே தெரிகிறது. ஏனெனில், என்னுடைய பார்வையில் தேவனும் இந்த அநீதி நிறைந்த பூமியைக் கைவிட்டார் என்றே தெரிகிறது. இந்த பூமியை அவர் சரிப்படுத்த விரும்பவில்லை. ஆகவே தான் இந்த பூமியில் இன்னும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றது.

"கடவுள் ஏன் உலகில் நடக்கும் கொடுமைகளை எல்லாம் தடுக்கவில்லை" என்று சிலர் கேட்பதற்கான பதிலாக இது இருக்கிறது. தேவனுடைய நிலை இதில் தெளிவாகிறது.

இந்த அநீதி நிறைந்த பூமிக்கு மாற்றாகத் தான் "நீதி வாசமாயிருக்கும்" புதிய பூமியைக் கொண்டு வருகிறார். அந்த புதிய பூமிக்குள் நீதிமான்களுக்கு மட்டுமே நுழைவு உண்டு என்று வேதம் கூறுகிறது.

தேவன் இந்த பூமியை திருத்த முயற்சிக்கவில்லை என்பதால் தான் இறுதியாக இப்படியாகக் கூறி வேதத்தை முடிக்கிறார், "11.அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12.இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது" (வெளி 22) என்று.

இதனைத் தான் இயேசு கிறிஸ்து இப்படியாக ஒரு உவமையில் கூறினார், "27.வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

28.அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப் போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். 29.அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும் போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்பு மட்டும் வளர விடுங்கள்.

30.அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்" (மத் 13) என்று பார்க்கிறோம்.

ஆம் பிரியமானவர்களே, ஒருவேளை இன்று நீங்கள் ஆச்சரியப்படலாம், அநியாயம் செய்பவர்கள் இந்த பூமியில் நன்றாகத் தானே இருக்கிறார்கள் என்று. சத்தியத்தை அறிந்து கொள்ளுங்கள் - களைகளை அறுப்பு நாள் மட்டும் தேவன் தொந்தரவு செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்; இறுதி நாளில் தான் அதன் பலன் வரும் என்று.

இன்று நீங்கள் களையா? கதிரா? உங்கள் முடிவு என்ன?

இந்த பூமியில் நாம் (கோதுமை) கதிராக இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய விருப்பம். அதனைத் தான் வேதம் இப்படியாகக் கூறுகிறது, "10.தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11.நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன்" (பிலி 1) என்று.

வேத வசனம் கூறுகிறது இயேசு கிறிஸ்துவினால் வருகிற "நீதியின் கனிகளால்" நாம் நிறைந்தவர்களாக இருக்க வேண்டும் என்று. அப்படியானால், அதற்கு என்ன செய்ய வேண்டும்?!

வேதம் கூறுகிறது அதற்கு நாம் "நீதியின் வசனத்தில்" நடக்க பழக வேண்டும் என்று. ஆம் பிரியமானவர்களே, நாம் வேத வசனத்தை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று.

ஏனெனில், "16.வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17.அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது" (2 தீமோ 3) என்று வேதத்திலே பார்க்கிறோம்.

வேத வசனங்கள் நமக்கு நீதியைப் படிப்பிக்குதலுக்கு ஏற்றதாக இருக்கிறது. அதனை தேவனே மோசே, பேதுரு, பவுல், யோவான், மத்தேயு போன்ற அநேக பரிசுத்தவான்களை தமது ஆவியினால் நிரப்பி, நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆகவே, அவிசுவாசிகள் சிலர் வாதாடுவது போல மனிதர்களால் எழுதப்பட்ட வார்த்தைகள் அல்ல வேதம். தேவனால், தேவ ஆவியால் மனிதர்களைப் பயன்படுத்தி நமக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது.

ஆகவே தான் வேத வார்த்தைகள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியும் ஜீவனும் நமக்குள் இறங்குவதை உணரலாம். என்னுடைய அனுபவமும் அதுவே. வேதத்தை நாம் அதிகமாய் வாசிக்க வாசிக்க ஒரு வல்லமை, அக்கினி நம்மை நிரப்புவதை உணரலாம். வல்லமையாய் பயன்படுத்தப்பட்ட அநேக தேவ ஊழியர்களின் வல்லமையின் இரகசியம் - அதிகமாய் வேத வசனத்தை வாசிப்பதே, தியானிப்பதே.

வேத வசனமே நமது ஆவிக்கான உணவு. எப்படி ஒரு கறி பிரியாணி சாப்பிட்டதும் மிகவும் தெம்பாக நமது சரீரம் உணருமோ அது போலத் தான் வேத வசனத்தை வாசிக்கும் போது நமது ஆவி பலமடையும். ஆகவே தான் இயேசு கிறிஸ்து "ஜீவ அப்பம் நானே" என்று வார்த்தையாகிய தம்மைக் குறித்துக் கூறினார்.

என்னை மிகவும் தொட்ட ஒரு வேத சம்பவம் இது, "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்" (அப் 10:44) என்பது.

ஒவ்வொரு முறை நான் செய்திகளை எழுதி அனுப்பும் போது இந்த வேத வசனத்தைச் சொல்லி ஜெபித்தே அனுப்புவேன். ஆம், அந்த பரிசுத்த ஆவியின் பலத்தினால், வல்லமையினாலே தான் நாம் வாசித்த, கேட்ட, வேத வசனத்தின்படி சாட்சியாக வாழ முடியும். அந்த வேத வசனங்கள் நம் உள்ளத்தில் கிரியை செய்ய முடியும்.

ஆகவே நாம் நீதியின் வசனத்தில் பழக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வேதம் கூறுகிறது. "12.காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்க வேண்டிய உங்களுக்கு தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்க வேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள்.

13.பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான்" (எபி 5) என்று. ஆம், வேத வசனங்களை அறியாதவர்களை ஒன்றும் தெரியாத ஒரு குழந்தையாக வேதம் பார்க்கிறது.

ஒருவேளை, வேதம் முழுமையாக இதனை விளக்கும் என்றால், கொஞ்சம் வேதத்தை அறிந்து நடப்பவர்களை ஆரம்பப் பள்ளி மாணவர்களாகக் கருதும். இன்னும் கொஞ்சம் அறிந்தவர்களை மேல்நிலைப் பள்ளி மாணவர்களாகக் கருதும். இன்னும் கூடுதலாக அறிந்து நடப்பவர்களை கல்லூரி மாணவர்களாகக் கருதும். ஏறக்குறைய முழுமையாகக் கடைபிடிப்பவர்களைத் தான் ஒரு முதிர்ச்சி அடைந்த பெரிய மனிதராகக் கருதும்.

இதனை அடுத்த வசனம் கூறுவதில் இருந்து அறிந்து கொள்ளலாம். "பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சி செய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்" (எபி 5:14) என்று.

ஆம், இயேசு கிறிஸ்துவும் வேத வசனங்களை கையாள்வதில் பூரண வயதுள்ளவராக இருந்தபடியினால் தான் வேதவசங்களைக் கூறியே பிசாசின் சோதனைகளை ஜெயித்தார் என்று வேதத்திலே பார்க்கிறோம்.

ஆம், யோவான் ஸ்நானனிடம் கூட நீதியின் வசனங்களை நிறைவேற்றுவதைக் குறித்து இயேசு கிறிஸ்து இப்படியாகக் கூறினார், "இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்" (மத் 3:15) என்று.

ஆம் பிரியமானவர்களே, இன்று நீங்கள் வேதவசனங்களை நிறைவேற்றுவதில் எந்த நிலையில் இருக்கிறீர்கள்? குழந்தையைப் போலா? இல்லை, ஒரு மாணவராகவா? இல்லை பூரண வயதுடையவராகவா?

இன்றைக்கு அநேகக் கிறிஸ்தவர்களுக்கு வேதம் அந்நிய காரியமாகப் போய் விட்டது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை ஆராதனையில் போதகர் கொடுக்கும் பிரசங்கங்கள் மூலம் மட்டுமே வசனங்களை அறிந்து கொள்வது, இன்னும் சிலர் மற்ற கூடுகைகளிலும் ஆவிக்குரிய பொதுக் கூட்டங்களிலும், சமூக ஊடங்களில் தேவ ஊழியர்கள் பேசும் செய்திகளின் மூலம் மட்டுமே வசனங்களை அறிந்து கொள்வது என்று தங்கள் கிறிஸ்தவ ஜீவியத்தை நடத்துகிறார்கள்.

அது நல்லது தான். தவறு கிடையாது. கேட்க வேண்டும். ஆனால், அவைகள் மட்டுமே நமக்குப் போதாது. அவர்கள் பற்ற வைக்கிறார்கள், ஆனால், நாம் தான் தொடர்ந்து எரிய வேண்டும்.

வேதம் என்ன கூறுகிறது தெரியுமா? நாம் வேதத்தை வாசிக்க வேண்டும் என்று. எப்படி? "கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்" (ஏசா 34) என்று.

அப்படியானால், நாம் கர்த்தருடைய வேதத்திலே கூறப்படும் காரியங்களை ஆழமாய் தேடி வாசிக்கும் போது, பரிசுத்த ஆவியானவர் நம்மோடு இணைந்து கொண்டு நமக்கு ஒரு ஆசிரியராக இருந்து அவைகளைக் கற்றுக் கொடுக்கிறார்.

என்னுடைய செய்திகள் அனைத்தும் இப்படித் தான் தேவகிருபையால் எழுதப்படுகிறது. தேவன் மனதில் போடும் காரியத்தைக் குறித்து வேதத்திலே தேடி வாசித்து, பின்பு பரிசுத்த ஆவியானவர் அவைகளை மிக அழகாக, நேர்த்தியாக இணைத்துக் காண்பிப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்த செய்தியே அதற்கு ஒரு சாட்சி தான்!

அதுமாத்திரமல்ல, வேத வசனங்களை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவர், அவைகளில் நடக்கவும் நம்மை வழிநடத்துகிறார். வேதம் கூறுகிறது, "9.அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும் போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்க வேண்டுமல்லவா?

11.எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்" (எபி 12:11) என்று.

ஆம் பிரியமானவர்களே, நாம் நீதியின் கனிகளை உடையவர்களாக இருக்க வேண்டும் என்றால், நாம் நீதிமானாக வாழ வேண்டும் என்றால் நாம் நீதியின் வசனத்திற்கு நம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அதில் நாம் தவறும் போது நம்மை சிட்சித்து (கண்டித்து, தண்டித்து) தேவன் நம்மை பழக்குவிக்கிறார்.

ஏனெனில், வேதம் கூறுகிறது, "கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி" (நீதி 6:23) என்று.

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

05/09/2026

நீதிக்கு அடிமைகளானீர்கள்.

இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பவர்களுக்கு நியாயப்பிரமாணம் தான் மரித்து விட்டது. ஆனால், "நியாயப்பிரமாண நீதி" (தேவனுடைய நீதி) நிறைவேற்றப்பட வேண்டியது இருக்கிறது என்று கடந்த செய்தியில் கூறினேன்.

அதனைக் குறித்து சற்று ஆழமாக இன்று பார்க்கப் போகிறோம்.

ஆம், இந்த தொடரை நான் எழுத ஆரம்பிக்கும் முன்பு தேவ ஆவியானவர் என்னோடு கூட இந்த ஒரு வேதவசனம் மூலம் இடைப்பட்டார். இந்த வேத வசனத்தில் சொல்லப்பட்ட காரியம் குறித்து ரோமர் 1ம் அதிகாரத்தில் இருந்து 10ம் அதிகாரம் வரை உள்ள அநேக வேத வசனங்கள் மூலம் எனக்கு ஆவியிலே விளங்கக் காட்டினார்.

ஆம், அந்த வேத வசனம் இது தான்: "பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள்" (ரோம 6:18) என்பது.

பார்ப்பதற்கு ஒரு சிறு வசனம் போலத் தான் தெரிகிறது; ஆனால், தேவ ஆவியானவர் எனக்கு விளங்கக் காட்டின போது, ஒரு மிகப் பெரிய ஆழமான ஒரு சத்தியம் இதில் இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த வேத வசனத்தில் இரண்டு காரியங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. முதலாவது பாவத்தில் இருந்து நாம் விடுதலை அடைகிறோம். இரண்டாவது நாம் நீதிக்கு அடிமையாக வேண்டும்.

நமக்குப் புரியும்படி இன்னொரு வகையில் சொல்வதானால், பாவத்தில் இருந்து நமக்கு விடுதலை கொடுக்கப்பட்டதன் நோக்கமே நம்முடைய வாழ்க்கையை நீதியாக மாற்றுவதற்குத் தான்.

முதல் காரியத்தை இயேசு கிறிஸ்து செய்கிறார்; இரண்டாவது காரியத்தை நாம் செய்ய வேண்டும்.

அதைத் தான் சகேயுவின் வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம். அந்த ஊரே அவனை பாவி, பாவி என்று முத்திரை குத்தியது. ஒரு நாள் இயேசு கிறிஸ்து அந்த ஊருக்கு வருகிறார். அவருடைய பார்வை, யார் அந்த ஊரில் மிகப் பெரிய நீதிமான்; அவன் வீட்டில் போய் தங்க வேண்டும் என்று செல்லவில்லை.

மாறாக, யாரை அந்த ஊர் மக்கள் பாவி பாவி என்று தூஷித்தார்களோ, அந்த மனிதனின் வீட்டில் போய் தங்க வேண்டும் என்று செல்கிறார். அந்த மனிதனோ, தான் ஒரு பாவி என்று எண்ணி, வெட்கப்பட்டு, ஒரு மரத்தின் உச்சியில் போய் மறைந்து நின்று நீதிமானாகிய இயேசு கிறிஸ்துவைக் காண்கிறான்.

அப்பொழுது இயேசு கிறிஸ்து என்ன செய்கிறார்? "இயேசு அந்த இடத்தில் வந்த போது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கி வா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்க வேண்டும் என்றார்" (லூக் 19:5).

உடனடியாக சகேயு என்ன செய்கிறார்? "அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக் கொண்டு போனான்" (லூக் 19:6).

ஆனால், சுற்றி நின்ற மக்கள் என்ன செய்தனர்? "அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள்" (லூக் 19:7).

அவர்கள் முறுமுறுப்பதை பார்த்த சகேயுவுக்கு உடனே ஒரு கோபம் ரோஷம் வந்திருக்க வேண்டும். இந்த ஜனங்கள் இத்தனை நாள் என்னை தூஷித்தார்கள்; நான் அதற்கு தகுதியானவன் என்பதால் ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், இன்றோ, என்னால் இந்த நீதிமானாகிய இயேசு கிறிஸ்து அல்லவா தூஷிக்கப்படுகிறார். என் பாவத்தைப் பாராமல், என்னை ஏற்றுக் கொண்ட இந்த ஆண்டவரை அல்லவா இந்த மக்கள் தூஷிக்கிறார்கள் என்று சகேயுவினால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

உடனடியாக, போகும் வழியிலேயே, சகேயு இப்படியாகக் கூறுகிறார், "சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்" (லூக் 19:8).

இயேசு கிறிஸ்துவின் மீது எவ்வளவு பெரிய அன்பு பாருங்கள், இந்த சகேயுவுக்கு! மக்கள் எவ்வளவு நிந்தித்தாலும் பரவாயில்லை என்று எந்த பணத்தை அதுவரை முக்கியத்துவப்படுத்தி வாழ்ந்தாரோ, இன்று அதே பணத்தை இயேசு கிறிஸ்துவின் மீது பழி வந்து விடக் கூடாது என்று கொஞ்சம் கூட யோசிக்காமல், தானம் செய்து விடுகிறேன் என்று கூறுகிறார். அநியாயமாக வாங்கினவர்களுக்கு 4 மடங்கு திரும்ப கொடுக்கிறேன் என்று கூறுகிறார்.

அப்படியானால், அந்த இடத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு எவ்வளவு பெரிய மகிமையாக அது இருந்திருக்கும்?! ஆம், பிரியமானவர்களே, இப்படி சகேயு போல, தேவனிடத்தில் அன்பு கூறவும், நீதிமானாக மாறி, நீதியுள்ள ஒரு வாழ்க்கை வாழவும், அப்படி நீதிக்கு அடிமையாகவே நமக்கு பாவத்தில் இருந்து விடுதலையைக் கொடுக்கிறது கிருபை வரம்.

வேதத்திலே ஒரு அழகான பகுதி இப்படியாகக் கூறுகிறது, "3.கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 4.உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு" (சங் 130) என்று.

ஆம், தேவனுக்கு நாம் பயப்படும்படிக்கே நமக்கு மன்னிப்புக் கொடுக்கப்படுகிறது.

ஒருவேளை, சகேயு "மனம்" திரும்பாமல், தன் "வீட்டில்" மாத்திரம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு, கனம் பண்ணி, ஒரு பெரிய விருந்து செய்து அனுப்பி வைத்து விட்டு, மறுபடியும் தன் பாவ வாழ்க்கை மூலம், அநீதியாய் பணம் சம்பாதிருந்தால், இயேசு கிறிஸ்துவுக்கு அது எவ்வளவு பெரிய ஒரு நிந்தனையாக, வெட்கமாக இருந்திருக்கும்?!

இன்றும் கூட அநேக கிறிஸ்தவர்கள் "கிறிஸ்தவ குடும்பம்" என்ற அந்தஸ்தில் இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை, வசனத்தை வீட்டில் மாட்டி வைத்து விட்டு, தங்கள் மனதை உலகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அநீதியாய் வாழ்வதனால் அல்லவா இயேசு கிறிஸ்துவின் நாமம் மக்களால் தூஷிக்கப்படுகிறது.

இன்று நீங்கள் இயேசு கிறிஸ்துவுக்கு மகிமையாக மாறப் போகிறீர்களா? இல்லை, நிந்தையாக மாறப் போகிறீர்களா?

பரிசுத்தமுள்ள தேவன் உங்களை அழைத்த கிருபையை உணர்ந்து சகேயுவைப் போல கனப்படுத்தப் போகிறீர்களா? இல்லை, கிருபையை போக்கடிக்கப் போகிறீர்களா?

நாம் நீதிக்கு அடிமையாகவே இயேசு கிறிஸ்து பாவத்தில் இருந்து விடுதலை கொடுக்கிறார் என்பதை அறியாமல், சிலர் இன்று முதல் பகுதியை மாத்திரம் எடுத்துக் கொள்வார்கள் என்றால், அரை கிணற்றை தாண்டினது போலத் தான். விழுந்து போவதே முடிவு!

ஆம், வேதம் அதைக் குறித்து இப்படியாக எச்சரிக்கிறது, "7.மோசம் போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8.தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்" (கலா 6) என்று.

ஆம் பிரியமானவர்களே, நாம் மனந்திரும்பாமல், துணிகரமாக பாவம் செய்து விட்டு, நான் கிறிஸ்துவினுடையவன் என்றால், நம்மை பார்த்து மக்கள் தேவனை பரியாசம் பண்ணுவதற்கு சமம்! இதை வெட்டிப் போடுங்கள் என்று இயேசு கிறிஸ்துவும் கூறி விடுவார்.

ஒருவேளை, இன்று நீங்கள் ஏதோ ஒரு பாவத்தில் விழுந்து கிடக்கிறீர்களா? சகேயு போல வைராக்கியம் கொண்டு எழும்பி நீதிக்கு அடிமையாக ஒப்புக் கொடுப்பீர்களா?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

29/08/2026

எல்லா விசுவாசிகளுக்கும் கட்டாயம் கிடைக்கும் இரண்டு வரங்கள்!

இதுவரை நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதால் உண்டாகும் கிருபை வரத்தைக் குறித்துப் பார்த்தோம். கிருபை வரத்தினால் பாவத்தை (மீறுதலை) உண்டாக்கும் நியாயப்பிரமாணம் மரிக்கிறது என்று பார்த்தோம்.

சற்று நினைவுபடுத்துவதற்காக மீண்டும் கூறுகிறேன்: நியாயப்பிரமாணம் என்பது நிறைய சட்டதிட்டங்கள் அடங்கிய தொகுப்பு. இப்பொழுது, அந்த சட்டமே இல்லை என்றால், (சட்ட) மீறுதல் என்பதே இருக்காது அல்லவா?

அப்படியானால், நாம் பாவங்களைத் தாராளமாய் செய்யலாமா என்ற கேள்வி இயல்பாகவே நமக்குள் வரும். இந்த கிருபை வரத்தைப் பற்றி நமக்கு கூறிய அப்போஸ்தலனாகிய பவுல் கூட நமக்கு இப்படிப்பட்ட கேள்விகள் வரும் என்றே கூறுகிறார்.

"இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா?" (ரோம 6:15) என்று கேட்கிறார்.

சிலர் கூட, "கிறிஸ்தவர்களுக்குப் பிரச்சனை இல்லை; தவறு செய்து விட்டு இயேசுவிடம் போய் மன்னிப்புக் கேட்டால் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் வேடிக்கையாகக் கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருப்போம்.

ஆனால், ஒன்றை இங்கு நாம் கவனிக்கத் தவறி விடுகிறோம். நியாயப்பிரமாணம் தான் மரித்து விட்டது; ஆனால், "நியாயப்பிரமாண நீதி" (தேவனுடைய நீதி) நிறைவேற்றப்பட வேண்டியது இருக்கிறது.

இன்னொரு வகையில் சொல்வதானால், தேவனுடைய நீதியை "நிறைவேற்றும் முறை" தான் மாற்றப்பட்டு இருக்கிறது.

ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாகக் கூறுகிறார், "அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே" (ரோம 3:31) என்று.

நியாயப்பிரமாணம் எதற்காகக் கொடுக்கப்பட்டது? மனிதன் தேவனுடைய நீதியை நிறைவேற்றத் தானே? ஆனால், நியாயப்பிரமாணத்தால் அது முடியவில்லை. ஏனெனில், அது பாவத்திற்கு ஏதுவான மனிதனுடைய மாம்சத்தால் தேவனுடைய நீதியை நிறைவேற்ற முயற்சி செய்கிறது.

வேதம் அதைக் குறித்து இப்படியாகக் கூறுகிறது, "மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன்" (ரோமர் 7:14) என்று.

ஆம், நீங்கள் வாசித்தது சரி தான் - நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது! அதாவது ஆவிக்குரிய ஒரு மனிதனால் தான் நியாயப்பிரமாண (தேவனுடைய) நீதியை நிறைவேற்ற முடியும்; பலவீனமான மாம்சத்தால் அல்ல.

ஆகவே தேவனுடைய நீதியை "நிறைவேற்றும் முறை" தற்போது பலம் வாய்ந்த ஆவிக்குரியதாக மாற்றப்பட்டு இருக்கிறது.

அதற்கு முதலாவது அந்த மனிதனுடைய பாவ சரீரம் மரிக்க வேண்டும். ஆகவே தான், கிருபை வரத்தினால் நியாயப்பிரமாணம் மட்டும் மரிக்கவில்லை; பாவ சரீரமும் மரிக்கிறது என்று பார்த்தோம்.

அதன் அடையாளமாகச் செய்யப்படும் ஞானஸ்நானத்தில், நாம் தண்ணீருக்குள் மூழ்குவது என்பது கிறிஸ்துவோடு கூட நமது பாவ சரீரமும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு விட்டது என்பதைக் குறிக்கிறது.

அடுத்ததாக, அந்த மனிதனுடைய ஆவி உயிர்ப்பிக்கப்பட்டு, அவன் ஆவிக்குரிய மனிதனாக மாற வேண்டும். அப்படி நம்மை ஆவிக்குரியவர்களாக மாற்ற இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலம் நமக்கு பரிசுத்த ஆவி கிடைக்கிறது.

இதனை வேதம் இப்படியாகக் கூறுகிறது, "கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் (ஆவியிலே) உயிர்ப்பிப்பார்." (ரோமர் 8:11) என்று.

ஏனெனில் கிறிஸ்துவும் மாம்சத்திலே கொலையுண்டு ஆவியிலே உயிர்பிக்கப்பட்டார் (1 பேது 3:18) என்று வேதம் கூறுகிறது. ஞானஸ்நானத்தில் மூழ்கிய தண்ணீரில் இருந்து நாம் வெளியே வருவது ஆவியிலே நாம் கிறிஸ்துவோடு கூட உயிர்ப்பிக்கப்பட்டதன் அடையாளமே.

ஆம் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்து மூலம் கிடைக்கும் "அடிப்படையான இரண்டு வரங்கள்" மூலம் தான் பலன்கள் அனைத்தும் நமக்குக் கிடைக்கின்றது என்பதைப் பல வசனங்கள் மறைமுகமாக வெளிப்படுத்துகின்றது.

1.ஒன்று கிருபை வரம்
2.மற்றொன்று பரிசுத்த ஆவி வரம்

முதலாவது "கிருபையின் வரம்" நமது பாவங்களை எல்லாம் மன்னித்து நம்மை குற்றமில்லாதவனாக மாற்றுகின்றது.

ஆனால், அதோடு காரியம் முடிவடைந்து விடவில்லை; அதன் பிறகு நாம் தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிறவர்களாய் (நீதிமானாக) வாழ வேண்டும் என்றால் "பரிசுத்த ஆவி" வரம் தேவைப்படுகின்றது.

அதைக் குறித்து, "பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும் போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிப் பரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்" (அப் 1:8) இயேசு கிறிஸ்து.

ஆகவே, "கிருபை வரம்" மற்றும் "பரிசுத்த ஆவி வரம்" ஆகிய இந்த இரண்டு வரங்கள் மட்டும் எல்லா விசுவாசிகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த இரண்டும் மிக மிக அவசியமானதும் கூட!

மற்றபடி, மற்ற 9 பரிசுத்த ஆவியின் வரங்களும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாகக் கொடுக்கப்படுகின்றது; எல்லாருக்கும் எல்லாம் அல்ல!

"7.ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 8.எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், .....

11.இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார்" (1 கொரி 12) என்று வேதம் கூறுகிறது.

சிலர், கிருபையின் வரத்தை மட்டுமே பெற்றுக் கொண்டவர்களாக நின்று விடுகின்றனர். அதனால் செத்த கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர்.

எப்பொழுது பரிசுத்த ஆவி வரத்தை பெறுகிறார்களோ அப்பொழுது தான் உயிருள்ள (உயிரடைந்த) கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள்.

இன்று நீங்கள் செத்த கிறிஸ்தவரா? இல்லை, உயிருள்ள கிறிஸ்தவரா?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

23/08/2026

மரித்த உடன் நாம் எங்கு செல்வோம்? பரதீசு என்பது என்ன? எங்கு எப்படி இருக்கும்?

இயேசு கிறிஸ்துவுக்கு முன்பு வரை மரித்த பரிசுத்தவான்கள் உட்பட அத்தனை பேரும் பாதாளத்திற்குப் போய் இளைப்பாறுகிறார்கள், நித்திரையாயிருக்கிறார்கள் என்று பார்த்தோம்.

"39.இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40.அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்" (எபி 11:40) என்று அவர்களைக் குறித்து வேதம் கூறுவதைப் பார்க்கிறோம்.

அப்படியானால், பழைய ஏற்பாட்டு விசுவாசிகள், பாவங்களுக்காக பலியான இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற நம்மோடுகூடத் தான் பூரணமடையும்படி தேவன் விசேஷித்த நன்மையானதொன்றை முன்னதாக நியமித்திருக்கிறார்.

அந்த நன்மை என்ன என்பதைக் குறித்து தான் இன்று பார்க்கப் போகிறோம்.

அந்த நன்மையைக் குறித்து, பாவங்களுக்கான மெய்யான பலியாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, முதன் முதலாக கிறிஸ்துவுக்குள் மரித்த, இயேசுவோடு கூட சிலுவையில் அறையப்பட்ட அந்த கள்ளனைப் பார்த்து தான் இயேசு கிறிஸ்து கூறி வெளிப்படுத்துகிறார்.

"இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடேனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்" (லூக் 23:43).

பொதுவாக நமது நாட்டில், ஒரு அரசின் மிகப் பெரிய கனவுத் திட்டத்தை, பிரதமரோ, முதல்வரோ எத்தனை விமரிசையாக, எவ்வளவு பெரிய விழாவாகக் கொண்டாடி ஒரு மேடையில் வைத்து அறிவித்து துவங்கி வைப்பார்கள்!

ஆனால், ஒரு மிகப் பெரிய தேவத்திட்டத்தினுடைய தொடக்க அறிவிப்பை மிக எளிமையாக சிலுவையில் அறிவிக்கிறார் இயேசு கிறிஸ்து! அல்லேலூயா!

அது எத்தனை மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு! எத்தனை ஆண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வருகிறது! எத்தனை பரிசுத்தவான்களின் கனவு நனவானது, அந்த சிலுவையில் இயேசு மொழிந்த அறிவிப்பினில்!

ஆம், இன்றைக்கு நீ என்னுடேனே கூடப் பரதீசிலிருப்பாய் என்று இயேசு கிறிஸ்து கூறுகிறார். மூன்று காரியங்களை இந்த சிறு வாக்கியம் நமக்கு வெளிப்படுத்துகின்றது.

1. இன்றைக்கு - அதாவது, இப்பொழுது நீ மரித்த உடனே!
2. நீ என்னுடேனே கூட - உன்னுடைய ஆத்துமா தனியாக அல்ல இயேசு கிறிஸ்துவோடு இருக்கப் போகிறது!
3. பரதீசிலிருப்பாய் - இனி பாதாளம் செல்ல வேண்டியது இல்லை!

ஆகவே தான், அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாகக் கூறுகிறார், "21.கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். 22.ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே ..., நான் தெரிந்து கொள்ள வேண்டியது இன்னதென்று அறியேன்.

23.ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; 24.அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்" (பிலி 1) என்று.

பவுல் இங்கு மிகத் தெளிவாக, உறுதியாகக் கூறுகிறார், "தேகத்தை விட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனே கூட இருக்க எனக்கு ஆசையுண்டு" என்று. அப்படியானால், மரித்த பின்பு நாம் இயேசு கிறிஸ்துவுடனே போய் இருப்போம்.

இயேசு கிறிஸ்து பாதாளத்திலா இருக்கிறார்? "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்" (சங் 16:10) என்று தாவீது சொன்ன தீர்க்கதரிசனம் நிறைவேறியதே.

"அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான்" (அப் 2:) என்று பெந்தெகொஸ்தே நாளில் முதல் பிரசங்கத்திலேயே பேதுரு அவர்கள் அதனை உறுதிப்படுத்துகின்றாரே.

ஆம் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்து பாதாளத்தில் இல்லை. ஆகவே நாமும் மரித்த பின்பு, நம்முடைய ஆத்துமா இயேசு கிறிஸ்துவின் பிரசன்னத்தில், அவரோடு கூடத் தான் (பரதீசில்) இருக்கப் போகிறது.

சரி, புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் இந்த பவுல். ஆனால், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைப் பற்றி என்ன? இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலில் அவர்களைப் பற்றியும் ஒரு ஆச்சரியமான சம்பவம் வேதத்திலே கூறப்பட்டு உள்ளது.

இயேசு கிறிஸ்து மரித்த போது "52.கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53.அவர் உயிர்த்தெழுந்த பின்பு, இவர்கள் கல்லறைகளை விட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்" (மத் 27) என்று.

இவர்கள் உயிரடைய வேண்டிய அவசியம் என்ன? அப்படியானால், இவர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படி இயேசு கிறிஸ்துவோடு கூட பரதீசுக்கு சென்றிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதன் அடையாளமாகத் தான், அதுவரை நித்திரையாய் இருந்தவர்கள் உயிரடைந்திருப்பார்கள்.

ஆம், நம்மை அல்லாமல் அவர்கள் பூரணமடைய முடியாது. நாம் இல்லாமல் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெற முடியாது. அந்த விசேஷித்த நன்மையைப் பெற, நம்முடைய (இயேசு கிறிஸ்துவின்) காலம் வரை அவர்கள் (பாதாளத்தில்) காத்திருக்கத் தான் வேண்டியதாக இருந்தது.

பரதீசு என்பது என்ன? என்பதை அறிந்து கொண்டால், நீங்கள் இன்னும் ஆச்சரியம் அடைவீர்கள்!

கிரேக்க மொழியில் உள்ள பழைய ஏற்பாட்டில், "ஏதேன் தோட்டத்தை" குறிக்க, "பரதீசு" என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளனர். "பரதீசு" என்ற சொல் பெர்சிய மொழியில் இருந்து உருவானது. அது அழகிய "பூங்கா", அல்லது "தோட்டம்" போன்றவற்றை குறிப்பதாக இருக்கிறது.

மேலும் நாம் பார்த்தோம் என்றால், ஆதியிலே ஏதேன் தோட்டத்தில் இருந்த "ஜீவ விருட்சம்" இப்பொழுது பரதீசில் இருக்கிறது என்று வேதம் கூறுகிறது. "ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக் கொடுப்பேன் என்றெழுது" (வெளி 2:7) என்பதாக வாசிக்கிறோம்.

இப்பொழுது பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவ விருட்சம் அன்று ஏதேன் தோட்டத்தின் மத்தியில் தான் முளைத்தது என்று வேதத்தில் பார்க்கிறோம் அல்லவா? " தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்" (ஆதி 2:9) என்று.

தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் ஆதாம் மீறியதால், எந்த ஏதேன் தோட்டத்தில் இருந்து மனிதன் துரத்தி விடப்பட்டானோ? எந்த ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்க முடியாதபடி மனிதன் தடுக்கப்பட்டானோ? அந்த ஏதேன் தோட்டத்திற்கு, மரணப்பரியந்தம் கீழ்ப்படிந்து பிதாவின் சித்தத்தை நிறைவேற்றிய இயேசு கிறிஸ்துவினால் நாம் நுழைகிறோம் என்பது விளங்குகிறது அல்லவா?

ஆம், ஏதேன் தோட்டம் தான் "பரதீசு" என்று அழைக்கப்படுகின்றது. ஏன் "பரதீசு" என்று பெயர் மாற்றப்பட்டு இருக்கிறது?!

ஏனெனில், தோட்டம் இடம் மாற்றப்பட்டு இருக்கிறது! ஆம், இப்போது ஏதேன் தோட்டம் பூமியில் அல்ல; பூமிக்கு மேலே உள்ள மூன்றாம் வானத்திலே இருக்கிறது.

அதைக் குறித்து வேதத்திலே இப்படியாகப் பார்க்கிறோம், "2.கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.

3.அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன்" (2 கொரி 12) என்று.

தேவனோடு சஞ்சரித்த ஏனோக் தன்னுடைய புத்தகத்தில் மொத்தம் பத்து வானங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றார். தேவன் இருப்பது பத்து வானங்களுக்கும் மேலான உன்னதத்தில் (மிக உயரிய, எல்லாவற்றிற்கும் மேலான இடத்தில்). பூமி இருப்பது கடைசியில். மூன்றாம் வானம் என்று பவுல் இங்கு குறிப்பிடுவது பூமியில் இருந்தா? அல்லது உன்னதத்தில் இருந்தா என்பது தெரியவில்லை.

சரி போகட்டும், ஏதேன் தோட்டத்திலே மனிதனோடு தானும் இருக்க வேண்டும், மனிதர்கள் மத்தியில் உலாவ வேண்டும் என்பது தான் பிதாவின் ஆதி திட்டம். ஆனால், ஆதாமினால் அந்த திட்டத்தில் மண் விழுந்தது. உடனடியாக, அன்றே மனிதனுடைய பாவத்திற்கு பிராயச்சித்தமாக தேவன் இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தார்.

ஆகவே தான் இயேசு கிறிஸ்துவைக் குறித்து வேதம் கூறுகிறது, "உலகத்தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி..." (வெளி 13:8) என்று. அதன் அடையாளமாகத் தான் கிறிஸ்து மரிக்கும் வரைக்கும், அவர் மரணத்தை குறிக்கும்படியாய், பாவத்திற்காக அவர் இரத்தம் சிந்தப் போவதை குறிக்கும்படியாய் நியாயப்பிரமாண காலத்தில் ஆடு, மாடு, புறா போன்ற உயிரினங்கள் பாவநிவாரண பலியாக பலியிடப்பட்டன.

ஆனால், இன்றோ, மெய்யான பலியாகிய இயேசு கிறிஸ்துவே பலியாகி விட்டதால், நாம் அப்படி பலி செலுத்தவேண்டியதில்லை. அந்த பாவ நிவாரண பிராயச்சித்த பலியாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டால் போதும்.

சரி போகட்டும், இயேசு கிறிஸ்து மரித்து மூன்று நாள் பூமியின் இருதயத்தில் அல்லவா இருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த கள்ளனைப் பார்த்து இன்றைக்கு என்னோடு கூட பரதீசிலிருப்பாய் என்று கூறினாரே!

ஆம் பிரியமானவர்களே, இயேசு கிறிஸ்துவின் மாம்ச சரீரம் தான் பூமியின் இருதயத்தில் இருந்தது. ஆனால், அவர் ஆத்துமாவோ, பரதீசிக்கு சென்றது.

அதே போல நம்முடைய சரீரமும் (எலும்பும்) பூமியில் இருக்கும். நம்முடைய ஆத்துமாவோ பரதீசுக்கு (ஏதேன் தோட்டத்திற்கு) சென்று விடும். ஒருவேளை, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கவில்லை என்றால் கைவிடப்படுவீர்கள்; பாதாளம் காத்திருக்கும்.

அதனைத் தான் நமக்குக் காண்பித்துக் கொடுக்கும்படி இயேசு கிறிஸ்துவோடு இரண்டு கள்ளர்களையும் சிலுவையில் அறையும்படி தேவன் திட்டமிட்டு செய்திருக்கிறார். பாரதீசுக்கு சென்றவன் ஒரு கள்ளன் தான்; நீதிமான் அல்ல. ஆனால், கடவுளோடு பாரதீசு செல்ல அவன் செய்த ஒரே ஒரு காரியம் - இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டது தான்!

இன்று உங்களை பற்றி என்ன? நீங்கள் பாவி என்று உங்களை நீங்களே நியாயம் தீர்த்து ஒதுங்கப் போகிறீர்களா? இல்லை, இன்னொரு கள்ளனைப் போல இயேசு கிறிஸ்துவை புறந்தள்ளப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்.

உங்கள் மரண நாளில் நீங்கள் எங்கே போவீர்கள்? உங்கள் ஆத்துமா எங்கே போகும்? பரதீசுக்கு (ஏதேன் தோட்டத்திற்கு) போவீர்களா?

அப்படியானால், மரணத்திற்குப் பின்பான வாழ்க்கைக் குறித்து கலங்காமல் கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் (லாபம்) என்று மகிழ்ச்சியோடு நீங்களும் கூறலாமே?

ஜெ.சந்திர சிங்
உன்னதரின் அன்பு, தூத்துக்குடி
--------------------------------------------------------------------
செய்திகளை வாட்சப்பில் பெற தொடர்பு கொள்ளுங்கள்: +91 809 809 79 78.

முந்தைய செய்திகளைப் படிக்க: https://www.facebook.com/UnnatharinAnbu2020
யூ-டியூப்: https://www.youtube.com/

Address

Polepettai
Tuticorin
628002

Alerts

Be the first to know and let us send you an email when Unnatharin Anbu உன்னதரின் அன்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Unnatharin Anbu உன்னதரின் அன்பு:

Shortcuts

Share