14/01/2026
உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - 08
-ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா
8. பரீட்சித் பிறந்தான் - பிழைத்தான்
கிரகங்களெல்லாம் அனுகூலமாக இருக்கும் சுபவேளையில், பாண்டுவம்சத்தைத் தாங்கும் சத்புத்திரனை உத்தரை பெற்றாள். பிறந்த குழந்தை அசைவற்றுக் கிடந்தது. உத்தரை அழுது புலம்பியபடி கிருஷ்ணரின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள். அவர் பாதங்களிலேயே குழந்தையைக் கொண்டு வந்து கிடத்தினாள். சுபத்ரை, திரௌபதி முதலானவர்களெல்லாம் கண்ணீரில் மூழ்கினார்கள்.
உத்தரை, “தாங்கள்தான் என் குழந்தையைக் காக்க வேண்டும்” என்று கதறினாள்.
சுபத்ரையும் “அண்ணா, எங்கள் வம்சத்து ஒரே விளக்கும் அணைந்து போவதா? அன்று என் மகன் அபிமன்யுவைத்தான் காக்காமல் போய்விட்டாய். இன்று அவன் மகனையாவது காப்பாற்று” என்று அழுதாள்.
கிருஷ்ணர் தன் காலடியில் கிடந்த குழந்தையைப் பார்த்தார். தம் திருப்பாதத்தால் மெள்ள அக்குழந்தையைத் தடவினார். குழந்தை அசைந்தது; கண் திறந்து பார்த்தது. இப்போதும் எல்லோர் கண்களும் நிறைந்தன. ஆனால் ஆனந்தக் கண்ணீரால். பாண்டு மகாராஜாவே திரும்ப வந்து பிறந்தது போலிருந்தான் குழந்தை. சக்கரவர்த்தி யுதிஷ்டிரரின் பேரனல்லவா, விமரிசையாக எல்லா வைதிகக்கிரியைகளும் நடந்தன. அளவற்ற தானங்கள் செய்யப்பட்டன. ஜாதகர்மா செய்ய வேண்டும். என்ன பெயர் சூட்டலாம் என்று முனிவர்கள் யோசித்தார்கள். கர்ப்பத்தில் இருக்கும்போதே பகவான் விஷ்ணுவால் காப்பாற்றப்பட்டவன் இந்தக் குழந்தை. ஆகையால் இவனுக்கு அதையே பெயராக வைத்துவிடுவோம் என்று அப்பொருள்படும்படியாக விஷ்ணுராதன் என்று பெயர் வைத்தார்கள்.
யுதிஷ்டிரர், “பெரியோர்களே, இந்த குமாரன் மஹாத்மாக்களைப் பின்பற்றுவானா? நல்லவனாக விளங்குவானா?” என்று கேட்டார்.
யுதிஷ்டிரருக்கு தர்மபுத்திரர் என்னும் தன் பெயருக்கேற்றபடி எப்போதும் தர்மத்தை பற்றியேதான் கவலை. இந்தக் குழந்தைதான் நாளை பாண்டு வம்சத்தை விளங்கச் செய்ய வேண்டும். பொதுவாக பிறக்கும் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் வம்சத்துக்கே அழிவு ஏற்படும். துரியோதனன் ஒருவன் பிறக்காமலிருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்குமே. அந்த ஒருத்தனால் எத்தனை அழிவுகள்! ஏன், சிறுவயது முதல், பாண்டுவின் பிள்ளைகளான இவர்கள் ஐவரும், இவர்களைப் பெற்ற தாயும், மணந்த திரௌபதியும் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் அவன் தானே காரணம். எத்தனை பேரின் அழிவுக்கு அவன் காரணமாகிவிட்டான். எனவே யுதிஷ்டிரர் கவலை நியாயமானது. பொதுவாகவே ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையின் குணநலன்கள், வித்தை, அறிவு, அதிர்ஷ்டம், ஆயுள் முதலியவையெல்லாம் நல்லபடியிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அதிலும் அவன் ராஜகுமாரன், வம்சத்தின் ஒரே விளக்கு. அதனால் யுதிஷ்டிரர் கேட்டார்.
முனிவர்கள், “அரசே, இவன் குணநலன்களைப் பற்றிக் கூறவேண்டியதே இல்லை. அந்த ஸ்ரீராமரைப் போல சத்யசந்தனாக இருப்பான்; சிபிமன்னரைப் போன்று பெருங்கொடையாளியாக இருப்பான்; தன் தாத்தாவான அர்ஜுனனைப் போன்று நிகரற்ற வில்லாளியாக இருப்பான்; அனைவரையும் சம நோக்கோடு பார்ப்பதில் பிரம்ம தேவரைப் போன்றும், அருள் செய்வதில் சிவபெருமானைப் போன்றும் இருப்பான்.”
யுதிஷ்டிரருக்கு இதைக் கேட்டதும் பரம சந்தோஷம் ஏற்பட்டது. இனி கவலையில்லை. சில வருடங்களில் இவன் கையில் ராஜ்ஜியத்தை ஒப்படைத்துவிட்டு, நிம்மதியாக கண்ணன் கழலிணைகளில் மட்டுமே நாட்டம் கொண்டிருக்கலாம் என்று நிம்மதியடைந்தார். இப்போதே அப்படித்தான் இருக்கிறார். இவ்வளவு பெரிய போருக்குப் பிறகு ராஜ்ஜியத்தை அடைந்த அவர் அதனால் சிறிதும் சந்தோஷப்படவில்லை. கடமையெனவே அரசாண்டு வருகிறார். முதலிலேயே கிருஷ்ணரைப் பற்றித் தெரிந்தாலும், தன் மாமன்மகன் என்றும், தனக்கு வயதில் சிறியவன் என்றும் நினைத்துக் கொண்டிருந்துவிட்டார். கிருஷ்ணரும் இவரைத் தன்னைவிட மூத்தவர் என்பதற்காக வணங்குவார். ஆனால் என்று மரணப்படுக்கையிலிருந்த பீஷ்மர், இவரைப் பார்த்து, ‘கிருஷ்ணர் பரமாத்மா, அவரைப் போய் சாதாரணமாக எண்ணி தூதனாகவும் தேரோட்டியாகவும் செய்தாயே?’ என்று கேட்டாரோ அன்றே இவர் மனதில் ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச அறியாமையும் நீங்கிவிட்டது. அது முதல் கிருஷ்ண பரமாத்மா என்று வாயால் அவர் நாமத்தை சொல்லிக் கொண்டும், மனதால் தினானித்துக் கொண்டும்தான் இருக்கிறார். ஆனால் அரச கடமைகள் குறிக்கிடுவதால் அதற்கு இடைவெளி ஏற்படுகிறது. இதோ உத்தமனான பேரன் பிறந்துவிட்டான். இனி உலகபாரம் குறையும் என்று சந்தோஷப்பட்டார்.
அடுத்து ஒன்று தோன்றியது. “பெரிய பூபாரம் சுமக்க வேண்டியவன் இவன். இவன் வாழ்க்கை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்.
“இவன் புகழ் நிலைத்து இருக்கும். தர்மத்தைக் காப்பதற்காக கலிபுருஷனை அடக்குவான்,” என்று முனிவர்கள் கூறியதைக் கேட்டவுடன் தர்மபுத்திரருக்கு அளவில்லாத ஆனந்தம். அடுத்து, “ஆயுள் எப்படி?” என்று கேட்டார்.
முனிவர்கள் தயங்கினார்கள். இதற்கான பதிலைச் சரளமாக சொல்ல முடியவில்லை. ஆனாலும் யுதிஷ்டிரர் திரும்பவும் கேட்கவே சொன்னார்கள். “இவன் மரணம் கங்கைக்கரையில் ஏற்படும். ஒரு முனிகுமாரனின் சாபத்துக்காளாகி மரணம் ஏற்படும். மரணத்தறுவாயில் சுகமுனிவர் வந்து ஸ்ரீமத்பாகவதத்தை இவனுக்குக் கூறுவார். அதைக்கேட்ட பிறகு தட்சகனால் தீண்டப் பட்டு இறப்பான். ஆனால் இவன் இறக்கும்போது மகனுக்கு பட்டம் சூட்டிவிட்டு ஒரே மனமாகத் தியானித்து விஷ்ணுவின் பாத கமலங்களை அடைவான்” என்றார்கள்.
இதைக் கேட்ட யுதிஷ்டிரருக்கு வருத்தம் ஏற்படவில்லை. பிறந்தவர்களுக்கு இறப்பு நிச்சயம். இந்தக் குழந்தை நல்லவனாகவும் வல்லவனாகவும் வாழப் போகிறான். வாழ்நாளில் தாங்கள் பட்ட கஷ்டங்களைப் போன்று எதுவும் படப் போவதில்லை. ஆயுள் முடிவு, சாபத்தால் என்னும்போது வருத்தமாக இருந்தாலும்கூட விஷ்ணுபதங்களை அடைவான் என்பதைக் கேட்டவுடன் அவருக்கு வருத்தம் நீங்கி விட்டது. ஜீவன் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்து விடுவான் என்பதில் அவருக்குத் திருப்தியே ஏற்பட்டது.
மேலும் அக்குழந்தை கர்ப்பத்திலிருக்கும் போது பத்தாவது மாதம் சதுர்புஜனான பகவானுடைய தரிசனம் கிட்டியது. பிறந்த பிறகு, தான் கண்ட திவ்ய புருஷன் இவரா, இவரா என்று ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்து பரீட்சித்தது. இக்குழந்தை ஒவ்வொருவரையும் பரீட்சிப்பதுபோல் பார்க்கிறதே என்று எல்லோரும் பரீட்சித் என்றே அழைக்கலானார்கள். மேலும் க்ஷீணமடைந்து போன பாண்டவ குலத்தைக் காக்கப் பிறந்தவனாதலால் பரீட்சித் என்ற பெயர் பிரசித்தியாயிற்று.
-தொடரும்