31/08/2026
#மஹா_சங்கடஹர_சதுர்த்தி:🌺
விநாயக சதுர்த்திக்கு முன் வரும் தேய்பிறை சதுர்த்தியை மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும்.
மஹா சங்கட ஹர சதுர்த்தி - கேதுவால் ஏற்படும் தோஷங்கள் போக்கி கீர்த்தியுடன் வாழவைக்கும்!
ஸ்ரீ விநாயகப் பெருமானை தேய்பிறை சதுர்த்தியில் வழிபாடு செய்வது மிகப் பெரும் நற்பலன்களைத் தரக்கூடியது. ஆவணி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தியில் இருந்து 12 மாதங்கள் அனுஷ்டித்து விநாயக சதுர்த்திக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தியான மகா சங்கடஹர சதுர்த்தி அன்று முடிப்பது சிறந்த நற்பலன்களை தரும்.
விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் நடனமாடும் போது அங்கே வந்த சந்திரன், விநாயகரின் பெருத்த தொந்தியையும், துதிக்கையையும், அவற்றைத் தூக்கிக் கொண்டு அவர் ஆடுவதையும் பார்த்து விட்டுப் பெரிதாய்ச் சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் கலைகள் தேய்ந்து போனவை, தேய்ந்தவையாகவே இருக்கும் எனக் கூறவே, மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான்.
அப்போது விநாயகர் சந்திரனிடம், "இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்" எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.
நான்காம் பிறையை பார்க்கக் கூடாது ஏன்?
பொதுவாக, `நாலாம் பிறை fயைப் பார்க்கக் கூடாது f என்பார்கள் பெரியவர்கள். நான்காம் நாள் பிறையைப் பார்ப்பவர்களுக்கு `மித்ர தோஷம்' ஏற்படும் என்று வரலாறு கூறுகிறது. ஒருமுறை, பகவான் கிருஷ்ணரே நாலாம் பிறையைப் பார்த்துவிடுகிறார். அதன் விளைவாக அவருக்கும் மித்ர தோஷம் ஏற்படுகிறது.
சத்ராஜித் என்னும் மன்னன் சூரியனை வழிபட்டு, அதன் பலனாக சூரிய பகவானிடமிருந்து சியமந்தக மணியைப் பெற்றான். அவன் அந்த ரத்தினத்தை அணிந்திருந்தபோது, சூரிய பகவானைப்போல் பிரகாசத்துடன் காணப்பட்டான். அந்த நேரத்தில், அங்கு வந்த கிருஷ்ண பகவான், அந்த மணியைக் கையில் எடுத்துப் பார்க்க ஆவல்கொண்டார். ஆனால், சத்ராஜித் அதற்கு மறுத்துவிட்டான்.
பிறகு ஒருமுறை, சத்ராஜித்தின் சகோதரன் ப்ரசேனன், அந்த ரத்தினத்தை (சியமந்தக மணி) அணிந்துகொண்டு வேட்டைக்குச் சென்றான். அப்போது சிங்கம் ஒன்று அவனைத் தாக்கிக் கொன்று, அந்த ரத்தினத்தையும் எடுத்துச் சென்றுவிட்டது. இதனால், சத்ராஜித் மன்னனும், மற்ற பொதுமக்களும் பகவான் கிருஷ்ணர் மீதே சந்தேகம் கொண்டனர். இதனால், கிருஷ்ணர் அவமானத்துக்குள்ளாக நேர்ந்தது.
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீநாரதர் கிருஷ்ணரிடம் வந்தார். `நாலாம் பிறையைப் பார்த்ததால் வந்த விளைவே இது என்றார்.
`சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை தரிசித்தால், இந்தப் பழியில் இருந்து நீங்கலாம்' என்று ஆலோசனையும் கூறினார். அதன்படியே, கிருஷ்ணரும் விநாயகரை வழிபட்டு, தனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க, அந்த ரத்தினத்தைத் தேடி தானே புறப்பட்டார். இறுதியில் கரடிக் கூட்டத்தின் தலைவனான ஜாம்பவானிடம் அந்த ரத்தினம் இருப்பதை அறிந்து, அவனுடைய குகையை நோக்கிச் சென்றார்.
இந்த ஜாம்பவான் வேறு யாருமல்ல; ராமாவதாரத்தின்போது சீதா பிராட்டியைக் கண்டடைய ஸ்ரீராமருக்கு உதவி செய்தவரேதான்! ஆஞ்சநேய சுவாமிக்கு அவரது பலம் குறித்து நினைவூட்டியவரும் இவரே. இவருக்கு ஸ்ரீராமபிரானைக் கட்டித் தழுவ வேண்டுமென்ற ஆசை நெடுநாளாக இருந்தது. ஆனால், தன் உடம்பில் இருக்கும் ரோமங்கள் அவரை புண்ணாக்கிவிடக்கூடும் என்று அஞ்சி, தமது ஆசையை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டிருந்தார்.
ராமர் மீது இந்த அளவுக்கு பக்திகொண்டிருந்த ஜாம்பவான், ஸ்ரீகிருஷ்ணர்தான் ராமராகவும் அவதரித்தவர் என்பதை அறியாமல், அவருடன் போர்புரிய ஆயத்தமானார். துவந்த யுத்தமும் தொடங்கியது. இருவரும் கட்டிப் புரண்டு சண்டையிடும்போதுதான், தன்னுடன் சண்டை இடுபவர் ஸ்ரீராமர் என்று அறிந்தார் ஜாம்பவான்.
பின்னர், நடந்த தவற்றுக்கு மன்னிப்புக் கோரி, தனது மகளான ஜாம்பவதியை கிருஷ்ணருக்கு மணமுடித்துவைத்தார். சமந்தகமணி என்கிற ரத்தினத்தையும் அவரிடமே ஒப்படைத்தார். அந்த சமந்தக மணியை சத்ராஜித்திடம் சேர்ப்பித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் மீது வீண் பழி சுமத்தியதற்காக வருந்திய சத்ராஜித், அவரிடம் மன்னிப்புக் கோரி, தன் மகளான சத்யபாமாவையும் அவருக்கே மணமுடித்துத் தந்தான். இந்தப் புராணக் கதையைப் படிப்பவர்கள் அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட வீண்பழியிலிருந்து நீங்கப் பெறுவர் என்பது ஐதீகம்.
நாமும், சிராவண மாதத்தில் வரும் இந்தச் சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை வழிபட்டால், அந்த வருடம் முழுக்க வரும் சங்கட ஹர சதுர்த்திகள் அத்தனைக்கும் சேர்த்து வழிபட்ட பலனை அடையலாம். நாளை மஹா சங்கடஹர சதுர்த்தி. விரதம் இருப்பது எப்படி என்பதை அறிவோமா?
விரதம் இருக்கும் முறை:
காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து, விநாயகர் சந்நிதிக்குச் சென்று, அவரை வழிபட்டு, விரதத்தைத் தொடங்க வேண்டும். அன்று முழுக்க உபவாசம் இருக்க வேண்டும். மாலையில், விநாயகர் கோயிலுக்குச் சென்று, சங்கட ஹர சதுர்த்தி பூஜையில் பங்கேற்க வேண்டும். வீடு திரும்பி, சந்திரன் உதயமானதும், அதைப் பார்த்து வணங்க வேண்டும். பிறகு, நம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் விநாயகரை வணங்கி விரதத்தை முடித்துக்கொள்ளலாம். அன்றைய தினம் முழுக்க விநாயகரைத் துதிப்பது நற்பலன்களைத் தரும்.