19/10/2025
ஸ்ரீ தாமோதராஷ்டகம்
(பத்மபுராணத்திலிருந்து)
- ஸ்ரீ சத்யவ்ரத முனிவர்
(1)
நமாமீஷ்வரம் சச் - சித் - ஆனந்த - ரூபம்
லசத் - குண்டலம் கோகுலே ப்ராஜமானம்
யசோதா - பியோலூகலாத் தாவமானம்
பராம்ரிஷ்டம் அத்யந்ததோ த்ருத்ய கோப்யா
சச்சிதானந்த ரூபம் மற்றும் ஊஞ்சலாடும் மகர குண்டலங்கள் காதில் கொண்ட, கோகுலத்தின் ஒளியான பரமபுருஷர் தாமோதரருக்கு வணக்கங்கள். அன்னை யசோதை கடைந்து கொண்டிருந்த தயிர்ச்சட்டியை உடைத்து, அதில் இருந்த வெண்ணெய்யைத் திருடிக் கொண்டு, பயந்து மர உரலில் இருந்து அவர் குதித்து ஓட, அவரை விட வேகமாக ஓடி அவரைப் பின்புறமாக பிடித்த அன்னை யசோதையிடம் பிடிபட்ட பரம்பொருள் தாமோதரருக்கு என் வணக்கங்கள்.
(2)
ருதன்தம் முஹுர் நேத்ர - யுக்மம் ம்ருஜன்தம்
கராம்போஜ - யுக்மேன சாதங்க - நேத்ரம்
முஹு: ஷ்வாஸ-கம்ப-த்ரிரேகாங்க-கண்ட
ஸ்தித-க்ரைவம் தாமோதரம் பக்தி-பத்தம்
அன்னையின் கரங்களில் அடிக்கும் தடியைக் கண்ட தாமோதரர் தன் தாமரைக் கரங்களால் கண்களை மீண்டும், மீண்டும் கசக்கிக் கொண்டு அழுகிறார். அவருடைய கண்களில் அச்சம் நிறைந்திருந்தது. சங்கின் வரிகள் போன்று மூன்று புரிகளை உடைய அவருடைய கழுத்தில் இருந்த முத்தாரம், அவர் அழுது கொண்டு மூச்சு விட்டதால் அசைந்து கொண்டிருந்தது. கயிற்றால் அல்ல, அவருடைய அன்னையின் தூய அன்பினால் கட்டப்பட்ட, அந்தத் தாமோதரருக்கு என் வணக்கங்கள்.
(3)
இதீத்ரிக் ஸ்வ - லீலாபிர் ஆனந்த - குண்டே
ஸ்வ - கோஷம் நிமஜ்ஜந்தம் ஆக்யாபயன்தம்
ததீயேஷித-க்ஞேஷு பக்தைர் ஜிதத்வம்
புன: பிரேமதஸ் தம் சதாவ்ருத்தி வந்தே
இது போன்ற பால லீலைகளினால் கோகுல வாசிகளை ஆனந்தக் கடலில் அமிழ்த்தினார். தன்னுடைய ஐஸ்வர்யங்களை உணர்ந்து, அதில் ஆழ்ந்த பக்தர்களுக்கு, மாறாத தூய பக்தியால் மட்டுமே தன்னை வெல்ல முடியும் என்று காட்டிய அந்தத் தாமோதரருக்கு, அன்புடனும், பக்தியுடனும் மீண்டும், மீண்டும் நூற்றுக்கணக்கான வந்தனங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
(4)
வரம் தேவ மோக்ஷம் ந மோக்ஷாவதிம் வா
ந சான்யம் வ்ருனே ’ஹம் வரேஷாத் அபீஹ
இதம் தே வபுர் நாத கோபால - பாலம்
சதா மே மனசி ஆவிராஸ்தாம் கிம் அன்யை:
தேவனே, நீங்கள் மோட்சம் மற்றும் வைகுண்டம் முதற் கொண்டு எல்லாவித வரங்களையும் அளிக்க வல்லவர் ஆயினும், எவ்வித வரத்தையும் உம்மிடம் நான் வேண்டவில்லை. நாதா!, விருந்தாவனத்தில் உள்ள உமது இந்த பால கோபால வடிவம், சதா என்னுடைய மனதில் நிலைக்கட்டும். மற்றவற்றால் என்ன பயன்?
(5)
இதம் தே முகாம்போஜம் அத்யந்த - நீலைர்
வ்ருதம் குந்தலை: ஸ்நிக்த - ரக்தைஷ் ச கோப்யா
முஹுஷ் சும்பிதம் பிம்ப - ரக்தாதரம் மே
மனசி ஆவிராஸ்தாம் அலம் லக்ஷ - லாபை:
பகவானே! கருநீலக் கூந்தலால் சூழப்பட்ட உம்முடைய தாமரை முகம், அன்னை யசோதையால் மறுபடியும், மறுபடியும் முத்தமிடப்பட்டு சிவந்து காணப்படுகிறது. பிம்பப் பழம் போல் உமது உதடுகள் சிவந்து காணப்படுகிறது. இத்தகைய திருமுகம் என்றென்றும் என் மனதில் நிலைக்கட்டும். ஆயிரக் கணக்கான வேறு வரங்களால் என்ன பயன்?
(6)
நமோ தேவ தாமோதரானந்த விஷ்ணோ
ப்ரசீத ப்ரபோ துக்க - ஜாலாப்தி - மக்னம்
க்ருபா - த்ரிஷ்டி - வ்ருஷ்ட்யாதி - தீனம் பதானு-
க்ருஹானேஷ மாம் அக்ஞம் எதி அக்ஷி - த்ரிஷ்ய:
ஓ நமோ தேவா! தாமோதரா, அனந்தா, விஷ்ணோ, பிரபு
என் மீது திருப்தி கொள்ளுங்கள். துக்க ஜால கடலில் மூழ்கி மிக வீழ்ந்து கிடக்கும் என்னை, கிருபா த்ருஷ்டி மழை பொழிந்து, அனுகிரஹித்து, ஈஸனே! அஞ்ஞானம் நிரம்பிய என்னுடைய கண்ணுக்கு காட்சி அளியுங்கள்.
(7)
குவேராத்மஜௌ பத்த - மூர்த்யைவ யத்வத்
த்வயா மோசிதௌ பக்தி - பாஜௌ க்ருதௌ ச
ததா ப்ரேம - பக்திம் ஸ்வகாம் மே ப்ரயச்ச
ந மோக்ஷே க்ரஹோ மேஸ்தி தாமோதரேஹ
ஓ தாமோதரா! மர உரலில் கட்டுண்ட குழந்தை வடிவத்தில், குபேரனின் பிள்ளைகளை நாரதரின் சாபத்திலிருந்து விடுவித்து, உமது பக்தர்கள் ஆக்கினீர்கள். அத்தகைய பிரேம பக்தியை எனக்கு அளித்தருளும்! வேறு எந்தவித மோட்சத்திற்கும் நான் ஆசைப்பட வில்லை.
(8)
நமஸ் தே ’ஸ்து தாம்னே ஸ்புரத் - தீப்தி - தாம்னே
த்வதீயோதராயாத விஷ்வஸ்ய தாம்னே
நமோ ராதிகாயை த்வதீய -ப்ரியாயை
நமோ அனந்த - லீலாய தேவாய துப்யம்
ஓ பிரபு! தாமோதரா! நான் முதலில் உமது உதரத்தை கட்டிய
ஒளிநிறைந்த பிரகாசமான கயிற்றை வணங்குகின்றேன். பின் உமது உதரத்தை வணங்குகின்றேன். உமது உதரமோ அண்ட
சராசரம் அனைத்தையும் அடக்கியுள்ளது. அடுத்ததாக உமக்கு மிக பிரியமான உமது அருமை ஸ்ரீமதி ராதா ராணியை வணங்குகின்றேன். இறுதியாக எண்ணற்ற லீலைகளைப் புரியும் பரமபுருஷரும், பரம் பொருளுமாகிய உம்மை வணங்குகின்றேன்.
இந்த தாமோதர அஷ்டக பாடல், சத்யவிரத முனிவரால் பாடப்பெற்றதும், நாரத முனிவர் மற்றும் செளனக ரிஷியின் உரையாடலில் பேசப்பட்டதும் ஆகும். இது கிருஷ்ண த்வைபாயன வியாசரின் பத்ம புராணத்தில் உள்ளது.
கார்த்திகை தாமோதர மாதத்தில் தாமோதரரை வழிபட்டு, ‘தாமோதர அஷ்டகம்’ என்று அறியப்படும் இந்த பாடலை தினமும் பாட வேண்டும்.
சத்யவிரத முனிவரால் பேசப்பட்ட இது பகவான் தாமோதரரை கவர்கின்றது"
(ஹரி பக்தி விலாசம் 2.16.198).