உலகில் மூன்றில் ஒரு பங்காய் கடல் சூழ்ந்து இருந்தாலும் தண்ணீருக்கு மகிமை தருவது, அது அருவியாக உருவாகி ஆறாக பெருகி ஆழ்கடலில் கலப்பதால் தான். உயிர்களுக்கெல்லாம் உணவளிக்கவே ஓடையாய், நதியாய் ஓடி கடலில் கலக்கிறது தண்ணீர். இறைவன் ஒருவனே என்றாலும் பல்வேறு உருவம் கொண்டிருப்பதும் உயிர்களின் நன்மைக்காகவே.
அதுபோலவே அன்னை ஒருத்தியே என்றாலும் அவளது உருவத்தை நாம் பல கோணங்களில் காண்பதே இயற்கை. அப்படிப்பட்ட அன்ன
ையின் திருவுருவில் ஒன்றுதான் அருள்மிகு குழுமாயி அம்மன். திருச்சியை அடுத்துள்ள புத்தூர் சோழனூர் பகுதிக்கு மையமான இடத்தில் அருள்மிகு குழுமாயி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.
இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இறையருள் வழங்கும் இத்திருக்கோவில் அமைதி சூழலில் அருளைப் பொழியும் புண்ணிய தலமாகும். ஒருபுறம் சலசலத்து ஓடும் உய்யகொண்டான் வாய்கால், மறு புறமும் பச்சைக் கம்பளத்தை விரித்தாற்போன்ற தென்னை, வாழை செழுமையுடன், வயல்வெளியில் பசுமையும் வளம் சேர்க்கும் இடம் தான் குழுமாயி அம்மன் கொலுவிருக்கும் திருத்தலம்.
உய்யகொண்டானில் கோரையாறு சங்கமிப்பதும் உய்யகொண்டானில் இருந்து குடமுருட்டி உருவாகிச் செல்வதும் இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் தான்.
தல வரலாறு:......
பாறைகளின் மேலே தான் கோவில் அமைந்து உள்ளது. இதன் தொன்மையை விளக்க இங்கிருக்கும் கல்வெட்டு கட்டியம் கூறுகிறது. இப்பகுதியில் வாழ்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்தமைக்கான பட்டயம் இந்த கல்வெட்டில் உள்ளது. கோவிலின் திருவிழா காலங்கள் பற்றியும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு அமைந்த, இந்தக் கோவிலின் வரலாற்று செய்திகள் வாய் வழக்கில் வழங்கப்படுகின்றது.
அந்த வரலாறு என்ன?
அது, மங்கம்மாள் ஆண்ட காலம். புத்தூர் சோழனூர் கிராம மக்கள் தங்கள் நிலத்தை வெட்டி உள்ளனர். திடீரென ரத்தம் பீறிட்டது. அப்போது காளி பிரசன்னமாகி, 'நான் இங்கு குடிகொண்டு இருக்கிறேன்' என்று கூறினாளாம். 'காவல் தெய்வமாக இருந்து எங்களை காப்பாற்றம்மா', என்று வேண்டி அந்த இடத்தில் அம்மனுக்கு கோவில் கட்டினர் கிராம மக்கள். குழி வெட்டும்போது இந்த அம்மன் பிரசன்னமாகி அருள்பாலித்ததால் குழுமாயி அம்மன் என்று வழங்கலாயிற்று.
திருவிழா..........
பின்னர், மலையாள மந்திரவாதி ஒருவன் ஏவல் பில்லி சூனியம் செய்து அம்மனின் சக்தியை அடக்குவது போல் மந்திர வேலைகளைச் செய்தானாம். அப்போது இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி, அருள்வாக்கு அளித்தாராம். 'எனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்துங்கள் அந்த மந்திரவாதியை நான் அழிக்கிறேன்' என்றாராம்.
அதன் படி கருப்புசாமிக்கு ஆடு பலியிட்டு வழிபட்டனர். மந்திர வாதி அழிக்கப்பட்டான். அது முதல், ஆண்டுதோறும் இங்கு திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழ் வருடம் மாசி மாதம் முதல் வாரம் புதன்கிழமை அன்று காப்பு கட்டும் வைபவம் நடக்கும்.
செவ்வாய்க்கிழமை இரவு காளி வட்டம் நடக்கும். புதன் கிழமை சுத்த பூஜையும், வியாழக்கிழமை குட்டி குடித்தல் வைபவமும், வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதலும், சனிக்கிழமை அன்று சாமி குடியேறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றுடன் திருவிழா முடிவடைகிறது.
குட்டி குடித்தல்...........
ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிக்கும் நிகழ்ச்சியான 'குட்டி குடித்தல்' வைபவம் தான் குழுமாயி அம்மன் திருவிழாவில் முக்கிய வைபவம் ஆகும். வேண்டுதலின்படி, நூற்றுக்கணக்கான பக்தர்கள், ஆடு பலியிட்டு வழிபாடு செய்வர். குட்டி குடித்தல் விழா அன்று முதலில் அம்மனுக்கு பூஜை நடைபெறும். பின்னர் ஆடு வெட்டப்படும்.
ஆட்டின் ரத்தத்தை மருளாளி குடிப்பார். அம்மனின் தோளின் இருபுறமும் கிளிகள் இருக்கும். அந்தக் கிளிகள் தான் ரத்தத்தை குடிக்கின்றன என்பது ஐதீகம். புல்லரிக்கச் செய்யும் இந்த குட்டி குடித்தல் வைபவம் பற்றிய செய்தி மிகவும் வியப்புக்குரியதாகும். ஆடு ரத்தத்தை குடிக்கும் மருளாளியைத் தேர்ந்தெடுப்பது தான் அது.
ஒரே பரம்பரையினர்கள் தான் மருளாளியாக இருக்க வேண்டும் என்ற மரபு கிடையாது. யார் வேண்டு மானாலும் மருளாளி ஆகலாம். திருவிழா காலத்தில்தான் மருளாளி தேர்ந்தெடுக்கப்படுவார். ஆடு வெட்டுவதற்கான அரிவாள், ரத்தத்தைப் பிடிக்கும் வெள்ளிக் கிண்ணம் ஆகியவற்றை யாருக்கும் தெரியாத இடத்தில் மறைத்து வைப்பர்.
அருள் இருந்தாலே இந்த அரிவாள், கிண்ணத்தை கண்டறிந்து எடுத்துவர இயலும். அப்படி இவற்றை எடுத்து வந்த பின்பு அடுத்தகட்ட பரீட்சை நடக்கும். பெரிய அரிவாள் ஒன்றை மிகக் கூராக சாணை தீட்டுவர். விரல் பட்டாலே இரண்டாகிப் போகும் அளவுக்கு மிகக்கூராய் இருக்கும்.
3 1/2 அடி நீளம் உள்ள அந்த அரிவாளின் கூரிய முனை மேல் நோக்கி இருக்கும்படி வைத்து அதன் இருபுறமும் பிடித்துக் கொள்வர். மருளாளியாக ஆக விரும்புபவர் இந்த அரிவாள் மேல் ஏறி அருள் ஆட வேண்டும். அது மட்டும் அல்ல மருளாளியின் ஆக்ரோஷ ஆட்டத்தில் அரிவாளின் கூரிய முனையே வளைந்துவிட வேண்டும். அப்படி ஆடினால் தான் அவர் மருளாளியாக தேர்வு செய்யப்படுவார்.
ஊர்த்திருவிழா............
ஊர்மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இத்திருவிழாவை நடத்துவது இதன் தனிச்சிறப்பாகும். அனைத்து சாதியினரும் இதில் பங்கேற்கின்றனர். ஒவ் வொருவருக்கும் திருவிழாவில் செய்ய வேண்டுவன என்று கடமைகள் உள்ளன. அதனை ஒவ்வொருவரும் பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றனர்.
உற்சவ அம்மன்:............
குழுமாயி அம்மனுக்கு உற்சவ அம்மன் சிலை கிடையாது. பனை ஓலைகளால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் திருவிழாவின்போது, உற்சவ அம்மன் செய்யப்படும் பனை ஓலைகளை அம்மன் உருவில் கத்தரித்து அதை கறுப்பு துணியால் வைத்து அம்மன் உருவை அமைப்பர்.
சப்பரத்தில் வைத்துதான் அம்மன் திருவீதி உலா நடக்கும். சப்பரத்தில் உள்ள அம்மன் உருவுக்கு பின்பக்கத்தில் மற்றொரு அம்மன் உருவமும் இருக்கும். அது கடந்த வருடம் செய்யப்பட்டது ஆகும். அம்மன் இருபுறமும் நோக்குகிறாள் என்பதற்காக இவ்வாறு இரண்டு உருவங்கள் அமைக்கப்படுகின்றன.
திருவிழா முழுவதும் புத்தூர் அக்ரஹாரம் அருகே தான் நடக்கும். கோவிலில் இருந்து அம்மனை மந்தைக்கு கொண்டு வருவர். திருவிழா காலங்களில் அம்மன் இங்குபாகும். பரபரப்பான சூழலில் திருச்சி நகரில் உள்ள புத்தூர் பகுதி திருவிழாக் காலங்களில் கிராமியச் சூழ்நிலையைக் கொண்டு வந்து நிறுத்தும். சாலையோரக் கடைகள் பல உருவாகும்.
திருவிழாவின் முக்கிய கொண்டாட்டங்களில் தெருக்கூத்து, கரகம், சிலம்பு சண்டை என்று கிராமத் திருவிழா போல் காட்சி தரும். திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருள்மிகு குழுமாயி அம்மன் ஆலயம்.
இங்கு செல்ல நகரப் பேருந்து வசதிகளும், ஆட்டோ, கால் டாக்ஸி வசதிகளும் நிறைய உள்ளன. மாறிவரும் உலகிலும் மாறாத இறைப்பற்று என்பதற்கு கட்டியம் கூறுவதாய் இருப்பது இத்திருவிழாவும் ஒன்று. காவல் தெய்வமாய் நின்று, நம் கவலை தீர்த்து, கருணை மழையால் காப்பாற்றும் அன்னையவள் காலடி பற்றுவோம்! களிப்பேருவுகை எய்துவோம்!!
பக்தியின் பலன்:.........
அசுர வேகத்தில் கம்ப்யூட்டர் வளர்ச்சியுடன் வளர்ந்து வரும் இந்த உலகில் இறைபற்று மட்டும் இன்னும் மாறாமல் வளர்ந்து வருகிறது என்பதற்கு இந்த குழுமாயி அம்மனின் திருவிழாவே சாட்சி. காவல் தெய்வமாய், கருணைக் கடலாய் நின்று தன் பக்தர்களை இந்த குழுமாயி அம்மன் காப்பாற்றுகிறாள் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!