27/12/2025
கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழா — 50 ஆண்டுகளின் பயணம்
1975ஆம் ஆண்டு, சில இளைஞர்களின் ஆன்மீக உற்சாகத்திலிருந்து பிறந்த ஒரு சிறிய முயற்சி… இன்று நம் ஊரின் பெருமையாகவும், 50 ஆண்டுகளாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழாவாகவும் வளர்ந்துள்ளது.
அப்போது அவர்கள் செய்தது எளிதாகத் தோன்றினாலும், அது சாதாரணமான ஒன்றல்ல. அன்றைய காலத்தில் வசதிகள் குறைவான நிலையில், சில இளைஞர்கள் கூடிவந்து, கொடை வள்ளல்களிடமிருந்து பெற்ற ₹100 மட்டுமே வைத்துக் கொண்டு, 10 நாட்களுக்கு மேலாக உழைத்தார்கள். முதல் குடில் தயாரிப்பிலிருந்து காலை 50 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஆரம்பித்து நடைபெற்ற பகல் நேர களப்போட்டிகளாகட்டும், இரவு ஒன்றரை மணி வரை நடைப்பெற்ற பாட்டு, நடனம், மாறுவேடம், சைகை நடிப்பு, பேச்சுப் போட்டிகளாட்டும் அவை அனைத்தும் நம் உற்சாகத்தின் அடையாளங்கள்.
தோரணங்களுக்குக் கூட அவர்கள் கலர் காகிதத்தை முக்கோண வடிவில் வெட்டி கயிற்றில் ஒட்டி தொங்கவைத்தார்கள். குடிலில் பயன்படுத்திய மலைக்காகிதங்கள் கூட பழைய தினசரி நாளிதழ்களைப் பயன்படுத்தி, கையால் நிறங்கள் பூசி தயாரிக்கப்பட்டன. ஒரு ரூபாய்க்கு மேலான செலவு கூட அன்றைய காலத்தில் ஒரு சுமையாக இருந்தது.
அந்த நேரத்தில் நவலூர், தாயானூர், அருங்கால்பட்டி, அரியாவூர், கல்லுக்குடி போன்ற சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த விழா, 50 ஆண்டுகள் ஒரே வடிவில் இல்லை — ஒவ்வொரு ஆண்டும் புதிய முகம், புதுமையான யோசனைகள், சண்டைகள், விவாதங்கள், இணக்கங்கள் ஆகியவற்றைத் தாங்கி வளர்ந்தது. அந்த பல்வேறு மாற்றங்கள் தான் இன்று இதை ஒரு நம் அனைவரின் சொந்தமான திருவிழாவாக உருவாக்கியது.
பல இளைஞர்களின் ஒத்துழைப்பும், மன்றத் தலைவர்களின் வழிநடத்தலும், மணியக்காரர்கள் மற்றும் ஊர் தலைவர்களின் வழிகாட்டுதலும் இந்த விழாவை மட்டுமல்ல, நம்முடைய சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தின.
இந்த விழா வெறும் போட்டி அல்ல — இது நம் ஊரின் கலாச்சார அடையாளம், நம் குழந்தைகளுக்கான திறமையின் மேடை, நம் ஒவ்வொருவரையும் களத்தில் இறங்க வைத்த பயணம் மற்றும் நம் மனங்களில் இல்லாத புதுமைக்கு வழி திறந்த ஒரு நிகழ்வு.
50 ஆண்டுகளாக ஒலிக்கும் ஒரு ஒற்றுமையின் ஒலி — இதுவே நம் ‘கிறிஸ்துமஸ் விளையாட்டு மற்றும் பண்பாட்டு விழா!’