28/03/2015
ஒவ்வோர் ஆண்டும் குருத்தோலை ஞாயிறன்று, தாய்த் திருஅவை, உலக இளையோர் நாளைக் கொண்டாடுகிறது. 1985ம் ஆண்டு, புனிதத் திருத்தந்தை, 2ம் ஜான்பால் அவர்களால் உருவாக்கப்பட்டு, கடந்த 30 ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த இளையோர் நாளின் மையமாக அமையும் ஓர் அடையாளம்... சிலுவை.
துன்பங்களைவிட்டு விலகி, இன்பத்தை மட்டுமே தேடிச் செல்பவர், இளையோர், என்ற தவறான கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் வண்ணம், உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மைய அடையாளமாக விளங்குவது, அவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சுமந்துச் செல்லும் சிலுவை. கடந்த 30 ஆண்டுகளாக, உலக இளையோர் நாள் நிகழ்வுகளில், இளையோர் சுமந்து வந்துள்ள சிலுவை, 2016ம் ஆண்டு, போலந்து நாட்டின் கிரகோவ் (Krakow) நகரில் நடைபெறும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையமாக மீண்டும் அமையும்.
2013ம் ஆண்டு, பிரேசில் நாட்டின் ரியோ தெ ஜனெய்ரோ நகரில் நடைபெற்ற 'உலக இளையோர் நாள்' நிகழ்வுகளை, முன்னின்று நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014, 2015, 2016 ஆகிய மூன்று ஆண்டுகள் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளின் மையக் கருத்துக்களாக, மலைப்பொழிவில் இயேசு கூறிய 'பேறுபெற்றோர்' வார்த்தைகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, சென்ற ஆண்டு உலக இளையோர் நாளின் மையக்கருத்து: ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. (மத்தேயு 5:3)
இவ்வாண்டின் மையக்கருத்து: தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். (மத்தேயு 5:8)
அடுத்த ஆண்டு, போலந்து நாட்டில் சிறப்பிக்கப்படும் உலக இளையோர் நாளின் மையக் கருத்து: இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். (மத்தேயு 5:7)
'பேறுபெற்றோர்' என்று இவ்வுலகம் காட்டும் மாய வழிகளில் சென்று தங்கள் வாழ்வைத் தொலைத்துவிடும் இளையோரின் வேதனைகளை நாம் அறிவோம். "உலக இளையோர் நாளை" சிறப்பிக்கும் இளையோர், ஏழையரின் உள்ளம், தூய உள்ளம், கருணை உள்ளம் என்று இயேசு சொல்லித்தரும் பேறுபெற்ற உள்ளம் கொண்டவர்களாய் வாழும் வரத்தை, இறைவன் அவர்களுக்கு வழங்க மன்றாடுவோம்.