27/07/2016
சிலுவை அடையாளத்தை நெற்றியிலும் வாயிலும் மார்பிலும் வரைந்து,திருச்சிலுவை அடையாள செபம் சொல்கிறோம்.
"அர்ச்சிஷ்ட சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. -ஆமென்."
எதற்காக நாம் சிலுவை அடையாளத்தை வரைகிறோம் என்பது தெரியுமா?
1)நெற்றியில் சிலுவை வரைவது
இறைவார்த்தையைக் குறித்து மனிதருக்கு முன்பாக வெட்கப்படுகிறதில்லையென்று காட்டும்படிக்கும்,
ஆங்காரம்,கோபம்,மோகம் முதலியவைகளைப் பற்றிய கெட்ட நினைவுகள் நம் புத்தியில் உண்டாகாமல், சர்வேசுரனைப் பற்றிய நல்ல எண்ணங்கள் நமது புத்தியில் ஏற்படும்படிக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.
2)வாயில் சிலுவை வரைவது
இறைவார்த்தைக்கு தைரியத்தோடு சாட்சியம் சொல்லுவேன் என்று காட்டவும்,
வாயால் பொய்,புரட்டு,தீய பேச்சு முதலிய பாவங்களைக் கட்டிக் கொள்ளாமல், ஜெபத்தாலும், தூய்மையான வார்த்தைகளாலும் சர்வேசுரனைத் தோத்தரிக்கும் படிக்கான ஆசீர்வாதம் நமக்கு உண்டாகும்படிக்கும் வாயில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.
3)மார்பில் சிலுவை வரைவது
மன உறுதியோடு இறைவார்த்தைகளை அனுசரிப்போம் என்று காட்டவும்,
நமது இருதயத்தில் கெட்ட ஆசை,பகை,வைராக்கியம் முதலிய பாவங்கள் உண்டாகாமல்,சர்வேசுரனுடைய சிநேகம் நமக்குள் அதிகரிக்கும்படியாகவும்,மார்பில் சிலுவை வரைந்து கொள்கிறோம்.