27/12/2020
https://bit.ly/3mcXiq1
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா 27 12 2020
=============
முதல் வாசகம்
==============
உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3
ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."
அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்” என்றார். அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.
ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பெயரிட்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
===========
பதிலுரைப் பாடல்
===========
திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9 . (பல்லவி: 8a)
பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.
1 ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள். 2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! 4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். 6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி
8 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார். 9 ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி
===============
இரண்டாம் வாசகம்
===============
ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8, 11-12, 17-19
ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.
ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.
ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.
ஆண்டவரின் அருள்வாக்கு.
=================
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
==================
எபி 1: 1-2
அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.
===========
நற்செய்தி வாசகம்
=============
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.
அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,
“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.
குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.
ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
==========================
குறுகிய வாசகம்
பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22, 39-40
மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.
ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
================
இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா 27 12 2020
================
திருப்பலி முன்னுரை
ஆண்டின் இறுதி வாரம் இது. வழிபாட்டுக் கொண்டாட்டத்திற்கு வந்தள்ள உங்கள் யாவரையும் அன்புடனே வரவேற்கின்றேன்.
திருக்குடும்பத் திருவிழாவை கொண்டாட அழைப்பு பெற்று இருக்கின்றோம்.
நம்முடைய குடும்பங்களுக்கு இறைவன் இந்த ஆண்டு முழுவதும் செய்த நல்ல பல மேலான காரியங்களுக்கு நன்றி கூறுவதோடு, குடும்பத்தை ஓப்புக் கொடுத்து, அவரது ஆசீரை இறைஞ்சுவோம்.
ஆபிரகாம், ஈசாக், சிமியோன், அன்னா இந்த குடும்ப அன்பர்கள் தங்களது வாழ்விலே கொண்டிருந்த நம்பிக்கை, அவர்கள் குடும்பத்தில் பெற்ற நம்பிக்கை தான். வாழ்விலே பெற்ற நம்பிக்கை அவர்களுக்கு நலம் தந்ததோடு, இறைவனது மேலான ஆசீரையும் பெற்றுத் தந்தது.
இன்று குடும்பங்களில், இத்தகைய நம்பிக்கையே விதைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அவநம்பிக்கை மேலோங்குவதாலேயே குடும்பங்கள் சிதைவது அதிகமாகின்றது.
குடும்பங்களில் நம்பிக்கை விதைக்கப்பட, உறவுகள் உறுதிப்படவும், உண்மையான அன்பை பகிரவும், வழிபாட்டுக் கொண்டாட்டங்கள், குடும்ப செபங்கள் அரங்கேறவும் வேண்டும். திருக்குடும்ப விழுமியங்கள் நமதாக வேண்டும் என்ற வேண்டுதலோடு பங்கேற்போம். பயன் பெறுவோம்.
மன்றாட்டுக்கள்:
நன்மையின் நாயகனே இறைவா! திருஅவை குடும்ப உறவோடு தன் எல்லா மக்களையும் ஒருங்கிணைத்து அழைத்துச் செல்ல, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்மையின் நாயகனே இறைவா! நாடு முன்னேற, குடும்பங்கள் ஒன்றிணைந்து செல்வது அவசியமானது என்பதனை உணர்ந்து பயணிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்மையின் நாயகனே இறைவா! இல்லங்கள் இறைவேண்டடலின் இல்லங்களாக அமையவும், முந்தமுந்த உம்மையும், உமது அரசையும் நாடும் இல்லங்காளக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்மையின் நாயகனே இறைவா! திருக்குடும்ப பண்புகளும், விழுமியங்களும் எங்களது குடும்பங்களில் பிரதிப்பலிக்க, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்மையின் நாயகனே இறைவா! குடும்பங்களில் வாழ்வோர் ஒவ்வொருவரும், பிறருக்கு நம்பிக்கையின் நட்சத்திரமாக விளங்கிட, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
நன்மையின் நாயகனே இறைவா! குடும்பங்களில் ஓருவர் ஓருவர் நலன் பேணவும், அக்கறையோடு கூடிய அன்பினை விதைத்திடவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.