05/09/2025
இன்று முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஒரு சில ஆலிம்களின் தவறான வழிநடத்தலினால், கிறிஸ்தவர்கள் ஈஸா நபியின் பிறந்த நாளை எவ்வாறு கிறிஸ்துமஸ் திருவிழாவாக, கோலாகலமாகக் கொண்டாடுவார்களோ அதுபோன்று நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினம் என்று கூறிக் கொண்டு, திருநபி திருவிழா அதாவது மீலாதுவிழா ஜகஜோதியாகக் கொண்டாடப்படுகின்றது.
இதன் மூலம் எவ்வித ஆதாரமும் இல்லாமல் கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற கிருஸ்துமஸ் திருவிழாவுக்கும், ஆதாரமில்லாமல் கொண்டாடுகின்ற மீலாது திருவிழாவுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
கிறிஸ்தவர்களுக்கு ஒப்பானவர்கள்
ரபியுல் அவ்வல் மாதத்திற்கு ஏன் இவ்வளவு சிறப்பு என்றால், இந்த மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் பிறந்துள்ளார்கள். நபி பிறந்த மாதம் அருள் பொங்கும் மாதம், கண்ணியம் நிறைந்த மாதம், கஷ்டங்களை நீக்கும் மாதம், அகிலத்திற்கு ஒளியூட்டும் மாதம் என்றெல்லாம் கூறி முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள். நல்லமல்கள் செய்கின்றோம் என்ற பெயரால் நரகத்திற்கு அழைத்துச் செல்கின்ற அமல்களைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ரபியுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறந்தது உண்மைதான். ஆனால் இவர்கள் நம்புவது போல் இந்த மாதத்திற்கு என்று தனிச்சிறப்புகள் இருக்கின்றது என்றோ, விழாக் கொண்டாட வேண்டும் என்றோ, பள்ளிவாசல்களில் மவ்லூதுகள் ஓத வேண்டும் என்றோ இறைவனும், இறைத்தூதரும் நமக்குக் காட்டித் தரவில்லை.
ஆனால் இன்றைக்கு சர்வசாதாரணமாக, கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் திருவிழாவுக்காக தங்களுடைய ஆலயங்களை அலங்கரிப்பது போல், அவர்களை விட வெகு விமரிசையாக ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் மீலாதுவிழா என்ற பெயரால் பள்ளிவாசல்களை அலங்கரிப்பதைப் பார்க்கின்றோம். அப்பட்டமாக பிறமதக் கலாச்சாரங்களைப் பின்பற்றி இறைவனின் கட்டளையை மீறுவதைப் பார்க்கின்றோம்.
யார் பிறமதக் கலாச்சாரத்தைக் காப்பி அடித்து அப்படியே பின்பற்றுகின்றார்களோ அவர்கள் அந்த மதத்தைச் சார்ந்தவர்களே! என்று நபி (ஸல்) அவர்கள் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்று கின்றார்களோ அவர்கள் அவர்களைச் சார்ந்தவர்கள்.
நூல்: அபூதாவூத்-4031 (4033)