28/03/2024
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் தொண்டு நிறுவனம் மூலம் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூபாய் 36,13,00,000/- (முப்பத்தாறு கோடியே பதிமூன்று லட்சம்) பணம் மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த எதிரி கைது - தூத்துக்குடி மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் நடவடிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் முப்பிலிவெட்டி பகுதியைச் சேர்ந்த பொன்ராஜ் மனைவி சண்முகலட்சுமி (33) என்பவரிடம் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்த ஜெயபால் மகன் பாலகுமரேசன் (46) மற்றும் சிலர் தாங்கள் நடத்தி வரும் ஆதவா தொண்டு நிறுவனத்தில் பணம் டெபாசிட் செய்தால் நல்ல சம்பளத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி வாங்கி தருவதாகவும், நீங்கள் தரும் பணத்திற்கு லைஃப் இன்சூரன்ஸ் காப்பீடு, 15 வருட முடிவில் முதிர்வு தொகையுடன் சேர்த்து திருப்பி தந்து விடுவதாகவும், வேலையை விட்டு நின்றால் மேற்படி டெபாசிட் தொகையை திருப்பி தரப்படும் என்றும், 58 வயது வரை அரசு பள்ளிகளில் வேலை செய்யலாம் என்றும் பல்வேறு ஆசை வார்த்தைகளை கூறியதன் பேரில் மேற்படி சண்முகலட்சுமி ரூபாய் 5 லட்சம் பணத்தை டெபாசிட் செய்துள்ளார். பின்னர் மேற்படி தொண்டு நிறுவனத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பணியை வாங்கித் தராமல் மோசடி செய்துள்ளனர்.
இதனையடுத்து சண்முகலட்சுமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்களிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட குற்ற பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ராஜு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி. அந்தோணியம்மாள் தலைமையில், உதவி ஆய்வாளர் திருமதி. அனிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. முருகன் மற்றும் தலைமை காவலர் திரு. வேல்ராஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டு, மேற்படி எதிரி பாலகுமரேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி பாலகுமரேசன் சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தனது ஆதவா தொண்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் அமைத்து பணியாட்களை நியமித்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களை குறிவைத்து அரசாங்கத்தால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்குவதாக கூறி முறைகேடாக பணம் வசூலித்து 1315 பேரிடம் ரூபாய் 36,13,00,000/- (முப்பத்தாறு கோடியே பதிமூன்று லட்சம்) பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து மேற்படி போலீசார் எதிரி பாலகுமரேசனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
TamilNadu Police South Zone Chief Minister of Tamil Nadu Tamil Nadu Police Thoothukudi District Police