"அப்பர் தொண்டர் அணி" : தொடக்கம் (11-மே-1977)
'அறிவுக்கடல்' மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு,நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.
தமிழ் இலக்கண இலக்கியங்களிற் சிறந்த புலமையும் சைவ சித்தாந்த நுண்பொருள்களோடு சமய நூற் புலமையும் மிக்க வரும் 'அறிவுக்கடல்' மறைமலையடிகளின் தலை மாணவரும் ஆகிய திருக்குறள் பீடம் முதற்குரவர்.தவத்திரு.அழகரடிகள் சமயப்பணி செய்வதற்கு திருக்கழுக்குன்றத் தலத்தை தெரிந்தெடுத்தார். அவர் "திருக்கோயில்" நவம்பர் 1976 இதழில் " 'குருவருளால் திருவருள்' என்னும் உண்மைக்குத் திருக்கழுக்குன்றத்தலம் தகுதியாய் இருக்கிறது. ஆண்டுக்கு ஒருகால் சித்திரை முதல் ஆடி வரையில் வரும் நால்வர் திருநாட்களில் திருக்கழுக்குன்றம், நால்வர் கோயிலுக்கு வந்து வழிபடுதல் சிறப்பாகும். தெய்வத் திருமுன்னிலையும்(மலைக்கு நேர் எதிரே), நால்வர் திருமுன்னிலையும் ஒன்றாய் இருப்பதோடு, நால்வர் திருக்கோயில் தனிக்கோயிலாக மலை தாழ்வரையில் நேரே அமைந்திருக்கின்றது. திருக்கழுக்குன்றம் பிணி தீர்த்து அருள் சேர்க்கும் மலைத்தலம் என்பது கவனத்திற்குரியது. சித்திரைச் சதயம் அப்பர் திருநாளில் சமயத்தொண்டர்கள் திருக்கழுக்குன்றத்தில் ஒருங்கே கூடி வழிபாடு செய்யலாம்" என்று தன் உள்ளக்கிடங்கையை வெளிப்படுத்தி உள்ளார்.
திருக்குறள் பீடம் முதற்குரவர் தவத்திரு அழகரடிகளின் அருட்கட்டளையின்படி 11-05(மே)-1977 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள் 29 சதய நன்னாளில் "அப்பர் தொண்டர் அணி" 'குருகுல மாணவர்','கேதாரசசெல்வர்' ஒளியகம் சிவத்திரு. ந.ரா.ஆடலரசு (அம்பலவாண தேசிகர்) அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்வணியின் வழிவழித் தலைவர்களாக திருக்குறள் பீடாதிபதிகள் இருப்பார்கள். இவ்வணியின் நோக்கங்களுள் தலையாயதான திருக்கழுக்குன்றம் நால்வர் கோயிலின் திருநாள் விழாக்களை வளர்ச்சி முகமாகக் கவனித்து வருதல் மற்றும் நால்வர் திருநாள் விழாக்களை நடத்தும் நான்கு திருக்கூட்டத் தொண்டர்களுடன் கலந்து பணி செய்தல் ஆகிய நோக்கங்களுக்கு ஒப்ப அப்பர் தொண்டர் அணியினர் செயலாற்றி வருகின்றனர்.
தற்போது இவ்வணியின் தலைவராக திருக்குறள் பீடம் சிவத்திரு. குருபழநி அடிகள் அருளாட்சி செய்து வருகின்றார்கள். 'கேதாரச்செல்வர்' ஒளியகம் சிவத்திரு. ந.ரா.ஆடலரசு (அம்பலவாண தேசிகர்) அவர்களால்,திருக்குறள் பீடம் முதற்குரவர் தவத்திரு அழகரடிகளின் அருட்கட்டளையின்படி, தொடங்கப்பட்ட அப்பர், சுந்தரர் விழாக்களையும், திருஞானசம்பந்தர் இசைவிழாவையும் 'தமிழ்நெறி வேள்வி செம்மல்' 'சைவத்தமிழ்மணி' ஒளியகம்.சிவத்திரு.ந.ஒளியரசு அவர்கள் அறக்கட்டளை செயலாளராக இருந்து நடத்திவருகிறார்.