26/07/2023
அமலா தயாபரா அருள் கூரையா
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் அவர்களால் கி.பி. 1811 - ஆம் வருடம் இந்த கீர்த்தனை இயற்றப்பட்டது. இது சாஸ்திரியாருடைய ஞானப் பதக் கீர்த்தனைகள் புத்தகத்தில் 208 - வது கீர்த்தனையாக இடம்பெற்றுள்ளது. CLS சங்க வெளியீடான கிறிஸ்தவ கீர்த்தனைகளில் (பதிப்பு 2008) 12 - வது பாடல். இந்த கீர்த்தனை வெண்பா, பல்லவி மற்றும் 8 சரணங்களைக் கொண்டுள்ளது. ரீதி கெளளை (Reethi Gowlai) இராகம், ஆதி தாளம்.
கடவுளின் தத்துவத்தை குறித்தும், திரித்துவத்தை முன்னிறுத்தியும் இதில் பாடப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் முதல் சரணம் இந்திய இறைத்தத்துவத்தை கிறிஸ்துவில் வைத்து பாடப்பட்டுள்ளது. வேதநாயகம் சாஸ்திரியார் தனது பெரும்பான்மை படைப்புகளில் இறைத்தத்துவ கருத்துக்களை முன்னெடுத்து, அதில் கிறிஸ்தவத்தை உள்நாட்டுமயமாக்கல் நோக்கிலும் (தன்னிலைமயமாக்கல் அதாவது தமிழ் மரபு — Christology in Indigenisation), கிறிஸ்தவத்தை இந்தியமயமாக்கல் (Christology in Indianisation) அடிப்படையிலும் வெளிப்படுத்துவார். அந்த வகையில் இந்த கீர்த்தனை இறை தத்துவம் நிறைந்த பாவாக அமைந்துள்ளது.
வெண்பா
ஆதியந்தம் இல்லான் மாறாதான் சருவ வல்லோன்
ஏதும் அறிந்தோன் அளவிலா ஞானன் - ஓதுமிடம்
எங்கும் நிறைந்தோன் சத்தியன் தூயன் நீதியுளோன்
அங்கிருபை யாளன் அமலன்.
இராகம்: ரீதி கௌளை
தாளம்: ஆதி தாளம்
பல்லவி
அமலா தயாபரா அருள் கூரையா குருபர
அமலா தயாபரா அருள் கூரையா.
சரணங்கள்
1. சமையம் ஈராற் ஓராறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற்றாறு(ம்) ஆறுங் கடந்த. — அமலா...
2. அந்தம் அடி நடுவிலாத தற்பரன் ஆதி
சுந்தரமிகும் அதீத சோதிப் பிரகாச நீதி. — அமலா...
3. ஞானத்திரவிய வேத நன்மைப் பரம போத
வானத் தேவப் பிரசாத மகிமைக்கு அளவில்லாத. — அமலா...
4. காணப்படா அரூப கருணைச் சுய சொரூப
தோணப்படா வியாப சுகிர்தத் திருத்தயாப. — அமலா...
5. சத்திய வசன நேயா சமஸ்த புண்ணிய சகாயா
கர்த்த தத்துவ உபாயா கருணை பொழியும் வாயா. — அமலா...
6. எல்லை இல்லா மெஞ்ஞான ஏக பராபர வஸ்தான
சொல்லரிதாம் நிதான துல்லிபத்தொன்றாம் மேலான. — அமலா...
7. கருணாகரா உபகாரா தராதரா
பரமேசுரா கிருபாகரா சருவேசுரா. — அமலா...
8. ஆதியொன்றான மூவா அற்புதவாச ஏயோவா
வேதநாயகன் பாவா மேலாந் திரித்துவ தேவா. — அமலா...
சொற்பொருள்:
வெண்பா
# ஏதும் — மூலம், ஆதி, யாதொன்றும், எல்லாமும்
# ஞானன் — கடவுள்
# ஓதுமிடம் — மன்றாடுமிடம்
# அங் — அங்கு — அவ்விடம்
# அமலம் — அழகு, புனிதம், வெண்மை
# அமலன் — பரிசுத்தன், கடவுள்
பல்லவி
# அமலா — கடவுளே, பரிசுத்தரே
# தயாபரா — கிருபையுடைய கடவுளே
# குருபரன் — பரமகுரு, பரத்தின் குரு, கடவுள்
சரணங்கள்
1. # சமையம் — சமயம் — மதம்
# ஈராறு — இரண்டு ஆறு 6+6 - எண்ணிக்கை (2×6=12)
# ஓராறு — ஒரு ஆறு - அதோடு கூடுதலாக ஒரு ஆறு - எண்ணிக்கை (+6)
# சாஸ்திரங்கள் — ஒழுங்கு, கட்டளை, வேதம்
# ஆறு — வழி, ஒழுக்கம், பாதை
2. # அந்தம், அடி, நடு — முடிவு, ஆதி, நடு (முதலுக்கும் முடிவுக்கும் இடைப்பட்டது)
# தற்பரன் — கடவுள், பரம்பொருள்
# ஆதி — அதிசயம், எப்பொருட்கும் இறைவன், தொன்மை, பழைமை
# அதீதம் — எட்டாதது, கடந்தது, மேற்பட்டது
3. # ஞானத்திரவியம் — அருள் மருந்து, கடவுளின் அருள், கொடை, பாக்கியம்
# பரம போதம் — பரத்தின் போதனை, இறை வார்த்தை
# வானத் தேவ பிரசாதம் — வானத்திலிருந்து கிடைத்த கடவுளின் உணவு. (ஜீவ அப்பம் நானே. யோவான் 6: 48., வானத்திலிருந்து இறங்கின ஜீவ அப்பம். யோவான் 6: 51.)
4. # காணப்படா அரூபி — காணப்படாத வெறுமை (உருவம் இல்லாமை)
# சுய சொரூபி — தானாய் இருக்கும் உருவம் (உருவம் உள்ளவர்)
# தோணப்படா — தோன்றப் பெறாத உருவம், எங்கும் நிறைந்தது.
# வியாபம் — வியாபகம் — வியாபித்தல், எங்கும் இருப்பது, சுய தன்மை
# சுகிர்தம் — நன்மை, இன்பம், புண்ணிய பலன்
# தயாபம் — அருள் நிறைந்த, இரக்கமுள்ள
5. # நேயா — நண்பா, நேசன்
# சமஸ்தம் — ஆதாரம், எல்லை
# சகாயம் — உதவி
# கர்த்தத்துவம் — அதிகாரம், தெய்வத் தன்மை, சகலத்தையும் நடத்துகிற தத்துவம். ("கர்த்தத்துவம்" என்ற சொல் தமிழ் திருமறையில் ஏசாயா 9: 6, தானியேல் 4: 22, 4: 34, 6: 26, 7: 14. ஆகிய இடங்களில் வருகிறது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பில் Government, Dominion, Sovereignty என்ற ஆங்கில சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.)
# உபாயம் — செயல்படுத்தும் வகை
# கருணை பொழியும் வாயா — கருணை நிறைந்த வார்த்தையை தரும் வாயை உடையவர்.
6. # ஏகபராபர வஸ்து — ஒரு பொருளாகிய ஒரே பராபரன்
# சொல்லரிதாம் — சொல்ல இயலாத, சொல்லால் உணர்த்தமுடியாத
# நிதானம் — ஆதிகாரணம், நேர்மை
# துல்லிபம் — மேன்மை
7. # உபகாரா — உதவுவோன், நன்மை செய்வோன்
# தராதரா — உயர்வு தாழ்வு வேற்றுமை கொள்ளாதவர்
# பரமேசுரா — பரத்தின் தலைவன், கடவுள்
# கிருபாகரா — அருளுக்கு இருப்பிடமானவரே, கிருபையுடையவரே,
# சருவேசுரா — சருவ வல்லோன், எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுள்
8. # ஆதியொன்றான மூவா — ஆதிமுதல் ஒன்றாயிருக்கும் பிதா, குமாரன், பரிசுத்தாவியாகிய மூவொரு (மூன்றும் ஒன்றான) கடவுள்
# அற்புதவாசன் — அற்புதம் செய்பவர்
# ஏயோவா — யேகோவா — நித்திய ஜீவனுள்ளவர், இருக்கிறவராக இருக்கிறவர் (யாத்திராகமம் 3: 14)
# பாவா - பாட்டுக்கு உரியவர்
# மேலாந் திரித்துவ தேவா — எல்லாவற்றுக்கும் மேலாக திரித்துவத்தில் (மும்மை தன்மை) இயைந்திருக்கும் கடவுள்.
பொருள் விளக்கம்:
வெண்பா
தொடக்கமும் முடிவும் இல்லாதவர், மாறாதவர், எல்லா வல்லமையும் உடையவர், எல்லாம் அறிந்தவர், அளவில்லா பெருத்த ஞானமுள்ளவர் — பெயர் சொல்லி அழைக்கும் இடமெங்கும் நிறைந்திருப்பவர், உண்மையுள்ளவர், தூயர், நீதியுள்ளவர், அவ்விடத்து கிருபையுள்ளவர், பரிசுத்தர்.
பல்லவி
பரிசுத்தரே கிருபையுள்ள கடவுளே அருள் செய்யும், பரத்தின் குருவே பரிசுத்தரே இரக்கமுள்ளவரே அருள் செய்யும்.
சரணங்கள்
1. சமயங்கள் பதினெட்டும் (18), சாஸ்திரங்களாகிய வேதங்கள் நான்கும் (4), அமைந்த தத்துவங்கள் தொண்ணூற்று ஆறும் (96) ஆகிய இவைகள் கூறும் வழிகளை (பாதைகள்) எல்லாம் கடந்து நிற்பவர். — அமலா தயாபரா...
(இந்த கவியின் கூடுதல் விளக்கத்தை இறுதியில் கொடுத்திருக்கிறேன்.)
2. முடிவும் தொடக்கமும் அதற்கு நடுவாகவும் இல்லாத அதிசயமான பரம்பொருள், மிகுந்த அழகுடன், எல்லாவற்றிலும் மேலான தன்மை கொண்ட சுடரில் எழும் வெளிச்சமாகிய நீதி. — அமலா தயாபரா...
3. வேதம் தரும் நன்மை நிறைந்த பரம போதனை, ஆத்தும அருமருந்து. அளவில்லாத மகிமைக்கு உகந்த வானத்தின் தெய்வீக உணவு. (யோவான் 6: 48, 51, 58) — அமலா தயாபரா...
4. காணப்படாத உருவமற்றவரே, கருணையை தன் வடிவாக கொண்டவரே, கண்கள் காண தோற்றம் கொள்ளாத எங்கும் வியாபித்து நிறைந்திருக்கும் நன்மையாக விளங்கும் தெய்வீக அருள் நிறைந்த. — அமலா தயாபரா...
5. சத்திய வசனமாகிய நண்பா, எல்லா நற்செயல்களுக்கும் துணைவா, கடவுளின் தன்மையை விளங்கச் செய்பவரே, கருணை நிறைந்த வார்த்தையைத் தரும் நாவை உடையவரே. — அமலா தயாபரா...
6. எல்லையற்ற மெய்ஞானமுள்ள ஒரே பொருளான பராபரன், சொல்லால் உணர்த்தமுடியாத ஆதிகாரணர், மேன்மைகளுக்கெல்லாம் ஒரே மேலான — அமலா தயாபரா...
7. கருணையுள்ளவரே, உதவுபவரே, தகுதி மிக்கவரே, பரலோகின் தலைவரே, அருள் தருபவரே, எல்லா உயிர்க்கும் தலைவனாகிய கடவுளே — அமலா தயாபரா...
8. தொடக்கமுதல் மூன்றில் (பிதா, குமாரன், பரிசுத்தாவி) ஒன்றாயிருக்கும் கடவுளே , அற்புதம் செய்பவரே, நித்திய ஜீவனுள்ளவரே, வேதநாயகன் பாட்டுக்கு உரியவரே, எல்லாவற்றுக்கும் மேலாக திரித்துவத்தில் இயைந்திருக்கும் கடவுளே — அமலா தயாபரா...
கூடுதல் விளக்கம்:
சரணம் 1.
சமையம் ஈராறு ஓர் ஆறு சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
அமையும் தத்துவம் தொண்ணூற்று ஆறும் ஆறும் கடந்த.
1. சமையம் ஈராறு ஓர் ஆறு
# சமையம் - சமயம்
# ஈராறு - 2 × 6 = 12
# ஓர் ஆறு - 6
சமயங்கள் மொத்தம் 18. (2×6+6=18) (18 சமயங்களை கடைசியில் கொடுக்கிறேன்.)
2. சாஸ்திரங்கள் வேதம் நான்கும்
# சாஸ்திரம் - வேதம்
நான்கு வேதங்கள் :
i. இருக்கு (ரிக்) ( Rig veda )
ii. தைத்ரியம் ( யசூர் ) ( Yajur veda )
iii. சாமம் ( Sama veda )
iv. அதர்வணம் ( Atharva veda )
3. அமையும் தத்துவம் தொண்ணூற்று ஆறும்
தத்துவங்கள் 96.
4. ஆறும் கடந்த
# ஆறு - ஒழுக்கம் , வழி, பாதை
பொருள் விளக்கம் :
சமயங்கள் பதினெட்டும் (18) , சாஸ்திரங்களாகிய வேதங்கள் நான்கும் (4) , அமைந்த தத்துவங்கள் தொண்ணூற்றி ஆறும் (96) ஆகிய இவைகள் எல்லாம் கூறும் வழிகளையெல்லாம் கடந்து நிற்பவர் ....
18 சமயங்கள் :
(I) சைவம் , வைஷ்ணவம் , சாதிதம் , செளரம் , காணபத்தியம் , கெளமாளம் - இவை வைதிக மதம் எனப்படும்.
(II) கபில மதம் , கணாத மதம் , பதஞ்சலி மதம் , அக்ஷபாத மதம் (க்ஷ - க் + ஷ ) , வியாச மதம் , ஜைமினி மதம் - இவை வேதாந்த மதம் எனப்படும்.
(III) பெளத்தம் , ஜைனம் , பைரவம் , காளாமுகம் , உலோகாயதம் , சூனிய வாதம் - இவை புறச் சமயம் என்பர் வைதிகர்.
96 தத்துவங்கள் :
1. ஆன்ம தத்துவம் - 24.
2. உடலின் வாசல்கள் - 9.
3. தாதுக்கள் - 7.
4. மண்டலங்கள் - 3.
5. குணங்கள் - 3.
6. மலங்கள் - 3.
7. வியாதிகள் - 3.
8. விகாரங்கள் - 8.
9. ஆதாரங்கள் - 6.
10. வாயுக்கள் - 10.
11. நாடிகள் - 10.
12. அவத்தைகள் - 5.
13. ஐவுடம்புகள் - 5.
இந்த 96 தத்துவங்கள் ஒவ்வொன்றாக விரித்துரைத்தால் இன்னும் விரிந்து செல்லும். ஆகையால் இத்துடன் விரிவுரையை நிறைவு செய்கிறேன்.
பரமன் பணியில்,
சங்கை. சை. நோவா சாஸ்திரியார்
தஞ்சாவூர்.
25.07.2023.
(ஜுலை 25, 2023)