18/01/2026
இந்த பாடலை அபிராமிபட்டர் பாடும்போதுதான் தை அமாவாசையில் வானில் முழுநிலவு அன்னையின் அருளால் வந்தது, திருகடையூர் பட்டரும் அபிராமிபட்டர் என அழியா இடம்பெற்றார் அவரின் பக்தி உலகறிந்ததாயிற்று
தை அமாவாசையில் அபிராமி அந்தாதி பாடுவது மிக முக்கியம் , அதிலும் இந்த பாடல் மகா அவசியம்
"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே"
இனி பாடலை ஒவ்வொரு வரியாக காணலாம்
"விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு" என பாடலை தொடங்குகின்றார் பட்டர், அன்னையின் சக்தியானது சர்வ வல்லமை பொருந்திய பராசக்தி, அவள் கடைக்கண் பார்வை பட்டாலே போதும் எல்லா நலமும் கூடும், அவள் பேசவேண்டாம், கை அசைக்க வேண்டாம், நெடுநேரம் அமர்ந்து நம்மை விசாரித்து சிக்கலை கேட்க வேண்டாம்
அவள் ஒரு பார்வை பார்த்தாலே எல்லா அருளும் வந்து சேரும் என பாடும் பட்டர், அடுத்து "வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு" என்கின்றார்
அன்னை வேத வடிவானவள் அவளே வேதவல்லி, வேதங்கள் தாங்கும் அரியணையில் வீற்றிருப்பவள், அப்படியான அன்னையினை பணிந்து வழிபட்டாலே எல்லா நல்வழியும் தானாக அமையும், அன்னை ஆட்சி செய்யும் நெஞ்சம் தானாகவே அவள் வழி நடக்கும்
பட்டர் தான் அன்னையினை வழிநடப்பதால் தானாகவே வேதங்கள் வழி நடப்பதை உணர்கின்றார், அன்னையே வேதம் எனும் தத்துவத்தின் படி, அவள் வழிபாடே வேதம் என்பதுபடி பட்டர் தன் மனம் வேத வழி நடப்பதாக பெருமை கொள்கின்றார்
அடுத்து "அவ்வழி கிடக்க" என்கின்றார், அதாவது அன்னையினை பின்பற்றும் வழி இப்படி இருக்கின்றது எனும் பட்டர் அடுத்து தொடர்கின்றார்
"பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுத்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே" என்கின்றார்
"பழிக்கே சுழன்று" என்பது கொஞ்சம் கவனிக்கதக்க வார்த்தை, பழி எனும் பெரும் பாவத்தை செய்தால் கர்ம வினைபடி மறுபடி மறுபடி பிறவி சுழற்சியில் சிக்க வேண்டியிருக்கும் அதைத்தான் இங்கு சொல்கின்றார் பட்டர்
பாவம் செய்தால் நரகம், புண்ணியம் செய்தால் சொர்க்கம் என்பார்கள் ஆனால் முக்தி எனும் பிறப்பற்ற நிலை இதனை தாண்டியது
நரகமோ சொர்க்கமோ எங்கு சென்றாலும் செய்த வினைபயன் முடிந்தபின் மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும் , மீண்டும் சொர்க்கமோ நரகமோ புகுந்து சுழலில் சிக்க வேண்டும்
முக்தி நிலை அடைந்தால் பிறப்பற்ற நிலையினை எட்டலாம்
இதைத்தான் சொல்கின்றார் பட்டர், நரகம் எப்போது வாய்க்கும் என்றால் அன்னையினை மறந்து வேதங்களை மறந்து கயவர் எனும் மாயவகைபட்ட , இந்த உலக இன்பங்களே பெரிதாக எண்ணும் தீயவர்களுடன் சேர்ந்து தீய செயல்களை செய்யும் போது வரும்
வாழ்வளிக்கும் அன்னை எனக்கு இருக்கும் போது அவள் சொன்ன வேதம் இருக்கும் போது ஏன் பொல்லாத கயவர் பின்னால் நான் செல்ல போகின்றேன் என்கின்றார் பட்டர்
ஆக பாடலின் சுருக்கமான பொருள் இதுதான்
"அன்னையின் விழியே எல்லா அருளையும் தரும், அவள் அடியாராகிய தனக்கு வேதங்கள் வழி வாழும் நெஞ்சம் உண்டு, பின் ஏன் நரகத்தில் விழுந்து மறுபடி பிறக்கும் சுழற்சிக்கும் கயவர் தொடர்புக்கும் நான் அஞ்ச வேண்டும்" என்பதே பாடலின் பொருள்.
இந்த பாடலை இன்னும் அழமாக பார்க்குமுன் இந்த பாடல் பாடபட்ட நேரத்தையும் சூழலையும் அந்த நேரம் நடந்த அற்புதத்தையும் பார்க்க வேண்டும்
அபிராமி அந்தாதியில் மிக மிக முக்கியமான பாடல் இது, அந்த அந்தாதியே இந்த பாடல் பாடபடும் போதுதான் சிறப்பு பெறுகின்றது
அந்த பட்டரின் பெயர் சுப்பிரமணி, பஞ்சாங்கம் பார்ப்பது அன்னையினை வழிபட நாள் நேரம் பூஜை குறிப்பது என திருகடையூரில் வாழ்ந்தவர், ஆனால் நாளாக நாளாக அவரின் பக்தியின் ஆழம் அதிகரித்து அது அவரின் தவகோலமாயிற்று, எல்லாம் கடந்த சமாதி நிலையாயிற்று, அவரின் ஆன்மா அன்னையோடு கரைந்தே போனது
அதை அறியாதோர்க்கு அது பைத்தியகோலமாயிற்று
சுப்பிரமணி என்ன செய்வார் என்றால் அன்னையின் நாமத்தை சொல்லி கொண்டே இருப்பார், அபிராமி அபிராமி என சொல்லியதால் "அபிராமி பட்டர்" என்றானார்
இவர் கோவில் நடைபாதை சன்னதியில் அமர்ந்திருப்பார் அப்படியே தியானத்தில் மூழ்குவார், ஆடை அவிழ்வது
கூட தெரியாமல் அமர்ந்திருப்பார், திடீரென சிரிப்பார் கத்துவார் அழுவார்
ஞானம் அடைந்தோர் முக்தி நிலை எட்டியோர் எப்போதும் சிரிப்பில் இருப்பர் இதை சாதாரமானோரால் புரிந்த் கொள்ளமுடியாது, காணும் விஷயங்களை எல்லாம் அபிராமியாக கண்டவர், அழகான பெண்களை அபிராமி என அழைத்தபோது தவறாக புரிந்துகொள்ளபட்டு அடிக்க முயன்ற சம்பவமும் உண்டு
அவரின் அபரிமிதமான பக்தியும் , முழுஞான கோலமும் அவரை பித்தன், மூளை குழம்பியவன் என அழைக்க வழி செய்தது, சிலருக்கோ அவர் எரிச்சலாக பட்டார், சிலருக்கோ ஆலயத்தில் அப்படி பழியாக கிடப்பதால் எதிரியுமானார் தொந்தரவுமானார்
சிலர் அவரை சித்தர் என அடையாளம் கண்டதால் எதிரிகளும் இருந்தார்கள், நாங்களெல்லாம் பக்தி செய்யவில்லையா இவரம்ட்டும்தான் பக்திமானா என்ற தர்க்கங்களும் இருந்தன
பட்டர் அடிக்கடி அன்னை முன் கண்ணை மூடி அவரவதும் அவர் போக்கில் பேசுவதும் தொடர்ந்தது
இப்படி நிலையில்தான் சரபோஜி மன்னர் தை அமாவாசை அன்று அங்கு வந்தார், அவர் மராட்டிய வம்சம் என்றாலும் தமிழ் தெரிந்த மன்னராயிருந்தார்
அது சிலருக்கு மராட்டியர் இங்கு ஆள்வதா எனும் சர்ச்சை இருந்த காலங்கள், நாயக்கர்களிடம் இருந்து மராட்டிய சிவாஜி குலம் தஞ்சை ஆட்சியினை பெற்றதில் சில அரசியல் குழப்பங்கள் இருந்த நேரம்
அப்படி மன்னர் வந்தபொழுது பட்டர் வழமை போல தவக்கோலத்தில் சன்னதி முன் அமர்ந்திருந்தார், எல்லோரும் மன்னனை கண்டு எழுந்து மரியாதை செய்தபோதும் பட்டர் செய்யவில்லை
மனனுக்கு அது ஆத்திரமூட்டியது, அந்த ஆத்திரத்தை சிலர் இன்னும் தூண்டினார்கள்
மன்னன் அவரை பற்றி விசாரிக்கும் போது பட்டரின் எதிரிகள் அவர் திமிர்பிடித்தவர் என்றும் யாரையும் மதிக்காதவர் என்றும் பழி சொன்னார்கள், மன்னனுக்கு அவர்மேல் இன்னும் கோபம் வந்தது
எனினும் ஆலய சன்னதியில் யாரையும் பகைப்பது மரபல்ல என்பதால் மன்னன் அவர் அருகே நின்று அன்னையினை தரிசனம் செய்தான்
பட்டர் அந்நேரம் "அபிராமி உன் முகம் இன்றைய பவுர்னமி போல் ஜொலிக்குதடி" என சொல்லிவிட்டார், மன்னன் தை மாச தர்பணத்துக்காக வந்தவன், அவனுக்கு பட்டர் தன்னை அவமானபடுத்துவது போல் தோன்றிற்று
தன்னை சிலர் மன்னனாக ஏற்கவில்லை எனும் செய்தி பரவி இருந்த நேரம் பட்டர் இப்படிசொன்னது தன்னை அவமானபடுத்தும் விஷயமாக உணர்ந்தவன் சீறினான்
"பட்டரே இன்று அமாவாசை"
அவன் மன்னன் என்பதை கொஞ்சமும் கவனியாமல் அல்லது தெரியாமல் "இன்று பவுர்ணமி" என் சொன்னபடி சிரித்தார் பட்டர்
பட்டர் பஞ்சாங்கம் பார்ப்பதில் வல்லவர் என பலர் சொன்னதால் மன்னன் இது தனக்கான அவமானம் என உணர்ந்து அவ்விடம் விட்டு அகன்று ஆலயத்தின் வெளியே நின்றுகொண்டு அவரை இழுத்துவர கட்டளையிட்டான்
பட்டரும் கொண்டுவரபட்டார், அப்பொழுது மன்னன் கேட்டதற்கும் "ஆம் இன்று பவுர்ணமி" என அவர் தவத்தின் பிரகாசத்தில் அன்னையினை தன் மனகண்ணில் கண்டபடியே சொன்னார்
"இன்று நிலா வருமா" என கேட்டான் மன்னன்
"வந்து கொண்டே இருக்கின்றது" என்றார் பட்டர்
"இந்த ஆலயம் முன் குழிவெட்டுங்கள், இன்று நிலா வராவிட்டால் குழியில் நெருப்பினை இட்டு இவனை ராஜநிந்தனைக்காக உள்ளே தள்ளுங்கள்" என்றபடி தன் அரண்மனை திரும்பினான் மன்னன்
கோவில் அருகே குழி வெட்டபட்டது, பட்டர் தவநிலையிலே இருந்தார்
பட்டருக்கு ஒரு உறவினர் உண்டு அவர் பட்டரின் பக்தியினை அறிந்திருந்தார், அவர் வந்து பட்டரை உலுக்கி நினைவு திரும்ப செய்து அவருக்கு வந்திருக்கும் ஆபத்தை சொன்னார்
பட்டருக்கு என்ன நடந்தது என அப்பொழுதுதான் தெரிந்தது, அமாவாசையினை பவுர்னமி என சொல்லி அரசன் வெட்டிய எரிகுழியில் தள்ளி சாகடிக்கபடும் ஆபத்தை உணர்ந்தார்
அதன்படி தான் 100 பாடல்களை பாடவேண்டும் என்றும், இந்த அந்தாதி நெடுநாளாக திட்டமிட்ட ஒன்று என்றும், கடைசியாக அதை பாடிவிடவேண்டும் என்றும் உத்தரவு பெற்றார்
அப்படிஅந்த தை அமாவாசை மாலையில் பாட தொடங்கியதுதான் அபிராமி அந்தாதி
இந்த அந்தாதியின் 79ம் பாடல்தான் நாம் இப்போது காண்பது
தன் உயிர் போகும் நிலையில் அன்னையினை உற்று பார்க்கின்றார்
அன்னை அவரிடம் வாய்திறந்து பேசவில்லை, அவள் காதுகளில் பட்டர் பேசுவது விழுகின்றதா தெரியவில்லை, அவளின் கை கால் அசையவில்லை, நாசியில் மூச்சு இல்லை
ஆனால் அவள் கண்கள் திறந்திருக்கின்றன, அந்த கண்கள் பட்டரையே பார்க்கின்றன, அருட்பார்வை பார்க்கின்றன, அந்த திறந்த கண்களை கண்டு உற்சாகமாக பாடுகின்றார் பட்டர்
அன்னையின் அருளே இந்த விழியில் தெரிகின்றதே இனி எனக்கு என்ன அருள் வேண்டும் என பாடுகின்றார்
அன்னையின் அருள்பார்வை கிடைத்தால் கல்வி,செல்வம், அதிகாரம் என எல்லாமே முப்பெரும்தேவியரால் நொடியில் அருளபடும், அந்த அருட்பார்வை பெற்றவனை காலனும் அணுக அஞ்சுவான்
அப்படிபட்ட சர்வ சக்திவாய்ந்தவள் அன்னை
அன்னை வேத வடிவினள், வேதத்தை சரிவர கற்றோர் மனம் நல்லவழியில் சத்சங்கத்தில் ஆலயவழிபாடுகளிலேதான் இணைந்திருக்கும் பட்டர் அப்படி ஆலயத்திலேதான் இருந்தவர்
அந்த நம்பிக்கையில் பாடுகின்றார், அன்னையே நீயும் வேதங்களும் வேறல்ல நான் உன்னை நெஞ்செல்லாம் தியானித்து வாழ்ந்ததால் பின்பற்றியதால் என் மனம் உன்னிலே அதாவது வேதத்திலே நிறைந்திருந்தது
இப்படி உன் நினைவால் நான் வாழ்ந்ததால் நான் இந்த உலக வாழ்வை முடித்தாலும் இனி நரகத்துக்கு செல்லமாட்டேன், அந்த கர்மவினை தீர மறுபடி பிறந்து கெட்ட வாழ்வு வாங்கிவந்து கயவருடன் கூடியிருக்கமாட்டேன் எனக்கு அது போதும்" என மருகுகின்றார்
கொஞ்சம் ஆழமாக பார்த்தால் பட்டர் அன்னையிடம் சரணடைந்து இனி நீ விட்டவழி, என்னை காப்பதும் கொல்ல விடுவதும் உன் கையில்தான் இருக்கின்றது எனும் முழு சரணாகதி, அதே நேரம் முழு நம்பிக்கையான சரணாகதி
பட்டர் சாவின் விளிம்பில் நிற்கின்றார், அமாவாசை அன்று நிச்சயம் நிலா வராது, அதனால் பட்டர் சாகபோவது உறுதியாகின்றது
அந்நிலையில் பட்டர் இப்பாடலை தன் மரண சாசனமாக சொல்கின்றார்
அன்னையே உன் விழிக்கே எல்லா கர்ம வினைகளும் தீரும்படி அருள் கிடைக்கும், அறம் பொருள் இன்பம் வீடு என நான்கு படிநிலைகளும் உன் அருளால் வாய்க்கும்
தாயே நீ வேறு வேதம் வேறு அல்ல, நீ தான் வேதம், வேதங்கள்தான் தான் நீ. நான் உன்னை எக்காலமும் என் நெஞ்சில்தாங்குவதால் என் வாழ்வின் வேதமாய் நீதான் இருக்கின்றாய்
நான் முன்பு செய்த தவப்படி உன் அருளை பெற்றேன், உன் விருப்படியே என்னை நீ ஆட்கொண்டாய், இதோநான் சாகபோகின்றேன்
ஆனால் நான் அஞ்சவில்லை பயப்படவில்லை, காரணம் உன் அருள்பார்வை கிடைத்தாலே முக்தி உண்டு, வேதங்கள் எல்லாம் அறிந்து பெறவேண்டிய முக்தியினை உன் அருள்பார்வை ஒன்றே கொடுத்துவிடும் அவ்வகையில் நான் முக்தி பெற்றுவிட்டேன்
இனி நான் இந்த பூலோக வாழ்வை முடித்தாலும் முக்திநிலை அடைவேன், மறுபடி பிறந்து வரும் அவலமில்லை நான் முக்தி அடைந்துவிடுவதால் நரகத்தில் வீழ்ந்து பின் கெட்டவாழ்வினை அடைந்து தீயவருடன் சேர்ந்து உன்னை மறந்து ஒரு வாழ்வு வாழும் நிலை வருமோ என அஞ்ச தேவையில்லை
எனககு மறுமை பற்றி கவலை இல்லை, அடுத்த பிறவி பற்றி கவலையில்லை, உன்னில் கலந்துவிட்ட ஆத்மா இனி அடுத்தபிறவியில் தீயவருடன் சேர்ந்து உன்னை மறக்குமோ எனும் அச்சமில்லை
அதனால் தாயே இந்த தண்டனை என்பது கூட நீ செய்யும் விளையாட்டே, என்னை உன்னிடம் வரவைக்க நீயே என்னை இப்படி ஆட்டிவைத்தாய் என சொல்லி நம்பிக்கையுடன் பாடலை முடிக்கின்றார்
அன்னை தன்னை எப்படியும் காப்பாள் என நம்பும் குழந்தை போல் பட்டர் இந்த பாடலை பாடி, கொஞ்சமும் சலனமில்லாமல் அன்னையிடம் தன்னை முழுக்க ஒப்படைத்து நிற்கும்போதுதான் அந்த அதிசயம் நடந்தது
இந்த 79ம் பாடல் பாடி முடிந்தபொழுதுதான் அன்னை தன் காது தோடுகளிலொன்றை கீழ்வானில் வீசி எறிய நிலா வந்து அந்த அமாவாசை பவுர்ணமியானது
மாடத்தில் வீற்றிருந்த சரபோஜி மன்னனும் அந்த அதிசயத்தை கண்டான் எல்லோரும் கண்டார்கள், பெரும் ஆச்சரியமும் பரபரப்பும் எங்கும் தொற்றிகொண்டது
மன்னன் பட்டரை நோக்கி விரைந்தான், நெருப்பு எரிந்த குழி பின் மூடபட்டது, பட்டருக்காக அன்னைவே வந்து மகா அதிசயம் செய்து பிரபஞ்ச இயக்கத்தையே மாற்றியதில் பட்டரை எல்லோரும் பணிந்தார்கள் நாடாளும் மன்னனே பட்டரை பணிந்தான் என்றபின் என்ன சாட்சி வேண்டியிருக்கின்றது