தென்றல் தவழும் தென்பொதிகை மலைத் தொடரில் திருநெல்வேலி மாவட்டத்தில்,தென்காசி-கடையம் பாதையின் மேற்கில் யானை வடிவமாய் அமைந்துள்ள மலை. இந்த மலையில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அகத்தியர் தலைமையில் தேரையர் உள்பட பல சித்தர்கள் அமர்ந்து ஒரு கபால அறுவை சிகிச்சை நடத்தியுள்ளனர். உலகிலே முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த இடம் தோரணமலை தான் .இம்மலையில் நானூறு ஆண்டுகள் பழமையான முருகன் கோவில் ஒன்று உள்ளது. 1000
வருடங்களுக்கு முன்பு அகத்தியரின் மருத்துவமனையாக விளங்கிய இந்த தோரணமலை நாளடைவில் தூர்ந்துவிட்டது .இங்கு முருகனுக்கு அமைக்கபடிருந்த கோயிலும் காணாமல்போய்விட்டது
இதற்கிடையில் குற்றாலம் அருகிலுள்ள முத்துமாலைபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த நா.பெருமாள் என்பவரின் கனவில் வேல் ஏந்திய சிறுவன் தோன்றி மலை மேல் உள்ள சுனையில் தான் கிடப்பதாகவும் தன்னை வணங்குமாறும் கூறினான்.முருகபெருமானை வணங்கி சுனையில் தேடியபோது அங்கே முருகன் சிலை கிடைத்தது அதை எடுத்து தற்போது உள்ள இடத்தில் வைத்து வணங்க ஆரம்பித்தனர். இன்று வரை அந்த சிலையே மூலவராக வணங்கப்படுகிறது.
இதற்கு பின் தலைமைஆசிரியர் திரு.கு.ஆதிநாராயணன் (பரம்பரை அறங்காவலர்) என்பவர் இந்த கோயிலை மக்களுக்கு அறிமுகபடுத்த பல முயற்சிகள் செய்தார். கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள சுமார் 150 சினிமா தியேட்டர்களில் தோரணமலை குறித்த சிலைடு காட்டினர். ஒரு கோயிலுக்கு விளம்பரமாக இது போல் சினிமா தியேட்டரில் சிலைடு காட்டிய வரலாறு வேறு எங்கும் நடந்ததாக தெரியவில்லை .அதை பார்த்து பல பக்தர்கள் தோரணமலை வர ஆரம்பித்தனர் முருகபெருமானை வணங்க ஆரம்பித்தனர்.
இரு நதிகளுக்கிடையே ஒரு கோவில் இருந்தால் அது சிறப்பான புனிதத்தலமாக கருதப்படும் அந்த வகையில் தோரணமலையும் தனிச்சிறப்பு பெற்றது. தோரணமலைக்கு தென்புறம் மலையில் இருந்து பாய்ந்து வருகிறது ராமநதி,மலையின் வடபுறம் ஜம்பு நதி தவழ்ந்து வருகிறது.இந்த இரு நதிகளுக்கு இடையேதான் தோரணமலை கம்பீரமாக காட்சியளிக்கிறது. இந்த நதிகள் இரண்டும் தோரணமலைக்கு மாலையிட்டது போல் காணபப்டுகிறது. இந்த மலைக்குச் சென்றாலே நம்மை அறியாமல் உடல் நம் சிலிர்ப்தை நாம் அறிய முடியும்.அங்கெல்லாம் பலசித்தர்கள் அரூபமாக இன்றும் வாழ்ந்து வருகிறார்கள். இம்மலையில் 64 சுனைகள் உள்ளன.இந்த சுனைகளில் உள்ள நீர் புனித நீராக கருதப்படுகிறது. இந்த சுனைகள் எல்லாம் சித்தர்கள் தற்போதும் தங்கி தவம் புரியும் இடமாகத்தான் பக்தர்கள் கருதுகிறார்கள். இந்த சுனை நீரை பருகி, இதில் நீராடி முருகனை வழிப்பட்டால் தீராத நோயும் தீருகிறது சகல சௌபாக்கியம் உண்டாகிறது என்பது மக்கள் அனுபவித்து கூறும் கூற்றாகும்.
அடிவாரத்தில் வல்லப விநாயகர்,கன்னிமார் அம்மன், வியாழ பகவான்,மற்றும் நவகிரகங்களுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. மேலும் சிவபெருமான்,சரஸ்வதி,மகாலட்சுமி ஆகியோரின் தரிசனமும் கிட்டுகிறது. அரசமரத்தடியில் வீற்றிருக்கும் சப்தகன்னியரை வணங்கி வளையல்களும் தொட்டில்களும் பிராத்தனையாக கட்டினால்வேண்டுதல் நிறைவேறுவது திண்ணம். மலைக்கு செல்லும் படிக்கட்டு தொடங்கும் இடத்தில் தனிச் சன்னிதியில் பாலமுருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். மலை ஏறி மூலவரை தரிசிக்கும் முன் இவரை வணங்கிச் செல்வது நலம் பயக்கும். உச்சியை அடைய 926 படிகட்டுகள் ஏற வேண்டும். ஒரு காலத்தில் இந்த படிகட்டுகள் கிடையாது பாறையில் பெரும்விரலை மட்டும் ஊனும்படி ஓட்டை வடித்து வைத்திருப்பார்கள் அதன் வழியாகத் தான் ஏற வேண்டும்.ஆனால் தற்போது அப்படியல்ல படிக்கட்டு வழியாக ஏறிச்செல்லலாம். தோரணமலை படிக்கட்டுகளை ஏறிச் செல்வது இந்த பிறவியில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் கடந்து விட்டதை உணர்த்துகிறது. வழியில் சுயம்பாக அமைந்த சிவபெருமானை தரிசிக்கலாம்.இந்த இடங்கள் எல்லாம் நல்லசுவாச காற்றும், அருமையான நறுமணம் தரும் மூலிகை காற்றும் நமது உடல் பிணியை போக்கும் வண்ணம் நம்மை தொட்டு செல்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கை அழகையும் அதில் தவழ்ந்து வரும் மேகக்கூட்டங்களையும், ரசித்துக்கொண்டே உச்சியை அடையலாம்.
மலையின் உச்சியில் உள்ள குகையில் தான் முருகப்பெருமான் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.கையில் வேல் ஏந்தி மயில் வாகனத்தோடு நின்ற கோலத்தில் அழகின் அரசனாக திகழ்கிறார் மூலவர் முருகப்பெருமான். இந்த குகை இயற்கையில் கிழக்கு நோக்கி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இந்த முருகன் திருச்செந்தூர் முருகனை நோக்கிய வண்ணம் இருப்பதால் இவரை வழிபட்டால் திருச்செந்தூர் முருகனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும்.முருகப்பெருமானின் இடதுபுறம் சற்று உயரமான இடத்தில் இருக்கும் சுனையில் இருந்து தான் முருகப்பெருமானுக்கு அபிஷேகத்துக்கு தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. மலை உச்சியில் பெரும் பாறைக்கு இடையில் இப்படி ஊற்று பொங்கி வருவதும் கடும் கோடையிலும் இது வற்றாமல் இருப்பது இறையருள் மட்டுமின்றி ஆச்சரியத்திலும் ஆச்சர்யம். மலை மீது ஏறி இதில் குளிப்பது ஆனந்தமாக இருப்பதோடு அருளும் கிடைப்பதை அந்தநொடியிலேயே உணரலாம். அதேபோல் முருகப்பெருமானின் வலதுபுறம்பாறையில் ஒரு கை மட்டுமே போகும் அளவுக்கு துவாரம் ஒன்று உள்ளது. அது சாதாரண துவாரம் அல்ல அதுவும் ஒரு சுனை தான் .அதனுள்ளும் தண்ணீர் எப்போதும் இருக்கும். எதிரே ராமர் பாதம் உள்ளது. அதன் அருகே பத்திரகாளி அம்மனுக்கு தனியே ஒரு சன்னதியும் உள்ளது.
துன்பம் தீர்க்கும் தோரணமலை முருகனுக்கு ஒவ்வொரு ஆண்டும் தைபூசம், வைகாசி விசாகம், சித்திரை திருநாளும் முக்கிய திருவிழாக்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
துன்பம் தீர்க்கும் தோரணமலை,துலங்கி வரும் தோரணமலை, பாவம் போக்கும் புன்னியமலை யானை முகம் கொண்ட மலையின் மேல் வீற்றிருக்கும் இம்முருகனின் திருவீடு எழாம் படை வீடு என்று சொன்னால் மிகை அல்ல.
நலம் தரும் தைபூச நாயகனை, வைகாசி விசாகனை, வாரணம் ஆயிரம் பலம் தரும் தோரணமலை முருகனை
வணங்க ”அனைவரும் வருக அவனருள் பெறுக”.