01/04/2026
இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் தீவில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படை வீரர் சண்டை தீவிரமாக இருந்ததாலும், புகை சூழ்ந்திருந்ததாலும் தனது குழுவில் இருந்து பிரிக்கப்பட்டார் மற்றும் தனது தோழர்களுடனான தொடர்பையும் இழந்தார். அப்போது எதிராளிகளின் கையில் சிக்கிவிடாமல் இருக்க ஒரு குன்றின் மேலிருந்த பல குகைகளுள் ஒன்றில் போய் ஒளிந்து கொண்டார்.
தேவன் சித்தங்கொண்டால் தன்னைக் காக்கும்படி தேவனிடம் ஜெபம் செய்தார். அப்பொழுது சிலந்திப்பூச்சி ஒன்று வேக வேகமாக குகையின் வாயிலில் வலை பின்னியதைக் கண்டார். அப்பொழுது எதிராளிகள் நெருங்கி வரும் சத்தத்தைக் கேட்ட அவர், "தேவன் ஒரு மதில் சுவரை எழுப்பினால்கூட, நான் தப்பிக்க வாய்ப்பிருக்கும். ஆனால் அவரோ ஒரு சிலந்தியை வலை பின்ன வைக்கிறாரே! இன்று நான் பிழைக்கப் போவதில்லை" என்று தனக்குள்ளாக சொல்லிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த எதிராளிகள் குகையின் முன்னிருந்த சிலந்தி வலையைக் கண்டவுடன், அங்கு பல நாட்களாக எந்த மனித நடமாட்டமும் இல்லை என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து கடந்து சென்றனர். அந்த வீரரின் உயிர் பாதுகாக்கப்பட்டது.
வாழ்வின் பல நேரங்களில் பல பெரிய சோதனைகளையும், ஆபத்துகளையும் சந்திக்கும்படியான சூழல் வரும்பொழுது, நாம் பயந்து விடுகிறோம்; தேவன் நம்மைக் கைவிட்டாரோ என்று நினைத்து விடுகிறோம். ஆனால் *தேவனோ நாம் எதிர்பார்த்திரா வழிகளில் ஒரு சிறிய, அற்பமான காரியத்தைச் செய்து நம்மை அந்தப் பெரும் சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பார். நம்முடைய எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் தேவனால் எளிமையாய் தீர்க்க முடியும்.* அவரையே விசுவாசிப்போம். *கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்.* (2 நாளாகமம் 14:11) ஆமென்.
----------