03/12/2024
புனித பிரான்சிஸ் சவேரியார் வாழ்க்கை வரலாறு
உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார்.
இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே ஸ்பானிஷ் (SPANISH) மற்றும் பாஸ்க் (BASQUE) மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
பிரான்சிஸ் சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, பிரான்சிஸ் சவேரியார் உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பை தொடர வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530 முதல் 1534 வரை அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார்.
1925ஆம் ஆண்டு பிரான்சிஸ் கல்லூரியில் பயிலும்போது பியர் பாவர் (Pierre Favre) வுடன் நண்பரக்கிறார். இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய "இனிகோ' என்ற "லொயோலா' என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அதே கல்லூரியில் படிக்க சேர்கிறார். இனிகோ ஒரு முன்னால் படைவீரர். ஆனால் இப்போது கடவுளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது "பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?'' என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.
ஒரு நாள் சவேரியார், "தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்' என்ற அணையாத தாகத்தைப் பெற்றார். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்த்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்றனர்.
இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக பட்டம் பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் தேதி நிறைவேற்றுகிறார்.
பின்னர் இவர்கள் போப் மூன்றாம் சின்னப்பரை சந்தித்து இறைபணி செய்வதற்க்கான தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். இந்த வேளையில் போர்த்துகீசிய மன்னன் அப்போது தங்கள் கீழ் இருந்த நாடுகளுக்கு குருக்களை தந்துதவும்படி வேண்டுகிறார். இதன்படி புனித சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலணி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
புனித சவேரியார் 1540இல் ரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பன் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு 1542 மே மாதம் 6ஆம் தேதி கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் கோவாவிலிருந்து கேரளா வழியாக தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இறைப்பணியாற்றினார் சவேரியார். குறிப்பாக கன்னியாகுமரி, கோட்டயம், குளச்சல், ஆலந்தலை, தூத்துக்குடி மற்றும் மணப்பாடு பகுதிகளில் தங்கி இறைப் பணியாற்றி வந்தார். இங்கு கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்திகளை கூறியும் நோயாளிகளை சந்தித்தும் வந்துள்ளார்.
மணப்பாட்டில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு, கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன் தண்ணீர் உப்பு இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாக இருக்கிறது. 1545ல் சென்னை மயிலாப்பூரில் ஐந்து மாதங்கள் பணியாற்றினார் சவேரியார். பிறகு 1545ஆம் ஆண்டு "மலக்கா' தீவிற்கு பயணம் செய்தார். பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை கடலில் விழுந்துவிடுகிறது. ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்த சிலுவையை கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. மலக்காவிலும் இறை பணியாற்றினார். 1549-ல் ஜப்பான் சென்று, அங்கும் இயேசுவின் பணியைச் செய்து வந்தார்.
சவேரியாருக்கு, "எப்படியும் சீனாவிற்கு செல்ல வேண்டும்; அங்கும் இயேசுவின் அன்புப் பணியை செய்ய வேண்டும்' என்ற ஆசை இருந்தது. அதன்படி 1552ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் நாள் சவேரியார் சீனாவிற்கு புறப்பட்டார். ஆனால் செல்லும் வழியில், சான்சியான் தீவில், 1552-ம் ஆண்டு- நவம்பர் 21ஆம் நாள், நோயுற்றுப் படுத்தார். காய்ச்சல் தீவிரமடைந்தது. அவருக்கு உதவியாக "அந்தோணியோ' என்பவர் கூடவே இருந்தார். 1552ஆம் ஆண்டு, டிசம்பர் 3ம் நாள், சவேரியார் தனது கையில் வைத்திருந்த சிலுவையை தூக்கிப் பிடித்தவராக, ""ஆண்டவரே! உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்! நான் ஒரு போதும் வெட்கமடைய விடாதேயும்'' என்ற வசனத்தை சொன்னவாறே தனது உயிரை இறைவன் கையில் ஒப்படைத்தார்.
இறந்த புனிதரின் உடல், முதலில் சான்சியன் தீவில் அடக்கம் செய்யப்பட்டது. 1553ம் ஆண்டு, பிப்ரவரி 17ம் நாள், சாந்தா குரூஸ் கப்பல் அங்கிருந்து புறப்படும்போது, சவேரியாரின் கூடவே இருந்த அந்தோணியோ, புனிதரின் கல்லறையைத் தோண்டி அவரது எலும்பையாவது இந்தியாவிற்கு கொண்டு செல்வோம் என்று முயற்சித்தார். அப்போது மிகப் பெரிய அதிசயம் அங்கே நிகழ்ந்தது. சவேரியாரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்பட்டதோ, அதேபோல இருந்தது.
எந்தவித மாற்றமோ, துர்நாற்றமோ இல்லை. 1554ஆம் ஆண்டு, மார்ச் 16ஆம் நாள், சாந்தா குரூஸ் கப்பலில் புனிதரின் உடல், கோவா கொண்டு வரப்பட்டது. "பாம் இயேசு தேவாலயத்தில்' மிகவும் பாதுகாப்புடன், கோவா அரசாங்கத்தின் உதவியுடன் இன்றுவரை அந்த உடல் பாதுகாக்கப்படுகிறது. அந்த அழியாத புனிதரின் உடல், பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றது. இந்தப் புனிதரிடம் யார் விசுவாசத்துடன் கேட்டாலும் அதை அவர்கள் கட்டாயம் அடைவார்கள்.
புனித பிரான்சிஸ் சவேரியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். . .