01/04/2020
ஜார்ஜ் டி பீட்டர்!
இந்தப்பெயரை பொறையார் TBML கல்லூரியில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை படித்த அனைத்து மாணவர்களும் அறிவர்.
அது 1985-ஆம் ஆண்டு. நான் பி. எஸ். சி. கணிதம் சேர்ந்த ஆண்டு. கல்லூரியில் சேர்ந்த இரண்டாவது நாள் சீனியர்களாக இருந்த திரு. ஜான்சன் ஜெயக்குமார், திரு. பென்னி அன்புராஜ், திரு. டோனி ஜெயசீலன் ஆகிய மூவரும் என்னையும், கருணைவேந்தன், பாபு தேவ இரக்கம் ஆகிய மூவரையும் வெள்ளிக்கிழமை மாலை ஆராதனை வேளையில் பாடகர் குழுவில் சேர்ப்பதற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பேராசிரியர் ஜார்ஜ் டி பீட்டர் அவர்கள் முன்பு நிறுத்தினர்.
இப்படித்தான் நாங்கள் மூவரும் பாடகர் குழுவில் சேர்ந்தோம். அதுதான் அவருக்கும் எங்களுக்குமான முதல் அறிமுகம். அதுமுதல் நான்மட்டும் ஐந்து ஆண்டுகள் அவரோடு பயணித்தேன்.
பொறையார் தசுலுதி பெத்லகேம் ஆலயத்தின் Choir Master அவர். நான் அங்கு சேர்ந்த சில வாரங்களிலேயே எனக்கு புதிய பொறுப்பைத் தந்தார்
அது ஆலயம் முடிந்தவுடன் பாடகர் குழு உறுப்பினர்களுக்கு தேநீர் வழங்கும் பொறுப்பு. அந்த நாள் முதல் அவர் என்னை எனது பெயரைச் சொல்லி அழைத்தது இல்லை. TMS என்றுதான் அழைப்பார். அதாவது Tea Master Sathianesan என்பதன் சுருக்கமே TMS .
ஞாயிறு ஆராதனை முடிந்தவுடன் அவரும் பேராசிரியர் எட்வின் வில்லியம் இருவரும் இணைந்து கரும்பலகையில் மேற்கத்திய இசைக்குறிப்புகளை எழுதிப்போட்டு அவற்றைப் பாடும் முறைகளை (notes/counts) புதிய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். அப்படிக் கற்றவர்களுள் நானும் ஒருவன்.
அங்குதான் நேரம் தவறாமையைக் கற்றுக்கொண்டேன். 8:00 மணிக்கு இருக்கச் சொன்னால் 7:59-க்கு இருக்கவேண்டும் என்ற மந்திரம் கற்றுக்கொண்டது அவரிடம்தான். அதை இன்றுவரை நான் கடைபிடிக்கிறேன் என்பது மிகப்பெரிய விஷயம்.
பாடகர் குழுவில் எல்லோரையும் சமமாக நடத்துவதில் அவருக்கு நிகர் அவர்தான். யாருக்கும் சாதகமாகவோ யாருக்கும் பாதகமாகவோ நடந்துகொள்ளவே மாட்டார். தனது வருத்தத்தைக்கூட சாதாரணமாக தோளை உலுக்கி தனது இரு கைகளையும் விரித்து "ப்ச்" என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துவிடுவார். அங்கேதான் மோசார்ட் என்ற கலைஞனின் இசையை அறிமுகப்படுத்தி எங்களையெல்லாம் பாடவைத்தார். எத்தனை அருமையான வாய்ப்பு தெரியுமா அது!
ஜான்சன் அண்ணன், ஜேம்ஸ் அண்ணன், பென்னி அண்ணன், டோனி, புனிதா அக்கா, கண்மணி அக்கா, ஜான் அண்ணன், அஜந்தா தேவி, பேராசிரியர் ஜார்ஜ் டி பீட்டர் அவர்களின் பிள்ளைகள், என்று ஒரு பெரிய பட்டாளமே பாடகர் குழுவில் இருந்தது.
1988--ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் United Carol பாடல்களை திருச்சி வானொலி நிலையத்திலிருந்து வந்து ஒலிப்பதிவு செய்து பின்னர் வானொலியில் ஒலிபரப்பினர். அப்போது அந்தப் பாடல்களில் சிலவற்றை சகோதரர் ஜெய்சிங் (டிபிஎம்எல் கல்லூரி பணியாளர்) அவர்கள் எழுதினார்.
சகோதரர் மறைந்த பெஞ்சமின் ஜெயராஜ் மற்றும் பேராசிரியர் வசீகரன் வில்லியம் இருவரும் கீபோர்ட் வாசிப்பார்கள். எத்தனை அழகான காலங்கள் அவை! நினைவுகள் நெஞ்சை உருக்குகின்றன!
அதோடு எனக்கு பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் ஆங்கிவம் எடுத்தார். அப்போது அவர் அடிக்கடி சொல்லும் வாசகம் எனக்கு மகன் பிறந்தால் அவனுக்கு யூதாஸ்காரியோத்து என்று பெயர் வேப்பேன் என்பது. என்ன காரணம் எனத் தெரியாது. ஆனால் சொல்வார்.
NCC --யிலும் ஒருவருடம் அவரிடம் பயிற்சி பெற்றேன். நேரம் தவறாமை என்ற மந்திரத்தை அவரிடம்தான் கற்றுக்கொண்டோம். அவரிடம் பழகிய யாருக்கும் அவரது பெரும்பாலான குணங்கள் ஒட்டிக்கொள்ளும். Such a wonderful person.எந்த இடத்திலும் மனிதநேயத்தோடு நடந்துகொள்ளும் மாமனிதர். இது புகழ்ச்சிக்காக சொல்லப்படுகிற வார்த்தை அல்ல. உணர்ந்து சொல்லப்பட்ட வார்த்தை.
அவரது துணைவியார பிரேமா அம்மாவும், பேராசிரியர் ஜார்ஜ் டி பீட்டர் அவர்களும் மிகச்சிறந்த இணையர். சார் தடாபுடா என்றாலும் அம்மா அவர்கள் மிகப் பொறுமையாக சூழலை எதிர்கொள்வார்கள். எவரைவிடவும் அவருக்கு உண்மையான இழப்பு என்றே நான் உணர்கிறேன். பேராசிரியர் ஜார்ஜ் டி பீட்டர் அவர்களைப்பற்றி சொல்ல இன்னும் எத்தனையோ செய்திகள் உண்டு. அவரை எந்த வார்த்தைகளால் உருவகப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. எந்த வார்த்தைக்கும் பொருந்தாத அற்புத மனிதர் அவர். நினைகளில் என்றும் வாழ்வார்.
நேசங்களுடன்
சத்யா பெ. சத்தியநேசன் பெரம்பலூர்.