13/10/2016
ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!
07•09•2016,
புதன்கிழமை,
குருஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.
(60) மனிதனே புனிதன் --
தியானக் கூட்டம்.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
அமைதியையும், நிம்மதியையும் விரும்பாதவர்கள் யார்? அவைகளை அடைவதற்கு உரிய வழிகள் மிகவும் சுலபமானவை என்று பேசிக் கொள்பவர்கள் ஏராளம்! ஆனால் அடையும் வழிகள் பற்றியோ ஒன்றும் பேசமாட்டார்கள். இது எல்லாவற்றையும் விடச் சுவாரஸ்யமானவை,
மற்றவர்களைவிடத் தாங்கள் தான் உலகிற் சிறந்த மேதாவிகள் என்ற எண்ணத்தில் "நான் சொல்வது புரிகிறதா? " என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் போது அடிக்கடி கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.
வாழ்வில் நாம் பல விஷயங்களைப் பலரிடமும் பேசிவிட்டு, ஏன்தான் இப்படிப் பேசினோம் என்று பல தடவைகள் வருத்தம் வேறு பட்டிருப்போம். எதைப்பற்றிப் பேசுவதானாலும், பேசுவதற்கு முன்பு, இந்த விஷயத்தை இவரிடம் 'சொல்லலாமா, அல்லது பேசக்கூடாதா' என ஒரு தடவை சிந்தித்துப் பார்த்து விட வேண்டும்.பிறகு பேசுவோமேயானால் அதனால் எந்தவிதத் துக்கங்களும், வருத்தங்களும் அவரிடம் சென்றடையாது.
அதையும்விடக் காலநேரம், இடம், பொருள் அறிந்த பிறகே நாம் வார்த்தைகளை வெளியில் விட வேண்டியது அவசியம் என்பதை உணர்தல் அவசியமானதாகும். அதனால் நமது, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சியும கூடக் காப்பாற்றப் பட்டிருக்கும்.
பிறர் நம்மிடம் பேசும் போது பேசுவதைப் கேட்டுக் கொண்டும், கவனித்துக் கொண்டுமிருத்தல் மிகவும் அவசியமானது. பிறர் பேசும்பொழுது, இடையிடையே ஏதாவது மறுத்துப் பேசாமல் இருப்பது மிகவும் அத்தியாவசியமானது. இதை ஒருமுறை கடைப்பிடித்துப் பார்த்தோமானால், நம்முடைய அமைதி எங்கே மறைந்து இருந்தது என்பதைக் கண்டு பிடித்து விடுவோம்.
பிறகு யாரும், எதையும், எப்பொருளையும் பற்றிப் பேச வரும் போது, அவர்களுக்கு மதிப்புக் கொடுத்து, மறுத்து எதிர் வார்த்தையாடாமல் பொறுமை காத்திட வேண்டும். அமைதியை, சந்தோஷத்தை நாம் நம்மிடம் தக்கவைத்துக கொள்ள இதைக் கைக்கொள்ள வேண்டும்.
புத்தியுள்ளவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். மனதைத் திருத்தி அமைத்து நன்மையைப் பெறுவார்கள். தனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துவிட்டால், மற்றவர்கள் பேச வரும் போது, மறுத்து மறுத்துப் பேசிக் கொண்டிருப்பவர்கள் உலகின்
உண்மையாகிய நிம்மதியை உணராதவர்களே. காலம் அவர்களுக்கு அமைதியைத்தரத் தயாராகவே உள்ளது. ஆனால் அதில்தான் இறையருள் முழுமையாக உள்ளது என அவர்களும் உணரும் காலம் வெகு அண்மையில் தான் இருக்கிறது. தேடி அடைய முயற்ச்சிக்க வேண்டுமல்லவா?
உலகில் உள்ள எல்லா இறை மார்க்கங்களும் சொல்லுகின்ற ஒரே உண்மை இயற்கையின் இயல்பு நிலையில் ஒத்து வாழ்தல் என்பதே. தீமை சக்திகள் மனிதனை, இறை நெறியில் செல்ல முயல்பவனை, தடுத்து தவறான பாதைக்கு அழைத்துச் சென்று விடுகின்றன. இதில் எத்துனை ஜாக்கிரதையாக வாழ வேண்டிய கட்டாயம் நியாயமாக, அவசியமாக ஏற்படுகிறது. உண்மையை உணர்வோம்! இறையருளை நாடுவோம்!
நமது சுவாமி அவர்கள் டாக்டர் திரு.ராஜசேகரன் அவர்களை ஒரு மாலை நேரம் சந்திக்கப் போனார். நல்ல விஷயங்கள், ஆன்மிக சம்பந்தப்பட்ட பல தகவல்களின் சுரங்கமாக அவர் அந்த சமயத்தில் திகழ்ந்தவர். பொள்ளாச்சி பாம்பே டையிங் அருகே அவரது மருத்துவ ஆலோசனைகள் கூடத்தில் வைத்து மீண்டும் ஒரு சந்திப்பு ஆக்கபூர்வமாக நிகழ்ந்தது. டாக்டரும் சுவாமியும் மனம்திறந்து உரையாடினார். சுவாமியைப்பற்றி எல்லா விஷயங்களையும் கேட்டறிந்து கொண்டார். சுவாமி தியானத்தில் இருப்பவர் என்று தெரிய வந்ததும் அவர் முகத்தில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.
டாக்டர் திரு. ராஜசேகரன் அவர்கள் ஒரு முக்கிய தகவலைத் தந்தார். "பொள்ளாச்சி சொளடேஸ்வரியம்மன் கோயிலில் தேவாங்கர்குல சமூகத்தினர், வாரவழிபாடாக கூட்டுதியானம் செய்து வருகின்றனர். இதில் யார் வேண்டுமானாலும் கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொள்ளலாம். வரும் ஞாயிறன்று எல்லோரும் சேலத்தில் நடைபெற்ற பெறும் ஒரு விஷேசத்தில் கலந்து கொள்ளச் செல்கின்றனர். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்போம். உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள். அவர்களிடம் உங்களைப் பற்றிய தகவல்களைச் சொல்லி வைக்கிறேன்.நன்றி " என்று அவர் கூற சுவாமியும் நன்றி சொல்லி விடை பெற்றுக் கொண்டார்.
குறிப்பிட்ட கிழமையில் மாலை ஐந்து மணிக்குச் சென்ற சுவாமிக்கு, அங்கு யாரும் காணப்படாததால் டாக்டரைப் பார்க்கப் போனார். டாக்டர் அன்றைய தினம் வெளியூர் சென்றிருந்தார். அதற்கு அடுத்த வார ஞாயிற்றுக்கிழமை கோயிலில் சுமார் பத்துபேர் இருந்தனர். வசதி படைத்த அவர்களில் பெரும்பாலோர் பெண்கள். சுவாமிக்கு ஆச்சர்யம்!
(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)
நன்றி! வணக்கம்!
-- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.