14/04/2019
தென்னிந்தியத் திருச்சபை
Sunday, 14-April 2019, Palm Sunday
"ஓசன்னா! ஆண்டவரே எங்களை மீட்டுக்கொள்ளும்”
“Hosanna : Lord Save Us”
வேதபாடங்கள்
(1) சகரியா 9:1-12
(2) I தீமோத்தேயு 4:6-16
(3) லூக்கா 19:29-40
சங்கீதம் 118:19-29
மகிழ்விக்கும் மன்னா
"கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம்." சங்கீதம் 118 : 26
"ஓசன்னா! ஆண்டவரே எங்களை மீட்டுக்கொள்ளும்” என்பதே இந்த 2019 ம் ஆண்டின் குருத்தோலை ஞாயிறுக்கான நம்முடைய தென்னிந்தியத் திருச்சபையின் தியானத்தலைப்பு. கடந்துபோன ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும், நமக்கு ஒரு குருத்தோலை ஞாயிறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்த நாளை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல்; இந்த நாளுக்கான விசேஷித்த கிருபையை கர்த்தர் நமக்குக் கொடுக்கும்படி அவருடைய சமூகத்தில் நம்மை தாழ்த்தி காத்திருப்போம். நிச்சயமாகவே கர்த்தர் நமக்கு உதவி செய்வார். நம்மைக்குறித்த அவருடைய எதிர்பார்ப்புகளை அவருடைய வார்த்தைகளினால் வெளிப்படுத்துவார். நம்மை அழைத்த நோக்கத்தை அப்படியே நிறைவேற்றுவார். நம்மைக்கொண்டு அவர் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களையும் மிகவும் நேர்த்தியாக செய்துமுடிப்பார்.
நம்முடைய குறைவுகளின் / பெலவீனத்தின் / தேவைகளின் மத்தியில், ஆண்டவருடைய கிருபையை வேண்டி, அவரை புகழ்ந்து, அவரது நாமத்தை உயர்த்துவதே "ஓசன்னா" என்று அழைப்பதன் நோக்கம். அடிமைக்கட்டிலிருந்த ஜனங்கள், தங்களை மீட்டுக்கொள்ளும்படியான ஒரு இராஜாவை, மேசியாவை எதிர்பார்த்திருந்தார்கள். தீர்க்கதரிசிகளும் "தாவீதின் குமாரனுடைய வருகையை" தெளிவாக எடுத்துரைத்திருந்தார்கள். மேசியா வருவார்; நம்மை மீட்டுக்கொள்வார்; நமக்கு சமாதானம் தருவார்; சத்துரு நம்மை தொடாத வண்ணம் கடைசிவரை காத்துக்கொள்வார். இது தான் அன்றைய ஜனங்களின் எதிர்பார்ப்பு. சோர்ந்துபோயிருந்த அவர்களை உற்சாகப்படுத்தும்படியாக, பயந்துபோயிருந்த அவர்களை கர்த்தருக்குள் தைரிப்படுத்தும்படியான வார்த்தை தீர்க்கதரிசியின் மூலமாக வெளிப்பட்டது. "சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். (சகரியா 9:9). இந்த வசனத்தின் வெளிப்பாடு தான் "குருத்தோலை ஞாயிறு" என்பதை நாம் நன்கு அறிவோம். நீதியுள்ளவர்; இரட்சிக்கிறவர்; தாழ்மையுள்ளவர், தன்னை உலக இரட்சகராக உலகத்திற்கு அடையாளம் காட்டும்படி அன்றைக்கு தெரிந்து கொண்ட ஒரு கழுதையை குறித்து இன்றைக்கு தியானிப்போம். மறுபடியும் இந்த உலகத்தை நியாயம் விசாரிக்கும்படியாக வரப்போகிற நியாயாதிபதி இயேசுவை அடையாளம்காட்டும்படி அழைப்பைப்பெற்றிருக்கும் நாமும் இப்படித்தான் இருந்தாகவேண்டும் என்பதை இதன்மூலம் கற்றுக்கொள்வோம்.
கர்த்தரின் நாமத்தினால் வருகிறவரை சுமந்து கொண்டு வருவதற்கு தேவனாகிய கர்த்தர் எதற்காக; அழகான, திறமையான; பெலமுள்ள, பக்குவப்பட்ட குதிரைகளையெல்லாம் தள்ளிவிட்டு இந்த அற்பமான "கழுதையை" தெரிந்துகொள்ளவேண்டும்? இதோ பவுலடிகளார் சொல்லும் வசனங்களை வாசித்துவிடுவோம். "எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். மாம்சமான எவனும் தேவனுக்குமுன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார்." (I கொரிந்தியர் 1:26-29). கர்த்தர் நம்மை தெரிந்தெடுத்திருக்கின்றார் என்பதை அறிந்துகொள்வோம். மற்றவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்போது கழுதை ஞானியல்ல; குதிரையைக்காட்டிலும் பெலமுள்ளதல்ல; மானைக்காட்டிலும் அழகானதல்ல; அதன் உரிமையாளராக இருப்பவரும் மதிப்பிற்குரியவரல்ல; அற்பமானவர்களே. பிறரை நாம் திட்டுவதற்கு பயன்படுத்தும் ஒரு சாதாரணமான விலங்குதான் கழுதை. ஆம், அன்பானவர்களே இழிவான; அற்பமான; ஒன்றுமில்லாத; அசட்டைபண்ணப்பட்ட நாம் தான் "கர்த்தரை சுமப்பதற்கு" தகுதியானவர்கள் என்பதை நினைக்கும்போது இந்த நாள் மிகவும் விசேஷித்த நாளாகத்தான் தோன்றும். இந்த நாள் வரை உலகத்தின் வார்த்தைகளால் காயப்பட்டிருந்த நம்மை; அற்பமாக தூக்கியெறிப்பட்டிருந்த நம்மை; எந்த காரியத்திற்கும் பயன்படாதிருந்த நம்மை கர்த்தர் அவருடைய நாம மகிமைக்கென்று பயன்படுத்தும் நேரம் வந்துவிட்டதற்காக மனதார கர்த்தருக்கு நன்றி சொல்வோம்.
I - அறியப்பட்டிருந்த கழுதை (சகரியா 9:1-12)
சகரியா 9:1-12 வசனங்களில் சீயோன் குமாரத்தி மிகவும் களிகூரும்படியாகவும்; எருசலேம் குமாரத்தி கெம்பீரித்து மகிழும்படியாகவும் உலக இரட்சகர் கழுதையின் மேல் ஏறி வருவார் என்று மிகவும் தெளிவான ஒரு தீர்க்கதரிசனம் கொடுக்கப்படுகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த "கழுதையின்" தேவை மற்றும் பயன்பாட்டை ஆண்டவர் அறிந்திருந்தார். இன்றைக்கு அந்த கழுதை எந்த இடத்தில், எந்த வயதில்; யாரோடு; எந்த சூழலில்; எப்படி நின்றுகொண்டிருக்கின்றது என்பதை கர்த்தர் தம்முடைய சீடர்களில் இரண்டு பேருக்கு அடையாளம் காட்டுகிறார். "உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்" (லூக்கா 19:30). தன்னை மிகவும் நன்றாக அறிந்திருக்கிறவரை புரிந்துகொள்ளாத, அந்த கழுதை இதுவரை மிகவும் கவலையோடு தான் இருந்திருக்கும். நான் கட்டப்பட்டிருக்கின்றேனே; என்னை யாருமே பயிற்றுவிக்கவில்லையே; பயன்படுத்தவில்லையே; என்னுடைய படிப்பு, திறமை, ஆற்றல் எல்லாமே வீணாகிக்கொண்டிருக்கின்றதே; மதிப்பற்றவனாய் தெரு முனையில் நின்று நாட்களை நேரத்தை கழித்துக்கொண்டிருக்கின்றேனே, குடும்பத்தை சுமக்கவேண்டிய நான் குடும்பத்துக்கு சுமையாய் இருக்கிறேனே இப்படி பலவித எண்ணத் தாக்குதல்கள் மாறிமாறி அந்த கழுதையை வதைத்துக்கொண்டே இருந்திருக்கும். காரணம், நான் தேவனால் அறிந்துகொள்ளப்பட்ட கழுதை என்பதை அறிந்துகொள்ளாததால் தான். அந்த கழுதை என்றைக்கு; யாருக்கு; எப்படி; எந்த நேரத்தில் பயன்படவேண்டும் என்பதை எல்லாம் தாயின் கருவில் உருவாக்குவதற்கு முன்னரே கர்த்தர் அறிவார்.
ஆபிரகாமை; ஈசாக்கை ; யாக்கோபை; தாவீதை; தானியேலை; பேதுருவை; நாத்தான்வேலை, பவுலை இப்படி பலரையும் முன்கூட்டியே அறிந்திருந்த தேவனாகிய கர்த்தர் நம்மையும் நம்முடைய இந்த நிலையையும் நேர்த்தியாக அறிந்திருக்கின்றார் என்கிற நம்பிக்கை இப்போதே நம்மை பற்றிக்கொள்வதாக. நமக்குள் அசைக்கமுடியாத ஒரு பாதிப்பை இயேசுவின் நாமத்தினால் உண்டாக்குவதாக. ஆகையால் ஏற்ற காலத்தில் கர்த்தர் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கரங்களில் அடங்கியிருங்கள். "அந்திரேயா; முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம் என்கிறார்" (யோவான் 1:41-42) முதன் முறையாக இயேசு பேதுருவை பார்க்கிறார்; அவரது இன்றைய நிலையையும், இனி நிகழப்போகிறவைகளையும் சொல்லி தான் சகலவற்றையும் "அறிந்திருக்கின்றவர்" என்பதை பேதுருவுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் வெளிப்படுத்திவிட்டார்.
எந்த நேரத்தில் அந்த "கழுதை" பயன்படவேண்டும் என்று அறிந்திருக்கும் கர்த்தர் நம்மையும் அறிந்திருக்கின்றார் என்பதை ஒரு நாளும் மறந்துபோகவேண்டாம். முப்பத்தெட்டு வருடம் பெதஸ்தா குளத்தருகே படுத்திருந்தவனின் பெலவீனத்தை அறிந்திருந்தார்; சமாரியப் பெண்ணின் அந்தரங்க வாழ்வை அறிந்திருந்தார்; காட்டத்தி மரத்தில் ஏறி நின்ற சகேயுவின் ஆசையை அறிந்திருந்தார்; கூடவே இருந்து காட்டிக்கொடுக்க முயன்ற யூதாஸின் பொருளாசையை அறிந்திருந்தார்; வேலைக்காரிக்கு பயந்து இயேசுவை சபிக்கவும், இவரை அறியேன் என்று சத்தியம் பண்ணவும் காத்திருக்கும் பேதுருவின் ஆவிக்குரிய தோல்வியை அறிந்திருந்தார்; சீஷர்களை கொல்லும்படி கொலைவெறிகொண்டிருந்த சவுலின் வெறியை அறிந்திருந்தார்; ஜனங்களின் பசியை, வேதனையை, கண்ணீரை, அவமானங்களை, ஏமாற்றங்களை அப்படியே அறிந்திருந்தார். இப்படி எல்லாம் அறிந்தவரே நம்மையும் நம்முடைய நிலையையும் அறிந்திருக்கின்றார். ஆமென், அல்லேலூயா. "அந்த கழுதை" பிறப்பதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அதைக்குறித்து அத்தனை தெளிவான தீர்க்கதரிசனம் இருக்குமானால், நம்மைக்குறித்தும் தமது உள்ளங்கைகளில் எழுதிவைத்திருந்து; நம்மை முழுவதும் அறிந்தவர் நம்மோடிருக்கின்றார் என்பது எத்தனை மகிழ்ச்சியான அனுபவம் என்பதை நினைத்து பாருங்கள். நான் எந்த இடத்தில், எப்படி யாரோடு இருக்கின்றேன் என்பதை கர்த்தர் அறிந்திருக்கின்றார். யோசேப்பை எகித்தியன் வீட்டில் அறிந்தவர் பார்வோனுக்கு முன் உயர்த்தியவர் நமக்கும் அப்டியே செய்வார். இழிவான, அற்பமான, ஒன்றுமில்லாத நிலையில் கட்டப்பட்டிருக்கின்ற நம்மை; அறிந்திருக்கிறவர் நம்மை மீட்டுக்கொள்ளும்படியாக நெருங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதை உணர்ந்து; ஆவியில் பெலப்பட்டு கர்த்தரை முழு உள்ளத்தோடும் துதித்து மகிழ்வோம்.
II - அழைப்பைப் ஏற்றுக்கொண்ட கழுதை (I தீமோத்தேயு 4:6-16)
I தீமோத்தேயு 4:6-16 வசனங்களில் கர்த்தருடைய நாம மகிமைக்காக பயன்படும்படி அழைப்பைப்பெற்ற மனிதனின் ஆவிக்குரிய வாழ்வு எப்படி இருக்கவேண்டும் என்பதை பவுலடிகளார் மிகவும் அழகாக தீமோத்தேயுவுக்கு கற்றுக்கொடுக்கின்றார். "மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை (ஊழிய அழைப்பை/அபிஷேகத்தை) வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே." (I தீமோத்தேயு 4:14) என்பதுதான் தீமோத்தேயுவிற்கு பவுலடிகளாரின் போதனை. தொடர்ந்து வாசித்துப்பார்த்தால், "அழைப்பை ஏற்றுக்கொண்ட நீ" விலகியிரு; எச்சரிக்கையாயிரு; முயற்சிபண்ணு; போதித்துக்கொண்டிரு;விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு; ஜாக்கிரதையாயிரு; நிலைத்திரு என்று பவுல் புத்திசொல்லிக்கொண்டே இருப்பதை காணமுடியும். (Practice what you preach)
இங்கே, இந்த கழுதைக்கும் ஒரு அழைப்பு கொடுக்கப்படுகிறது. "அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்" (லூக்கா 19:30). இந்த நேரம் வரை அந்த கழுதை கட்டப்பட்டிருந்ததின் நோக்கமே "இந்த அழைப்பை" அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான். இயேசு சென்ற எல்லா இடங்களுக்கும் நடந்தோ, படவிலோ சென்றதாக வேதாகமத்தில் காண்கிறோம். இதுவரை இயேசுவுக்கு "கழுதை" தேவைப்படவில்லை. ஆனால், என்றைக்கு அந்த கழுதையின் பயன்பாடு இயேசுவுக்குத் தேவைப்பட்டதோ அப்போதே , அந்த கழுதைக்கு ஒரு “அவரச அழைப்பு” கொடுக்கப்பட்டுவிட்டது. இயேசுவின் முப்பத்து மூன்றரை வயதில் தான் , பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தீர்க்கதரிசனத்தின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட இந்த கழுதை தேவைப்பட்டது. கழுதை தனது அழைப்பின் அவசரத்தை புரிந்துகொள்ளவேண்டும். கால தாமதம் கூடவே கூடாது. ஏன் என்னை அப்போதே பயன்படுத்தவில்லை என்று யாரிடமும் எந்த கேள்வியும் கேட்க முடியாது. இதுவரை பயன்பாடற்ற நிலையில் இருக்கின்ற நாமும் இதன் பின்னணியை ஆவியானவரின் துணையோடு புரிந்துகொள்ளவேண்டும். "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் (?) அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்." (யோவான் 6:44). "மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் (?) தானாய் ஏற்படுகிறதில்லை." (எபிரெயர் 5:4). இதோ, இந்த கழுதை தன் அவசர அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கு அடையாளமாக "அவிழ்த்துக்கொண்டு வாருங்கள்" என்ற ஆண்டவரின் கட்டளைக்கு தன்னை முழுமனதுடன் விட்டுக்கொடுக்கிறது.
மத்தேயு 4 : 18-22 ல் சீஷர்கள் இயேசுவிடம் இருந்து அழைப்பைபெற்றபோது அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட நாம் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் கர்த்தருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு அவருக்காக பயன்படவேண்டும் என்பதை கொலோசெயர் 1:16 -17 வசனங்களில் அறிந்துகொள்ள முடியும். ஆபிரகாம் ஈசாக்கை தகனபலியாக செலுத்தும்படி அழைக்கப்பட்டபோது அப்படியே கீழ்ப்படிந்து புறப்பட்டார். எலியா, எலிசா, பேதுரு, பவுல் இப்படி பலரும் அழைப்பை ஏற்றதால் புறப்பட்டு சென்றார்கள். கர்த்தரிடத்திலிருந்து நமக்கு வரும் அழைப்பு நம்மை அவர் விரும்பும் காரியங்களுக்கு பயன்படுத்துவதற்கே என்பதை போதிப்பவர்கள் இன்றைக்கு மிகவும் குறைவு. அழைப்பு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வதற்கல்ல, பிறருக்கு ஆசீர்வாதமாக வாழ்வதற்கே என்பது தான் வேதாகமம் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம். பேதுருவின் அழைப்பைப் பாருங்கள் அழைத்தவர் கொடுத்த வரங்களின் வல்லமையை புரிந்துகொள்ளுங்கள். "பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்." (அப்போஸ்தலர் 4:13). நம்மை அழைத்தவரின் அழைப்பை ஏற்றுக்கொள்ளும்போது அதற்கேற்ற வல்லமையை வேறு யாரிடமும் எதிர்பாராமல் கர்த்தரே தரும்படி காத்திருங்கள். "கழுதை" தன் அழைப்பை ஏற்றுக்கொண்டு இயேசுவை சுமந்து சென்றது. நம்மை அழைக்கும் இயேசுவின் அவசரத்தை புரிந்துகொள்வோம். நம்மையும் நம்முடைய தேவைகளையும் பின்னுக்குத்தள்ளி, நாம் செயல்படவேண்டிய காரியங்களை கர்த்தருடைய நாம மகிமைக்காக செய்து "இயேசுவை உலகத்திற்கு அடையாளம் காட்டும்" பொறுப்பை நிறைவேற்றி முடிப்போம்.
III - அடையாளம் பெற்றுக்கொண்ட கழுதை (லூக்கா 19:29-40)
லூக்கா 19:29-40 வசனங்களில் "அது ஆண்டவருக்கு வேண்டும்" என்ற வார்த்தை எனக்குள் ஒரு ஆழமான பாதிப்பை உண்டாக்கிவிட்டது. இதுவரை இந்த கழுதை தன் பெலத்தால் நின்றது; விரும்பிய இடங்களுக்கெல்லாம் நடந்தது; தன் மனதில் நினைத்ததையெல்லாம் செய்தது. ஆனால், இன்றைக்கு இந்த கழுதை மேல் "அது ஆண்டவருக்கு வேண்டும்" என்ற அடையாளம் வைக்கப்பட்டுவிட்டது. இப்போதுமுதல், இந்த கழுதை எங்கே இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதும், அதனை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை முடிவு செய்வதும்; யாரெல்லாம் இதிலே ஏறி செல்லவேண்டும் என்பதை உறுதி செய்வதும் அதன் "எஜமான்" மாத்திரமே. இவரைக்காட்டிலும் நான் அதிகம் படித்தவன்; நான் வயதில் மூத்தவன்; அனுபவஸ்தன்; ஏராளமாய் அறிந்தவன் என்று இனி அந்த "கழுதை" சொல்லவே முடியாது. பவுலடிகளாரின் வார்த்தைகளை வாசித்துப்பார்ப்போம். "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்." (கலாத்தியர் 2:20)
ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்று சொன்ன பேதுருவின் அனுபவமும் இது தான். "நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைக் கட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர் வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறோருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்." (யோவான் 21:18). நான் "ஆண்டவருக்கு வேண்டும்" என்பதை புரிந்துகொண்ட கழுதை, இதுவரை பழக்கப்பபட்டிராத போதும், மிகவும் பக்குவமாய் இயேசுவை எருசலேமிற்குள் சுமந்துகொண்டு வந்தது. அன்று அந்த கழுதை அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. "அந்த கழுதையை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல்போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். " (லூக்கா 19:35-36). எத்தனை மரியாதையுடன், ஆரவாரத்துடன், கெம்பீரத்துடன் எருசலேமிற்குள் இயேசுவை அழைத்து வந்துவிட்டது இந்த கழுதை.
நான் மட்டும் அன்றைக்கு இயேசுவை சுமக்கவில்லையென்றால் உங்கள் அனைவருக்குமே "குருத்தோலை ஞாயிறு" என்று ஒன்று இருந்திருக்காது என்று அந்த கழுதை தன்னைப்பற்றி ஒருநாளும் பெருமையாக சொல்லக்கூடாது. "ஓசன்னா" என்ற வார்த்தையை எருசலேம் கேட்டிருக்காது என்று அந்த கழுதை சொல்லக்கூடாது. "தாவீதின் குமாரனை" யாருமே அறிந்திருக்க முடியாது என்று அந்த கழுதை சொல்லக்கூடாது. அன்றைக்கு என்னை அநேகர் அருகில் இருந்து மிகுந்த மதிப்போடும், மாலை மரியாதையோடும் அழைத்துக்கொண்டு போனார்கள், ஆனால், பணி முடிந்து திரும்பும்போது "ஒருவர் கூட என்னை விசாரிக்கவில்லையே" என்ற ஏமாற்றமும் அந்த கழுதைக்கு இருக்கவே கூடாது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பின் நற்செய்தியை அறிவிக்கும்படியாக பயன்படுத்தப்பட்ட "அந்த நட்சத்திரத்தின்" பக்குவம் நமக்கும் உண்டாகியிருக்கவேண்டும். சாஸ்திரிகளை, அழைத்து வருவதற்கு தான் கர்த்தர் அந்த நட்சத்திரத்தைப் பயன்படுத்தினார். அவர்கள் திரும்பிப் போவதற்கோ தேவன் கர்த்தருடைய தூதனைப் பயன்படுத்தினார். பிறரை நமக்குப் பதிலாக தேவன் பயன்படுத்தும் போது நமது நிலை என்ன? கர்த்தாவே, நீர் எம்மட்டும் என்னைப் பயன்படுத்த விரும்புகின்றீரோ, அந்தமட்டும் என்னைப் பயன்படுத்தும் என்று பூரணமாக ஒப்புக்கொடுப்போம். நம்மைத் தவிர்த்து பிறரை பயன்படுத்தும்போது ஒருநாளும் அதற்காக கலங்கி நிற்கவேண்டாம். சாஸ்திரிகளை அழைத்துவந்த நட்சத்திரத்தால் அவர்களை மறுபடியும் வேறுவழியாக நடத்திச்செல்லமுடியும். ஆனால், அதற்கு தேவன் அதைப் பயன்படுத்தவிரும்பவில்லை. அதனை நாம் புரிந்துகொண்டால் நமக்கு ஒரு குழப்பமும் இல்லை. இன்றைக்கு நாம் இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒருவர் இருப்பதை பார்க்கும் போது நமது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள். இயேசுவுக்கு சொந்தமானவர்கள் என்ற முத்திரையை பெற்றுக்கொண்ட நாம் இன்றைக்கு யாருடைய அடையாளங்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்? நம்மை காண்கிறவர்கள் நம்மில் யாரைக் காண்கிறார்கள்? கடந்த வாரத்தில் "சிலுவையும் சீடத்துவத்தின் முன்னுதாரணமும் என்பதை கற்றுக்கொண்ட நாம் இன்றைக்கு யாருடைய சீடர்களாக வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் என்பதை கொஞ்சம் சிந்தித்துப்பார்ப்போம்.
அன்பானவர்களே, நாம் நம்மை படைத்த தேவாதி தேவனால் அறியப்பட்டிருக்கிறோம் என்பதை விசுவாசிக்கிறவர்கள் எதற்குமே கவலைப்படமாட்டார்கள். கர்த்தர் நமக்காக யாவையும் செய்து முடிப்பார். தங்கள் தேவைகளை, உணர்வுகளை, கிரியைகளை அறிந்திருக்கிறவரின் கரங்களில் நாங்கள் இருக்கின்றோம் என்கிற நம்பிக்கை அவர்களை ஒருநாளும் வெட்கப்படுத்தாது. நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பதை விசுவாசிக்கிறவர்கள் அவரே நமக்கு தேவையான பெலத்தை, அபிஷேகத்தை, ஊழிய வரங்களை, சூழ்நிலை சாதகங்களை கிருபையாக கொடுப்பார் என்பதை அனுபவிக்கிறபடியால் ஒருநாள் சோர்ந்துபோகவேமாட்டார்கள். நெடுங்காலமாய் காத்திருப்பது இருதயத்தை இளைக்கப்பண்ணும் விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். கர்த்தரே எங்கள் பெலன் என்பதே அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கும். நாம் "இயேசுவுக்கு வேண்டும்" என்பதை புரிந்துகொண்டவர்கள், மனிதரை பிரியப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. கர்த்தரின் சாட்சியாக கடைசிவரை வாழ்ந்துவிடுவார்கள். இந்த "கழுதையின்" அனுபவம் நம்மை உற்சாகப்படுத்தியதற்காக கர்த்தருக்கு நன்றிசொல்லி, நம்மை மீட்டுக்கொண்ட அவருடைய நாமத்தை "ஓசன்னா" என்ற ஆர்ப்பரித்து மகிழ்வோம் வாருங்கள்.
-Bro.KING SOLOMON.