தலபெருமை:
இழந்தது கிடைக்க வழிபாடு: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய திசையில் (வடகிழக்கு) அமைந்த தலம் இது. முருகன் சன்னதிக்கு வலப்புறம் விஸ்வநாதர் இருக்கிறர். அருகிலேயே தென்திசை நோக்கி விசாலாட்சி சன்னதி உள்ளது. பொருளை இழந்தவர்கள் மீண்டும் கிடைக்கவும், தெரிந்தோ, தெரியாமலோ பதவியிறக்கம் அல்லது வேலை இழந்தவர்கள் மீண்டும் பணி கிடைக்க சிவனுக்கு வஸ்திரம் அணிவித்து,பொங்கல் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
விசாலாட்சி அம்பிகைக்கு வடை, சர்க்கரைப்பொங்கல் படைத்து லலிதா சகஸ்நாமம் பாராயணம் செய்து வணங்குகின்றனர்.
விசேஷ பிரம்மா:
இந்திரன், இங்கு கார்த்திகை முதல் ஞாயிற்றுக் கிழமையில் வணங்கி அருள் பெற்றானாம். எனவே, இந்நாளில் இங்கு வழிபடுவது விசேஷம். கார்த்திகை திங்களில் 108 சங்காபிஷேகமும் நடக்கும். சிவன் கோயில்களில் கோஷ்டத்தில் (சுற்றுச்சுவர்) பிரம்மா, நின்ற நிலையில்தான் இருப்பார். இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி, வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிக விசேஷம். அருகிலுள்ள துர்க்கை எட்டு கைகளுடன் காட்சியளிப்பது மற்றொரு சிறப்பு. வளர்பிறை அஷ்டமியன்று இவளுக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும்.
தேன் பிரசாதம்:
முத்துக்குமரர் முன்புறம் ஐந்து, பின்புறம் ஒன்று என ஆறு முகங்களுடன், இந்திர மயில் மீது அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். கிருத்திகை நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். செவ்வாய் தோறும் இவருக்கு "சத்ருசம்ஹார திரிசதி" அர்ச்சனை நடக்கிறது. அப்போது, முருகனின் ஆறு முகங்களுக்கும் செவ்வரளி மாலை அணிவித்து, தனித்தனியே தீபாராதனை செய்து, தனித்தனி நைவேத்யத்துடன் பூஜை நடக்கும். ஆறு செவ்வாய் கிழமை தொடர்ந்து இப்பூஜையினை தரிசனம் செய்து வர சத்ரு நிவர்த்தி எதிரி பயம் நீங்கும். இவ்வேளையில் இவருக்கு பிரதானமாக தேன் படைத்து, அதையே பிரசாதமாகத் தருவர். மலைப்பகுதியில் பிறந்த வள்ளியின் கணவன் என்பதன் அடிப்படையில், தேன் படைக்கின்றனர்.
அமாவாசை பூஜை:
முன் மண்டபத்தில் 18 படிகளுடன் ஐயப்பன் சன்னதி உள்ளது. தமிழ் மாத பிறப்பு நாட்களில் இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அப்போது சுவாமி பிரகார வலம் வருவார். முன் மண்டபத்தில் உள்ள நடராஜர், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை என வருடத்தில் இருமுறை புறப்பாடாவார். வழக்கமாக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி நாட்களில் தான் விசேஷ பூஜை நடக்கும். இங்கு, அமாவாசையன்று இரவில் பூஜை நடக்கிறது. பிரகாரத்தில் ஐந்து தலை நாகத்தின் கீழே ஐந்து நாகங்களுடன் நாகராஜா சன்னதி உள்ளது. இருபுறமும் இரண்டு நாக கன்னிகள் உள்ளனர். நாகதோஷம் மற்றும் களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளோர் நாகருக்கு தாலி மற்றும் சிவப்பு வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். பிரகாரத்தில் ஆதிவிநாயகர், பாலசுப்பிரமணியர், மகாலட்சுமி, சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னதிகள் உள்ளன.