தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள்
15. திருத்துறையூர் ( திருத்தளூர் )
மூலவர் – சிஷ்டகுருநாதேஸ்வரர் ( பசுபதீஸ்வரர் )
அம்பாள் – சிவலோகநாயகி ( பூங்கோதைநாயகி )
தலமரம் – கொன்றை மரம்
தீர்த்தம் – சூரிய தீர்த்தம்
புராண பெயர் – திருத்துறையூர்
ஊர் – திருத்தளூர்
மாவட்டம் – கடலூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர்கள் – சுந்தரர்
• தேவாரப்பாடல் பெற்ற நடுநாட்டுத்தலங்களில் 15 வது தலம் இது
• சுந்தரர் தவநெறி
வேண்டிப்பெற்ற தலம்
• அருணந்தி சிவாச்சாரியார் பிறந்த தலம். இவருடைய சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில் அமைந்துள்ளது
• நாரதர் , வசிஷ்டர் , அகத்தியர் , பீமன் , சூரியன் , ராமர் , சீதை , பிரம்மன் , திருமால் முதலியோர் வழிபட்ட தலம்
• பெண்ணையாற்றின் தென்கரையில் உள்ள சிறிய ஊரில் அமைந்துள்ளது இச்சிவத்தலம். சுந்தரர் காலத்தில் தென்பால் ஓடிய பெண்ணையாறு தற்போது வடபால் ஓடுகின்றது. பழைய பெண்ணையாறு மலட்டாறு என்ற பெயரில் தென்பால் உள்ளது.
• கோயிலுக்கு எதிரில் தீர்த்தக்குளம் உள்ளது
• இத்தலத்திற்கு வந்த சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடமான கிழப்பாக்கம் இத்தலத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இக்கிழப்பாக்கத்தில் சிவலிங்கத்திருமேனியும் , கோவிலும் உள்ளன.
• சுந்தரரை ஆட்கொண்ட திருவடிவங்களே பசுபதீஸ்வரர் , பூங்கோதைநாயகி
• இத்தலத்தில் உள்ள அஷ்டபுஜ பத்ரகாளி சந்நிதி மிக விசேஷமானது. இச்சன்னிதி கோயிலுக்கு வெளியே தனியாக அமைந்துள்ளது. பௌர்ணமி நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன
• சிவனார் பெரிய லிங்கத்திருமேனியராக கம்பீரமாக ஆவுடை வலப்பக்கம் கொண்டு மேற்கு நோக்கியும் , அம்பாள் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கியும் தரிசனம் தருகின்றனர்
• கோபுர நுழைவுவாயிலைக் கடந்ததும் வலப்புறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளது
• நடராஜார் சபை
• சிவனார் சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம் இது. ரிஷபாரூடர் சுந்தரருக்கு அருள்செய்த திருக்கோலமும் , சுந்தரர் கைகூப்பி வணங்கும் நிலையும் கொண்ட வடிவங்கள் கோயிலில் உள்ளன
• உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம் அழகு நிறைந்தது
• கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பமாக உள்ளது. இம்மண்டபத்தின் வலப்புறம் நால்வர் சந்நிதி உள்ளது
• வெளிப்பிரகாரத்தில் நவக்கிரகங்கள் , பைரவர் , சூரியன் , ராமர் மற்றும் பீமன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகளின் சந்நிதிகள் , சூரியனின் சந்நிதி முதலியவை உள்ளன
• வரதராஜப்பெருமாள் சந்நிதி சிறப்பானது
• கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் , தட்சிணாமூர்த்தி , லிங்கோத்பவர் , பிரம்மா , துர்க்கை முதலியோர் திருக்காட்சி
• நர்த்தன விநாயகர் தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி திருக்காட்சி தருகிறார்
• புகழ்ப்பெற்ற குருத்தலங்களில் இத்தலமும் ஒன்று
• தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம் சாட்சி விநாயகருடன் உள்ளது
• அம்பாள் சந்நிதி எதிரில் தலமரம் உள்ளது. இத்தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி உள்ளது
• வைகாசியில் பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது
• வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம் , திருவாதிரை , நவராத்திரி , மகாசிவராத்திரி , கார்த்திகை தீபம் , கந்தசஷ்டி , ஐப்பசி அன்னாபிஷேகம் முதலான உற்சவங்களும் சிறப்புடன் நடைபெறுகின்றன
• வியாழக்கிழமைகள் மிக விசேஷமானவை
• பிரதோஷத்தின் போது நந்திக்கு அருகில் நந்திக்கொடி கட்டப்பட்டு நந்திக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்க ஒன்று
• சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு நடைபெறுகிறது
• கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்க வழிபடவேண்டிய தலம்
• தேரடி விநாயகர் மூன்றடி உயரத்தில் பெரிய வடிவினராக திருக்காட்சி தருகிறார்.
• புரட்டாசி மாத பூர நட்சத்திரத்தன்று அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை நடைபெறுகிறது
• அருகில் திருநாவலூர் , திருவதிகை , திருமாணிக்குழி , திருவடுகூர் , திருப்பாதிரிப்புலியூர் ( கடலூர் ) முதலான தேவாரத்தலங்கள் உள்ளன
தரிசன நேரம்
காலை 06:00 am – 1௦:00 pm &
மாலை 05:00 pm – 08:00 pm
தொடர்புக்கு
04142-248498 ,
94448-07393
பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்
பண்ருட்டி துணை மின் நிலையம் உள்ள இடத்தில் வலப்பக்கமாக செல்லும் சாலையில் சென்று , தேர்முக்கு உள்ள இடத்தில் இடப்பால் செல்லும் சாலையில் ( பண்ருட்டி – அரசூர் வழி: புதுப்பேட்டை )சுமார் 10 கிமீ சென்று மீண்டும் கரும்பூர் சாலையில் திரும்பி சுமார் 5 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்.
சென்னை – கும்பகோணம் புறவழிச் சாலையில் பெண்ணையாற்றை கடந்து கன்றக்கோட்டை வழியாக சுமார் 3 கிமீ சென்றால் இத்தலத்தை அடையலாம்