23/03/2018
இன்றைய தியானம் 23-03-2018
“நீங்கள் வளரும்படி,… திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.” –1பேதுரு 2:3
பிறந்த குழந்தை பல பருவங்களைக் கடந்து, வளர்ந்து முதிர்வயதையடைவதைப்போல, ஆவியில் பிறந்தவனும் வளர்ந்து முதிர்ச்சியடைவதே ஆவிக்குரிய வளர்ச்சியாகும். இந்த ஆவிக்குரிய வளர்ச்சியிலே, அநேகர் ஆங்காங்கே வளராமல் நின்றுவிடுகிறோம். இன்றைய தியானத்திலே நாம் எந்த பருவத்தில் இருக்கிறோம் என்பதைக் கண்டுகொள்வோம்.
குழந்தைப்பருவம்: நம்மை துன்புறுத்துபவர்களிடம், கடினமாய்ப் பேசுபவர்களிடம் சற்றும் யோசிக்காமல் உடனுக்குடன் பழிவாங்க நினைப்போம். எல்லாம் எனக்குத்தான் சொந்தம் என்று சுயநலமாய் காணப்படுவோம். உபதேசத்திலே எது சரி, தவறு என எதையும் பிரித்தறியத் தெரியாமல் எல்லாவற்றையும் கேட்டு, குழப்பமடைகிறவர்களாய் காணப்படுவோம். அப்படியென்றால் இன்னும் குழந்தையாகவே இருக்கிறோம்.
பிள்ளைப்பருவம்: நம்மிடம் கடினமாய் நடந்து கொள்பவர்களை உடனே பழிவாங்காமல் பொறுமையாய் இருப்பதுபோல காணப்படுவோம். ஆனால் மனதில் காழ்ப்புணர்ச்சியோடு அவரைக் குறித்த அவதூறுகளை பிறரிடம் சொல்லித் திரிவோம். அவர் பிறரால் அவமானப்படுவதைக் கண்டு மகிழ்வோம். மேலும் விதவிதமான உபதேசங்களைக் கேட்டு குழம்பி விடுவோம். அப்படியென்றால் இன்னும் பிள்ளைப் பருவத்திலேயே இருக்கிறோம்.
வாலிபப்பருவம்: இப்பொழுது நாம் நம்மை துன்புறுத்துபவர்களை பழிவாங்குவதில்லை, புறங்கூறுவதும் இல்லை. ஆனால் தேவன் அவர்களை பழி வாங்குவார் என்று எண்ணுகிறோம். இப்பருவத்தில் உபதேச குழப்பங்களை வேதத்தின் அடிப்படையில் ஆராய்ந்து சற்று சமநிலை அடைய முயற்சிப்போம்.
முழுமனிதப்பருவம்: நம்மை துன்புறுத்துபவர்களைக் கண்டு கொள்ளாமல் மனதில் காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லாமலும் காணப்படுவோம். வேதத்திற்கு முரணாக உபதேசங்களைக் கேட்கும்போது சற்றும் தடுமாறாமல் நிதானித்து நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம். அப்படியென்றால் நாம் முதிர்ச்சியை நோக்கி செல்லும் பருவத்தில் இருக்கிறோம்.
முதிர்ச்சி பருவம்: நம்மை துன்புறுத்துவோரை மன்னித்து, மறுகன்னத்தையும் திருப்பி காட்டுமளவு வளர்ந்திருப்போம். மேலும் துன்புறுத்தப்படவும், நம்மை ஒப்புக்கொடுப்போம். நமது நற்செயலை பிறர் பாராட்டவேண்டுமென்று சற்றும் எதிர்பார்க்கமாட்டோம். வீணான அவதூறில் அகப்படும்போது நம்மை நியாயப்படுத்த யாரிடமும் செல்லமாட்டோம். பிறரிடம் எந்த நன்றியையும் உதவியையும் எதிர்பாராமல் நன்மை செய்வோம். நம்மை சுற்றியுள்ளவர்கள் என்னை நல்லவன் என அறிந்து கொள்ளட்டும் என்று எந்த நற்காரியத்தையும் செய்ய மாட்டோம்.
இதை வாசிக்கிற நாம் எந்த பருவத்தில் இருக்கிறோம்? முதிர்ச்சியை நோக்கி வளராமல் காணப்படுவோமேயானால் இன்றே சிரத்தையோடு முயற்சிப்போம். வெற்றி காண்போம்.