16/11/2021
https://youtu.be/fA_DlyoZA3s
அருள்திரு. வே. சந்தியாகு ஐயர் (Santiago) 16.11.1868 - 28.11.1929
அருள்திரு வெ. சந்தியாகு மதுரை மாவட்டத்திலுள்ள சிலுக்குவார்பட்டி என்னும் கிராமத்தில் 1868 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பாட்டனார் ஆங்கிலேயர்களின் படையில் சிப்பாயாகப் பணி செய்தவர்.
இவரைக் குறித்து ஆசிரமப் பாமாலையில், 'இவர் தகப்பனார் கஷ்டங்களுக்கு இடையே இவரைப் படிக்கவைத்தார். படிப்புடன் ஆடு மாடுகள் மேய்க்குந் தொழிலும் செய்து வந்தார். பிந்திய காலத்தில் பி.ஏ., பரீஷை மட்டும் கற்றார். 1882 முதல் பசுமலை காலேஜில் கணித சாஸ்திரியாகவிருந்து பின்பு 1908 வத்தலகுண்டு சபைக் குருவாக அபிஷேகம் பண்ணப்பட்டார்' (365 பாடல்) என்று அவரது கல்வி குறித்தும் பணி குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
இவர் பிற மொழிப்பாடல்களைத் தமிழ் முறையில் அமைத்துப் பாடியதை ஆசிரமப் பாமாலையில் இடம் பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.
'மதுரை ஜில்லாவில் போதகராயிருந்த சந்தியாகு ஐயர், ஆங்கிலத்தில் அருமையான பல பாட்டுகளை, தமிழ் காவிய முறைமை தழுவி மொழிபெயர்த்து தமிழ் ராகத்திலேயே பாடியிருக்கிறார். இது தமிழ் கிறிஸ்தவர்களின் பக்திவிருத்திக்கு மிக உதவியதுமல்லாமல் இதர பாஷையிலுள்ள பாட்டுக்களை நமது பாஷையில் மொழிபெயர்ப்பவர்களுக்கு நல்ல முன்மாதிரி. இப்பக்தன் சிறிது காலத்துக்குமுன் திடீரென்று இம்மையை விட்டுப்பிரிந்தார். இந்தப் பாட்டின் மூல ஆங்கிலப் பாட்டு மகாத்மாகாந்தியவர்களுக்கு மிகப் பிரியம். ஆவர் 21 நாள் உபவாசமிருந்து முடிந்த பின் முதல் தடவை ஆகாரமுட்கொள்ளுமுன் அவர் கேட்டுக்கொண்டபடி சி.எப். அந்திரேயே ஐயரவர்கள் இந்தப் பாட்டை ஆங்கிலத்தில் பாடினார் 27 என்று குறிப்பிடுவதிலிருந்து சந்தியவாகு ஐயரின் மொழிபெயர்ப்புப் பணிகள் உணர்த்தப்பட்டுள்ளன.
சந்தியாகு ஐயரின் சகோதரர்கள் நால்வரும் போதகர்களாகக் கிறிஸ்துவுக்காகப் பணியாற்றியுள்ளனர்.
'இவரும் இவர் சகோதரர்கள் பென்னியமின் ஐயர், மாசிலாமணி ஐயர் மூவரும் கவிராய வரம் பெற்றவர்கள். இந்திய கிறிஸ்தவர்கள் ஆர்வத்துடன் பாடுகிற பல பாட்டுகள் இம்மூவர்களுமியற்றியவைகள் என்பது நன்கு தெரிந்த விஷயம் மோனையைப் பார்க்கிலும் பொருளையே பாட்டுகளோடு அளவாளவிச் சிநேகம் பாராட்டுவார். பொதுஜன சேவையில் உற்சாகத்துடன் ஈடுபட்டு வந்தார்' என்று 365 ஆவது பாடல் குறிப்பில் இடம் பெற்றுள்ள குறிப்பிலிருந்து அவரது இறைபணியின் ஈடுபாட்டை உணர முடிகிறது.
'நற்செய்திக் கூட்டங்களில் பங்கேற்று இறைச்செய்தி கொடுப்பது இவரது வழக்கம். இவரது 'தாசரே இத்தரணியை அன்பாய் இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்' என்னும் கீர்த்தனை இக்கூட்டங்களில் அதிகமாகப் பாடப்பட்டது. வேதம் வாசிப்பதும், ஜெபம் செய்வதும் இவரது வாழ்க்கையின் முக்கியமான செயல்கள் ஆகும் 28 என்று யோ. ஞான சந்திர ஜாண்சனின் கூற்றின் மூலம் அவரது வாழ்வின் நோக்கங்களை அறிய முடிகிறது.
இறைபணியோடு சமூகத்தில் ஒரு அங்கமாகத் தம்மை இணைத்துக் கொண்டவர் என்பதை, 'இவர் கணிதப்பேராசிரியர், சபைபோதகர், ஊராட்சி மன்றத்தலைவர், கிறிஸ்தவக் கீர்த்தனை திருத்தக்குழு உறுப்பினர், தென்னிந்திய ஐக்கிய திருச்சபையின் நடுவர், இசைப்பாடல் இயற்றுவோர் எனப் பல பணிகளையும் புரிந்தவர் 29 என்று இர. ஆரோக்கியசாமி குறிப்பிட்டுள்ளார்
இவர் உடல் நலக் குறைவினால் 1929 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28 ஆம் நாள் தமது அறுபதாவது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரது அடக்க ஆராதனையில் அவர் எழுதிய கீர்த்தனைகளையேப் பாடிக்கொண்டு சென்றனர். வத்தலகுண்டு ஊரின் எல்லையிலுள்ள கல்லறைத் தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இச்செய்தியை ஆசிரமப் பாமாலை பதிவு செய்துள்ளது.
'28-11-1929 திடீரென்று சந்தியாகு ஐயர் வத்தலகுண்டுவில் இறந்தபோது அவரியற்றிய பாட்டுகளனைத்தையும் மரண வீட்டில் பாடினார்களாம்' (362 பாடல் குறிப்பு) என்ற குறிப்பின் மூலம் அவரது கீர்த்தனைகள் அடக்க ஆராதனையில் பாடப்பட்ட செய்தி எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
1 . ஆர் இவர் ஆராரோ
2 . ஆனந்தமே ஜெயா ஜெயா
3 . உதவி செய்தருளே ஒருவருக்கொருவர்
4 . ஓ ! தாகம் மிகுந்தவரே , அமர்ந்த தண்ணீரண்டை
5 . சமயமிது நல்ல சமயம்
6 . சீர்மிகு வான்புவி தேவா தோத்ரம்
7 . தந்தானைத் துதிப்போமே
8 . தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் வாறேன்
9 . பாவி என்னிடம் வர மனதில்லையா
10. வந்தனம் வந்தனம்
11. விலைமதியா இரத்தத்தால் மீட்கப்பட்டீரே
கிறிஸ்தவ வரலாற்றுச் சங்கம்- திருநெல்வேலி
https://youtu.be/fA_DlyoZA3s