Kneil Memorial Agasteeswaram CSI Church

Kneil Memorial Agasteeswaram CSI Church Ancient Church in kanyakumari district build in 1819.

12/01/2026

தெரிந்துக்கொண்ட துக்கம்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: மாற்கு 10:17-24.

ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது (மாற்கு 10:24).

அவன் ஒரு பணக்கார வாலிபன். மிகவும் கவனமாக கற்பனைகளைக் கைக்கொண்டு வாழ்ந்தவன். வாலிப வயதிலும் அப்படியொரு கட்டுப்பாடு. அவனுக்குள்ளும் ஒரு தாகம். அதற்குப் பதில் இயேசுதான் என்று நம்பி. இயேசுவிடம் ஓடிவந்தான். வந்தவன் அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டான். அவன் கேட்ட கேள்வியோ இயேசுவையே அசைத்திருக்கும். வாலிபனுடைய மனதிலே இருந்த நித்திய ஜீவனைக் குறித்த வாஞ்சை அவனது கேள்வியிலே வெளிவந்தது. ஆண்டவர் அவனை அன்போடு பார்த்தார். அவனுடைய தாகம் உண்மையாயினும், அதற்குத் தடையாக அவனுக்குள்ளே மறைந்திருந்த வேறொரு உண்மையை உணர்த்தினார். செல்வத்தின்மீது அவனுக்கு இருந்த பற்றுதல் மிக ஆழமாக இருந்ததை வெளிப்படுத்தினார். ஆனால் அதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நித்திய சந்தோஷத்தை நாடித் தேடி வந்தவன், தனக்குத்தானே துக்கத்தைத் தெரிந்து கொண்டு திரும்பிப்போனான்.

இந்த வாலிபன் தன்னுடைய முக்கிய தேவையை அடைய முடியாதபடி முக்கியமான குறையொன்று அவனைத் தடுத்து விட்டது. நினைத்திருந்தால் அந்தக் குறையைத் தீர்த்து, தான் விரும்பிய சந்தோஷத்தைப் பெற்றிருக்கலாம். ஆனால் அவனுடைய வாழ்வில் அவனுடைய விருப்பத்தைப் பார்க்கிலும். முக்கியம் என்று அவன் எண்ணிய குறையானது முக்கியம் வாய்ந்ததாய் இருந்தது.

இந்த வாலிபனைப்போல இன்றும் பல வாலிபர்களும் பெரியவர்களும் உன்னதமான நோக்கங்களோடு வாழுகிறோம். இயேசுவிடம் வந்து முழங்காற் படியிடுகிறோம். எப்படியாவது பரலோக ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று தீராத தாகம்! யார்தான் நரகத்திற்குப் போக விரும்புவர்? ஆனால் இன்று அதிக பட்சமானவர்களின் வாழ்வு நித்தியத்திற்கு நிலைத்திராத பலவித நிச்சயமற்ற உலககாரியங்களில் மூழ்கிப் போயிருக்கிறது. உலகம் காட்டுகிற பலவித சந்தோஷங்களை நாடித் தேடுவதை நிறுத்த முடியாமல் தவிக்கிறது. இதனாலே தான் இவனைப்போல அநேகர் துக்கத்தைத் தெரிந்தெடுத்தவர்களாக தினமும் துக்கத்தோடே ஜீவிக்கிறோம். ஒருவேளை நம்மிடம் ஆண்டவரை முற்றும் முழு அர்ப்பணத்தோடு பின்பற்றுவதற்கு ஐசுவரியம் தடையாக இல்லாதிருக்கலாம். வேறு பல குறைகள் இருக்கும். அந்த முக்கிய குறைபாடுகளை இனங்கண்டுகொள்ளவே நாம் தயங்குகிறோம். இதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறித்தும் அறிவற்றவர்களாக இருக்கிறோம். நமது குறைபாடுகளைக் குறித்து நாம் அறிவீனமாக இருக்கலாமா? பிரியமானவர்களே, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்போமா? நித்திய துக்கமா? நித்திய மகிழ்ச்சியா!

ஜெபம்:
கர்த்தாவே, முக்கியமானது என்று கருதினாலும், உமது பார்வையில் குறை என்று காண்பதை எனக்கு இப்போதே உணர்த்திக் காட்டும் ஐயா. ஆமென்

கர்த்தரோடு அதிகநேரம்!இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: யாத்திராகமம் 34:27-31.மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது...
03/01/2026

கர்த்தரோடு அதிகநேரம்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: யாத்திராகமம் 34:27-31.

மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர்; பேசினதாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான் (யாத்.34:29).

"வெளிநாடொன்றில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியபோது, என் பேச்சின் போக்கு மாறிவிட்டதாக எல்லோரும் என்னைக் கேலி பண்ணினார்கள். அப்போதுதான் நானும் அதை உணர்ந்தேன். அந்த இடத்திலே வேலை பார்த்தது, ஆராதித்தது எல்லாம் அநேகமாக இந்தியர்களோடுதான். ஆகவே என்னையும் அறியாமல் அவர்களைப் போலவே பேசப்பழகிவிட்டேன் போலும்" என்றார் ஒரு வெளிநாட்டில் பணிபுரியும் ஒருவர். நாம் அதிகமாக யாரோடு பழகுகிறோமோ, யாரோடு அதிக நேரத்தைச் செலவிடுகிறோமோ, அவர்களுடைய பல காரியங்கள் காலப்போக்கில் நம்மிலே வெளிப்பட ஆரம்பிக்கும் என்பதை மறுக்கமுடியாது.

நாற்பது நாட்கள் என்பது இலகுவானதொன்றல்ல. அதிலும் சாப்பாடு தண்ணீர்கூட இல்லாமல் இரவும் பகலுமாய் ஒருவரோடு தரித்திருப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த சமயத்தில் ஒளியாகிய தேவனுடைய வெளிச்சம் மோசே மீது பிரகாசிக்க ஆரம்பித்தது. அந்த நாட்கள் முடிந்தபோது தனது முகம் பிரகாசித்திருப்பதுகூட மோசேக்குத் தெரியவில்லை. அந்தளவிற்கு மோசே தேவனோடு தரித்திருந்தார். திரும்பிவந்த மோசேயை நேருக்குநேர் சந்திக்க அவருடைய சகோதரன் ஆரோனே பயந்தார். தேவனுடைய மகிமையை ஜனங்கள் மோசேயின் முகத்திலே கண்டார்கள். ஜனங்கள் பயந்ததினாலே மோசே ஒரு முக்காடு போடவேண்டியிருந்தது. “என் இயேசுவைப்போல் ஆவதே என் வாஞ்சை” என்று ஆரவாரமாகப் பாடுகின்ற நாம், அந்த வாஞ்சை நிறைவேற என்ன செய்கிறோம்? இயேசுவைப்போல நாமும் மாற, அவரை நம் வாழ்வில் பிரதிபலிக்க, கடந்த ஆண்டிலே நாம் எடுத்த முயற்சிகள் என்ன? நாம் வீணடித்த தருணங்கள் எத்தனை? கிறிஸ்துவுடன் தரித்திருந்து அவரில் நிலைத்திருந்த வேளைகள் எத்தனை? “அவருக்குள் (கிறிஸ்துவுக்குள்) நிலைத்திருக்கிறேன்” என்று சொல்லுகிறோம்; ஆனால் அவர் நடந்தபடியே நாமும் நடக்கிறோமா (1யோவா.2:6) என்பதைச் சிந்திப்போம்.

கிறிஸ்து ஒரு மனிதனாக நமக்கு முன்மாதிரியாக நடந்த பாதையில் நடக்கும்போது நிச்சயம் ஆண்டவர் சாயல் நம்மில் பிரகாசிக்கும். அந்த சாயல் வெளிப்படவேண்டுமென்றால் இந்த உலகுக்குரிய பல காரியங்கள் நம்மைவிட்டு அகற்றப்படவேண்டும்! பேச்சிலும் செயலிலும் நடக்கையிலும் நாம் வைக்கும் விழாக்களிலும்கூட ஆண்டவரின் சாயல் வெளிப்படவேண்டும் என்ற வாஞ்சை இருந்தால், அதற்கு நாம் கவனிக்கவேண்டியது, தேவனோடு செலவழிக்கும் ஜெபநேரம், வாசிக்கும் தேவவார்த்தை, அதைத் தியானிக்கும் தியானம். இவை அதிகரிக்க அதிகரிக்க தேவனுடைய சாயல் தானாகவே நம்மில் அதிகமதிகமாக பிரதிபலிக்குமல்லவா! தேவனோடு என்றும் நாம் இணைந்திருக்க நம்மை அவரிடமே அர்ப்பணிப்போமாக.

2026ஆம் ஆண்டு புதிய வருடத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கின்ற அனைவருக்கும் நீல் ஞாபகார்த்த C.S.I திருச்சபை சார்பாக புத்தாண்...
01/01/2026

2026ஆம் ஆண்டு புதிய வருடத்திற்குள்ளாக பிரவேசித்திருக்கின்ற அனைவருக்கும் நீல் ஞாபகார்த்த C.S.I திருச்சபை சார்பாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம். கடந்த ஆண்டு முழுவதும் நம்மை ஆதரித்து வழிநடத்தின நம் தேவனின் கிருபையும் நன்மையும் இந்தப் புதிய ஆண்டிலும் நம்மைத் தொடர்வதாக!!

02/12/2025

சகலவிதமான ஆறுதலின் தேவன்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: 2 கொரி.1:2-5.

பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகல விதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம் (2கொரி. 1:3).

கடந்துவந்த பதினொரு மாதங்களிலும், பலவித சோதனைகள், இழப்புகள், பொருளாதார பிரச்சனைகள், வியாதிகள் என்று பலவற்றை நாம் கடந்து வந்திருந்தாலும், ஒரு நாளிலாவது அல்லது ஒரு சமயத்திலாவது நாம் மகிழ்ச்சியாய் இருந்திருப்போம்! அதற்காக கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். ஏனெனில், அந்த மகிழ்ச்சியின் வேளைக்கு அடிகோலியது நாம் சந்தித்த கஷ்டங்களேதான் என்றால் மிகையாகாது. பவுல் இந்த நிருபத்தை எழுதியபோது, என்ன மனநிலையில் இருந்தார் என்பதை அவரது ஒவ்வொரு வாக்கியமும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. “பலத்திற்கு மிஞ்சின” அதிகமான வருத்தத்துக்கூடாகச் சென்ற இவர், எந்த நிலையிலும் சோர்ந்துபோகவுமில்லை, தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தாமல் இருந்ததுமில்லை. அவரால் இது எப்படி முடிந்தது? பவுலைக் கர்த்தரேதான் அழைத்தார், பவுலும் ஆண்டவருடைய ஊழியத்தை மாத்திரமேதான் செய்தார். ஆனால், உபத்திரவங்கள், கொலைமிரட்டல்கள், அடிகள், உதைகள் என்று ஏராளமானவற்றை சந்திக்க நேரிட்டது. இருந்தும் ஒவ்வொரு தடவையும் அவர் கர்த்தரின் பிரசன்னத்தை அதிகமதிகமாக உணர்ந்தார். இல்லையானால், “சகலவிதமான ஆறுதலின் தேவன்” என்று பிதாவாகிய தேவனுக்கு ஒரு நாமத்தைச் சூட்டியிருப்பாரா?

“இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருந்த” சிமியோன், குழந்தை இயேசுவைக் கண்டதும், அவரைக் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்தான் (லூக்.2:25,28). ஆம், ஆண்டவர் நமக்கு ஆறுதலின் தேவனாக இருக்கிறார். அவர் ஆறுதல் செய்வதால் நமது பிரச்சனைகள் யாவும் மாறிப்போம் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால், எப்போதும் இப்படி இருந்தால், பிரச்சனைகள் நீங்குவதற்கு மாத்திரமே நாம் தேவனைத் தேடுகிறவர்களாகி விடுவோம். ஆக, அவர் ஆறுதல் செய்யும்போது, தைரியத்தையும் பெலத்தையும்கூட நாம் பெற்றுக்கொள்கிறோம் என்பதையும் பவுல் உணர்த்துகிறார். இதனால், கஷ்டங்களுக்குள் அகப்பட்டு அவதியுறுகின்றவர்களுக்கு ஆறுதல் செய்கின்ற திராணியை நாம் பெற்றுக்கொள்கிறோம். நம்மிடம் ஆறுதல் தேடிவருகிறவர்கள் விஷயத்தில், வாழ்வில் எங்கோ ஒருநாள் அவர்களின் அதே பிரச்சனைக்கு நாம் முகங் கொடுத்திருப்பதால் அதன் வலிகளை நாம் உணருவோம்; அப்போது, அவர் களை ஆறுதல்படுத்தி பெலப்படுத்தி அனுப்புவது நமக்கு இலகுவாக இருக்கும். அப்போது நம்முடன் அவர்களும் தேவனை ஸ்தோத்திரிப்பார்கள் அல்லவா!

ஜெபம்:
எங்களுக்கு ஆறுதலளிப்பதற்காக வந்துதித்த ஆண்டவரே, இப்புதிய மாதத்தை எங்களுக்கு ஆசீர்வதித்துத்தாரும். உமது ஆறுதலால் எங்களை நிரப்பும். ஆமென்

01/12/2025

பயப்படாதிருங்கள்!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: மத்தேயு 28:16-20.

சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது (கொலோசெயர் 1:23).

இம்மட்டும் நம்மை வழிநடத்திய அன்பின் தேவன் இவ்வருடத்தின் கடைசி மாதத்திற்குள்ளாக நாம் பிரவேசிக்க கிருபை செய்தபடியால் அவரைத் துதிப்போம். இம்மாதத்திலும் நமது கைகளின் பிரயாசங்களை ஆசீர்வதித்து நமது குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் சந்திக்க வேண்டுதல் செய்கிறோம். தேவரீர் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்று யோபு நம்பிக்கையோடு இருந்ததுபோல நாமும் தேவன்மீது நம்பிக்கை வைத்து முன்செல்வோம் (யோபு 42:2).

இன்று மனிதனை ஆட்டிப்படைக்கும் காரியங்களில் ஒன்று பயம். சிலருக்கு எதெற்கெடுத்தாலும் பயம். சிலருக்கு எதிர்காலத்தைக் குறித்த பயம். சிலருக்கு மரண பயம். இன்று மனிதனுக்கு ஏற்படும் எத்தனையோ நோய்களுக்குக் காரணமே பயம்தான் என்று ஆராய்ச்சி மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுகுழந்தையில் இருந்து வயோதிபர் வரைக்கும் பயம் அனைவரையும் ஆட்டிப் படைக்கிறது. இயேசு பிறந்தபோது, அன்று கொடுக்கப்பட்ட செய்தியில் ஒன்று, “பயப்படாதிருங்கள். எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்.2:10) என்பதாகும். அந்த நற்செய்தி என்ன? “இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்” (லூக்.2:11) என்பதே.

இயேசு பிறந்த செய்தி எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும் செய்தியாகும். அந்த செய்தி எல்லா மக்களையும் பயத்திலிருந்து விடுவிக்கிறதாக இருக்கிறது. கிறிஸ்துமஸ் தினத்திலே தொலைக்காட்சி செய்தியைச் செவி மடுத்தால், உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸை வெகு விமர்சையாகக் கொண்டாடினார்கள் என்ற செய்தியே வெளியாகும். கிறிஸ்துமஸ் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல. பிறருக்குமான நற்செய்தியாகும். கிறிஸ்தவர்களை மீட்கவோ, அவர்களுக்கு மட்டும் நன்மை செய்யவோ தேவன் தமது குமாரனை அனுப்பாமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் அனைவரும் நித்தியஜீவனை அடையும்படிக்கே அவரை அனுப்பினார். கிறிஸ்து நம் அனைவருக்கும் உரியவர்!

இயேசு இவ்வுலகில் பிறந்து, வாழ்ந்து, மரித்து, உயிர்த்து பின்னர் இவ்வுலகை விட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன் அவர் சீஷர்களுக்குக் கொடுத்த கட்டளை, “நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்பதே. எனவே கிறிஸ்து பிறப்பை வருடாவருடம் நினைவுகூரும் நாம் நம்மீது விழுந்த கடமையை மட்டும் மறந்துவிடலாமா? ஆகவே பிரியமானவர்களே, கிறிஸ்துமஸ் வெறும் கொண்டாட்டமாகக் கருதாமல், அதிலுள்ள ஆழமான அர்த்தங்களை யும், அது உணர்த்தும் உண்மைகளையும், நமக்குச் சுட்டிக்காட்டும் கடமைகளையும் உணர்ந்தவர்களாய், மற்றவர்களைக் கருத்திற்கொண்டு இக்கிறிஸ்துமஸ் நாட்களைக் கருத்துள்ளதாய் ஆக்குவோமாக.

ஜெபம்:
அன்பின் கர்த்தாவே, இப்புதிய மாதத்திலே எல்லா பயங்களுக்கும் எங்களை நீங்கலாக்கி நடத்தும். கிறிஸ்துபிறப்பின் தியானங்கூடாக எங்களோடு பேசும் ஆண்டவரே, ஆமென்

30/11/2025

கர்த்தருடைய சிநேகிதனே!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி:யோவான் 15:10-17

ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார் (யாத். 33:11)

கர்த்தர் உங்களோடே பேசின அனுபவம் உங்களுக்கு உண்டா? "கர்த்தர் என்னோடே பேசினார் என்று பலர் சொல்வதுண்டு. ஆரம்பத்தில் இது என்னை மிகவும் குழப்பியது. மாத்திரமல்ல, கர்த்தருடன் பேசியவர், கர்த்தரின் குரலைக் கேட்டவர் என்று சொல்லி அந்த ஊழியர்களை மிக ஆச்சரியத்துடன் பார்ப்பேன். ஒருநாள் ஒரு தாயார், தான் முதன்முதலாக கர்த்தருடைய குரலைக் கேட்டதாகச் சொன்னார். குறிப்பிட்ட ஜெபக்குழு பரிசுத்தமற்றது, வனாந்தரத்திலே அழிந்துபோன மோசேயையும் இஸ்ரவேலரையும் போன்றது, அதிலே இனிமேல் நீ பங்குபெற வேண்டாம் என்று அந்தக் குரல் சொன்னதாகக் கூறியபோது இது தேவகுரலா என்று நான் விழித்துக்கொண்டேன்" என்றார் ஒரு வாலிபர்.

அன்பானவர்களே, கர்த்தர் பேசுகிறவர், அது சத்தியம். ஆனால் அவர் தம் வார்த்தைக்குப் புறம்பாகப் பேசுகிறவர் அல்ல. இன்னொருவரை வேதனைப்படுத்தி குறைசொல்லி அநியாயம் பேசுகிறவர் அல்ல. நித்தமும் அவருடைய வார்த்தையை நாம் வாசித்துத் தியானிக்கும்போது அவர் நம்மோடு பேசுகிறார். அவர் நமது உணர்வுகளுடன் பேசுகிறார். நாம் தனித்திருந்து தியானித்து ஜெபிக்கும்போது அவர் நம்மோடு பேசி நம்மை நடத்துவதை நாம் அனுபவிக்கலாம். அன்று மோசேயுடன் தேவன் முகமுகமாய் பேசினார். அது ஒரு பிரத்தியேகமான அனுபவம். மோசே பரிசுத்தன் என்பதால் தேவன் பேசவில்லை. மோசே பரிசுத்தவானுமல்ல; தேவன் மோசேயைத் தெரிந்தெடுத்திருந்தார். அதேபோல மோசேயும் முழுமனதோடு தேவனையே நம்பி அவரையே சார்ந்திருந்தார். அன்று தேவனைக் கிட்டிச்சேரவே பயப்பட்ட இஸ்ரவேலர் நடுவிலே மோசேக்குக் கிடைத்த தேவனுடைய சிநேகிதம் மோசேக்குக் கிடைத்தற்கரிய பாக்கியம் அல்லவா!

ஆனால் இன்று கர்த்தராகிய இயேசுவையும் அவருடைய வார்த்தைகளையும் அறிந்திருக்கிற நாம் யாவரும் அவருடைய சிநேகிதர் ஆகின்ற பேறு பாக்கியம் பெற்றிருக்கிறோம். அப்படியானால் அவர் நம்மோடு பேசுவாரா என்ற சந்தேகம் எதற்கு? அவர் நம்மோடு பேசவேண்டுமானால் நாமும் அவருக்கு நண்பர்களாக இருக்கவேண்டும். மோசேயைப்போல, நாமும் மெய்யாகவே ஆண்டவரை நம்பி, அவரையே சார்ந்து, அவருக்கேக் கீழ்ப்படிந்து ஜீவிக்க வேண்டும். அந்தப் பற்றுதல் நம்மிடம் உண்டா? தேவன் ஒரு நண்பனைப்போல பேசுகிறவர். நாம் பேசுவதையும் அவர் செவிகொடுக்கின்றவர். அவருக்கு உண்மையாயிருக்க அவர் பேசுவதைக் கேட்க வாஞ்சையோடு அவரது பாதத்தண்டையில் அனுதினமும் தரித்திருப்போமாக. கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் (1சாமு.3:9).

ஜெபம்:
எங்களை சிநேகிக்கின்ற ஆண்டவரே, உம்மையே நம்புகிறோம். எங்களோடே பேசும், உம்முடைய வார்த்தைகளை எங்களுக்குத்தாரும். இயேசுவின் நாமத்தில் கர்த்தாவே.. ஆமென்

29/11/2025

சமுகத்தை விட்டு விலகாமல்…

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: சங்கீதம் 51:1-13.

உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும் (சங்கீதம் 51:11).

அன்றாட வாழ்விலே நாம் சாதாரணமாக இருந்தாலும், நமது அன்றாட கடமைகளை ஒழுங்காகச் செய்தாலும், ஆவிக்குரிய விசுவாச வாழ்விலே ஒரு தேங்கிய நிலை அல்லது சோர்ந்துபோன நிலை, நமக்கு சில சமயங்களிலே உண்டாகிறதல்லவா? அந்த சந்தர்ப்பங்களில் நாம் என்ன செய்கிறோம்? நமது தேங்கிய அல்லது வளராத நிலைமையை உணராமல் அல்லது உணர்ந்தும் அதை சீர்செய்ய முயற்சிக்காமல் இருப்போமானால் அது மிகுந்த ஆபத்தைக் கொண்டுவரும்.

அன்று தாவீது ராஜாவும் ஆசைப்படக் கூடாததில் ஆசை வைத்து, கொலை பாதகத்துக்கு ஆளானார். இந்தப் பெரிய பாவத்தைச் செய்துவிட்டும் ஒன்றும் தெரியாதவர்போல அமைதியாக இருந்தார். கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதைச் செய்துவிட்டதையோ, அந்தப் பாதகத்தினிமித்தம் தேவனுக்கும் அவருக்குமிருந்த உறவில் உடைவு உண்டானதையோ, தேவசமுகத்திலிருந்து தான் விலகிவிட்டதையோ, தெரிந்தும் தெரியாமலும் உணர்வற்றிருந்தார். தன் அன்றாடக காரியங்களில் என்றும்போல ஈடுபட்டுக் கொண்டே இருந்தார். நாத்தான் வந்து உணர்த்தியபோதுதான் தூங்கிக்கொண்டிருந்த அவருடைய உணர்வு விழித்தெழும்பியது. தான் தேவசமுகத்திலிருந்து விலகிவிட்டதையும், பாவம் செய்து தேவனுடைய ஆவியானவரைத் தான் துக்கப்படுத்தி அவரை புறம்பே தள்ளிவிட்டதையும் உணர்ந்து பாவ உணர்வுடன் கதறி ஜெபிக்க ஆரம்பித்தார்.

அன்பானவர்களே, தேவசமுகத்தைவிட்டு விலகுவதைப் போன்றதொரு கொடிய அனுபவம் யாருக்கும் வரக்கூடாது. இதற்கு மூலகாரணம் பாவம். பாவம் நமக்குக் குறுக்கே வரும்போது கூடவே பிரிவையும் கொண்டுவருகிறது. தேவன் நம்மைவிட்டு விலகுகிறவர் அல்ல; மாறாக, நாமே தேவ சமுகத்திலிருந்து விலகிவிடுகிறோம். பரிசுத்தாவியின் கட்டுப்பாட்டிலிருந்து நாமாகவே விலகுகிறோம். பாவமும் பரிசுத்தமும் ஒரே இடத்தில் இருக்க முடியாதே! நாம் வெளியரங்கமாக கிறிஸ்தவ வாழ்வில் சுறுசுறுப்பாக இருந்தாலும், நமது விசுவாச வாழ்க்கையைக் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டும். நாம் எப்போதும் அவர் அருகே இருந்து நிறைவாழ்வு வாழவேண்டும் என்றே தேவன் விரும்புகிறார். ஆகவே, அறிக்கை செய்யாத, செய்யப்படாதக் காரியங்களை இப்போதே அறிக்கை செய்வோமாக. தேவசமுகத்தைவிட்டு ஒருபோதும் நாம் விலகக்கூடாது. நமது பாவங்களின் பின்விளைவுகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், நம்மை அவர் மன்னித்து, மெய்யான மனமகிழ்ச்சியைத் தந்து, நம்மைத் தமக்குள் நிலைநிறுத்த நம்முடைய தேவன் வல்லவராகவே இருக்கின்றார். நாம் அவரிடம் செல்வோமா?

ஜெபம்:
அன்பின் கர்த்தாவே, உணர்வுள்ள இருதயத்தை எனக்குத் தாரும். உமது சமுகத்தை விட்டு ஒருபோதும் விலகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். ஆமென

28/11/2025

யூதாவும் சிறைப்பட்டது

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: 2 நாளாகமம் 36:1-21.

கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு… (2நாளாகமம் 36:21).

யோசியாவிற்குப் பின்னர் யோவகாஸ் ராஜாவானபோது, எகிப்தியர் வந்து இவனைத்தள்ளி இவன் தம்பியை ராஜாவாக்கிற்று. இவனும் தேவனுக்கு விரோதமாக நடந்தான். இதன் பின்னர் கர்த்தர் சொன்னபடியே பாபிலோன் மூன்று தடவைகளாக எருசலேமுக்குள் நுழைந்தது (2நாளா. 36:6,10,18). யோயாக்கீமின் பின் சிதேக்கியாவின் நாட்களுடன் யூதா சிறைப்பட்டது. பாபிலோன் வருவான், நகரத்திலே தரிக்கிறவன் சாவான், அவனுடன் புறப்பட்டுப் போகிறவன் பிழைப்பான் என்று எரேமியா மூலம் கர்த்தர் சொன்னதை சிதேக்கியா கேட்கவில்லை. இறுதியில் பாபிலோன் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, பணிமுட்டுகளையும் கைப்பற்றினான். சிதேக்கியாவின் குமாரர் கண்கள் முன்பாக வெட்டப்பட்டு, இவன் கண்களும் குருடாக்கப்பட்டு, விலங்கிடப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டான்.

இந்த சகல சம்பவங்களும் இன்று நமக்கு எச்சரிக்கையாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் சிந்திக்கவேண்டும். இது ராஜாக்களின் கதை என்று நம்மால் விலக்கி வைக்க முடியாது. தங்களுக்கென்று ஒரு ராஜாவைக் கேட்ட காலத்திலிருந்து ராஜாக்களின் காலமெல்லாம் நடந்தவற்றையும், அந்தந்தக் காலத்தில் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களையும், வடராஜ்யத்தின் முடிவையும், யூதா ராஜ்யத்திற்கு நடந்ததையும் சிந்திக்கும்போது நமது ஆண்டவரைக்குறித்து இரண்டு காரியங்களை நாம் கற்றுக்கொள்கிறோம். ஒன்று, ஆண்டவர் முன் அறிவிப்பு ஆலோசனையின்றி, எச்சரிப்பின்றி எதையும் செய்கிறவரே அல்ல. ஆம், அவர் சொல்லாமல் எதையும் செய்யார். இரண்டாவது, தருணம் கொடுக்காமல் (2நாளா.36:15), மனந்திரும்ப காலம் கொடுக்காமல் திடீரென தண்டிக்கிற வரும் அல்ல. அன்று சிதேக்கியா, எரேமியாவின் சொல்கேட்டு பாபிலோனுக்குப் போயிருந்தால் தப்பியிருப்பான் அல்லவா!

இன்றும் நமக்கு சகலமும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சாக்குப் போக்குச் சொல்ல இடமில்லை. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நமக்கு அவர் ஏராளமான தருணத்தையும் எச்சரிப்பையும் தந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும் அவர் நமக்கு மனந்திரும்புதலுக்கான தருணத்தையே தருகின்றார். இப்படியிருக்க, வேதவாக்கியங்களில் அவர் முன் அறிவித்தபடியே இயேசு வரும்போது, நியாயத்தீர்ப்பின் நாளில் நாம் நிறுத்தப்படும்போது, நாம் நமது ஆண்டவரை எப்படி எதிர்கொள்வோம்? இன்று தேவன் தருகின்ற எச்சரிப்பின் வார்த்தைகளை சிந்திக்கின்றோமா? அந்த எச்சரிப்பின் வார்த்தையின் மத்தியிலும் கிருபையாக தந்துள்ள தருணங்களுக்காக அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோமா என சிந்திப்போம்.

ஜெபம்:
அன்பின் கர்த்தாவே, உமக்கு முன்பாக கணக்கொப்புவிக்க வேண்டிய நாளிலே நாங்கள் வெட்கப்பட்டு போகாமல் எங்கள் ஜீவிய நாட்களில் எங்களை நாங்களே சோதித்து மனந்திரும்பவும் நீர் எங்களுக்கு தரும் தருணத்தை பயன்படுத்திக் கொள்ளவும் உதவி செய்யும். ஆமென்

27/11/2025

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: துயருற்றது போதும்! சங்கீதம் 30.

கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு (பிரசங்கி 3:7).

இரத்தம் தோய்ந்த அங்கியை அடையாளம் கண்ட யாக்கோபு, மகன் மிருகத்தால் பீறுண்டுபோனான் என்று புலம்பி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, அரையில் இரட்டுக்கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் மகனுக்காகத் துக்கித்துக் கொண்டிருந்தாராம். சவுலும் யோனத்தானும் செத்துப்போனதைக் கேட்ட தாவீதும் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, புலம்பி அழுது சாயங்காலம் வரைக்கும் உபவாசமிருந்தார். அந்தநாட்களிலே தங்கள் துயரங்களை இப்படியாக வெளிப்படையாகக் காட்ட இயலுமாயிருந்தது. அதற்காக யாக்கோபும், தாவீதும் வாழ்க்கை முழுவதும் அழுதுகொண்டே இருந்தார்களா? யாக்கோபு, யோசேப்பை உயிரோடே பார்க்கப்போனபோது என்ன உடுத்திப் போயிருப்பார்! தாவீது தன் வாழ்வில் தேவன் செய்த மகத்தான கிரியைகளைக் கண்டபோது எப்படிக் களிகூர்ந்திருப்பார்!

இன்று நமது சூழ்நிலை சற்று வித்தியாசமானது. வெளிப்படையாக துயரத்தை வெளிப்படுத்துவது கடினம். கணவனை இழந்துவிட்ட விதவை, தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, அன்றாடம் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தியாகவேண்டும். ஒரு பாடல், ஒரு புத்தகம், ஒரு சின்னக் காட்சி எதுவோ நாம் இழந்துபோனவைகளை அல்லது இழந்துபோனவரை ஞாபகப்படுத்தும்போது நமது உள்ளம் சுக்குநூறாய் உடைந்துவிடுகிறது. அதையும் மறைத்துக்கொண்டு அடுத்த காரியத்தைக் கவனித்துத்தான் ஆகவேண்டும். எது எப்படியிருந்தாலும், சாவின் அனுபவங்களுக்கூடாக நாம் கடந்து செல்லும்போது, கிழிக்கப்படுவது, அதாவது துயரப்பட்டு வாய்விட்டு அழுவது, எத்தனை ஆறுதலான வைத்தியம் என்பதை அதற்கூடாகக் கடந்துசென்றவர்கள் ஒத்துக்கொள்வார்கள். என் தாயார் இறந்தபோது, குழம்பிப்போயிருந்த தந்தையோடு நான் என்ன செய்வேன் என்று திகைத்த வேளை எனக்கு அழுகை ஒன்றுதான் சுகமான மருந்தாக இருந்தது. அதன்பின் அழுகையை நிறுத்திவிட்டேன். கர்த்தர் தமது ஆறுதலைத் தந்தார். என்னைச் சுமந்த தந்தையை நான் சுமக்க தேவன் பெலன் தந்தார்; தைரியத்தைத் தந்தார். துயரப்பட்ட நாட்கள் போய் மகிழ்ச்சியோடு கடமையைச் செய்ய ஞானத்தைத் தந்தார். அன்று நான் துயரப்பட்டபடியால்தான் இந்த சந்தோஷம் இன்று அதிக மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. கிழிந்துபோனாலும் தைக்கப்படும்போது சந்தோஷம் அல்லவா!

துயரத்தில் தோய்ந்துபோயிருக்கும் தேவபிள்ளையே, துடைத்துவிட்டு எழுந்திரு. நீ தைக்கப்படும் காலம் வந்துவிட்டது. தாவீதுடன் சேர்ந்து, “நான் அமைதியாயிராமல் உம்மைப் பாடித் துதிக்கும்படி என் துயரத்தின் உடையைக் களைந்து மகிழ்ச்சியால் என்னை நிரப்பினீர்” என்று பாடுவோமா! நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர் (சங்.86:7).

ஜெபம்:
அன்பின் கர்த்தாவே, என் புலம்பலை ஆனந்த களிப்பாக மாறச்செய்து என் இரட்டைக் களைந்துபோட்டு மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினபடியால் உமக்கு ஸ்தோத்திரம். ஆமென்!

25/11/2025

நீல் ஞாபகார்த்த C.S.I திருச்சபை, அகஸ்தீஸ்வரம்

நாசமலை!

இன்றைய சிந்தனைக்கான திருமறைப்பகுதி: 2 இராஜாக்கள் 23:1-20

அவனைப்போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை, அவனுக்குப் பின் எழும்பினதுமில்லை. (2இராஜாக்கள் 23:25).

இப்படியொரு அறிக்கை சொல்லப்படுவதற்கு உலகம் போற்றத்தக்க பெரிய அதிசயங்களை யோசியா ராஜா செய்யவில்லை. அவன் செய்ததெல்லாம், கர்த்தருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து, தன்னையும் மக்களையும் தேசத்தையும் சுத்திகரித்தான், அவ்வளவும்தான். ஆனால் இது இல்லாமல் எதுவுமே இல்லை!

கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை எழுதிய மோசே, விடுதலையின் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், கர்த்தருடைய சந்நிதியில், இஸ்ரவேலர் எல்லாரும்கேட்க இதை வாசிக்கவேண்டும் என கட்டளையிட்டார் (உபா.31:9-13). ஆனால், தீயராஜாக்களின் நீண்ட ஆட்சிக்காலங்களில் இந்தப் புத்தகம் மறக்கப்பட்டுப்போனது. யோசியாவின் காலத்தில் ஆசாரியன் இல்க்கியா, ஆலய சுத்திகரிப்பின்போது அதைக்கண்டெடுத்து, ராஜாவிடத்தில் அனுப்பினான். அதை வாசிக்கக்கேட்ட ராஜா, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இதைக் கைக் கொள்ளாதே போனபடியினால்தான் கர்த்தருடைய உக்கிரம் நம்மேல் மூண்டது என்று சொல்லி அழுதான். மேலும், பிரமாணங்களின்படி நடக்க உடன்படிக்கை பண்ணினான். கர்த்தருக்கு அருவருப்பான அனைத்தையும் (2இராஜா.23:4-12) சுட்டெரித்து, சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, இரதங்களை சுட்டெரித்து கீதரோன் ஆற்றங்கரையில் கொட்டினான். எருசலேமுக்கு எதிரே இருந்த நாசமலையின் வலதுபுறத்தில் சாலொமோன் உண்டாக்கிய அருவருப்புகளையெல்லாம் உடைத்து நிர்மூலமாக்கினான்.

தற்போதைய ஒலிவமலைதான், நாசமலை என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனெனில் விக்கிரக மேடைகளின் முக்கிய இடமாக அன்று இந்த இடம் அமைந்திருந்தது. சாலொமோன் (1இரா.11:7) முதற்கொண்டு பல ராஜாக்கள் இங்கேதான் மேடைகளை அமைத்தார்கள். ஆனால் எசேக்கியாவும் யோசியாவும், இவற்றை அழித்தார்கள். இயேசுவின் காலத்தில் அவர் ஒலிவ மலை மீது உட்கார்ந்திருந்து, தமது சீஷர்களுக்குப் போதித்ததைக் காண்கிறோம் (மத்.24:3). இறுதியில் ஆண்டவர் பாதம் ஒலிவமலையின்மேல் நிற்கும் (சக.14:4).

இன்று தேவனுடைய வார்த்தைகளைப் படிக்கும்போது, நமது இருதயத்தைக் கிழித்து நாம் மனந்திரும்புகிறேமா? அன்று, எருசலேமுக்கு எதிரே இருந்த ஒலிவமலையை, இஸ்ரவேலர் நாசமலையாக்கி வைத்திருந்தார்கள். அதைச் சுத்திகரிக்க யோசியாவுக்கு ஊன்றுகோலாயிருந்தது கர்த்தருடைய வார்த்தை கள்தான். இன்று கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் நம்மிடம் உண்டு; நாமே நமக்கு உண்டாக்கிய நாசமலைகளை அழித்துப்போடுமளவுக்கு அது நமது வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த இடமளித்திருக்கிறோமா? சிந்திப்போம்.

ஜெபம்:
கர்த்தாவே, நாசமலை போன்று எங்கள் வாழ்விலிருந்து நீக்கப்படாமல் இருக்கிற அருவருப்பானவைகள் அனைத்தையும் சுட்டெரித்துப்போடுகிறோம். உமது இரத்தத்தால் எங்களைக் கழுவியருளும். ஆமென்

Address

Agastheeswaram
Nagercoil
629701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kneil Memorial Agasteeswaram CSI Church posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share