11/04/2020
*நாம் சகோதரர்!*
" *எனக்கும் உனக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்" (ஆதி. 13:8).*
*எங்கே வாக்குவாதம் உள்ளதோ அங்கே சகோதரத்துவ அன்பு நீங்கிப் போய் விடுகிறது. அதைப் போலவே எங்கே சகோதர அன்பு உள்ளதோ அங்கே வாக்குவாதம் இல்லாமல் போய் விடுகிறது. நீங்கள் அன்பினால் உறவுகள் கட்டப்பட வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், சிநேகிதர்களையும், சகோதரர்களையும் சம்பாதிக்க வேண்டுமென்று நினைத்தால், வாக்குவாதத்தை உங்களைவிட்டு அகற்றுங்கள். வாக்குவாதம் பிரிவினையையே உண்டுபண்ணும்.*
*ஒரு முறை ஒரு சகோதரன் வீட்டுக்கு ஒரு ஊழியர் ஜெபிக்க வந்தார். அவர் ஜெபிக்கும்போது, "ஆண்டவரே நாங்கள் எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்திருந்தாலும் உம்முடைய கல்வாரியின் இரத்தம் எங்களை இனிமையான சகோதரர்களாய் மாற்றியதே" என்று சொல்லி ஜெபித்தார். இந்த வார்த்தைகள் அந்த சகோதரனின் இருதயத்தில் ஆழமாய்ப் பதிந்தது. அதுமுதல் அந்த ஊழியர்மேல் அந்த சகோதரனுக்கு ஒரு அளவில்லாத சகோதர பாசம் உண்டானது. அவருக்கு வேண்டிய உதவியையும் செய்யும்படி அவருடைய உள்ளம் ஆசை கொண்டது.*
*யார் யார் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டார்களோ அவர்கள் தேவனை ஒரே பிதாவாய் கொண்டிருக்கிறார்கள். மட்டுமல்ல, ஒருவருக்கொருவர் சகோதரராயும் இருக்கிறார்கள். யார் யார் முழு இருதயத்தோடு, ‘பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே’ என்று சொல்லி பிதாவைத் தொழுதுகொள்ளுகிறார்களோ, அவர்களெல்லாரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருக்கிறார்கள். யார்யார் அவரை ‘அப்பா பிதாவே’ என்று அழைக்கிறார்களோ அவர்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாய் இருக்கிறார்கள் (ரோமர் 8:15).*
*நீங்கள் சகோதரர்களாய் இருக்கும்படி இயேசு இன்னொரு நிபந்தனையையும் கொடுத்திருக்கிறார். "என்னுடைய சகோதரர் யார்?" என்று அவர் சொல்லிவிட்டு, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே எனக்கு சகோதரனும் சகோதரியுமாய் இருக்கிறான் என்றார் (மத். 12:48-50).*
*தேவபிள்ளைகளே, நீங்கள் ஒரே ஆவியினால் தாகந்தீர்க்கப்பட்டு சகோதரர்களாய் இருக்கிற அதே வேளையில்தானே நீங்கள் பரலோக தேவனுடைய சித்தத்தை செய்ய வேண்டுமென்பதை மறந்துபோய் விடக்கூடாது. நீங்கள் சுய சித்தத்தை யோசியாமல், கர்த்தருடைய பரிபூரண சித்தத்தை நிறைவேற்றும்போது கர்த்தர் உங்களை தேவனுடைய எல்லா பிள்ளைகளோடும் அன்பான சகோதரராய் இணைத்துவிடுவார். நீங்கள் பூமியில் இருக்கிற கர்த்தருடைய எல்லா பிள்ளைகளோடும் சகோதரர்களாய் இருக்கிறது மாத்திரமல்ல, கிறிஸ்துவோடுகூடவும் சகோதரர்களாக இருக்கிறீர்கள். உங்களை அவர் சகோதரர் என்று அழைக்க வெட்கப்படவில்லை.*
*சகோதர அன்பும், பாசமும், உறவும் மிகவும் விசேஷமானது! எத்தனைதான் நண்பர்கள் இருந்தாலும், இரத்தப் பாசம், இரத்தத் துடிப்பு ஆகியவை சகோதரரிடத்தில்தான் கிடைக்கும். சில சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவுதான் மனக்கசப்பு இருந்தாலும், பொதுவான ஒரு எதிராளி வந்துவிட்டால் உடனே எல்லா பகைமையையும் மறந்து ஒன்றாய் இணைந்துவிடுவார்கள். தேவபிள்ளைகளே, சகோதர சிநேகம் உங்களில் நிலைத்திருக்கக்கடவது.*
*நினைவிற்கு:- "நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்" (மத். 23:8).*