28/07/2022
புனித அல்போன்சா (1910-1946)
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள குடமலூர் என்ற ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் அன்னக்குட்டி. இவரது தந்தை ஜோசப், தாயார் மேரி முட்டத்துப்பாடத்து என்பவராவார்.
இவரது தாயார் இவருடைய சிறுவயதிலேயே இவரை விட்டு பிரிந்தார். அதனால் இவர் சிற்றன்னையின் கண்காணிப்பில் வளரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1916 ஆம் ஆண்டு இவர் தனது தொடக்கக் கல்வியை அர்பூக்கரா என்ற இடத்தில் பெறத் தொடங்கினார்.
இவருக்குப் 13 வயது நடக்கும்போது இவருடைய சிற்றன்னை இவரை ஒருவருக்கு மணம் முடித்துக்கொடுக்க நினைத்தார். இதையறிந்த இவர் 'என்னுடைய கால்களை நான் தீயில் வைத்து சுட்டுக்கொண்டால் திருமணம் நடைபெறுவது நின்றுவிடும் அல்லவா' என்று நினைத்து, தீக்குள் தன் கால்களை வைக்க முயன்றபொழுது, அப்படியே தீக்குள் விழுந்துவிட்டார். இதைப் பார்த்துவிட்டு அங்கிருந்தவர்கள் இவரைத் தீயிலிருந்து காப்பாற்றினார்கள். இதனால் இவருக்கு நடைபெறவிருந்த திருமணமானது நின்றுபோனது.
இதைத் தொடர்ந்து 1927 ஆம் ஆண்டு இவர் பரணஞானத்தில் உள்ள புனித கிளாரா சபையில் சேர்ந்தார். 1928 ஆம் ஆண்டு இவர் தனது இயற்பெயரான அன்னக்குட்டி என்பதை அல்போன்சா என்று மாற்றிக்கொண்டார்.
1936 ஆம் ஆண்டு தனது இறுதி வார்த்தைப்பாட்டை எடுத்துக்கொண்ட இவருக்கு அதே ஆண்டில் புனித குரியாக்கோஸ் எலியாஸ் சாவரா காட்சி தந்து, இவருடைய உடலில் இருந்த காயங்களைப் போக்கினார்.
பின்னர் இவர் ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தார். இடையிடையே இவர் உடல்நலம் குன்றிப் போனார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர் இறைவனிடத்தில் இடைவிடாது மன்றாடி வந்தார். இவரிடம் தங்களுக்காக இறைவனிடம் வேண்டவும், ஆலோசனை பெறவும் பலர் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் இவர் இறைவனிடம் வேண்டியும் ஆலோசனை கூறியும் நல்வழி காட்டிய அருட்சகோதரி அல்போன்சா, 1946 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் 28 ஆம் தேதி இறையடி சேர்ந்தார்.
குருப்பன்தாரா என்ற ஊரில் ஜினில் என்ற பத்து வயது சிறுவன் கால்கள் முறுக்கப்பட்ட நிலையில் பிறந்தான். அவன் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பான் என்று மருத்துவர்கள் கைவிட்ட சூழலில், 1999 ஆம் ஆண்டு அவனது பெற்றோர்கள் அருட்சகோதரி அல்போன்சாவின் கல்லறைக்கு எடுத்துச் சென்று திருத்தலத்தில் வேண்டுதல் செய்தார்கள். அதன் பின்னர் அவனது கால்கள் சரியான நிலைக்கு திரும்பி, பூரண குணமடைந்து அவன் நடக்கத் தொடங்கினான்.
2007 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி அல்போன்சாவின் பரிந்துரையால் நலம் பெற்ற ஜினில் அறிக்கையின் அடிப்படையில், 2008 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 12 ஆம் தேதி அப்போதைய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் அல்போன்சாவுக்குப் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. இவரே இந்தியாவின் முதல் பெண் புனிதை ஆவார்.
இவரிடம் கால் வலி தொடர்பான பிரச்சனைகளுக்கு வேண்டிக்கொண்டால், அவை நீங்கும் என்பது நம்பிக்கை.
புனித அல்போன்சாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!