27/06/2023
ஆன்மீக வழிகாட்டி வேண்டுமா?
ஆன்மீக வழிகாட்டி என்பவர் தன்னிடம் பைஅத் செய்துள்ள மாணவனுக்கு தேவையான அறிவுரைகள், வழிக்கட்டல்களின் மூலம் அவனை நேர்வழிக்கு கொண்டு சென்று மாணவனின் உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி இறைவனிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக வழிகாட்டுபவர்.
இந்த ஆன்மீக ஆசிரியரை "முர்ஷித்" அல்லது "ஷெய்க்" (SPIRITUAL MASTER) என்று அழைக்கப்படும். மாணவனுக்கு "முரீத்" என்று சொல்லப்படும்.
அல்லாஹ் குர்ஆனில் கூறும்போது:
அல்லாஹ் யாரை வழிகேட்டில் விட்டு விட நாடி விட்டானோ அவர்களுக்கு வழிகாட்டும் வலிமார்களை (வலியன் முர்ஷிதா) அல்லாஹ் காட்டித் தருவதில்லை. (அல் குர்ஆன் 18:17)
உங்களுக்கு ஒரு ஆன்மீக வழிகாட்டி தேவை என்றால் முதலில் தனக்கு ஒரு காமிலான ஷெய்க் (ஆத்மீக வழிகாட்டி) தரும்படி அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள். ஒரு காமிலான ஷெய்க் கிடைக்கும் வரை மறைந்த ஒரு இறைநேசரை ஆன்மீக வழிகாட்டியாக உள்ளத்தில் நினைத்துக்கொண்டு அவர்களின் பெயரில் பாத்திஹா ஓதி வாருங்கள்.
அறிவுலக மாமேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சிறப்பை நாம் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள். இஸ்லாமிய வரலாற்றில் இமாம் அவர்களின் நூல்களை வாசிக்காத குத்புமார்களையும், இறைநேசர்களையும் காண முடியாது.
அந்த மாபெரும் அறிவுக்கடல் மீது பாத்திஹா ஓதி வாருங்கள். மேலும் அவர்களின் பொருட்டால் அல்லாஹ்விடம் இறைஞானத்தை கேட்டு வாருங்கள். இன்ஷா அல்லாஹ் நீங்கள் அறியா புறத்தில் இருந்து இல்ஹாம் என்னும் உதிப்புக்கள் வருவதை நீங்கள் உணர்வீர்கள்.
இமாம் அபுல் ஹஸன் அலி ஷாதுலி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
இறைவனிடம் இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வஸீலாவாக கொண்டு கேட்கப்படும் துஆ நிறைவேறும்.
பாத்திஹா ஓதும் முறை: ஒவ்வொரு தொழுகைக்கு பின்பும் முதலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் மீது பாத்திஹா ஓதுங்கள். பின்பு இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது பாத்திஹா ஓதுங்கள். பின்பு இறைவனிடம் ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டியை தந்து உதவும் படி துஆ கேளுங்கள்.
இன்ஷா அல்லாஹ்! உங்களுக்கு ஒரு நல்ல ஆன்மீக வழிகாட்டி ஒருவரை அல்லாஹ் தருவான்.